Wednesday, January 22, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 2

19.1.2020

தடைகளைத் தகர்த்தெறிந்து வெளிவர வேண்டியது ஊர்சுற்றிக்கு மிகவும் அவசியமாகும். உலகம் புரிந்த எந்த வாலிபருக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை தோன்றாமல் இருக்குமா? தம் நரம்புகளில் சூடான ரத்தம் ஓடும் எவரும் தம் வீட்டு மதில் சுவர்களைத் தகர்த்தெரிந்து வெளியில் போக வேண்டுமென்று விரும்பாமல் இருக்கமாட்டார்கள் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். இவர்களுடைய முன்னேற்ற பாதையில் தடைகள் ஏராளம். வெளி உலகத்தின் தடைகளை விட மனிதரின் உள்ளத்தில் தான் அதிக தடைகள் இருக்கின்றன.
-ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். படிகளில் ஏறி வரும்போது இடதுபுறத்தில் கடலைக் காண்பது போன்ற ஏரி. தூரத்தில் சிறிய குன்றுகள், பசுமையுடன். ஏரிக்கரை மேல் ஏராளமான குப்பைகள். இயற்கையை பாழ்படுத்தும் மனிதர்களை மனதிற்குள் சபித்துக் கொண்டேன்.

படிகளின் மேல் ஏறி வரும் போது ஒரு பகுதியில் நின்று ஏரியை ரசிக்கத் தோதாக படிகள் உள்ளன. நான் அங்கு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். ஏரியைப் பார்த்து ரசித்தேன். ஒரு குடும்பத்தினர் புகைப்படங்கள் எடுத்துக். கொண்டிருந்தார்கள். அவர்கள் இயற்கையின் பின்னணியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் வகையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

மனிதர்கள் இயற்கையின் ஒரு பகுதி. அதனால்தான் ஏரி, குளங்கள், ஆறுகள், கடல், மலைகள், குன்றுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் காணும்போது நமது மனித மனம் நெகிழ்கிறது; மகிழ்ச்சி அடைகின்றது. நீண்ட நேரம் இந்த இயற்கையோடு நமது நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும் முயற்சிக்கின்றது. ஆனால் பல்வேறு பணிகளுக்கு இடையே மாட்டிக் கொள்ளும் இக்காலத்து மனிதர்களாகிய நாம் நம்மைச் சுற்றி இருக்கின்ற இயற்கையைக் காணவும் ரசித்து அனுபவிக்கவும் கூட என்றாவது ஒரு நாள் தான் நேரத்தை ஒதுக்கிக்கொள்கின்றோம் என்பது பெரும் குறைதான். நாம் நமக்கு நன்மை செய்து கொள்ள வேண்டுமென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இயற்கையோடு நமது காலத்தைச் செலவிட வேண்டும். நம் மன மகிழ்ச்சிக்கு அதுதான் அடிப்படையாக அமையும்.

சற்றுநேரம் ஏரியைப் பார்த்து ரசித்துவிட்டு படிகளில் கீழே இறங்கி நடக்கத் தொடங்கினேன். வழி எங்கும் சிறுநீர் துர்நாற்றம். கடந்து செல்லும் ஒவ்வொருவரும் இந்த துர்நாற்றத்தை அனுபவித்துக்கொண்டே தான் செல்ல வேண்டிய சூழல். மக்கள் துர்நாற்றத்தை இயல்பாகப் பழகி விட்டார்கள்; ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இல்லையென்றால் இதனை தடுத்து சுத்தப்படுத்த வேண்டும்; மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கும் அல்லவா?!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் வாசலில் நிறைய ஆட்டோ வாகனங்கள் காத்திருந்தன. ரயில் நிலையத்திற்கு முன்னே மகாத்மா காந்தியின் உருவச்சிலை. அதை சுற்றி சிறிய பூங்கா.. பார்ப்பதற்கு மனதிற்கு இதமான காட்சியாக அது இருந்தது. சற்று நேரத்தில் தோழி ரேஷல் வந்து சேர்ந்தார். முதலில் ஒரு காப்பியும் பசிக்கு ஏதாவது உணவும் சாப்பிட வேண்டும் என்று சொல்ல, ஒரு சிறு கடைக்குள் சென்றோம். ஒரு தோசை ஆர்டர் செய்தேன். நேரமாகி இருந்ததால் சட்னி-சாம்பார் அனைத்தும் சுவையில்லாமல் இருந்தது. ஆனால் காப்பி சுவையாகவே இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டு முதலில் திருக்கழுக்குன்றம் செல்லலாம் என முடிவாகியது. ஷேர் ஆட்டோ சவாரி செல்லலாம் என்று முடிவெடுத்தோம். தமிழகத்தில் ஷேர் ஆட்டோவில் எனது முதல் அனுபவம் இது. ஷேர் ஆட்டோவில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். எங்களுக்கே தயாரித்தது போன்ற ஒரு ஆட்டோ. சுற்றுப் பயணிகளுக்கு மிகத் தோதாக பின்பக்கம் மறைப்பு ஏதுமில்லாமல் திறந்து இருந்தது.
வெளியே தெரியும் சாலைக் காட்சி, சாலையில் செல்லும் மாடுகள், அவற்றை ஓட்டிச் செல்லும் மக்கள் என பார்த்துக்கொண்டே வந்தோம்.

ஓரிடத்தில் ஆட்டோ நின்றது. சில பெண்கள் ஏறிக்கொண்டார்கள். அந்த இடத்தில் சாலையின் இடதுபுறத்தில் ஆட்டு இறைச்சி விற்கும் சிறிய கடை ஒன்று இருக்கின்றது. ஆட்டு இறைச்சியை வெட்டிவிட்டு தோலை கட்டி வரிசையாக தொங்க விட்டிருந்தார்கள். நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். காலை வேளை என்பதால் ஆட்டிறைச்சி வாங்க சிலர் வந்திருந்தார்கள்.

நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மிக அழகாக ஜோடிக்கப்பட்டுடிருந்தது. ஆட்டோ வாகனத்திலேயே பாடல் கேட்டு ரசித்து கொண்டு வரும் வகையில் ரேடியோ, சிடி என்ன அசத்தியிருந்தார் அந்த ஓட்டுனர். 90களின் இறுதியில் வந்த இசையமைப்பாளர் தேவா மற்றும் இளையராஜா இசையமைத்த பாடல்கள்.. இந்தப் பயணத்தை எனக்கு தேவலோகத்தைச் சுற்றி பார்ப்பது போல மிக இனிமையான அனுபவமாக மாற்றி தந்தது.

ஷேர் ஆட்டோவில் எங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த மேலும் ஐந்து பெண்கள் எங்களுடன் பேசிக் கொண்டே வந்துகொண்டிருந்தார்கள். முதல் முறை பார்த்தாலும் உறவுக்காரர்கள் போல பேசும் அந்தப் பண்பு என் மனதை மகிழ வைத்தது. அவர்களிடம் பேசிக்கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. திருக்கழுக்குன்றம் வந்து சேர்ந்தோம். இரண்டு பேருக்குமே சேர்த்து 30 ரூபாய் தான்.

அதிர்ச்சியா.. ஆச்சரியமா..? இவ்வளவு குறைந்த தொகையில் பயணம் செய்ய முடிகிறதே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வார இறுதி நாட்களில் அருகாமையில் இருக்கும் பல ஊர்களுக்கும் தமிழக மக்கள் பயணித்து வரலாம்.. இதனால் புதிய புதிய இடங்களை நாம் பார்த்து ரசிக்கலாம் என்பதோடு ஷேர் ஆட்டோ, உணவகங்கள், சிறு சிறு வியாபாரங்கள் என தமிழக மக்களின் சுய உற்பத்தி வணிகமும் பெருக வாய்ப்பாகுமே என தோழியிடம் மனதில் பட்டதைத் தெரிவித்துக் கொண்டேன்

சுற்றுலா செல்வது, பயணம் செல்வது என்றால் அது வெளிநாடுகளுக்குத் தான், என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. நமது பக்கத்து ஊரில் உள்ள ஏராளமான இயற்கை பகுதிகளுக்குச் சென்று வருவதும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களைச் சென்று பார்த்து வருவதும் கூட சுற்றுலா தான்.
பயணம் சென்று ஓர் இடத்தைப் பார்ப்பதை யாராவது நேர விரயம் என்று சொன்னால் அவர்களை நான் கண்டிக்கத் தயங்கமாட்டேன். ஏனெனில், பயணம் செல்வது மட்டும்தான் நம் அறிவினை விசாலமாக்கும்; நம் சிந்தனையை விரிவாக்கும்; நம்மை இந்த இயற்கையின் அங்கமாகக்கிக் கொள்ள நமக்குத் தகுதியை அளிக்கும்.





தொடரும்
-சுபா

No comments:

Post a Comment