Wednesday, March 4, 2020

ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள் -4

எங்கள் படகை எதிர்த்துக் கொண்டு எழும்பிய பேரலை முன் பகுதியை முழுமையாக நனைத்துவிட, நாங்கள் அதற்குள் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு படகில் நின்று கொண்டோம். நான் படகில் சுதாரித்துக் கொண்டு நின்றதைக் கவனித்த மீனவ நண்பர், ’நீங்கள் சமாளிக்கும் விதம் சரியான முறைதான்.. எப்படி இப்படித் தான் நிற்கவேண்டும் படகில் என்று தெரியும்’ என ஆச்சரியத்துடன் கேட்டார். நான் அவரைப் பார்த்து பதிலேதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டேன். இளம் வயதில் உயர்கல்வி முடித்ததும் நான் மலேசியாவிலிருந்தபோது ஒரு வார காலம் மாணவர்களுக்கான ராணுவ பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது கடலில் பாதுகாப்பாகப் பயணம் செல்லும் சில வழிமுறைகளைக் கற்றிருந்தேன். அது இன்றுவரை மனதில் பதிந்திருப்பதும், ஆபத்தான வேளைகளில் அந்தப் பயிற்சிகள் உடனே நமக்கு கை கொடுப்பதும் இயல்புதானே.

எங்கள் படகு மேலும் சென்று கொண்டே இருந்தது. அலைகளின் அழுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க, திரும்பிச் செல்வோம் என்று முடிவெடுத்துத் திரும்பத் தொடங்கினோம். அந்த சமயத்தில் பரங்கிப்பேட்டை மீனவ துறைமுகப் பகுதியைத் தாண்டி மேலும் சற்று தூரம் வந்திருந்தோம். தூரத்தில் கலங்கரை விளக்கமும் கண்களில் தென்பட்டது.

கடலூரில் கடற்கரையோரத்தில் ஏராளமான மக்கள் வழிபாட்டில் உள்ள ஆலயங்கள் இருப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். புத்து மாரியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில், பூரணி அம்மன் கோயில், கங்கை அம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், வெல்லாரி அம்மன் கோயில் என அங்கிருக்கும் ஒவ்வொரு மக்கள் வழிபடும் கோயில்களுக்கும் சென்று பார்த்து அவற்றின் சிறப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற பேராவல் எனக்கு இருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் போதாது என்பது தெள்ளத் தெளிவு.தூரத்திலிருந்து தெரிந்த சில கோயில்களின் கோபுரப் பகுதிகளை மட்டும் பார்த்துக்கொண்டேன்.

படகுப் பயணத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று அலையாத்தி காடுகள் தான். குவியல் குவியலாகக் குட்டி தீவுகளாக இந்த அலையாத்தி காடுகள் அமைந்திருக்கின்றன. ’பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றது’ என்று நான் சொன்னவுடன், படகை அலையாத்திக் காடுகளுக்கு அருகில் கொண்டு சென்று நான் மரங்களைத் தொட்டு ரசித்து மகிழ ஒரு வாய்ப்பினையும் வழங்கினார் அந்த மீனவ நண்பர். படகினை அப்படியே நிறுத்திவிட்டு அங்கேயே படகில் இருந்தபடியே அலையாத்திக் காடுகளை ரசித்துக் கொண்டிருக்க வேண்டும்போல் மனதில் கொள்ளை ஆசை எனக்கு. ஆனாலும் நேரம் கடந்து கொண்டே இருந்ததாலும், அன்றே நாங்கள் சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்ற திட்டம் இருந்ததாலும், படகுப் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரமும் எனக்கு இருந்தது.

இத்தகைய இயற்கை வளமும் எழிலும் நிறைந்த கடலூர் பகுதியை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்காமல் வைத்திருக்கிறார்களே, என்று எனக்கு வியப்பு தான் தோன்றியது. கடலூர் போன்ற வளமிக்க ஒரு ஊரும் உழைக்கும் மக்களும் அழகிய இயற்கையும் ஐரோப்பாவிலும் அல்லது ஏனைய ஆசிய நாடுகளிலும் அமைந்திருந்தால் அதனை இந்நேரத்திற்கு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாற்றி இருப்பார்கள். அதனால் அவ்வூர் மக்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார மேன்மை கிடைத்திருக்கும். ஆனால் இங்கு நான் கண்டதோ எதிர்மாறான ஒரு நிலைதான். இது துரதிஷ்டமே!

எங்கள் படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு எங்களை அழைத்துச் சென்ற மீனவ நண்பருக்கு நன்றி கூறிக்கொண்டு, அவரது தொடர்பு எண்ணையும் எடுத்துக்கொண்டு விடைபெற்றுத் திரும்பினோம். கடலூரில் மேலும் சில நண்பர்களைச் சந்தித்து நகர்ப் பகுதியிலும் பயணம் செய்துவிட்டு தம்பி ஜானகிராஜா அளித்த தேநீர் விருந்தையும் சுவைத்துவிட்டு இரவு அங்கிருந்து புறப்பட்டோம். ஒருநாள் பயணம் தான் என்றாலும் கூட கடலூரில் நான் சென்ற படகுப் பயணம், வித்தியாசமான அனுபவமாக, மகிழ்ச்சியளித்த பயணங்களில் ஒன்றாகவே அமைந்தது.

கடலூரில் அறிந்துகொள்ள இன்னும் ஏராளம் இருக்கின்றது. நிச்சயம் அடுத்த பயணத்தில் படகுப் பயணத்தோடு மக்களோடு மக்களாக அங்கேயே ஓரிரு நாள் தங்கி இருந்து அவர்கள் உணவையும் சுவைத்து, மக்களின் வழிபாட்டு வாழ்வியல் கூறுகளையும், மீனவ மக்களின் தொழில் வாழ்க்கையும் பதிவு செய்ய வேண்டும் என்ற பேரார்வம் எனக்கு இருக்கின்றது.

இந்த ஊர் சுற்றிப் புராணம் மீண்டும் தொடரும்.. மற்றுமொரு இடத்திலிருந்து..!

சுபா
















Saturday, February 29, 2020

ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள் -3

23.1.2020

(கடலூருக்கு நான் சென்று வந்த ஊர் சுற்றிப் புராணத்தை இடையில் சில நாட்கள் தொடர முடியவில்லை... இப்போது விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.. படகில் எங்களோடு சேர்ந்து வாருங்கள்..)

முதல் பாடல் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மேலும் ஒரு படகுப் பாடல் மனதில் ஒலிக்கத் தொடங்கியது....

’வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்’

பாடல் இனிமை தான்..
ஆனாலும் திரைப்படத்தில் பாடல் காட்சி பயங்கரமானதாயிற்றே... எங்கே.. படத்தில் வருவது போல் படகிலிருந்து நாம் கடலில் விழுந்து அசம்பாவிதம் ஆகிவிடக்கூடாதே என்று மனதிற்குள் ஒரு எச்சரிக்கை ஒலி..
பாடல் ஓடிக் கொண்டிருக்கும் வானொலியை நிறுத்துவது போல மனத்திரையில் ஓடிய பாடல் காட்சியையும் நிறுத்திக்கொண்டேன்.

படகு சற்று வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. எங்களை அழைத்து வந்த அந்த மீனவ நண்பரும் அவரது உறவினரான அந்த இளைஞனும் எங்களுடன் பேசிக்கொண்டே படகைச் செலுத்திக் கொண்டு வந்தனர். ஒரு நீளமான கம்பு நுனியில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதைக் கொண்டு போய் கடலில் ஒரு இடத்தில் குத்தி நிறுத்தினார். இதுதான் கொடி. இப்படி கடலில் செல்லும் போது நாங்கள் இந்தக் கொடியைக் குத்தி நிறுத்தி விட்டுச் செல்வோம். படகு கடலுக்குள் சென்றிருக்கின்றது என்பதற்கு இது அடையாளமாகும் என்று விளக்கினார்.

தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று துள்ளிக் குதிக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள். வெள்ளி நிறத்தில் பளிச் பளிச்சென கண்களை கவர்ந்தன. உடனே எல்லோரும் புகைப்படம் எடுப்போம் என முயற்சித்தோம்.. ஆனால் கண்களுக்குத் தெரியும் காட்சி புகைப்படக்கருவிக்குத் தெரிவதில்லை. இத்தகைய மீன் துள்ளும் எழில் காட்சிகளைக் கண்களால் நேரில் காண்பதுதான் இதனை முழுமையாக ரசிப்பதற்கு உள்ள ஒரே வழி. அதனை அன்று கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம்.

படகு மீண்டும் சென்று கொண்டே இருந்தது. தோழி ரேச்சலுக்கு டைட்டானிக் படம் நினைவுக்கு வந்துவிட்டது. டைட்டானிக் ஹீரோ போல நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெரியவர்கள் கூட குழந்தைகள் ஆகிப்போவது இத்தகைய பயணங்களில் தான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

எங்களை அழைத்து வந்த மீனவ நண்பர் படகு இயந்திரத்தை எப்படி இயக்குவது என எனக்கு காட்டுவதாகக் கூறி அழைத்தார். அருகில் சென்று அவர் சொல்லிக் கொடுத்த வகையில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். தோழி ரேச்சல் எங்களிருவரையும் பார்த்து கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் போல படகுப்பயணமா... நீங்கள்தான் எம்ஜிஆர் என்று அந்த மீனவ நண்பரைச் சுட்டிக்கட்டி அவரை கேலி செய்யத் தொடங்க, படகில் எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தோம். அந்த மீனவ நண்பரின் முகமெல்லாம் வெட்கம். அந்தக் காட்சியும் சூழலும் நட்பு உணர்ச்சியும் என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.

எங்கள் படகு கடந்து சென்ற பகுதியில் ஏராளமான மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது, இதுநாள்வரை நான் கண்டிராத ஒரு புது உலகம் போல எனக்குக் காட்சி அளித்தது. நான் கற்பனை செய்து பார்க்காத தமிழகத்தின் ஒரு பகுதி. வானமும் கடலும் நீலமாகக் காட்சியளிக்க, கரையோரத்தில் இருந்த எண்ணற்ற படகுகள் வர்ணஜாலம் காட்டிக்கொண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தன. படகுகளின் பெயர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக, ஆனால் அதே வேளை நாம் அறிந்த பெயர்களாக வைக்கப்பட்டிருந்தன.’ ஸ்ரீசெந்தில்குமரன், ஸ்ரீ முத்துமாரியம்மன், குமரன், மதுரைவீரன், சாந்தி’ என்ற பெயர்களுடன் அன்மைகால ’புள்ளிங்கோ’ வரை என படகுகள் அடையாளப் பெயர்களுடன் அழகழகாய் காட்சி அளித்தன.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு அழகிய வர்ணம் தீட்டி அதற்கு தனித்துவமாக ஒரு பெயரும் சூட்டி தங்களது படகுககளை மிகக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கின்றனர் என்பது புரிந்தது. கடற்கரையோர மீனவர்களின் வாழ்க்கையில் படகுகள் மிக உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. கடற்கரையோர வாழ்க்கை என்பது தனித்துவம் மிக்கது. நெய்தல் நிலப் பண்புகளைக் குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோர வரலாற்று நிகழ்வுகளை ஆராய வேண்டும் என்ற தீவிரம் என் மனதிற்குள் ஆழ வேரூன்றி கிளைவிட்டு விரிய ஆரம்பித்தது.

வரலாற்று ஆர்வலர்களால் இன்று அதிகம் பேசப்படாத, அறியப்படாத தமிழகத்தின் நெய்தல் நிலப் பகுதியை அறிந்துகொள்ளவேண்டும் என்ற சிந்தனை மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு பேரலை நாங்கள் சென்ற படகினைத் தாக்கியது. படகின் முன் பகுதியில் இருந்த தம்பி ஜானகிராஜா எழும்பி படகை நனைத்த அலையினால் முழுவதுமாக நனைந்து விட, படகில் இருந்த நாங்களும் அதிர்ந்து போனோம்.










தொடரும்
சுபா

Monday, February 17, 2020

ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள் -2


23.1.2020

ஊர்சுற்றிப் புராணத்தில் கடலூருக்குச் சென்ற செய்திகளை​ப்​ பத்து நாட்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தேன். இடையில் அதனைத் தொடர முடியவில்லை..

தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்குத் திரும்பி விட்டாலும், கதை பாதியிலேயே நிற்கிறதே என்று அவ்வப்போது நினைத்துப் பார்த்தாலும், இப்போதுதான் கதையைத் தொடர ​எனக்கு ​நேரம் கிடைத்தது.
வாருங்கள் ... படகுத்துறையில் என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் சொல்கிறேன்.

ராபர்ட் கிளைவ் தங்கியிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த அன்றைய முக்கியத்துவம் பெற்ற அந்தக் கட்டடம் இன்று சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றது. படிகளில் ஏறி உள்ளே என்ன தெரிகிறது என்று உடைந்த ஜன்னல்கள் வழியாக நானும் ஏனைய தோழர்களும் கவனிக்கத் தொடங்கினோம். உள்ளே ​உள்ளூர் மக்கள் ​சில​ர் தங்கியிருக்கின்றனர் என்பதற்கு​ச்​ சான்றாகப் பாய் படுக்கை​கள்​ ஆங்காங்கே தென்பட்டன.  இந்த பெரிய ​பழம் மாளிகையில் அன்று ஆங்கிலேயர்கள் உள்ளூர் மக்களைத் தங்க அனுமதித்திருக்க மாட்டார்கள்​.​ ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உள்ளூர் மக்கள் தற்காலிகமாக இங்கே தங்குகிறார்கள் என்ப​தை ​அப்போதைய ​சூழல் வெளிப்படுத்தியது.

வெளியே சில பெண்மணிகள் பாய் போன்ற ஒரு பெரிய துணியை விரித்து அதில் ​கடலிலிருந்து பிடித்து வந்திருந்த ​கடல் உணவு வகைகளை எடுத்து​ப்​ போட்டுக் காய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி கையில் வலை நிறையச் சிப்பிகளை​க்​ கடலிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தோம். அவரிடம் போய் அதை அருகாமையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் கண்களும் கவனமும் எனக்குப் படகுத்துறை நோக்கியே இருந்தன.

படகுத்துறை அருகில் சென்று அங்கிருந்து ரோபர்ட் ​க்ளைஃப் தங்கியிருந்த அந்த​ப்​ பாழடைந்த மாளிகையை​ப்​ பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு ஆணின் குரல். ​"​அம்மா பார்த்து நடங்க.. விழுந்திட போறீங்க..​"​ என.. ​கரிசனம் நிறைந்த குரல்.

கடலுக்குச் செல்லவிருக்கும் படகுகளை வர்ணம் பூசி அழகு படுத்திக் கொண்டிருந்தார்கள் ஒரு சிலர். ஏனையோர் இளைஞர்கள் ஒருவர் மட்டும் 50 வயது மதிக்கத்தக்கவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ​"​இந்த​ப்​ படகுகளை​ப்​ பற்றிச் சொல்லுங்கள்​,​ எங்கே செல்கின்றன​"​ என விசாரிக்க​த்​ தொடங்கினேன். அவரது வேலையை ​  எனது பேச்​சு தடை செய்கின்ற​து என்ற எந்த கோபமும் ​இல்லாமல் ​​புன்னகையோடு வந்து விளக்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு படகும் அழகாக​த்​ தூய்மை செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அவை இந்த சோழமண்டல கடற்கரை வெளிப்பகுதியில் வடக்கு நோக்கிச் சென்று அங்கு எல்லோரும் ஒன்றுகூடி ஒரு மிகப்பெரிய மீன் பிடிக்கும் கப்பலில் பயணம் செல்வார்களாம். தயாரிப்பு வேலை என்பது சாதாரணமல்ல​.​ மிகுந்த பொருட்செலவு அதில் உள்ளது என்று விரிவாகத் தகவல்களை வழங்கினார். ஒருமுறை கடலுக்குள் செல்லும் மீன்பிடிக்கும் கப்பலில் ஏறக்குறைய ரூபாய் ​6 லட்சத்திற்கான பொருட்கள் இருக்குமென்றும்​,​ மீன் பிடித்துக் கொண்டு வரும் பொழுது அது ஏறக்குறைய 15 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சரக்குகளாக இருந்தால்தான் அவர்களுக்கு அதில் லாபம் காண முடியும் என்றும் விளக்கினார். இவ்வளவு பணச்செலவு ஆகின்ற ​வேலையாக இருக்கின்றதே ​இந்த​ மீன்பிடித்தொழில், என்று நானும் தோழர்களும் பேசிக்கொண்டோம்.​ என்னுடன் வந்த தோழர்கள் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களையும் கூடுதலாக எனக்கு விளக்கினர்.​ ​​மிகப்பெரிய பொருட்செலவும்​,​ அதேவேளை வருமானமும் தரக்கூடிய ஒரு தொழில் இது என்று நினைத்தபோது இந்த​ப்​ புதிய செய்திகளை அறிந்து கொண்ட மகிழ்ச்சி மனதிலிருந்தது.
 ​
கடற்கரையோர மீனவர்களது வாழ்க்கை என்பது ​நகர்ப்புற மக்களுக்குத் தூரமான விசயமாகவே இருக்கின்றது. ​ சந்தையில் மீன் வாங்கி சுவையாக மணக்க மணக்கக் குழம்பு வைத்துச் சாப்பிட விரும்பும் நாம் மீன்களைப் பிடிக்கக் கடலுக்குச் செல்லும் மீனவ நண்பர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லையே என நினைத்துக் கொண்டேன். நெய்தல் நில வாழ்க்கை ஆராயப்பட வேண்டியது​!​ ​

படகுகளின் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி அங்குச் சென்றேன். தோ​ழி ரேச்சல் ​​"படகு சவாரி செல்கிறீர்களா​"​ என்று ஆவலைத் தூண்டும் வகையில் கேட்டார். இப்படி யாரும் சொல்லி விட்டால் போதுமே​...​ எனக்கு கண்டிப்பாகப் போக வேண்டும் என்று மனதில் ஆசை முளைத்து விடும். ​"​இந்த​ப்​ படகில் செல்ல முடியுமா? நீங்கள் வேலையாக இருக்கிறீர்களே​" என்று அந்த மீனவ நண்பரைக் கேட்டேன்​.

எந்த​த்​ தயக்கமும் இல்லை. ​"​வாங்க அழைத்துக்கொண்டு செல்கிறேன்​",​ என்று சொல்லி எங்களைப் படகில் வரவேற்று ஏற்றுக் கொண்டார். சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த அன்பான அழைப்பை. என்னுடன் தோழி ரேச்சல், தம்பி ஜானகிராஜன் உடன்வர அந்த மீனவ நண்ப​ர் தனது உறவினர் ஒரு இளைஞரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் ​ஐவராக படகுப் பயணத்தைத் தொடங்கினோம்.

​படகின் எந்திரத்தை அந்த இளைஞர் ஆரம்பிக்க, படகு மெல்ல நகரத் தொடங்கியது. ​தமிழ் சினிமாக்களில் வருகின்ற எம்ஜிஆர் பாடல் ​என் ​மனதில் ஒலிக்கத் தொடங்கியது.

ஓடும் மேகங்களே
ஒருசொல் கேளீரோ..
















Friday, February 7, 2020

ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள் -1



கடந்த சில தினங்களுக்கு முன் காலை 9 மணிக்கு கடலூரில் ஒரு மகளிர் கல்லூரியில் ஒரு கருத்தரங்கை தொடக்கிவைத்து சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். சென்னையிலிருந்து ஒரு வாகன பயணம்; இடையில் தோழி ரேச்சலும் இணைந்து கொள்வதாகத் திட்டம். அன்றைய நாள் முழுதும் கடலூரில் செலவிட்டு இரவு திரும்புவதாக எங்கள் பயணத் திட்டம் இருந்தது. கடலூருக்கு என நான் செல்வது இதுவே முதல் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடலூர் சென்றிருந்த போது திரும்பிச் செல்லும் பாதையில் கடலூரைக் கடந்து வரும் வாய்ப்பு கிடைத்தது. பண்டைய தமிழக வரலாறு மற்றும் ஐரோப்பியர்கள் வருகையால் ஏற்பட்ட மாற்றம் ஆகிய வரலாற்றுத் தகவல்களை அதிகம் கொண்டிருக்கும் னகரங்களின் வரிசையில் கடலூரும் ஒன்று என்பதை நான் அறிவேன். ஆயினும் நேரில் சென்று பார்த்துவர சரியான வாய்ப்பு அமையாத காரணத்தால் ஆவல் இருந்தாலும் அது சாத்திய படாமலேயே தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. அந்த குறையை போக்குவதாக இந்த பயணம் அமைந்தது.

பண்டைய காலம் தொட்டே கடலூர் கடல் வணிகத்திற்கு மிக முக்கியமான ஒரு துறைமுக நகரமாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு டச்சுகாரர்கள், போர்த்துகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் தாக்கம் இப்பகுதியில் நிலைபெற்றது. ஜெர்மானிய பாதிரிமார்கள் தரங்கம்பாடியை அடுத்து இப்பகுதியில் தங்கள் சீர்திருத்த கிருத்துவ மையத்தையும் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கினார்கள் என்பது வரலாறு.முதலில் கடலூருக்கு வணிகம் செய்ய வந்த பிரெஞ்சுக்காரர்கள் பின்னர் அருகாமையில் இருக்கும் பாண்டிச்சேரியில் தங்களது வணிக மையத்தை ஏற்படுத்தி 1674 ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கினர். 1690ல் கடலூரில் ஆங்கிலேயர்கள் தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். 1758ம் ஆண்டு வரை கடலூர் தென்னிந்திய மாவட்டங்களின் தலைநகரமாக பிரித்தானிய காலனித்துவ அரசின் கீழ் அமைந்திருந்தது. இன்றும் இங்கு காட்சி அளிக்கும் செயிண்ட் டேவிட் கோட்டையில் தான் அன்று அரசு நிர்வாகம் செய்யப்பட்டது. இது ராபர்ட் கிளைவ் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

எனக்குக் காலை நேரப் பயணத்தில் சாலையோர கடைகளில் சூடான தேநீர் வாங்கி அருந்துவது மிகப் பிடிக்கும். வாகனம் ஓட்டி தேனீருக்காக நிறுத்தியபோது நாங்களும் இறங்கிக் கொண்டோம். நான் கசப்பாக காப்பியும் தேநீரும் அருந்துவதை அறிந்திருக்கும் தோழி ரேச்சல் தேனீர் போடுபவரிடம் ஸ்ட்ராங் டிகாக்ஷன் போட்டுத் தாருங்கள் என கேட்டுக்கொண்டார். இருவருக்குமே தேனீர் வந்தது. ஆனால் எதிர்பார்த்த சுவை இல்லை. சும்மாவே தேனீர் வாங்கியிருந்தால் சுவையாக இருந்திருக்குமோ என்று பேசிக்கொண்டோம். சில நேரஙளில் இப்படித்தான் நாம் ஏதாவது ஒன்று சொல்லி இயல்பாகவே நன்றாக இருக்கும் ஒன்றை அப்ப்டியோ மாற்றி விடும் அனுபவம் ஏற்பட்டு விடுகிறது. :-

ஏறக்குறைய மூன்று மணி நேர வாகன பயணம். செங்கல்பட்டு மதுராந்தகம் மேல்மருவத்தூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் என ஒவ்வொரு ஊராக பார்த்துக்கொண்டே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். வரும் வழியில் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து எங்கள் பயணம் இருந்தது.

விக்கிரவாண்டி தொடங்கி மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகள் பசுமையாக இருந்தன. இப்பகுதிகளில் நிலத்தடி நீர் வளமான இயற்கைச் சூழலையும் விவசாய முயற்சிகளுக்கு ஆதாரமாகவும் இருப்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். நான் சென்றிருந்தபோது இப்பகுதியில் கரும்புத் தோட்டங்களில் ஆணும் பெண்ணுமாக மக்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். காய்கறிகள் விவசாயம் சாலையின் இருபுறத்திலும் காணக்கூடியதாக இருந்தது.

முதலில் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிற்பகல் 2 மணி வரை கலந்துகொண்டு, பின்னர் பெரியார் அரசுக் கல்லூரியிலும் தமிழ் துறை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாலை நான்கு வாக்கில் நிகழ்ச்சிகளிலிருந்து விடுபட்டுக் கொண்டோம். உரை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த சகோதரர் முனைவர் ஜானகி ராஜா ஐரோப்பியர் கால கட்டடங்கள் சிலவற்றைச் சுற்றிக்காட்ட திட்டமிட்டிருந்தார்.

முதலில் நாங்கள் வந்தடைந்த இடம் சில்வர் பீச் அல்லது வெள்ளி கடற்கரை. இப்படி ஒரு அருமையான கடற்கரை இங்கே இருக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விரிவான மணல் நிறைந்த கடற்கரை அழகாக காட்சியளித்தது. அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடிந்து அங்கு கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் பெரியார் அரசு கல்லூரி அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியைப் பெற மிக முக்கிய அடித்தளம் அமைக்கும் ஒரு கல்லூரி. ஆயினும் சில மாணவர்கள் பாட நேரத்தில்கூட கடற்கரையில் நேரத்தை செலவிடுகிறார்கள் என்ற செய்தி வருத்தம் அளிக்கத் தான் செய்தது.

சாலையில் மெதுவாக வாகனத்தில் பயணித்துக் கொண்டே கடற்கரையை ரசித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான படகுகள் கண்களைக் கவர்ந்தன. இறங்கி நின்றவாறு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதே சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்தது.

தொடரும்
-சுபா

Friday, January 31, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 4


19.1.2020

​ஊர்சுற்றி மாசுபடாத இயற்கையின் மத்தியிலும்​,​ அதன் உண்மையான வாரிசுகளின் இடையேயும் மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கழித்​தால் அவனுக்கு எவ்வள​வோ மகிழ்ச்சி கிட்டும்​.​ அவன் ஒவ்வொரு நாளும் புதிய புதிய விஷயங்களை​த்​ தெரிந்து கொள்வான்​,. வரலாறு​,​ மனித இனம்​,​ மொழி அல்லது வேறு ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பான்​.​ அவன் அங்கிருந்து வெகுதூரம் போய் விட்டால் ​பழைய நினைவுகள் இனிய நினைவுகளாக நிலைத்து விடுகின்றன​.​ அந்த இனிய நினைவுகள் அவனை​ப்​ பொறுத்தவரையில் அவனுடனே மறைந்து விடலாம்​.​ ஆனால் அவன் தன் நினைவுகளுக்கு எழுத்து வடிவம் தந்து விட்டுப் போனால் அவன் மறைந்த பின்னரும் லட்சக்கணக்கான வாசகர்களின் கண்களின் முன்னால் அ​வ்வினிய நினைவுகள் உயிர்பெற்று எழும்.
​-ஊர்சுற்றிப் புராணம், ராகுல் சாங்கிருத்யாயன்"​

சட்ராஸ் அல்லது சதுரங்கப்பட்டினம் என்ற பெயர் ​ஓரிரு முறை மட்டுமே ​சில டச்சு ஆவணங்களில் பார்த்த நினைவு எனக்கு உண்டு. ஆயினும் இப்பகுதிக்கு​ச்​ செல்லும் வாய்ப்பு எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை​.​ இது ஒரு கடற்கரைப் பட்டினம் என்பதை வரைபடத்தில் பார்த்திருந்தேன்​.​ ஆனால் ஆழமாக மனதில் ஏனோ இது பதியவில்லை.​ தோழி ரேச்சல் எனது வரலாற்று ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இந்த இடத்திற்கு நான் வரவேண்டும் எனச் சொல்லியிருந்தார். ஆகஇந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இச்சிற்றூரை எனக்கு அறிமுகப்படுத்திய ரேச்சலுக்கு நான் நன்றி சொல்வது கடமையாகும். ​

​தமிழக ​நில வரைபடத்தில் மாமல்லபுரத்தி​ற்கு அடுத்த நகரமாக சதுரங்கப்பட்டினம் வருவதை நினைவுபடுத்திக் கொண்டேன்​.​ மதியம் ஏறக்குறைய 12 நெருங்கிக்கொண்டிருந்தது​.​ நாங்கள் கோட்டையின் வாயில் பகுதி வந்தடைந்து உள்ளே அனுமதி உண்டா என்று தேடிப் பார்த்தோம்​.​ ​இந்தியத் தொல்லியல் துறையின் ஊழியர் ஒருவர் அங்கு அமர்ந்​திருந்தார்​.​ அவருடன் அவரது நண்பர் ஒருவரும் அமர்ந்திருந்தார்​.​ அவரிடம் இந்த​க்​ கோட்டையை நாங்கள் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டு கோட்டையை​ப்​ பற்றி சற்று விசாரித்தோம்​.​ கோட்டையை​ப்​ பற்றிய விவரங்கள் அடங்கிய லேமினேட் செய்யப்பட்ட அட்டைகளை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தார்​.​ அதில் கோட்டையின் வரலாறு பற்றிய செய்திகள் வழங்கப்பட்டிருந்தன​.​ அதனை வாசித்து விட்டு ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துவர​க்​ கிளம்பினோம்.

இன்று நாம் காணும் சதுரங்கப்பட்டினம் கிபி 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது​. கி.பி. 1353ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இப்பகுதியை ராஜநாராயணன் பட்டினம் எனக் குறிப்பிடுகின்றது என்றும், இப்பகுதியைச் சோழ மன்னர்களின் கீழ் ஆட்சி செய்த சம்புவராயர்கள் ஆட்சி செய்தனர் என்றும், கி.பி.1337லிருந்து 1367ம் ஆண்டில் ஆட்சி செய்த சிற்றரசரின் நினைவாக இப்பெயர் அமைந்ததாகவும், கி.பி.15ம் நூற்றாண்டு விஜயநகர நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இங்குள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று இப்பகுதியைச் சதிரவாசகன்பட்டினம் என்றும் குறிப்பிடுவதைத் தகவல் அட்டையில் உள்ளக் குறிப்புக்களின் வழியாக அறிந்து கொண்டோம். ​ கடற்கரை துறைமுகப் பட்டினமாக விளங்கிய இப்பகுதி மெல்லிய மஸ்லீன் துணிகள் மற்றும் முத்துக்கள் உற்பத்தி ஏற்றுமதி ஆகிய தொழிலுக்காகப் பிரசித்தி பெற்ற ஒரு நகரமாக அன்று விளங்கியது​.​

இன்று நாம் காணும் சிதிலமடைந்த கோட்டை டச்சுக்காரர்களால் ​ 17ம் நூற்றாண்டில் ​கட்டப்பட்டது.​ ​1818 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் ​இக்கோட்டையைத் தாக்கி டச்சுக்காரர்களிடமிருந்து அதனை​க்​ கைப்பற்றிக் கொண்டது​.​ பின்னர் ​சதுரங்கப்பட்டினம் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1620 தொடங்கி 1769 வரை இப்பகுதியில் பணியாற்றிய முக்கிய டச்சு அதிகாரிகள் சிலரது கல்லறைகள் இக்கோட்டையின் வலது புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையின் மேற்பகுதியிலும் கல்வெட்டும் அரசு முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளன​.​ ஒவ்வொரு அரசு முத்திரையிலும் வெவ்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்ட வகையில் கல்லறையின் மேற்பகுதி அமைந்திருக்கின்றது​.​ கல்லறை பகுதிக்கு அடுத்து ஒரு கட்டிடம் உள்ளது. சிதிலமடைந்த கட்டடத்தின் உள்ளே சென்று பார்த்தோம்​.​ பின்னர் வெளியே வந்து ஏனைய பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஒவ்வொரு பகுதிகளிலும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் தென்னிந்தியப் பகுதியில் ஆளுமை செலுத்திய ஐரோப்பியர்களி​ன் வரிசையில் போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்​.​ அதிலும் குறிப்பாகச் சோழமண்டலக் கடற்கரை​ப்​ பகுதியான பழவேற்காடு​,​ மாமல்லபுரம்​,​ சதுரங்கப்பட்டினம்​,​ நாகப்பட்டினம்​,​ தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் டச்சுக்காரர்களின் ஆளுமை ஒரு நூற்றாண்டு​க்கும் மேல்​ பலம் ​பொருந்தியதாக அமைந்திருந்தது.

சதுரங்கப்பட்டினம் நெசவாளர்கள் நிறைந்த ஒரு பகுதியாக 16ஆம் நூற்றாண்டில் திகழ்ந்தது​.​ மிக முக்கியமாக மெல்லிய மஸ்லீன் துணிகள் ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்ததன் விளைவாக இப்பகுதியில் டச்சுக்காரர்கள் ஒரு தொழிற்சாலையை ​ அன்று ​அமைத்தார்கள்​.​ சதுரங்க பட்டினத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட மஸ்லீன் துணிகள் ஐரோப்பாவிற்கு​க்​ கப்பல்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன​.​ வணிகம் மிகச் சிறப்பாக வளர்ந்ததால் டச்சுக்காரர்கள் அங்கு ஒரு கோட்டையைக் கட்ட முயன்று இன்று நாம் காணும் இக்கோட்டையை​க்​ கட்டினார்கள்.

டச்சுக்காரர்க​ளிடமிருந்து இக்கோட்டையை​க்​ கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இதனை​ப்​ பாதுகாக்கவில்லை​.​ இன்று இக்கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது​.​ சதுரங்கப்பட்டினம் உள்ள பகுதிக்கு அருகில் தான் கல்பாக்கம் அணு​ ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ​

சிதிலமடைந்து காட்சியளித்தாலும் இக்கோட்டை இன்றும் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு சின்னமாகவே திகழ்கின்றது. கோட்டைக்குள் உள்ள கல்லறையில் உள்ள சின்னங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியவை​.​ ஒரு கல்லறையில் கப்பல் வடிவமும் மற்றொரு கல்லறையில் சூலம்​,​ ருத்ராட்சம்​,​ விலங்கு சின்னமும்​,​ ​​​மற்றுமொரு கல்லறையில் புலியின் சின்னமும்​,​ மற்றுமொரு கல்லறையில் மீன் சின்னமும் என வெவ்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்ட வகையில் கல்லறைகள் டச்சு மொழி கல்வெட்டுகள் இணைந்த வகையில் ​அமைக்கப்பட்டிருக்கின்றன​.​ இக்கல்வெட்டுகள் மற்றும் சின்னங்கள் சொல்லும் செய்திகளை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாக ஆய்வு மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். ஆய்வுக்கு வழிவகுக்கும் சிறந்த களமாக இப்பகுதி உள்ளது என்பதை நானும் தோழி ​ரேச்சலும் பேசிக்கொண்​டே கொளுத்தும் மதிய வெயிலில் நடந்தோம்.

​இக்கோட்டை ​வளாகத்திற்குள்ளேயே ஒரு கிணறு இருக்கின்றது​.​ ​விரிந்த கிளைகளுடன் கூடிய 200 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு புளியமரமும் இருக்கின்றது. கோட்டையை முழுமையாகப் பார்த்துவிட்டு தொல்லியல் துறை பணியாளரிடம் ​நன்றி சொல்லி வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு​விடைபெற்று​ அங்கிருந்து புறப்பட்டோம்.

ஒரு காலத்தில் பெரும் வணிக நகரமாகவும்​,​ ஐரோப்பியர்கள் ​ விரும்பி வாழ்ந்த​​ ஒரு நகரமாக இருந்த சதுரங்கப்பட்டினம் இன்று ஆள் நடமாட்டம் குறைந்து முக்கியத்துவம் குறைந்த ஒரு நகரமாகக் காட்சியளிக்கின்றது​. ​ சதுரங்கப்பட்டினம் இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதிதான்​.​ கடற்கரையும் இருப்பதால் மிகச் சிறப்பாக இப்பகுதியை ஒரு சுற்றுலாத்தலமாக அரசு மாற்றி அமைக்கலாம்​.​ அப்படிச் செய்யும் பொழுது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் விரிவாக அமையும்​.​ சுயதொழில் பெருகும்​.​ அதேசமயம் வரலாற்றுச் சிறப்பும் பாதுகாக்கப்படும்.

தமிழகத்தின் உள்ளே ஒவ்வொரு இடத்திற்கு​ப்​ பயணிக்கும் போதும்​,​ இவ்வளவு ​இயற்கை ​வளத்தைப் பொருளாதார ரீதியாக வலுவாக மாற்றாமல் இருக்கிறார்களே என நினைத்து நான் வருந்துகின்றேன்​.​ இயற்கை வளம் இல்லாத எத்தனையோ நாடுகள்​ தமது​ தீவிர முயற்சியினால் நாட்டின் வளர்ச்சியை உயர்த்தி இருக்கின்றன​.​ ஆனால் தேவைக்கு அதிகமான மனித வளம்​,​ இயல்பான இயற்கை வளம்​,​ வணிகத்திற்கு ஏற்ற இயற்கை சூழல் என அமைந்த பல சிற்றூர்கள் தமிழகத்தில் அதன் சிறப்பும் பொலிவிழந்து பரிதாபமாகக் காட்சி அளிப்பது வேதனையை அளிக்கின்றது.

சதுரங்கப்பட்டின​த்திற்கான எனது பயணம் தமிழகத்தில் டச்சுக்காரர்களின் ஆளுமையை ஓரளவு நேரடியாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பினை ​எனக்கு ​வழங்கியது. இதேபோல அடுத்து மற்றுமொரு தமிழகத்துக் கடற்கரையோர நகருக்கு விரைவில் செல்லவேண்டும் என்று மனதில் ​திட்டம் ​ஓடத்​தொடங்கிவிட்டது. வரலார்றுத் தேடல் நிறைந்த பயணத்திற்கும் ஆய்விற்கும் தான் முடிவில்லையே :-)





-சுபா

Wednesday, January 29, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 3

19.1.2020

"சுயமரியாதை அற்ற எவனும் உயர்தரமான ஊர்சுற்றி ஆக முடியாது. உண்மையான ஊர்சுற்றி முகஸ்துதி விரும்பமாட்டான்‌‌. உலகத்தில் எவரையுமே தன்னைவிட தாழ்ந்தவர்களாகவும் எண்ணா மனோநிலையை ஊர்சுற்றி பெற்றிருக்க வேண்டும். சமநிலை பார்வையும் நெருக்கமான நட்புறவும் அவன் கொண்டிருக்கவேண்டும்.
-ஊர்சுற்றிப் புராணம், ராகுல் சாங்கிருத்யாயன்"


திருக்கழுக்குன்றம் வந்தடைந்தது எங்கள் ஷேர் ஆட்டோ. நாங்கள் இறங்கிக்கொண்டோம். எதிரே பிரமாண்டமான திருக்கழுக்குன்றம் கோவில் கண்களில் தென்பட்டது. உள்ளே சென்று கோயிலையும் அதிலுள்ள சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் பார்க்க ஆவல் இருந்தாலும், அன்று நேரம் போதாது என்ற காரணத்தால் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அங்கிருந்து மற்றொரு ஷேர் ஆட்டோ எடுத்து வெங்கம்பாக்கம் செல்ல வேண்டும் எனத் தோழி சொல்லி இருந்தார். அங்கு காத்திருந்த ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். முந்தைய ஷேர் ஆட்டோ போல இது இல்லை. புறப்பட்டு சில நிமிடங்களில் ஏதோ இயந்திரக் கோளாறு. சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு ஷேர் ஆட்டோவை நிறுத்தி அதில் எங்களை ஏற்றிவிட்டார்கள். பத்து நிமிட பயணத்தில் வெங்கம்பாக்கம் வந்தடைந்தோம்.

அடுத்து அங்கிருந்து மேலும் ஒரு ஆட்டோ எடுத்து சதுரங்கப்பட்டினம் செல்ல வேண்டும். சாலையின் இடது புறத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். எங்களைத் தவிர வேறு யாரும் அதில் இல்லை என்பதால் வாகன ஓட்டி ஷேர் ஆட்டோவை எடுக்காமல் காத்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு குளிர்பானக் கடை இருந்தது. அதில் நான்கு 30 வயது மதிக்கத்தக்க ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களது உடை அவர்கள் ராணுவ வீரர்கள் என்பதை வெளிப்படுத்தியது.

5 நிமிடங்கள் காத்திருந்துவிட்டு எங்கள் வாகன ஒட்டி அவர்களிடம் சென்றார். அவர்களை அழைத்து வந்து எங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்பது அவரது திட்டம். அவர்கள் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தார்கள். இந்த குட்டி வாகனத்தில் ஏற்கனவே இரண்டு பேர் பெண்கள் இருக்கின்றோம். இதில் மேலும் 4 பெரிய பைகளுடன் இந்த 4 ஆண்களும் ஏறினால் வண்டியில் இடம் இருக்குமா என்பது அவர்கள் சந்தேகமாக இருந்திருக்கலாம்.

எங்களை அவர்கள் பார்க்க, நாங்கள் கையசைத்து வாருங்கள் சேர்ந்து பயணிக்கலாம் என்று அழைத்தோம். எங்களிடம் வந்து உள்ளே எப்படி இந்தப் பெரிய பைகளை வைப்பது எனக் கேட்க, தோழி ரேஷல் அவர்களுக்கு வழி காட்டினார். பைகளை ஒருவழியாக ஷேர் ஆட்டோவில் அடுக்கி வைத்துவிட்டு அவர்கள் நால்வரும் அமர்ந்து கொண்டார்கள். நான்கு பேருக்குமே தமிழ் தெரியாது. இந்தி மொழி மட்டுமே பேசுகிறார்கள்.

தனக்குத் தெரிந்த இந்தி மொழியில் தோழி ரேஷல் அவரிடம் பேச்சுக் கொடுத்தார். அவர்கள் கல்பாக்கம் செல்வதாகவும் தாங்கள் காத்திருந்த பஸ் வர தாமதமானதாகவும் தெரிவித்தார்கள். சில நிமிடங்களில் கல்பாக்கம் வந்து சேர, அவர்கள் இறங்கிக் கொண்டார்கள்.

தமிழகத்தில் வேலை செய்யும் போது தமிழ் மொழி தெரிந்துகொள்ள வேண்டாம் என்ற சிந்தனையுடன் இவர்கள் வேலை செய்வது வெளிப்படையாக தெரிகின்றது என நாங்கள் பேசிக்கொண்டோம்.

கல்பாக்கத்தில் இருந்து எங்கள் ஷேர் ஆட்டோ தனது பயணத்தைத் தொடர்ந்தது. சற்று நேரத்தில் சதுரங்கப்பட்டினம் வந்து சேர்ந்தோம். ஷேர் ஆட்டோவிற்கு மொத்தம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு இறங்கிக் கொண்டோம். அருகிலேயே சாத்துக்குடி ஜூஸ் வண்டி ஒன்றை வைத்துக்கொண்டு ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார். அவரும் ஒரு வட இந்தியர். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுகின்றார். இருவரும் இரண்டு சாத்துக்குடி ஜூஸ் வாங்கிக்கொண்டோம். தமிழகத்தின் சிற்றூர்களிலும் வட இந்தியர்கள் நம்பிக்கையோடு தங்கள் வணிக முயற்சியை தொடங்கிவிட்டார்கள் என்பதை இது உறுதிபடுத்தியது.

நாங்கள் இறங்கிய பகுதிக்கு எதிர்ப்புறத்தில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை தனது பிரம்மாண்டம் குறையாமல் காட்சி அளித்துக் கொண்டு நின்றது. எதிர்ப்புறத்தில் அலைகள் ஆர்ப்பரிக்க கடல் காட்சி.

ஒவ்வொருமுறையும் கடற்கரையோரப் பகுதியை காணும்போது எனது பிறந்த ஊரான மலேசியாவின் பினாங்குத் தீவு மனதில் காட்சியாக வந்து செல்லத் தவறுவதில்லை. இளம் வயதில் மனதில் பதிந்து வைத்த காட்சிப் பதிவு மனக்கண்ணில் ஓட எதிரிலிருந்த கடல் காட்சி என்னை இயல்புநிலைக்கு மீண்டும் கொண்டு வந்தது.

சுனாமி அலை தாக்கியபோது இப்பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட்டதாகவும், தனது சமூக சேவை அமைப்பு வழியாக இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் வழங்கிய உதவிகள் பற்றி தோழி விவரித்துக் கொண்டே வர, நாங்கள் கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.





தொடரும்
-சுபா

Wednesday, January 22, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 2

19.1.2020

தடைகளைத் தகர்த்தெறிந்து வெளிவர வேண்டியது ஊர்சுற்றிக்கு மிகவும் அவசியமாகும். உலகம் புரிந்த எந்த வாலிபருக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை தோன்றாமல் இருக்குமா? தம் நரம்புகளில் சூடான ரத்தம் ஓடும் எவரும் தம் வீட்டு மதில் சுவர்களைத் தகர்த்தெரிந்து வெளியில் போக வேண்டுமென்று விரும்பாமல் இருக்கமாட்டார்கள் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். இவர்களுடைய முன்னேற்ற பாதையில் தடைகள் ஏராளம். வெளி உலகத்தின் தடைகளை விட மனிதரின் உள்ளத்தில் தான் அதிக தடைகள் இருக்கின்றன.
-ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். படிகளில் ஏறி வரும்போது இடதுபுறத்தில் கடலைக் காண்பது போன்ற ஏரி. தூரத்தில் சிறிய குன்றுகள், பசுமையுடன். ஏரிக்கரை மேல் ஏராளமான குப்பைகள். இயற்கையை பாழ்படுத்தும் மனிதர்களை மனதிற்குள் சபித்துக் கொண்டேன்.

படிகளின் மேல் ஏறி வரும் போது ஒரு பகுதியில் நின்று ஏரியை ரசிக்கத் தோதாக படிகள் உள்ளன. நான் அங்கு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். ஏரியைப் பார்த்து ரசித்தேன். ஒரு குடும்பத்தினர் புகைப்படங்கள் எடுத்துக். கொண்டிருந்தார்கள். அவர்கள் இயற்கையின் பின்னணியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் வகையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

மனிதர்கள் இயற்கையின் ஒரு பகுதி. அதனால்தான் ஏரி, குளங்கள், ஆறுகள், கடல், மலைகள், குன்றுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் காணும்போது நமது மனித மனம் நெகிழ்கிறது; மகிழ்ச்சி அடைகின்றது. நீண்ட நேரம் இந்த இயற்கையோடு நமது நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும் முயற்சிக்கின்றது. ஆனால் பல்வேறு பணிகளுக்கு இடையே மாட்டிக் கொள்ளும் இக்காலத்து மனிதர்களாகிய நாம் நம்மைச் சுற்றி இருக்கின்ற இயற்கையைக் காணவும் ரசித்து அனுபவிக்கவும் கூட என்றாவது ஒரு நாள் தான் நேரத்தை ஒதுக்கிக்கொள்கின்றோம் என்பது பெரும் குறைதான். நாம் நமக்கு நன்மை செய்து கொள்ள வேண்டுமென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இயற்கையோடு நமது காலத்தைச் செலவிட வேண்டும். நம் மன மகிழ்ச்சிக்கு அதுதான் அடிப்படையாக அமையும்.

சற்றுநேரம் ஏரியைப் பார்த்து ரசித்துவிட்டு படிகளில் கீழே இறங்கி நடக்கத் தொடங்கினேன். வழி எங்கும் சிறுநீர் துர்நாற்றம். கடந்து செல்லும் ஒவ்வொருவரும் இந்த துர்நாற்றத்தை அனுபவித்துக்கொண்டே தான் செல்ல வேண்டிய சூழல். மக்கள் துர்நாற்றத்தை இயல்பாகப் பழகி விட்டார்கள்; ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இல்லையென்றால் இதனை தடுத்து சுத்தப்படுத்த வேண்டும்; மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கும் அல்லவா?!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் வாசலில் நிறைய ஆட்டோ வாகனங்கள் காத்திருந்தன. ரயில் நிலையத்திற்கு முன்னே மகாத்மா காந்தியின் உருவச்சிலை. அதை சுற்றி சிறிய பூங்கா.. பார்ப்பதற்கு மனதிற்கு இதமான காட்சியாக அது இருந்தது. சற்று நேரத்தில் தோழி ரேஷல் வந்து சேர்ந்தார். முதலில் ஒரு காப்பியும் பசிக்கு ஏதாவது உணவும் சாப்பிட வேண்டும் என்று சொல்ல, ஒரு சிறு கடைக்குள் சென்றோம். ஒரு தோசை ஆர்டர் செய்தேன். நேரமாகி இருந்ததால் சட்னி-சாம்பார் அனைத்தும் சுவையில்லாமல் இருந்தது. ஆனால் காப்பி சுவையாகவே இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டு முதலில் திருக்கழுக்குன்றம் செல்லலாம் என முடிவாகியது. ஷேர் ஆட்டோ சவாரி செல்லலாம் என்று முடிவெடுத்தோம். தமிழகத்தில் ஷேர் ஆட்டோவில் எனது முதல் அனுபவம் இது. ஷேர் ஆட்டோவில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். எங்களுக்கே தயாரித்தது போன்ற ஒரு ஆட்டோ. சுற்றுப் பயணிகளுக்கு மிகத் தோதாக பின்பக்கம் மறைப்பு ஏதுமில்லாமல் திறந்து இருந்தது.
வெளியே தெரியும் சாலைக் காட்சி, சாலையில் செல்லும் மாடுகள், அவற்றை ஓட்டிச் செல்லும் மக்கள் என பார்த்துக்கொண்டே வந்தோம்.

ஓரிடத்தில் ஆட்டோ நின்றது. சில பெண்கள் ஏறிக்கொண்டார்கள். அந்த இடத்தில் சாலையின் இடதுபுறத்தில் ஆட்டு இறைச்சி விற்கும் சிறிய கடை ஒன்று இருக்கின்றது. ஆட்டு இறைச்சியை வெட்டிவிட்டு தோலை கட்டி வரிசையாக தொங்க விட்டிருந்தார்கள். நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். காலை வேளை என்பதால் ஆட்டிறைச்சி வாங்க சிலர் வந்திருந்தார்கள்.

நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மிக அழகாக ஜோடிக்கப்பட்டுடிருந்தது. ஆட்டோ வாகனத்திலேயே பாடல் கேட்டு ரசித்து கொண்டு வரும் வகையில் ரேடியோ, சிடி என்ன அசத்தியிருந்தார் அந்த ஓட்டுனர். 90களின் இறுதியில் வந்த இசையமைப்பாளர் தேவா மற்றும் இளையராஜா இசையமைத்த பாடல்கள்.. இந்தப் பயணத்தை எனக்கு தேவலோகத்தைச் சுற்றி பார்ப்பது போல மிக இனிமையான அனுபவமாக மாற்றி தந்தது.

ஷேர் ஆட்டோவில் எங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த மேலும் ஐந்து பெண்கள் எங்களுடன் பேசிக் கொண்டே வந்துகொண்டிருந்தார்கள். முதல் முறை பார்த்தாலும் உறவுக்காரர்கள் போல பேசும் அந்தப் பண்பு என் மனதை மகிழ வைத்தது. அவர்களிடம் பேசிக்கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. திருக்கழுக்குன்றம் வந்து சேர்ந்தோம். இரண்டு பேருக்குமே சேர்த்து 30 ரூபாய் தான்.

அதிர்ச்சியா.. ஆச்சரியமா..? இவ்வளவு குறைந்த தொகையில் பயணம் செய்ய முடிகிறதே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வார இறுதி நாட்களில் அருகாமையில் இருக்கும் பல ஊர்களுக்கும் தமிழக மக்கள் பயணித்து வரலாம்.. இதனால் புதிய புதிய இடங்களை நாம் பார்த்து ரசிக்கலாம் என்பதோடு ஷேர் ஆட்டோ, உணவகங்கள், சிறு சிறு வியாபாரங்கள் என தமிழக மக்களின் சுய உற்பத்தி வணிகமும் பெருக வாய்ப்பாகுமே என தோழியிடம் மனதில் பட்டதைத் தெரிவித்துக் கொண்டேன்

சுற்றுலா செல்வது, பயணம் செல்வது என்றால் அது வெளிநாடுகளுக்குத் தான், என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. நமது பக்கத்து ஊரில் உள்ள ஏராளமான இயற்கை பகுதிகளுக்குச் சென்று வருவதும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களைச் சென்று பார்த்து வருவதும் கூட சுற்றுலா தான்.
பயணம் சென்று ஓர் இடத்தைப் பார்ப்பதை யாராவது நேர விரயம் என்று சொன்னால் அவர்களை நான் கண்டிக்கத் தயங்கமாட்டேன். ஏனெனில், பயணம் செல்வது மட்டும்தான் நம் அறிவினை விசாலமாக்கும்; நம் சிந்தனையை விரிவாக்கும்; நம்மை இந்த இயற்கையின் அங்கமாகக்கிக் கொள்ள நமக்குத் தகுதியை அளிக்கும்.





தொடரும்
-சுபா

Tuesday, January 21, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 1

19.1.2020

நீங்கள் உங்கள் நகரைத் துறக்கத் தயாரானால் ஆயிரக்கணக்கான நகரங்கள் உங்களை வரவேற்க முன்வரும். நீங்கள் உங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள். ஆயிரக்கணக்கான கிராமங்கள் உங்களை வரவேற்கத் தயாராக இருக்கும். ஒருசில நண்பர் சுற்றத்தாருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான நண்பர்களும் சுற்றத்தாரும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
-`ஊர்சுற்றிப் புராணம்`, ராகுல் சாங்கிருத்யாயன்

தமிழகத்தில் கடற்கரை பகுதி நகரம் என்பதோடு அதிகம் பேசப்படாத மீனவர்கள் வாழ்கின்ற சதுரங்கப்பட்டினம் நகரிலுள்ள டச்சுக் கோட்டை இன்று இந்திய தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் தொல் சின்னங்களுள் ஒன்றாக உள்ளது. டச்சுக்காரர்கள் தமிழகத்தில் தங்கள் வணிகத்தையும் சமய முயற்சிகளையும் நிலைநாட்ட முயற்சித்த கி.பி. 17, 18 ஆகிய காலகட்டங்களில் இப்பகுதி டச்சுக்காரர்கள் நிறைந்த ஒரு பகுதியாக அமைந்திருந்தது. இப்பகுதியைக் கண்டுவரும் நோக்கில் நேற்று ஒரு நாள் பயணம் சென்றிருந்தேன்.

எப்போதும்போல வாகனத்தில் செல்வதைவிட பொதுவாகனத்தில் பயணம் சென்று இப்பகுதியை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதனால் ரயில், ஷேர் ஆட்டோ, பேருந்து என பயணம் செய்து மக்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்ளும் வகையில் பயணத்தை அமைக்கலாம் என்று தோன்றியது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில் பயணம் முதலில். அதில் பெண்களுக்கான பகுதியில் ஏறிக்கொண்டேன். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்தப் பகுதியில் இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பலர் நின்றுகொண்டிருந்தார்கள்; சிலர் ரயில் பெட்டியில் தரையிலேயே அமர்ந்திருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் நின்றுகொண்டே பயணிக்கும் சூழல். ஆயினும் கையில் ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய ஊர் சுற்றிப் பயணம் நூல் இருந்ததால் வாசிக்கத் தொடங்கினேன். பயனம் சுவாரசியமாகத் தொடங்கியது.

அவ்வப்போது ரயில் நிற்கும் ஸ்டேஷனில் சிலர் ஏறுவதும் இறங்குவதும் இயல்பான நடவடிக்கை. கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. மல்லிகைப் பூவின் மணமும், கலவையான பல உணவு பொட்டலங்கள் திறந்து சாப்பிடுவதின் அடையாளமாக உணவின் மனமும் கலந்து ரயில் பெட்டியை நிறைத்தது. ரயில் பெட்டியில் பயணக்கும் போது சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் தமிழகத்தில் இயல்பாகவே பயணத்தில் பசிக்கு உணவு சாப்பிடுவது அத்தியாவசியம் என்பது ஒருபுறமிருக்க, உணவு சாப்பிடுவதும் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை இருக்கின்றது என்பதை நான் உணர்கிறேன்.

ரயிலில் இருந்த ஒரு பெண்ணின் கையிலும் நூல் ஏதும் இல்லை. இது ஐரோப்பாவில் நாம் ரயில் பயணம் செல்லும் போது காணும் காட்சியிலிருந்து மாறுபாடான ஒரு காட்சி. ஏனெனில் ரயில் பயணங்களில் ஐரோப்பிய மக்களில் பெரும்பாலானோர் கைகளில் ஏதாவது ஒரு நூலோ அல்லது பத்திரிக்கையோ இருப்பது மிக இயல்பு. ஆனால் இங்கோ ஒருவரது கைகளிலும் ஒரு பத்திரிக்கை கூட காணவில்லை. தமிழகப் பெண்களின் வாசிப்பு நிலை குறித்த சிந்தனை என் மனதில் கேள்விக்குறியாக நிற்கின்றது.

நான் பயணித்த ரயில் பகுதியில் பெரும்பாலான பெண்களின் கைகளில் செல் போன் இருந்தது. அதில் காமெடி நடிகர்களின் வீடியோக்கள், பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. சிலர் சாட் செய்து கொண்டும் குருஞ்செய்தி பரிமாறிக் கொண்டுமிருந்தனர்.

ரயிலில் பயணத்தின் ஊடே வணிகமும் நடைபெறுகிறது. ஒரு குறவர் பெண் ஒரு ஸ்டேஷனில் ஏறிக்கொண்டார். உரத்த குரலில் பாசி மணிகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் கைகளில் ஏந்திக் கொண்டு உரத்த குரலில் கூவிக் கொண்டு வந்தார். சில பெண்கள் அவரிடம் பொருட்கள் வாங்கிக் கொண்டார்கள். சற்று நேரத்தில் பதினெட்டு வயது மதிக்கத்தக்க கந்தலான ஒரு சுடிதார் உடை அணிந்த இளம்பெண் சமோசா கூடையைத் தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தார். `ஐந்து சமோசா பத்து ரூபாய்` என்று உரத்த குரலில் கூவி வியாபாரம் செய்து கொண்டு வந்தார். சில பெண்கள் அவரிடம் வாங்கினார்கள். ஒரு பெண்மணி அவரிடம் இன்னொரு ஸ்டேஷனில் 7 சமோசா பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது என்று பேரம் பேசினார். `ஐயாயிரம் ரூபாய்க்கு கவலைப்படாமல் பட்டுச்சேலை வாங்கும் பெண்கள் பத்து ரூபாய்க்கு 5 சமோசா வாங்குவதில் கூட பேரம் பேசுகிறார்களே`, என்ற எண்ணம் என் மனதில் தோன்றாமல் இல்லை.

இடையில் ஒரு மூன்றாம் பாலினப் பெண் ஒருவர் ஏறிக்கொண்டார். அவரும் உரத்த குரலில் ஏதோ கூற, ஒரு சில பெண்கள் கையில் இருந்த காசுகளை அவரது கையில் வைக்க, இவர் காசு கொடுத்த பெண்ணின் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் கொடுப்பது என்ற ஒரு சடங்கு நடந்தது. அவர் மிகுந்த உரிமையோடு காசு கேட்பது போல அந்தச் சூழல் எனக்குத் தோன்றியது. அடுத்து, கண்பார்வையற்ற ஒரு இளைஞர் ஒரு இளம் பெண்ணையும் அவள் கையில் குழந்தையுடன் என அழைத்துக் கொண்டு ஒரு ஸ்டேஷனில் ஏறிக்கொண்டார். அவர் தன் பார்வை குறைவைக் காரணம் சொல்லி தனக்குக் காசு கொடுக்க உரத்த குரலில் கேட்டுக்கொண்டார். சில பெண்கள் காசு கொடுத்தனர்.

இப்படி பலதரப்பட்ட நிகழ்வுகள் அந்த மகளிர் ரயில் பகுதிக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நூல் வாசிப்பிற்கு இடையே இந்த நிகழ்வுகளையும் நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

பல வண்ணக் கலவையாக கண்களை நிறைந்திருந்த ரயில் பெட்டியில் இருந்து செங்கல்பட்டு ஸ்டேஷனில் நான் இறங்கிக் கொண்டேன். என்னுடன் சதுரங்கப்பட்டினம் செல்ல வந்திருந்த தோழர் ரேஷல் என்னை செங்கல்பட்டில் சந்திக்க வந்திருந்தார்.





தொடரும்
-சுபா