Saturday, November 24, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 12


சமணப்படுகைகள் அமைந்திருக்கின்ற குகை, அதன் சுற்றுச் சூழல் அனைத்துமே மிக ரம்மியமாக உள்ளன. இதுவே மற்ற ஆசிய நாடுகளாகவோ ஐரோப்பிய நாடுகளாகவோ இருந்தால் இந்தக் குகையைப் பாதுகாத்து சுற்றுச் சூழலையும் பாதுகாத்து இந்த எழில் மிக்க இடத்தை மேலும் கொஞ்சம் சீராக்கி பூங்காவனமாக்கி சுற்றுப் பயணிகள் வந்து செல்லும் இடமாக ப்ரகடனப்படுத்தியிருப்பர். இந்த எண்ணங்கள் அந்த நேரத்தில் மனதில் வந்து போயின.

வெயிலும் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனை அடுத்து நாங்கள் மேலும் இரண்டு இடங்களுக்குச் செல்ல வேண்டிய திட்டமும் இருந்தது. எங்களுக்கு மதிய உணவு தாயார் செய்து வைத்திருப்பதாக காலையிலேயே குன்றக்குடி திருமடத்தில் சொல்லியிருந்தார்கள். ஆக உடன் மீண்டும் குன்றக்குடி ஆதீன மடத்திற்குத் திரும்பி அங்கே மதிய உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என புறப்பட்டோம்.

மீண்டும் நடந்தே மடத்தின் உணவு பரிமாறப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் வருவதை கவனித்து எங்களை அன்புடன் வரவேற்று உணவு சாப்பிட அழைத்துச் சென்றார் மடத்தில் நாங்கள் சந்தித்து உரையாடிய புலவர் பரமகுரு அவர்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்தப் பாகுபாடும் இன்றி ஒரே இடத்தில் உணவு பரிமாறப்படுவதைக் கவனித்தேன்.இது  மனதிற்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது.



உணவு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. சாம்பார், கீரை பொரியல்,  காய்கறி பொரியல் வத்தல் குழம்பு, ரசம், தயிர் என விதம் விதமாக உணவு தயாரித்திருந்தார்கள். எங்களுடன் திருமடத்தின் பெரியவர்களும் இணைந்து கொண்டார்கள். மடத்தில் பணிபுரியும் ஒரு வயதான பெண்மனி எங்களுக்கு பரிமாறினார்கள். உணவின் சுவை மிகப் ப்ரமாதமாக இருந்தது. அனைவரும் பேசிக்கொண்டே உணவை சுவைத்து சாப்பிட்டோம்.



இப்படி குன்றக்குடி மடத்தில் அமர்ந்து மடத்தின் பெரியோர்களுடன்  சேர்ந்து சாப்பிடுவதும் இறைவனின் திருவருள் தான் போலும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். உணவை முடித்து மடத்துப் பெரியோர்களிடம் சொல்லிக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம். இப்போது எங்கள் வாகனம் ஆத்தங்குடி நோக்கி புறப்பட்டது.

தொடரும்....


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment