Thursday, November 1, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 9


குன்றக்குடி திருமடத்தில் இருந்த சில மணி நேரங்களில் அத்திருமடம் செய்து வரும் பணிகள் குறித்து அறிந்து கொண்டதில் எனக்கு மனம் நிறைவாக இருந்தது. பொதுவாகவே நமது சமூகத்தில் ஹிந்து சமய திருமடங்கள் வெறும் பூஜைக்கும் சடங்குகளுக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்ற ஒரு வித பொதுமைப்படுத்தும் உண்மையற்ற மாயை பலர் மனதில் நிலைத்திருக்கின்றது. சில சாமியார்களின் சுயநலப்போக்கும் ஏமாற்றுத்தனமான நடவடிக்கைகளும் இவ்வகையான எண்ணத்தைப் பலர் மனதில் உருவாக்கி வைத்திருப்பதில் வியப்பில்லை. இதற்கு மாற்றாக சமூகப்பணிகளையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் பல ஹிந்து சமய மடங்களும் தமிழகம் மட்டுமன்றி உலகின் பல இடங்களில் இயங்கி வருகின்றன என்ற உண்மையையும் அனுபவத்தில் பார்க்கும் போது பகிர்ந்து கொள்ள வேண்டியது நமது கடமையாகின்றது. இதற்கு எடுத்துக் காட்டாகத் திகழும் குன்றக்குடி மடத்தையும் அவர்களின் சேவையையும் நாம் பரவலாக சொல்லி மகிழ்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

குன்றக்குடி திருமடத்தின் வரலாறு நூலை எனக்கு அளித்து இதனை த.ம.அ. வலைப்பக்கத்திலும் இணைத்துக் கொள்ள அனுமதி அளித்தார் அடிகளார். இதனை மின்னூலாக்கி நமது சேகரத்தில் இணைத்திருப்பதோடு இதனை முழுதுமாக தட்டச்சு செய்து நமது வலைப்பக்கத்திலும் இணைத்திருக்கின்றோம். இந்த முழு நூலையும் தட்டச்சு செய்து கொடுத்த கீதாவை நாம் பாராட்ட வேண்டும். இந்த நூலை முழுதாக இங்கே காணலாம்.

அங்கிருந்து புறப்பட்டு அருகாமையில் அமைந்திருக்கும் குன்றக்குடி குடவரை கோயிலுக்குச் சென்று வர கிளம்பினோம். மதிய உணவுக்கு மீண்டும் திருமடத்திற்கு வந்து விட வேண்டுமென்று அன்புக் கட்டளை கிடைத்திருந்ததால் உணவுக்குக் கவலையின்றி நடந்து சென்று சுற்றிப் பார்த்து விட்டு வருவோம் எனப் புறப்பட்டோம்.

இடையில் திரு.திவாகரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. காரைக்குடியில் இருக்கும் சமயத்தில் தேவகோட்டை சென்று வர வேண்டுமென்றும் அங்கு நண்பர் வெங்கடேஷின் தகப்பானாரின் வீட்டிற்குச் சென்று அதனையும் பதிவு செய்து வர வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கான ஏற்பாடுகளையும் தானே செய்து விடுவதாகவும் குறிப்பிட்டார். இதுவும் நல்ல யோசனையாக இருக்கவே மாலையில் தேவகோட்டை சென்று வருவோம் என முடிவெடுத்தோம்.

மடத்திலிருந்து குடவரை கோயில் செல்லும் பாதையில் ஒரு அழகிய தெப்பக்குளம் அமைந்திருக்கின்றது.


Inline image 3

தெப்பக்குளம் நிறைய தண்ணீர் நிறைந்திருந்தது. பச்சை பசேலென பாசி படிந்த நீர்... ஆனாலும் அங்குள்ளோர் தேவைக்குப் பயன்படுகின்றது என்பதை அங்கே சில பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதையும் துணி துவைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. குளத்தின் அழகை மிக ரசித்ததால் நாங்கள் அங்கு இருந்து படம் எடுத்துக் கொண்டோம்.


Inline image 1


"எங்களையும் போட்டோ எடுங்களேன்" என்று ஒரு பெண்மணி சொல்ல அவரிடம் சென்றோம். "போட்டோ எடுத்தால் பரவாயில்லையா,இண்டெர்னெட்டில் போடுவேன் பரவாயில்லையா" என்று கேட்க.. "எடுங்க எங்களைப் போல வருமா..? சிவகங்கை பெண்கள் தான் இந்த நாட்டிலேயே உசத்தி" என்ரறு சொல்லி எங்களிடம் சிரித்துப் பேசினார். 

Inline image 2

அந்த அம்மாளுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு நாங்கள் குடவரைக் கோயிலை நோக்கி புறப்பட்டோம்.

தொடரும்...

அன்புடன்
சுபா

1 comment:

Unknown said...

கல்வெட்டுக்களால் முற்காலம் பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது அதே சமயம் எத்தனை சாதி இருந்த்து என்பதும் தெரிகிறது எனவே கால காலத்துக்கும் சாதிய ஒழிக்க முடியாதுனும் தெரிகிறது. சரியா தவறா

Post a Comment