Monday, September 14, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 30

ஆரம்பம் என்று ஒன்றிருந்தால் அதற்கு முடிவு என்ற ஒன்று தவிர்க்க முடியாதது. அதே போலத்தான் பயணமும். சுற்றுப் பயணம் செய்து விட்டு அங்கேயே இருந்து விட முடியுமா? ஊர் திரும்பி சகஜமான பணிகளில் மீண்டும் மூழ்கத்தானே வேண்டும்?


எனது தென்னாப்பிரிக்கப் பயணமும் இறுதி நாளை எட்டியது. ஏப்ரல் 9ம் தேதி காலை 8 மணிக்கு டர்பனிலிருந்து ஜொஹான்னஸ்பெர்க் பயணம் செய்து அங்கு 2 மணி நேரம் காத்திருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் எடுத்து எத்தியோப்பிய தலை நகரான அடிஸ் அபாபா வந்தடைந்தேன். ஏறக்குறைய 3 மணி நேரங்கள் அங்கு காத்திருந்து அடுத்த விமானத்தில் ஃப்ராங்பர்ட் வந்தடைந்தது நான் பயணித்த விமானம்.



நான் கொண்டு வந்திருந்த "பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்" என்ற நூலை வாசித்துக் கொண்டே வந்ததில் பயணக் களைப்புத் தெரியவில்லை. ஜொஹான்னஸ்பெர்க் விமான நிலையத்தில் ரெஸ்டாரண்டில் களைப்பு தீர நல்ல காபியிம் பெரிய மஃப்பினும் வாங்கிச் சாப்பிட்டதும் உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாக இருந்தது.


​​

தென்னாப்பிரிக்கா மட்டுமன்றி முழுமையான ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இந்திய நாட்டிற்கும்  அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு  இருக்கின்றது. ஆயினும் இன்று உலக மக்களால் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் என்று குறிப்பிடப்படுவோர் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது கரும்புத்தோட்டங்களில் பணிபுரிய வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாரிசுகளே. 1860 முதல் ஆரம்பித்த இந்த நிகழ்வு படிப்படியாக தென்னிந்திய மக்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள் ஆப்பிரிக்கா புலம்பெயர காரணமாகியது. அதிலும் குறிப்பிடத்தக்க முக்கிய வரலாற்று விஷயமாக நாம் கருத வேண்டிய ஒன்றாக அமைவது,  ஒப்பந்தத் தொழிலாளர்களாக முதலில் டர்பன் வந்தடைந்தவர்கள் அப்போதைய மதராஸிலிருந்து வந்த 342 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தாம்.

இன்றைய நிலையில் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிலையான ஓரிடத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர்.  அரசுப் பணிகளிலும் நாடாளுமன்றத்திலும் இடம் வகிக்கும் நிலையையும் சிலர் பெற்றவர்களாக இருக்கின்றனர். இது தென்னப்பிரிக்கத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த மண்ணில் காலூன்றி விட்டமையைக் காட்டும் அடையாளங்களாக இருக்கின்றன.

ஆங்காங்கே இருக்கும் இந்து சமய ஆலயங்கள் இத்தமிழ் மக்கள் தங்கள் சமய வழிபாட்டு சடங்குகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் மறவாமல் வழி வழியாக தமது இளம் தலைமுறையினருக்கும் வழங்குவதில் காட்டும் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆயினும் மனதை உறுத்தும்  ஒரு விசயம் இல்லாமலில்லை.

தென்னாப்பிரிக்கத் தமிழர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே தமிழ் மொழியை ஓரளவேனும் சரளமாகப் பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனையோர் ஒரு சில வார்த்தை பேசுபவர்களாகவும் பெரும்பாலோர் தமிழ் மொழியின் தொடர்பு அற்ற  வகையிலும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கின்றது.

தமிழ் மொழியில் பயிற்சி பெற வேண்டும், பாண்டித்தியம் பெற வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் இவர்கள் மனதில் ஆழ வேறூன்றி இருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆயினும் எவ்வகையான முயற்சிகள் இவர்களுக்குப் பலனளிக்கும் என்பது தான் மிக முக்கிய விடயமாக இருக்கின்றது. அர்த்தம் புரியாமலேயே தமிழ்ப்பாடல்களைப் பிழையின்றி பாடக்க்கூடியவர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமா பாடல்கள் தமிழை இவர்கள் மத்தியில் வழக்கில் தக்க வைக்க  உதவுகின்றன என்பதனை மறுப்பதற்கில்லை.

எளிமையான முறையில் தமிழ் மொழி சொல்லித்தரக்கூடிய வழிமுறைகளை கையாளவேண்டியது அவசியமாகின்றது. இன்னிலையில், பேச்சுத்திறனை வளர்க்கும் வகையிலான தமிழ் மொழி பாடத்தினை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியது தான்  அதி முக்கிய, அதி அவசர தேவை என நான் கருதுகின்றேன்.

தென்னாப்பிரிக்காவில் தமிழ் மரபு அறக்கட்டளையின்  கிளை அமைக்கும் செயல்பாட்டினை வித்திட்டு வந்திருக்கின்றேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் இம்முயற்சி வளர்ந்து வேறூன்றி தென்னப்பிரிக்க தமிழ் மக்களின் வரலாற்றை பதிந்து வைக்கும் முயற்சிகள் செழித்து வளர வேண்டும் என்பதே என் கனவு. அது நடைபெறும்; நம்பிக்கை  உள்ளது!



முற்றும் !!

Sunday, September 13, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 29

தாமரைக் குளம் நிறைய படர்ந்த  இலைகளுடன் தாமரையும் அல்லியும் குளத்தை நிறப்பியதில் அந்தக் காட்சி மனதைக் கொள்ளை கொள்ள,  உடனே ஆங்காங்கே நின்று நண்பர்கள் நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஒரு அழகிய காட்சியைக் காணும் போது அதனோடு நம்மையும் ஐக்கியப்படுத்திக் கொண்ட நிகழ்வை பதிவாக்கி வைக்கவே நாம் எல்லோரும் புகைப்படங்கள் எடுக்கின்றோம். பல நாட்கள் கழிந்து மீண்டும் அதே புகைப்படங்களைக் காண நாம் முயற்சிக்கும் போது அந்த அழகிய இடத்தில் நாம் இருந்த அந்தக் கணங்கள் மனதில் மீண்டும் ஆழ்மனத்திலிருந்து வெளிப்பட்டு நிகழ்காலத்தின் நிகழ்வு போல மனதில் தோன்றி அதே உணர்வுகளை ஏற்படுத்தும். இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பிடுகையில் தற்காலத்தில் புகைப்படம் எடுத்தல் என்பது மிக எளிமையான ஒன்றாகத் தான் மாறியுள்ளது. அதிலும் செல்போனிலேயே செல்ஃபி எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நமக்கு தொழில் நுட்பம் வசதியைக் கொடுத்துள்ளது. இதனால் நமது பயணங்களின் பதிவுகளை நம்மால் தரமானதாகவும் ஆதாரத்தன்மை மிக்க வகையிலும் பதிவாக்கம் செய்ய முடிகின்றது.


போட்டானிக்கல் கார்டன்ஸில் முழுதும் சுற்றிப்பார்த்து நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே வருவதற்கும் எங்கள் டாக்ஸி வாசலில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. அங்கிருந்து புறப்பட்டு எங்கள் தங்கும் விடுதிக்கு வருவதற்கு முன்னர் அருகாமையில் இருந்த ஷோப்பிங் காம்ப்ளேக்ஸ் சென்று மதிய உணவை எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது என்று முடிவு செய்து கொண்டோம்.

அழகான அந்த வர்த்தக மையத்தில் கடைகள் ஒரு புறத்திலும் உணவுக் கடைகள் ஒரு புறத்திலும் எனக் காணமுடிந்தது. நாங்கள் தென் ஆப்பிரிக்க உணவு தான் சாப்பிட வேண்டும் என நான் சொல்லியிருந்தேன். ஆக தென்னாப்பிரிக்க உணவைத் தேடும் பணி எனதானது. அங்கும் இங்கும் சுற்றித் தேடியதில் தென்னாப்பிரிக்காவின் சிறப்பு உணவான பன்னி (Bunny)  விற்கும் ஒரு உணவகத்தைக் கண்டதும் அங்கு நண்பர்களை அழைத்துச் சென்றேன். எல்லோரும் விரும்பிய வகையில் South African Bunny  வாங்கிக் கொண்டு அதனைச் சுவைத்தோம். 

மதிய உணவை முடித்து தங்கும் விடுதி திரும்பியதும் உடன் மலேசிய நண்பர்கள் புறப்பட வேண்டிய நிலை. ஆதலால் மலேசிய நண்பர்கள் அனைவருக்கும் நானும் இந்துவும் கனடா ராஜரட்னமும் பிரியாவிடை சொல்லி டாக்ஸியில் ஏற்றி வழி அனுப்பி வைத்தோம். அதே வேளை எங்கள் மூவரையும் அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல திரு.திருமதி சின்னப்பன் வந்திருந்தனர். அவர்கள் வாகனத்தில் எங்கள் பயணப்பெட்டிகளை  ஏற்றிக் கொண்டு ஹோட்டலிருந்து அவர்கள் இல்லத்திற்குப் புறப்பட்டோம்.
 


அப்படிப் போகும் வழியில் சிறிது நேரம் டர்பன் கடற்கரைப் பகுதிக்குச் செல்ல விருப்பம் உள்ளதா என கோகி கேட்டது எனக்கு வியப்பளித்தது. காரணம், "அருகாமையில் எல்லா இடங்களையும் பார்த்து விட்டோம். டர்பன் கடற்கரையில் நடந்து இந்தியப் பெருங்கடல் வந்து சேரும் மணல் பகுதியில் கால்வைத்து நடந்து செல்ல மனதில் விருப்பம் இருந்தாலும் நேரம் சரியாக அமையவில்லையே" என்று என் மனதில் ஓடிக்க் கொண்ட்ருந்த எண்ண அலைகளைப் படம் பிடித்தார் போல கோகி சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தாமல் எப்படி இருக்கும்?



ஆக எல்லோரும் கடற்கரைப் பகுதிக்குச் சென்றோம். வாகனத்தைப் பார்க் செய்து விட்டு அருகாமையில் இருக்கும் ஐஸ்க்ரீம் கடையில் நண்பர்களுக்கு ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடுத்து நானும் வாங்கிக் கொண்டேன். ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே தென்னாப்பிரிக்க கடற்கரையில் கடல் நீரில் கால் வைத்து நடந்து கொண்டே சென்ற தருணங்கள் இனிமையானவை.



​​
செல்லும் வழியில் ஒரு தென்னாப்பிரிக்க இளைஞர் மணலில் சில வடிவங்களைச் செய்து வருவோர் விரும்பும் பெயர்களை எழுதி பணம் சம்பாரித்துக் கொண்டிருந்தார். நான் என் விருப்பத்திற்காக THF  என்ற எழுத்தை எழுதச் சொல்லி அவருக்கு சிறு சன்மானம் கொடுத்தேன். 


இப்படி நடந்து செல்லும் போதே சின்னப்பன்-கோகி  தம்பதியினருடன் தென்னாப்பிரிக்காவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நடவடிக்கைகளை விரிவாக்கும் பணி பற்றி பேசினோம். தமிழ் மொழி பண்பாடு வரலாறு என்ற வகையில் பல கோணங்களில் ஆய்வுப் பூர்வமான நடவடிக்கைகளுக்குத் தேவை இருக்கின்றது என்றும் எவ்வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை அப்பணிகளில் ஈடுபடலாம் என்ற வகையிலும் எங்கள் பேச்சு அமைந்திருந்தது.





ஏறக்குறைய 1 மணி நேர கடற்கரை நடைக்குப் பிறகு சின்னப்பன்-கோகி தம்பதியர் இல்லம் திரும்பினோம். இரவு எங்களுக்கு புளியஞ்சாதம், தயிர்சாதம், சப்பாத்தி, குருமா பாயசம் என வயிறும் மனமும் நிறைய நிறைய விருந்தளித்து மகிழ்ந்தனர் சின்னப்பன்-கோகி தம்பதியினரும் அவர்களது புதல்வி சிவானியும்.

மறு நாள் காலை 8 மணிக்கு எங்கள் விமானப் பயணம். அதனால் காலை 5 மணிக்கு வரச்சொல்லி டாக்ஸிக்கு தொலை பேசி விட்டு மேலும் தென்னாப்பிரிக்கத்தமிழர் தொடர்பான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்கச் சென்றோம்.

தொடரும்

சுபா