Friday, November 2, 2018

SriLanka - 44.பேராதனைப் பல்கலைக்கழகம்

2.10.2018
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் எங்களின் இந்த காலைப்பொழுது தொடங்கியது. அங்கு விருந்தினர் தங்கும் விடுதியில் தங்கியிருந்தோம். காலை உணவுக்கு மாணவர்கள் வந்து பசியாறும் பகுதிக்குச் சென்றோம். இதுவரை நான் பெயர் கேள்விப்படாத பல பலகார வகைகளை அங்கு காண முடிந்தது. அதில் சோயா தோசையும் சில பலகாரங்கரங்களையும் வாங்கி சுவைத்தோம்.
17,000 மாணவர்கள், 3000 ஆசிரியர்கள், 2400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட வளாகம் பேராதனை பல்கலைக்கழகம்.
எங்களின் பெரும்பாலான நேரம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்திலேயே கழிந்தது. தமிழ் நூல் பகுதிக்குச் சென்றிருந்தோம். தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் தொகுப்பினைப் பார்வையிட்டோம்.
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் சிங்கள நூலக ஊழியர்களுக்கு ஆவணப்பாதுகாப்பில் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக ஆங்கிலத்தில் உரையாற்றினோம்.
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் அரிய சேகரிப்பில் உள்ள ஓலைச்சுவடிகளை நேரில் கண்டோம். நூலகத்தின் அடித்தளத்தில் உள்ல பாதுகாப்பு அறைக்கும் திரு.மகேஸ்வரன் அவர்களுடன் சென்று அங்குள்ள பாதுகாக்கப்படும் நூல்களைப் பார்வையிட்டோம்.
இலங்கையில் பதிப்பிக்கப்படும் வெளியிடப்படும் ஒவ்வொரு நூலின் 5 படிவங்கள் 5 பகுதிகளுக்குச் சென்று பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ள சட்டம். அந்த ரீதியில், வெளியிடப்படும் ஒவ்வொரு நூலின் ஒரு படிவம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் சேகரப்பிற்காக இணைக்கப்படுகின்றது.
மதியம் கண்டி முத்தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் எனது உரை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நடனமாடிய சிறுமிகளின் பாவனையும் நடன அமைப்பும் மனதை விட்டு அகலவில்லை. நிகழ்ச்சிக்குத் தலைமையுரையாற்றிய கலாநிதி துரை மனோகரன் அவர்களின் அருமையான வழிகாட்டுதலில் இந்த அமைப்பு சீரிய செயல்பாடுகளை முன்னெடுக்கின்றது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இங்கு கண்டியில் தான் பிறந்தவர் என்ற கூடுதல் செய்தியையும் அறிந்து கொண்டேன். முத்தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு மென்மேலும் சிறப்புடன் செயல்பெற தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துக்கள்.
கண்டியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததோடு சிறந்து விருந்துபசரிப்பையும் வழங்கிய பேராதனை பல்கலைக்கழக நூலகர் திரு.மகேஸ்வரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி.
-முனைவர்.க.சுபாஷிணி








SriLanka - 43. கண்டியிலிருந்து கொழும்பு

கொழும்பு நகரில் நள்ளிரவு வந்தடைந்தோம். எங்களை வரவேற்ற நண்பர் Yogaraj Thangavelu


SriLanka - 42. பேராதனை நூலகத்துறை அதிகாரிகளுடன்

இன்று கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துறை அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. நூலகர் திரு.மகேஸ்வரனின் திடீர் ஏற்பாட்டில் எங்கள் உரை நிகழ்வு நிகழ்ந்தது.
அனைவரும் சிங்களவர்கள். அவர்களுடன் ஆவணப்பாதுகாப்பில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்க செயல்பாடுகள் பற்றி உரையாடினோம்.








SriLanka - 41. கண்டி தமிழ்ச்சங்க நிகழ்வு

இப்போது கண்டியில்...
நிகழ்வு தொடங்குகின்றது.


SriLanka - 40.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரிய ஓலைச்சுவடிகள் ஆவணப் பாதுகாப்பகம்

கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரிய ஓலைச்சுவடிகள் ஆவணப் பாதுகாப்பகத்திற்குச் சென்றிருந்தோம். இங்குள்ள கி.பி 1302ம் ஆண்டு , அதாவது இன்றைக்கு 726 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடி - திரிபிடக நூல் - சிங்கள மொழி சுவடியை கைகளில் வைத்திருப்பதைக் காணலாம்.













SriLanka - 39. மலையகம்

30,31-10.2018
இரண்டு நாட்கள் மலையகப் பகுதிகளின் பல்வேறு பகுதிகளில் தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவுகளைச் செய்தோம். அதில் குறிப்பாகச் சில தகவல்கள்:
கி.பி 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இலங்கைக்குக்கு வந்த தமிழ் மக்கள் இராமேஸ்வரம் வழியாக மரக்கலங்களில் பயணித்து பின்னர் மன்னார் வந்தடைந்து அங்கிருந்து கால் நடையாகவே மலையகம் வரை வந்திருக்கின்றனர். இது மிகக்கடினமான ஒரு பாதை. ஆயிரக்கனக்கான உயிரிழப்புக்கள் இதன் போது நிகழ்ந்திருக்கின்றன. அப்படி வந்த தமிழ் மக்கள் வந்து ஒன்று கூடிய முக்கிய இடமாக “மாத்தளை” கருதப்படுகின்றது.
எங்கள் பயணத்தில் மாத்தளைக்குச் செல்ல கால அவகாசம் கிட்டவில்லை. ஆயினும் ஹட்டன், நுவரலியா, பத்தனை, வட்டகொட, நியூ பீக்கோக் எஸ்டேட், சோகம் எஸ்டேட், புஸ்ஸல்லாவ மற்றும் அதன் அருகாமை கிராமங்களில் எங்கள் பதிவுகளை மேற்கொண்டோம்.
எமது பதிவில் கண்ட சில முக்கியக் கூறுகள்:
-மலையகத்தமிழர்களின் முக்கிய தொழிலாக அமைவது தேயிலைத் தோட்டத்தைச் சார்ந்ததாகவே அமைகின்றது.
-ஆண்களும் பெண்களும் சலிக்காது உழைக்கின்றனர்.
-பெருமாபாலான தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்களாக ஆங்கிலேயர்களும், இந்தியர்களும், சிங்களவர்களும் இருக்கின்றனர்.
-மலையகத்தமிழ் மக்களின் பொதுப்பிரச்சனையாக அமைவது தங்களுக்கு சொந்த வீடு இல்லாமையும், ஓய்வூதியச் சலுகைகள் ஏதும் இல்லாமையும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையும் எனலாம்.
-இஸ்லாமியர்கள் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்கின்றனர். சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் அனைவரிடையே நட்புணர்வு வெளிப்படுகின்றது. தமிழ் பேசும், எழுதும் சிங்களவர்கள் சிலரை தோட்டங்களில் நேரடியாகக் கண்டு உரையாட முடிந்தது.
-பெரும்பாலான தமிழ் மக்கள் சிங்கள மொழியும் பேசுகின்றனர்.
-தமிழ் மக்கள் வழிபடும் தெய்வங்களாக, பிள்ளையார், மாரியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள் அதிகமாக உள்ளன.
-யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஊர் நூலகங்களைப் பார்த்தோம். ஆனால் மலையகப் பகுதியில் நூலகங்களை அதிகம் காண முடியவில்லை. அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளே இங்கு அதிகமாக மக்களை வாட்டும் நிலை இருப்பதால் இந்த நிலையோ என எண்ணத் தோன்றுகிறது.
-மலையகம் முழுமையுமே தூய்மையாக உள்ளது.
-தமிழக வகை உணவுகளை இங்கே கடைகளில் காண்கின்றோம்.
-தமிழ்ப்பள்ளிகள் அனைத்துமே “வித்யாலயா” என்ற சமஸ்கிருத பெயருடனேயே வழக்கில் உள்ளன. தமிழகத்தில் 1950களின் காலகட்டத்து மணிப்பிரவாள் நடைபோல பல சமஸ்கிருத பயன்பாடு இருப்பதை இலங்கையில் காண்கிறேன்.
-பேருந்து பயணங்கள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்லும் முக்கிய போக்கு வரத்துச் சாதனமாக உள்ளது.
-தோட்டத்தில் தேயிலைப் பறிக்கும் தொழிலில் தமிழ்ப்பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். கால்களில் அட்டை கடித்து துன்பப்படுவது என்பது அவர்களது வாழ்க்கையின் இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டதால் பலரது கால்விரல்கள் மிக மோசமான நிலையில் இருப்பதைக் கண்டோம்.
-இன்று நமக்குக் கிடைக்கின்ற பல ப்ரேண்ட்களில் உள்ள தேயிலைகளை உருவாக்கி நமக்குச் சுவையான தேநீரை வழங்குபவர்களாக இலங்கை மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவு கூற வேண்டியது அவசியம்.
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாடு அவர்களது கல்வி மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியப்படும்!
-முனைவர்.க.சுபாஷிணி








Thursday, November 1, 2018

SriLanka - 38. அருங்காட்சியகம்

நியூ பீக்கோக் தேயிலை எஸ்டேட் ராமன் துறை பகுதியில் அருங்காட்சியகம் மற்றும் ஆவணப் பாதுகாப்பகம் .
திரு. சந்தனம் சத்தியனாதன்.
இங்குள்ள அருங்காட்சியகம் மலையகத் தமிழர் வாழ்வை ஆவணப் படுத்தும் முயற்சியை செயல்படுத்திவருகிறது.
பாராட்டுதலுக்குறிய முயற்சி.
-சுபா