Thursday, May 31, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -4



17.மே.2018

நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த தங்கும் விடுதி சொக்காரோத் (Sokha Roth). பெயரைக் கேட்டால் சொக்கா என்ற நமக்கு அறிமுகமான சொல் நினைவுக்கு வரவே அடிக்கடி திருவிளையாடல் தமிழ்த்திரைப்படத்தில் சொக்கா சொக்கா என வசனம் பேசிய நாகேஷ் தான் மனக்கண்ணில் வந்து போனார்.

இது ஒரு நான்கு நட்சத்திர தங்கும் விடுதி. தியானத்தில் இருக்கும் சாக்கியமுனியின் சிற்பம் ஒன்று வாசலில் வைக்கப்பட்டிருக்கின்றது. நுழைவாசலில் அப்சரஸுகள், அதாவது அழகிய தேவதைகள் இருவரின் மரத்தாலான சிற்பங்கள் நுழைவாயிலை அலங்கரிக்கின்றன. இதற்கு முன்புறத்தில் தாமரை மலர் போன்ற கல்தொட்டிகள் இரண்டு வைக்கப்பட்டு அதில் தாமரைச்செடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. தாமரை மலர்கள் பௌத்தத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. எப்படி காவி பௌத்தத்தின் சின்னமோ அதே போல தாமரை மலரும் பௌத்தத்தின் சின்னங்களில் ஒன்று, ஆனால் இன்றோ காவி, தாமரை என்ற இரு சொற்களுமே நமது சிந்தனையில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை நினைவூட்டுவதாக அமைந்திருப்பது காலத்தின் கோலம்.

காலையில் தங்கும் விடுதி வந்து பொருட்களை வைத்து விட்டு உடனே சியாம் ரீப் நகரில் இருக்கும் அங்கோர் தேசிய அருங்காட்சியகம் சென்று வர திட்டமிட்டிருந்தேன். ஆனால் காலையில் திரு.ஞானம் அவர்கள் தொலைபேசியில் அழைத்து கட்டுமரம் உணவகத்திற்கு வந்து காலை உணவு சாப்பிட்டுச் செல்ல அழைத்தார். இந்த அன்பான அழைப்பை ஏற்று அருகிலேயே இருக்கும் அந்த உணவகத்திற்குச் சென்றோம்.

கட்டுமரம் என்ற பெயர் மனதில் இனம்காணாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கம்போடிய மண்ணில் தமிழில் அதுவும் பண்டைய தமிழரின் கடல் வழி வணிகத்தின் மிக முக்கியக் குறியீடான கப்பல் பற்றிய சொல் இது. கட்டுமரம் என்ற இச்சொல் ஆங்கிலத்திலும் அதே ஒலியோடு Catamaran என்ற சொல்லாக புழக்கத்தில் உள்ளது. எரிசக்தி பயன்பாடு அற்ற வகையில் காற்றின் வேகம், காற்று செல்லும் திசை, காற்றின் அழுத்தம் என்பதை மட்டுமே கொண்டு கடலின் ஆழமும் அகலமும் தூரப்பார்வையும் கொண்ட பண்டைய தமிழர் பயன்படுத்திய ஒரு கலம் இது. இந்தப் பெயர் உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த எனக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியது என்பது பலரும் இப்பெயரை அவ்வப்போது சொல்லிச் சொல்லி மகிழ்ந்ததிலிருந்து தெரிந்தது.

தொடரும்..
சுபா










Wednesday, May 30, 2018

கம்போடியா - அங்கோருக்கு சென்ற கதை -3

17.மே.2018

காலையில் விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் தங்கும் விடுதிக்கு அழைத்து வர வேன் ஏற்பாடு செய்திருந்தனர். சாலையை ரசித்துக் கொண்டே பயணத்தைத் தொடங்கினோம்.

வாகனங்கள் மிகக் குறைவு. சாலையில் டுக் டுக் வண்டுகள் மட்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சென்று கொண்டிருந்தன. மோட்டார் சைக்கிளில் பயணிகள் அமரும் இருக்கை இணைத்து உருவாக்கப்பட்ட வாகனம் அது.

சியாம் ரீப் நகரில் மிக இயல்பாக அமெரிக்க டாலரை அனைத்து இடங்களிலும் புழங்குகின்றனர். கம்போடிய பணம் ரியல் (Riel) என அழைக்கின்றனர். ஒரு அமெரிக்க டாலருக்கு 4075 ரியல். உதாரணமாக அருங்காட்சியக் கட்டணம் US$12 அமெரிக்க டாலராவே வாங்கிக் கொள்கின்றனர்.


தொடரும்..
சுபா

#கம்போடியா
#உலகத்_தமிழர்_மாநாடு_2018











Monday, May 28, 2018

கம்போடியா - அங்கோருக்கு சென்ற கதை -2

17.மே.2018

கம்போடியாவிற்கும் மலேசியாவிற்கும் 1 மணி நேர வித்தியாசம் உள்ளது. உதாரணமாக, மலேசியாவில் காலை 7 மணி என்றால் கம்போடியாவில் காலை 6 மணி. நாங்கள் வந்திறங்கியபோது காலை மணி 7:50. சிறிய விமான நிலையம் தான் சியாம் ரீப் விமான நிலையம். அன்று காலையில் 10க்கும் குறைவான விமானங்களே அங்கு கண்களில் தென்பட்டன.

அந்தக் காலை வேளையிலேயே சூரியக் கதிர்கள் சுட்டெரிக்கத் தொடங்கியிருந்தது. உள்ளே நுழையும் போதே திரு.சீனி எங்களுக்காகக் காத்திருந்தார். மலேசிய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்குக் கம்போடியா செல்ல விசா தேவையில்லை. ஆனாலும் பாஸ்போர்ட் சோதனையையும் அவரே எங்கள் அனைவருக்கும் செய்து கொடுத்தார். பின்னர் எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தோம்.

வெளியே வந்ததும் எங்களை சேலை அணிந்த இரண்டு கம்போடிய இளம் பெண்கள் வரவேற்றனர். ஒருவர் சோ கிம், மற்றொருவர் சோ பிம். அவர்களுக்கு வணக்கம் கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

விமான நிலையத்தின் வாசலில் ஒரு சிற்பம் வைக்கப்பட்டிருந்தது. மன்னன் 2ம் ஜெயவர்மனின் சிற்பம் அது. மன்னன் 2ம் ஜெயவர்மனின் (கி.பி. 770 - 835). பெயர் கம்போடிய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பெயர். கி.பி.9ம் தூற்றாண்டு தொடங்கி கி.பி 15ம் நூற்றாண்டுவரை தெற்கியக்காசியாவில் புகழ்பெற்றுத் திகழ்ந்த க்மேர் அரசினை உருவாக்கித் தொடக்கிய மாமன்னன் என்ற சிறப்பு இம்மன்னனையே சாரும். இந்த மன்னனுக்குப் பரமேஸ்வரா என்ற பெயரும் உண்டு. முதலில் இந்திரபுரம் என்ற பெயரில் தனது தலைநகரை மெக்கோங் நதிக்கரையில் அமைத்தான். பின்னர் ஹரிஹராலயா என்ற பெயரில் தலைநகரை அமைத்து பின்னர் மகேந்திரபர்வதா அல்லது மகேந்திரபர்வதம் என்ற மலைப்பகுதியில் தனது தலைநகரை அமைத்தான். இன்று ப்னோம் குள்ளன் உள்ள இடம் தான் மகேந்திரபர்வதம்.

2ம் ஜெயவர்மன் தன்னை தேவராஜா பிரகடனப்படுத்திக் கொண்டான். இவன் ஜாவா (இந்தோனீசியாவிலிருந்து) வந்தவன் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நன்றி - : Encyclopedia Britannica

தொடரும்..
சுபா






கம்போடியா - அங்கோருக்கு சென்ற கதை -1


அங்கோருக்கு சென்ற கதை -1
17.மே.2018
கம்போடியாவில் உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள ஆவல் இருந்தாலும் அலுவலகப் பணிகள் ஏராளம் இருந்ததால் இறுதி வரை செல்வது தொடர்பாக என்னால் முடிவு செய்ய முடியாமலேயே இருந்தது. ஆயினும் அங்கோர் வாட் கோயிலும் நண்பர் ஒரிசா பாலுவின் தூண்டுதலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது. நான் நேராக கம்போடியா செல்லாமல் மலேசியா சென்று அங்கிருந்த சில பணிகளையும் முடித்து ஏர் ஏசியா விமானச் சேவையின் வழி கம்போடியாவின் அங்கோர் வாட் அருகே உள்ள விமான நிலையமான சியாம் ரீப் நகருக்குச் செல்வதற்கு பதிவு செய்திருந்தேன். என்னுடன் கோலாலம்பூரில் வசிக்கும் மதுரைக்காரப் பொண்ணு மலர்விழியும் ஒரே நேரத்தில் பயணித்ததால் பயணம் சுவாரசியமாக அமைந்தது.
கோலாலம்பூரில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து டாக்சி பிடித்து, விமான நிலையம் சென்று சேர்ந்து, அங்கு கடமைக்காக ஒரு ரொட்டியும் கசக்கும் காப்பியும் அருந்தி விட்டு விமானத்திற்குள் சென்றோம்.
ஏர் ஏசியா விமான நிறுவனத்தையே நடிகர் ரஜினிகாந்த் குத்தகைக்கு எடுத்தது போல விமானத்திற்குள் எல்லா இடங்களிலும் ”கபாலி” அமர்ந்திருந்தார். கபாலி படம் வந்தபோது ரஜினிகாந்த் ரசிகையாக இருந்தேன். கடந்த சில மாதங்களாக அவர் செய்கின்ற அரசியல் காமெடிகளால் ரஜினிகாந்த் மீது எனக்கிருந்த ஈர்ப்பு காணாமல் போய்விட்டது. ஆனாலும் எல்லா இடங்களிலும் போஸ் தரும் கபாலியைப் பார்த்துக் கொண்டே விமானத்தில் தூங்கிப் போனோம்.
தொடரும்..
சுபா