Saturday, November 24, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 12


சமணப்படுகைகள் அமைந்திருக்கின்ற குகை, அதன் சுற்றுச் சூழல் அனைத்துமே மிக ரம்மியமாக உள்ளன. இதுவே மற்ற ஆசிய நாடுகளாகவோ ஐரோப்பிய நாடுகளாகவோ இருந்தால் இந்தக் குகையைப் பாதுகாத்து சுற்றுச் சூழலையும் பாதுகாத்து இந்த எழில் மிக்க இடத்தை மேலும் கொஞ்சம் சீராக்கி பூங்காவனமாக்கி சுற்றுப் பயணிகள் வந்து செல்லும் இடமாக ப்ரகடனப்படுத்தியிருப்பர். இந்த எண்ணங்கள் அந்த நேரத்தில் மனதில் வந்து போயின.

வெயிலும் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனை அடுத்து நாங்கள் மேலும் இரண்டு இடங்களுக்குச் செல்ல வேண்டிய திட்டமும் இருந்தது. எங்களுக்கு மதிய உணவு தாயார் செய்து வைத்திருப்பதாக காலையிலேயே குன்றக்குடி திருமடத்தில் சொல்லியிருந்தார்கள். ஆக உடன் மீண்டும் குன்றக்குடி ஆதீன மடத்திற்குத் திரும்பி அங்கே மதிய உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என புறப்பட்டோம்.

மீண்டும் நடந்தே மடத்தின் உணவு பரிமாறப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் வருவதை கவனித்து எங்களை அன்புடன் வரவேற்று உணவு சாப்பிட அழைத்துச் சென்றார் மடத்தில் நாங்கள் சந்தித்து உரையாடிய புலவர் பரமகுரு அவர்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்தப் பாகுபாடும் இன்றி ஒரே இடத்தில் உணவு பரிமாறப்படுவதைக் கவனித்தேன்.இது  மனதிற்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது.



உணவு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. சாம்பார், கீரை பொரியல்,  காய்கறி பொரியல் வத்தல் குழம்பு, ரசம், தயிர் என விதம் விதமாக உணவு தயாரித்திருந்தார்கள். எங்களுடன் திருமடத்தின் பெரியவர்களும் இணைந்து கொண்டார்கள். மடத்தில் பணிபுரியும் ஒரு வயதான பெண்மனி எங்களுக்கு பரிமாறினார்கள். உணவின் சுவை மிகப் ப்ரமாதமாக இருந்தது. அனைவரும் பேசிக்கொண்டே உணவை சுவைத்து சாப்பிட்டோம்.



இப்படி குன்றக்குடி மடத்தில் அமர்ந்து மடத்தின் பெரியோர்களுடன்  சேர்ந்து சாப்பிடுவதும் இறைவனின் திருவருள் தான் போலும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். உணவை முடித்து மடத்துப் பெரியோர்களிடம் சொல்லிக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம். இப்போது எங்கள் வாகனம் ஆத்தங்குடி நோக்கி புறப்பட்டது.

தொடரும்....


அன்புடன்
சுபா

Saturday, November 17, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 11


சமணப்படுகைகள் உள்ள பாறையைக் கண்டு வர செல்லும் போது தெப்பக்குளத்தை மீண்டும் கடந்து சென்றோம். தெப்பக்குளத்தில் வானின் நீல நிறமும் அதில் நிறைந்திருக்கும் மேகங்களின் பிரதிபலிப்பும் கண்களுக்கு விருந்தாகிப் போக அதனை எனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டேன்.

Inline image 2

சமணப்படுகைகள் இருக்கும் பாறை இந்தக் கோயிலிருந்து சற்று தூரம்தான் அதனால் நடந்தே சென்று விடுவோம் என்று சொல்லி நடக்கலானோம். அருகாமையில் தான் இப்பாறைகள் இருக்கின்றன. வெயில் அதிகரித்ததனால் சற்று அயர்ச்சியை தர ஆரம்பித்தது. அதோடு பாறைகளின் மேல் ஏற சற்று சிரமமாகிப்போனது டாக்டர் வள்ளி அவர்களுக்கு. ஆனாலும் எல்லோருமாகச் சேர்ந்தே நடந்து சென்றோம். 

பாறை பகுதியிலிருந்து குன்றக்குடி குடவரைக் கோயில் முழுதுமாக மிக அழகாக தெரிந்தது. சிறிய கோயிலாகினும் எவ்வளவு கலை நயத்துடன் இதனை கட்டியிருக்கின்றனர் என்ற பிரமிப்பு  மனதில் எழுந்தது. 

Inline image 3

பாறையைக் கடந்து மேலே சென்று அக்கோயில் இருக்கும் பகுதியை அடைந்த்தோம். முன்னர் சமணப்பள்ளியாக இருந்த அவ்விடம் தற்சமயம் ஒரு சிறு கோயில் போல இருக்கின்றது. முதலில் தெரிவது ஒரு சிறிய பிள்ளையார் கோயில். இதனைக் கடந்து சென்றால் சமணப்பள்ளி அமைந்துள்ள குகையை அடையலாம்.

வாசலில் பைரவர் சிலை வைத்து வேல் நட்டு வைத்து தற்சமயம் கூட வழிபாடு நடைபெற்று வருவதற்கான தடயங்கள் தெரிந்தன. வாசல் பகுதியைக் கடந்து குகைக்குள் சென்றோம். அங்கே வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் சமணப்படுகைகளைக் காட்டி எனக்கு விளக்கமளித்தார் டாக்டர்.வள்ளி. இந்தப் பதிவை இன்றைய மண்ணின் குரலில் இணைத்து வெளியிட்டிருக்கின்றேன். அதனை http://voiceofthf.blogspot.de/2012/11/blog-post_17.html சென்று கேட்கலாம். முழு பதிவையும் இங்கே காணலாம்.
 
பாறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. கண்ணாடியில் பார்த்தால் வாசிக்கக்கூடிய அமைப்பில் திருப்பி எழுதப்பட்ட எழுத்துக்கள் இவை. பாறையைச் சுற்றி அமைத்திருக்கும் காடி மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருப்பதையும் பார்த்தோம்.

சமணப்படுகைகள் உள்ள பகுதிகளில் பலர் கிறுக்கியும் சேதப்படுத்தியும் வைத்துள்ளனர். இது கண்டிக்கப்பட வேண்டிய செயல். நமது புராதண சின்னங்களின் அருமை பெருமை தெரியாத சிலரது நடவடிக்கைகளால் இந்த வரலாற்றுச் சான்றுகள் தினம் தினம் சேதப்பட்டுக் கொண்டேயிருப்பது வேதனை அளிக்கும் விஷயம். பொது மக்களுக்கும் இவற்றை பேணிக்காக்க வேண்டிய அவசியம் இருப்பதை பல வகையில் தெளிவு படுத்த வேண்டிய கடமை நமக்குண்டு. 

இந்தக் குகை அமைந்திருக்கும் பகுதி சிறு வனமாக காட்சியளிக்கின்றது. பாறைகளில் வளர்ந்திருக்கும் மரங்கள் கொள்ளை அழகாய் சிற்பங்களைப் போலவே அமைந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன. 

Inline image 1

எனது அனுபவத்தில் நான் முதலில் நேரில் கண்ட ஒரு சமணப்படுகை இது தான். அந்த ஆச்சரியத்திலேயே அங்கே நின்று இயற்கையின்  எழிலை ரசித்துக் கொண்டிருந்தேன்.

தொடரும்...
அன்புடன்
சுபா

Sunday, November 11, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 10

குன்றக்குடி மடத்திலிருந்து இந்தக் குடவரை கோயில் இருக்கும் இடம் வரை செல்லும் வழிகளில் சில வீடுகளைக் கடந்து செல்ல வேண்டும். வழியில் குன்றக்குடி அருள்மிகு ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் தைப்பூசம், சித்திரா பௌர்ணமி  போன்ற விஷேஷ நாட்களில் கோலாகலமாக அலங்கரிக்கபப்ட்டு காவடி எடுப்பவர்கள் இங்கிருந்து காவடிகளைத் தூக்கிச் செல்வதும் வழக்கம் என்றும் கேள்விப்பட்டேன். இக்கோயில் பிள்ளையார்பட்டி கோயிலுடன் ஒப்பிடுகையில் சிறிய கோயில் தான். ஆனாலும் ஆலயத்தின் முன் வாசல் புறத்தில்  அமைந்துள்ள மண்டம் தான் சித்திரக் கூடமாக இருக்கின்றது. இந்த மண்டபத்தில் தீட்டப்பட்டுள்ள சித்திரங்களைப் பற்றிய பதிவு ஒன்றினை அண்மையில் மண்ணின் குரலில் வெளியிட்டிருந்தேன். இதுவரை பார்த்திராதவர்கள் இங்கே சென்று  அப்படங்களைக் காணலாம்.

கோயிலைக் கடந்து  சற்றே நடந்தால் ஒரு பெரிய கோட்டை சுவர் ஒன்றிருப்பதும் அதில் வாசல் கதவு இருப்பதும் காணத்தெரியும். இப்பகுதிக்குள் தான் குன்றக்குடி குடவரை கோயில் உள்ளது.

Inline image 1

கதவைத் திறந்து எங்களுடன் இருந்து  கோயிலை முழுதுமாக சுற்றிக் காட்டவென்று குன்றக்குடி மடத்திலிருந்து எங்களுக்கு  உதவிக்கு ஒருவரை அனுப்பியிருந்தார்கள். அவர் எங்களுடன் கோயில் முழுவதையும் சுற்றிக் காட்டியதோடு இருட்டாக  இருந்த பகுதிகளில் விளக்கை ஏற்றி வைத்து எங்களுக்குச் சிற்பங்கள் நன்கு தெரியும் வண்ணம் உதவியும் செய்தார்.

குடவரை கோயிலின் அழகு வெளியிலிருந்து பார்த்தாலும் கூட உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்ததாக உள்ளது. என்ன கலை நயம் என்று சொல்லி சொல்லி வியந்து வெளியிலேயே சிறிது நேரம் இருந்து ரசித்துக் கொண்டிருந்தோம். 

உள்ளே செல்லச் செல்ல  வியப்பு அதிகரித்தது. அவ்வளவு ப்ரமாண்டமான சிற்பங்கள். ஒரே கோயிலுக்குள் மூன்று கோயில்கள் இருக்கின்றன. துர்க்கை, சிவன், விஷ்ணு, ஹரிஹரன்  போன்ற தெய்வங்களுக்கும் சுவர்களிலேயே செதுக்கிய ப்ரமாண்டமான சிலைகள். மூலப் ப்ரகாரத்தில் சிவ லிங்க வடிவம். 

Inline image 2

இக்குடவரைக் கோயிலின் சுவர்கள் முழுக்க கல்வெட்டுக்கள் இன்றும் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. 

இக்கோயில், சுற்றுப்புறம். தெய்வ வடிவங்கள், சிற்பங்கள் கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் படங்களோடு மேலும் டாக்டர் வள்ளி அவர்கள் தரும் ஒலிப்பதிவு விளக்கமும் இவ்வாண்டின் தொடக்கத்தில் நமது வலைப்பக்கத்தில் மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்பட்டது. அவற்றைக் காணவும் ஒலிப்பதிவைக் கேட்கவும் இங்கே செல்க!

Inline image 3

கோயிலை முழுதுமாகச் சுற்றிப் பார்த்து பதிவுகளையும் மேற்கொண்ட பின்னர் நாங்கள் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு அருகாமையில் அமைந்திருக்கும்  சமணப்படுகைகளைப் பார்வையிட புறப்பட்டோம். பாறைகளைக் கடந்து நடக்க வேண்டும். வெயிலும் அதிகரித்துக் கொண்டிருந்தது. அனைவரும் சற்றே வேகமாக அப்பறைகள் உள்ள பகுதி நோக்கி நடக்கலானோம்.

தொடரும்..

Thursday, November 1, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 9


குன்றக்குடி திருமடத்தில் இருந்த சில மணி நேரங்களில் அத்திருமடம் செய்து வரும் பணிகள் குறித்து அறிந்து கொண்டதில் எனக்கு மனம் நிறைவாக இருந்தது. பொதுவாகவே நமது சமூகத்தில் ஹிந்து சமய திருமடங்கள் வெறும் பூஜைக்கும் சடங்குகளுக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்ற ஒரு வித பொதுமைப்படுத்தும் உண்மையற்ற மாயை பலர் மனதில் நிலைத்திருக்கின்றது. சில சாமியார்களின் சுயநலப்போக்கும் ஏமாற்றுத்தனமான நடவடிக்கைகளும் இவ்வகையான எண்ணத்தைப் பலர் மனதில் உருவாக்கி வைத்திருப்பதில் வியப்பில்லை. இதற்கு மாற்றாக சமூகப்பணிகளையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் பல ஹிந்து சமய மடங்களும் தமிழகம் மட்டுமன்றி உலகின் பல இடங்களில் இயங்கி வருகின்றன என்ற உண்மையையும் அனுபவத்தில் பார்க்கும் போது பகிர்ந்து கொள்ள வேண்டியது நமது கடமையாகின்றது. இதற்கு எடுத்துக் காட்டாகத் திகழும் குன்றக்குடி மடத்தையும் அவர்களின் சேவையையும் நாம் பரவலாக சொல்லி மகிழ்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

குன்றக்குடி திருமடத்தின் வரலாறு நூலை எனக்கு அளித்து இதனை த.ம.அ. வலைப்பக்கத்திலும் இணைத்துக் கொள்ள அனுமதி அளித்தார் அடிகளார். இதனை மின்னூலாக்கி நமது சேகரத்தில் இணைத்திருப்பதோடு இதனை முழுதுமாக தட்டச்சு செய்து நமது வலைப்பக்கத்திலும் இணைத்திருக்கின்றோம். இந்த முழு நூலையும் தட்டச்சு செய்து கொடுத்த கீதாவை நாம் பாராட்ட வேண்டும். இந்த நூலை முழுதாக இங்கே காணலாம்.

அங்கிருந்து புறப்பட்டு அருகாமையில் அமைந்திருக்கும் குன்றக்குடி குடவரை கோயிலுக்குச் சென்று வர கிளம்பினோம். மதிய உணவுக்கு மீண்டும் திருமடத்திற்கு வந்து விட வேண்டுமென்று அன்புக் கட்டளை கிடைத்திருந்ததால் உணவுக்குக் கவலையின்றி நடந்து சென்று சுற்றிப் பார்த்து விட்டு வருவோம் எனப் புறப்பட்டோம்.

இடையில் திரு.திவாகரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. காரைக்குடியில் இருக்கும் சமயத்தில் தேவகோட்டை சென்று வர வேண்டுமென்றும் அங்கு நண்பர் வெங்கடேஷின் தகப்பானாரின் வீட்டிற்குச் சென்று அதனையும் பதிவு செய்து வர வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கான ஏற்பாடுகளையும் தானே செய்து விடுவதாகவும் குறிப்பிட்டார். இதுவும் நல்ல யோசனையாக இருக்கவே மாலையில் தேவகோட்டை சென்று வருவோம் என முடிவெடுத்தோம்.

மடத்திலிருந்து குடவரை கோயில் செல்லும் பாதையில் ஒரு அழகிய தெப்பக்குளம் அமைந்திருக்கின்றது.


Inline image 3

தெப்பக்குளம் நிறைய தண்ணீர் நிறைந்திருந்தது. பச்சை பசேலென பாசி படிந்த நீர்... ஆனாலும் அங்குள்ளோர் தேவைக்குப் பயன்படுகின்றது என்பதை அங்கே சில பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதையும் துணி துவைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. குளத்தின் அழகை மிக ரசித்ததால் நாங்கள் அங்கு இருந்து படம் எடுத்துக் கொண்டோம்.


Inline image 1


"எங்களையும் போட்டோ எடுங்களேன்" என்று ஒரு பெண்மணி சொல்ல அவரிடம் சென்றோம். "போட்டோ எடுத்தால் பரவாயில்லையா,இண்டெர்னெட்டில் போடுவேன் பரவாயில்லையா" என்று கேட்க.. "எடுங்க எங்களைப் போல வருமா..? சிவகங்கை பெண்கள் தான் இந்த நாட்டிலேயே உசத்தி" என்ரறு சொல்லி எங்களிடம் சிரித்துப் பேசினார். 

Inline image 2

அந்த அம்மாளுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு நாங்கள் குடவரைக் கோயிலை நோக்கி புறப்பட்டோம்.

தொடரும்...

அன்புடன்
சுபா