Friday, May 20, 2016

அயர்லாந்தின் அழகில்...! அயர்லாந்து உணவு வகை - 16

அயர்லாந்தில் இருந்த முதல் மூன்று நாட்களும் எனக்கு ஏறக்குறைய உள்ளூர் உணவு பற்றிய சிறு அறிமுகம் ஆகியிருந்தது. அதில் நான் மிக சலித்துக் கொண்ட உணவு என்றால் அது காலை உணவு தான். எப்போதும் வெள்ளை ரொட்டித்துண்டுகள், அவற்றிற்கான பட்டர், ஜாம், அவித்த பீன்ஸ், அவித்து எண்ணெயிலோ நெய்யிலோ வாட்டிய உருளைக்கிழங்குகள்.. என்றே மூன்று நாட்களைக் கழித்திருந்தேன். அசைவப்பிரியர்களுக்குப் பன்றி இறைச்சியைப் பதப்படுத்தி சமைத்தும் வைத்திருந்தார்கள். இது இங்கிலாந்தின் காலை உணவேதான். அயர்லாந்திலும் இது ஒட்டிக் கொண்டு விட்டது போலும். முதல் நாள் சாப்பிடவே பிடிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்கள் சலிப்பில்லாமல் ஏதோ கடமைக்குச் சாப்பிடுகின்றோம் என்று சாப்பிட ஆரம்பித்து விட்டேன். பிடிக்காத மனிதர்களைக் கூட சில வேளைகளில் சில காரணங்களுக்காக நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொள்கின்றோமே.. அப்படித்தான்!

ஐரீஷ் மக்கள் விரும்பிச் சாப்பிடும் பாரம்பரிய உணவுகள் சிலவற்றை பற்றி அறிந்து கொண்டேன். அவற்றைப் பற்றி இன்றைய பதிவில் சொல்கிறேன்.

மிக முக்கிய உணவாக அமைவது கேபேஜோடு சேர்த்துச் சமைத்த பன்றி இறைச்சி சமையலும் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி, காரட் போட்டுத் தயாரிக்கும் சூப்பும் என்று சொல்லலாம். அயர்லாந்தில் விஸ்கியும் கின்னஸ் மதுபானமும் புகழ்பெற்றவை என்பதால் சமையலிலும் மதுபானத்தைக் கலந்து சமைக்கும் வழக்கம் இந்தப் பாரம்பரிய உணவில் உண்டு.

ஏறக்குறைய ஒவ்வொரு நாள் சமையலிலும் ஏதோ ஒரு வகையில் உருளைக்கிழங்கு இடம்பெறுவதையும் பார்த்தேன். அவித்த உருளைக்கிழங்கை அப்படியே, அல்லது அவித்த உருளைக்கிழங்கை நெய்யில் வாட்டியோ, அல்லது எண்ணையில் பொரித்தோ, அல்லது அவித்த உருளைக்கிழங்கை மென்மையாக அரைத்தோ அல்லது ஃப்ரென்ச் ப்ரைஸ் போன்றோ... உருளைக்கிழங்கு இல்லாத சமையலில்லை என்ற வகையில் ஐரீஷ் சமையல் இருக்கின்றது. ஆசிய உணவு வகையில் இருப்பது போல அரிசி முக்கிய உணவு அல்ல என்பதால் அரிசிக்குப் பதிலாக உருளைக்கிழங்கு அந்த இடத்தை நிரப்பி விடுகின்றது.





நான்காம் நாள் காலையில் கோல்வேயிலிருந்து நாங்கள் புறப்பட்டு (County Limerick) லிமெரிக் மாவட்டம் நோக்கிப் பயணித்தோம். போகும் வழியில் சில தேவாலயங்களையும் கோட்டைகளையும் பார்த்துக் கொண்டே சென்றோம்.ஓரிடத்தில் சந்தை போட்டிருந்தார்கள் அங்கே தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. அது உழவர் சந்தை. அங்கே சில பெண்மணிகள் சமையல் செய்து கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டும் இருந்தனர்.

நமக்கு நன்கு பழக்கமான சமோசா வகையில் சில உணவு பதார்த்தங்கள் கிடைத்தன அவற்றுள் கீரையை வைத்தும் உருளைக்கிழங்கைச் சமைத்து வைத்தும் தயாரித்திருந்தார்கள். பார்க்கும் போதே ஆவலைத்தூண்டுவதாக இருந்தமையால் அதில் சில வாங்கிக் கொண்டேன். சுவை நன்றாகவே இருந்தது.





அயர்லாந்தில் செம்மறி ஆடுகள் மிக அதிகம் என்றும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மாடுகளும் அதிகம் என்பதால் இங்கே பால், சீஸ், தயிர் போன்ற பதார்த்தங்களுக்கும் குறைவேயில்லை. செம்மறி ஆட்டின் இறைச்சியையும் உள்ளூர் மக்கள் சமைத்துச் சாப்பிடுகின்றனர்.

எனக்கு மாலை உணவும் மதிய உணவும் பெரும்பாலும் உருளைக்கிழங்கு வகையறாக்கள், கீரைக் காய்கறி பதார்த்தங்கள், சூப் என்பதோடு இத்தாலிய உணவுகளையும் சாப்பிட்டதால் சமாளிக்க முடிந்தது.

இத்தாலிய உணவான பாஸ்டா, ஸ்பெகட்டி போன்றவை சற்று ஆசிய உணவுகளின் சுவையை ஒத்திருப்பதால் இத்தகைய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டதால் பயணத்தில் உணவுக்குக் கஷ்டப்படும் நிலை ஏற்படவில்லை. அயர்லாந்தில் சைவ உணவுக்காரர்களுக்கு உணவு விஷயத்தில் பிரச்சனை இல்லை. எல்லா உணவகங்களிலும் நல்ல காய்கறி உணவுகள் நன்கு கிடைக்கின்றன.
















தொடரும்..

சுபா

No comments:

Post a Comment