Thursday, January 17, 2019

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 4

நோர்வே அரச சாசனம் 1814ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. Eidsvolls bygningen நகரில் உள்ள Carsten Anker இல்லம் இது. இங்குதான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இந்த இல்லத்தில் தான் நிகழ்ந்தது. இவரது சகோதரர் பீட்டர் அங்கர் தமிழகத்தின் தரங்கம்பாடியில் டானீஷ் இந்தியா வர்த்தக நிறுவனத்தின் இயக்குனராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டிடத்தில் கார்ஸ்டன் அங்கர் தமிழக சூழலை ஓவியமாக வரைந்திருக்கிறார். அதனை இங்கு காணலாம்.
தமிழக தொடர்பால் இந்திய ஏலக்காய் கிராம்பு ஆகியவையும் நோர்வே உணவு வழக்கில் இணைந்தது.
-சுபா














நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 3

நார்வே அரசியல் சாசனம் 1814ம் ஆண்டு எழுதப்பட்ட மாளிகை வளாகத்தில்














நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 2

வானிலிருந்து ...
நோர்வேயின் ஒஸ்லோ நெருங்கும் காட்சிகள்

https://www.facebook.com/subashini.thf/videos/2342340439342673/










நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 1

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இயங்கிவரும் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா வருகின்ற சனிக்கிழமை நடைபெறுகின்றது. நிகழ்ச்சியில் உரையாற்ற இன்று ஓஸ்லோ புறப்படுகின்றேன்.
ஏறக்குறைய 12,000 தமிழ் மக்கள் நோர்வேயில் வாழ்கின்றனர். இங்கு தமிழ் அமைப்புகள் தமிழ்ப்பள்ளிகளை அமைத்து சிறப்புடன் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.


-சுபா

Saturday, November 3, 2018

SriLanka - 46 இலங்கை பயணம்

3.11.2018
26ம் தேதி அக்டோபர் தொடங்கி இன்று வரை இலங்கையில் 9 நாட்கள் எனக்கு பல்வேறு புதிய அனுபவங்களை அளித்தது. பயணத்தில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கானப் பணிகளின் திட்டங்கள் பலரது ஒத்துழைப்பாலும் உழைப்பாலும் சிறப்பாக தொடக்கம் கண்டிருக்கின்றது. புதிதாக அறிமுகமானாலும் கூட, பேஸ்புக் பக்கத்தில் மட்டுமே பார்த்திருந்தாலும் கூட, என்னைக் காணத் தேடி வந்து பேசி என்னை அன்பில் ஆழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்க வேண்டியது என் கடமை. அதில் சிலரது செயல்பாடுகள் த.ம.அ இலங்கை கிளை அமைப்பின் வளர்ச்சிக்கும் உதவுவதால் அவர்களைப் பெயர் குறிப்பிட்டு வாழ்த்த விரும்புகிறேன்.
ஆசிரியை வாலண்ரீனா – யாழ்ப்பாணத்தில் த.ம.அ குழுவினருக்குப் பலவகையில் எல்லா ஏற்பாடுகளிலும் உறுதுணையாக இருந்தவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரா.கலாநிதி புட்பரத்தினம் – இலங்கை வரலாற்றினை ஆவணப்படுத்துதலில் ¬வரலாற்றுத் தகவல்களை வழங்கியதோடு எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கமாகிய த.ம.அ இலங்கை கிளை அமைப்பை உறுதி செய்தி செயல்படுத்தியவர்.
மலையகத்தில் த.ம.அ குழுவினரை வரவேற்று எங்களுக்குத் தேவையான சில தகவல்களை வழங்கியவர் ஹட்டன் பகுதி திரு.தியாகு.
ஹட்டன் பகுதியிலிருந்து வல்லக்கோட்ட பகுதிக்கு களப்பணி சென்றபோது எங்களுக்கு ஆட்டோ ஓட்டி வந்த தம்பி நிஜாம். எங்களில் ஒருவராகவே இணைந்து கொண்டு அவரும் மின்னாக்கத்தில் ஈடுபட்டது, காரணம் தெரிந்தால் பொதுமக்களும் ஆவணப்படுத்துதலில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்தது.
கண்டியில் மட்டுமே முதலில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தாலும் எனது நூலகம் மட்டும் அருங்காட்சியகம் தொடர்பான ஆர்வத்தை அறிந்து கொண்டு தக்க தகவல்களை வழங்கிய பேராதனைப் பல்கலைக்கழக நூலகர் இரா. மகேஸ்வரன். எல்லா வகையிலும் முற்றும்முழுமையுமாக உதவியதோடு பல புதிய நண்பர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.
வட்டக்கொடை ராஜசேகர் அவர்கள் – தனிமனிதராக ஆவணங்களைச் சேர்த்துத் தொகுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது சேகரிப்பில் உள்ள ஆவணங்களை த.ம.அ பொது மக்களின் நலனிற்காக மின்னாக்கம் செய்து வெளியிடலாம் என பொது நலச் சிந்தனையுடன் எங்களை வரவேற்று தகவல் பரிமாறிக் கொண்டார்.
கண்டியில் சந்தித்த தம்பி லக்ஷ்மணன். மலையக மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் சமூகச் சேவையாளர்.
நியூ பீக்கோக் பகுதி மலையக மக்களின் வாழ்வியல் அருங்காட்சியகத்தின் சந்தனம் சத்தியநாதன். இவர் போன்றவர்கள் தான் மலையக மக்களின் வரலாற்றை இன்று உலகிற்கு வெளிச்சப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கொழும்பு நகரில் திவ்யா, ஐயா மற்றும் அம்மா விமலேந்திரன் குடும்பத்தினர். கொழும்பு நகரில் எங்களை வரவேற்று பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்த அன்புள்ளங்கள்.
கொழும்பு திரு.யோகராஜ், திரு.இராமன் – தக்க நேரத்தில் எங்களை இரவில் வரவேற்று பத்திரமாக அனுப்பி வைத்த சகோதரர்கள். திரு.யோகராஜ் ஏற்பாடு செய்து அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் – அவருடன் பயணித்த பொழுதுகளில் கொழும்பு மக்களின் மனம், அவர்களின் ஒற்றுமை பற்றி அறிய முடிந்தது.
நேற்று இரவு பேருந்தில் சந்தித்த திரு.உமா மகேஸ்வரன் – நமது பணிகளில் ஆர்வம் கொண்டு அவர் கூறியவை..
துவாரகியின் அன்பு இனிமை.
இன்று இறுதியாக எங்களை கொழும்பு நகரிலிருந்து ரமாடா ஹோட்டல் வரை அழைத்து வந்த சிங்கள ஆட்டோ ஓட்டுநர்…..
இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.
இலங்கையில் நான் சந்தித்த மக்கள் - தமிழ்மக்கள், சிங்களவர், இசுலாமியர் அனைவருமே எங்களுடன் அன்புடனும் அக்கறையுடனும் பழகினர்.
பல்வேறு புதிய அனுபவங்களை சுமந்து சென்னை பயணிக்கின்றேன். மீண்டும் விரைவில் சந்திப்போம்.
“மதங்கள் துறந்து மனிதம் பிறக்கட்டும்
அன்பும் அறனும் ஓங்கட்டும்”
-சுபா


SriLanka - 45. ஆதவன் தொலைக்காட்சி

கொழும்பு நகரில் இன்று..
ஆதவன் தொலைக்காட்சிக்காக நேருக்கு நேர் நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டி..
தோழர் திவ்யா வீட்டில் விடைபெற்ற போது..
இன்று தமிழகம் திரும்புகிறேன்.







Friday, November 2, 2018

SriLanka - 44.பேராதனைப் பல்கலைக்கழகம்

2.10.2018
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் எங்களின் இந்த காலைப்பொழுது தொடங்கியது. அங்கு விருந்தினர் தங்கும் விடுதியில் தங்கியிருந்தோம். காலை உணவுக்கு மாணவர்கள் வந்து பசியாறும் பகுதிக்குச் சென்றோம். இதுவரை நான் பெயர் கேள்விப்படாத பல பலகார வகைகளை அங்கு காண முடிந்தது. அதில் சோயா தோசையும் சில பலகாரங்கரங்களையும் வாங்கி சுவைத்தோம்.
17,000 மாணவர்கள், 3000 ஆசிரியர்கள், 2400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட வளாகம் பேராதனை பல்கலைக்கழகம்.
எங்களின் பெரும்பாலான நேரம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்திலேயே கழிந்தது. தமிழ் நூல் பகுதிக்குச் சென்றிருந்தோம். தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் தொகுப்பினைப் பார்வையிட்டோம்.
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் சிங்கள நூலக ஊழியர்களுக்கு ஆவணப்பாதுகாப்பில் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக ஆங்கிலத்தில் உரையாற்றினோம்.
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் அரிய சேகரிப்பில் உள்ள ஓலைச்சுவடிகளை நேரில் கண்டோம். நூலகத்தின் அடித்தளத்தில் உள்ல பாதுகாப்பு அறைக்கும் திரு.மகேஸ்வரன் அவர்களுடன் சென்று அங்குள்ள பாதுகாக்கப்படும் நூல்களைப் பார்வையிட்டோம்.
இலங்கையில் பதிப்பிக்கப்படும் வெளியிடப்படும் ஒவ்வொரு நூலின் 5 படிவங்கள் 5 பகுதிகளுக்குச் சென்று பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ள சட்டம். அந்த ரீதியில், வெளியிடப்படும் ஒவ்வொரு நூலின் ஒரு படிவம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் சேகரப்பிற்காக இணைக்கப்படுகின்றது.
மதியம் கண்டி முத்தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் எனது உரை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நடனமாடிய சிறுமிகளின் பாவனையும் நடன அமைப்பும் மனதை விட்டு அகலவில்லை. நிகழ்ச்சிக்குத் தலைமையுரையாற்றிய கலாநிதி துரை மனோகரன் அவர்களின் அருமையான வழிகாட்டுதலில் இந்த அமைப்பு சீரிய செயல்பாடுகளை முன்னெடுக்கின்றது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இங்கு கண்டியில் தான் பிறந்தவர் என்ற கூடுதல் செய்தியையும் அறிந்து கொண்டேன். முத்தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு மென்மேலும் சிறப்புடன் செயல்பெற தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துக்கள்.
கண்டியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததோடு சிறந்து விருந்துபசரிப்பையும் வழங்கிய பேராதனை பல்கலைக்கழக நூலகர் திரு.மகேஸ்வரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி.
-முனைவர்.க.சுபாஷிணி