Wednesday, January 29, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 3

19.1.2020

"சுயமரியாதை அற்ற எவனும் உயர்தரமான ஊர்சுற்றி ஆக முடியாது. உண்மையான ஊர்சுற்றி முகஸ்துதி விரும்பமாட்டான்‌‌. உலகத்தில் எவரையுமே தன்னைவிட தாழ்ந்தவர்களாகவும் எண்ணா மனோநிலையை ஊர்சுற்றி பெற்றிருக்க வேண்டும். சமநிலை பார்வையும் நெருக்கமான நட்புறவும் அவன் கொண்டிருக்கவேண்டும்.
-ஊர்சுற்றிப் புராணம், ராகுல் சாங்கிருத்யாயன்"


திருக்கழுக்குன்றம் வந்தடைந்தது எங்கள் ஷேர் ஆட்டோ. நாங்கள் இறங்கிக்கொண்டோம். எதிரே பிரமாண்டமான திருக்கழுக்குன்றம் கோவில் கண்களில் தென்பட்டது. உள்ளே சென்று கோயிலையும் அதிலுள்ள சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் பார்க்க ஆவல் இருந்தாலும், அன்று நேரம் போதாது என்ற காரணத்தால் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அங்கிருந்து மற்றொரு ஷேர் ஆட்டோ எடுத்து வெங்கம்பாக்கம் செல்ல வேண்டும் எனத் தோழி சொல்லி இருந்தார். அங்கு காத்திருந்த ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். முந்தைய ஷேர் ஆட்டோ போல இது இல்லை. புறப்பட்டு சில நிமிடங்களில் ஏதோ இயந்திரக் கோளாறு. சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு ஷேர் ஆட்டோவை நிறுத்தி அதில் எங்களை ஏற்றிவிட்டார்கள். பத்து நிமிட பயணத்தில் வெங்கம்பாக்கம் வந்தடைந்தோம்.

அடுத்து அங்கிருந்து மேலும் ஒரு ஆட்டோ எடுத்து சதுரங்கப்பட்டினம் செல்ல வேண்டும். சாலையின் இடது புறத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். எங்களைத் தவிர வேறு யாரும் அதில் இல்லை என்பதால் வாகன ஓட்டி ஷேர் ஆட்டோவை எடுக்காமல் காத்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு குளிர்பானக் கடை இருந்தது. அதில் நான்கு 30 வயது மதிக்கத்தக்க ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களது உடை அவர்கள் ராணுவ வீரர்கள் என்பதை வெளிப்படுத்தியது.

5 நிமிடங்கள் காத்திருந்துவிட்டு எங்கள் வாகன ஒட்டி அவர்களிடம் சென்றார். அவர்களை அழைத்து வந்து எங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்பது அவரது திட்டம். அவர்கள் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தார்கள். இந்த குட்டி வாகனத்தில் ஏற்கனவே இரண்டு பேர் பெண்கள் இருக்கின்றோம். இதில் மேலும் 4 பெரிய பைகளுடன் இந்த 4 ஆண்களும் ஏறினால் வண்டியில் இடம் இருக்குமா என்பது அவர்கள் சந்தேகமாக இருந்திருக்கலாம்.

எங்களை அவர்கள் பார்க்க, நாங்கள் கையசைத்து வாருங்கள் சேர்ந்து பயணிக்கலாம் என்று அழைத்தோம். எங்களிடம் வந்து உள்ளே எப்படி இந்தப் பெரிய பைகளை வைப்பது எனக் கேட்க, தோழி ரேஷல் அவர்களுக்கு வழி காட்டினார். பைகளை ஒருவழியாக ஷேர் ஆட்டோவில் அடுக்கி வைத்துவிட்டு அவர்கள் நால்வரும் அமர்ந்து கொண்டார்கள். நான்கு பேருக்குமே தமிழ் தெரியாது. இந்தி மொழி மட்டுமே பேசுகிறார்கள்.

தனக்குத் தெரிந்த இந்தி மொழியில் தோழி ரேஷல் அவரிடம் பேச்சுக் கொடுத்தார். அவர்கள் கல்பாக்கம் செல்வதாகவும் தாங்கள் காத்திருந்த பஸ் வர தாமதமானதாகவும் தெரிவித்தார்கள். சில நிமிடங்களில் கல்பாக்கம் வந்து சேர, அவர்கள் இறங்கிக் கொண்டார்கள்.

தமிழகத்தில் வேலை செய்யும் போது தமிழ் மொழி தெரிந்துகொள்ள வேண்டாம் என்ற சிந்தனையுடன் இவர்கள் வேலை செய்வது வெளிப்படையாக தெரிகின்றது என நாங்கள் பேசிக்கொண்டோம்.

கல்பாக்கத்தில் இருந்து எங்கள் ஷேர் ஆட்டோ தனது பயணத்தைத் தொடர்ந்தது. சற்று நேரத்தில் சதுரங்கப்பட்டினம் வந்து சேர்ந்தோம். ஷேர் ஆட்டோவிற்கு மொத்தம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு இறங்கிக் கொண்டோம். அருகிலேயே சாத்துக்குடி ஜூஸ் வண்டி ஒன்றை வைத்துக்கொண்டு ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார். அவரும் ஒரு வட இந்தியர். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுகின்றார். இருவரும் இரண்டு சாத்துக்குடி ஜூஸ் வாங்கிக்கொண்டோம். தமிழகத்தின் சிற்றூர்களிலும் வட இந்தியர்கள் நம்பிக்கையோடு தங்கள் வணிக முயற்சியை தொடங்கிவிட்டார்கள் என்பதை இது உறுதிபடுத்தியது.

நாங்கள் இறங்கிய பகுதிக்கு எதிர்ப்புறத்தில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை தனது பிரம்மாண்டம் குறையாமல் காட்சி அளித்துக் கொண்டு நின்றது. எதிர்ப்புறத்தில் அலைகள் ஆர்ப்பரிக்க கடல் காட்சி.

ஒவ்வொருமுறையும் கடற்கரையோரப் பகுதியை காணும்போது எனது பிறந்த ஊரான மலேசியாவின் பினாங்குத் தீவு மனதில் காட்சியாக வந்து செல்லத் தவறுவதில்லை. இளம் வயதில் மனதில் பதிந்து வைத்த காட்சிப் பதிவு மனக்கண்ணில் ஓட எதிரிலிருந்த கடல் காட்சி என்னை இயல்புநிலைக்கு மீண்டும் கொண்டு வந்தது.

சுனாமி அலை தாக்கியபோது இப்பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட்டதாகவும், தனது சமூக சேவை அமைப்பு வழியாக இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் வழங்கிய உதவிகள் பற்றி தோழி விவரித்துக் கொண்டே வர, நாங்கள் கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.





தொடரும்
-சுபா

No comments:

Post a Comment