Sunday, March 9, 2025

இங்கிலாந்தில் சில நாட்கள் -2

 


டோவர் நகரில் ஒரு பெரிய அரண்மனை உள்ளது. ஏறக்குறைய 1000 ஆண்டுகள் பழமையானது. இது அமைந்திருக்கின்ற டோவர் நகரின் குன்றின் உச்சியில் இருந்து இங்கிலீஷ் சேனலின் விரிவை பார்க்கலாம்.
அதன் அருகாமையிலேயே knight templers உருவாக்கிய டெம்பிள் சர்ச் இருக்கின்றது. முழுமையான கட்டுமானத்தை இன்று காண முடியவில்லை என்றாலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட டெம்பிள் சர்ச்சின் அடித்தளத்தை அகழாய்ந்து வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். இங்கிலாந்தின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று இது. 1118ல் மிகப்பெரிய தாக்குதலை சந்தித்தது நைட் டெம்ப்ளர் எனும் இந்தப் பாதுகாப்பு குழு. அதன் பின்னர் ஜெருசலத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்து ஐரோப்பா முழுமைக்குமான நைட் டெம்ப்ளர் குழுவினர் பாதயாத்திரை செல்வதற்கான உதவிகளைச் செய்வதற்கும் அவர்களுக்குப் பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இந்தக் குழுவினர் செயல்பட்டனர். 1128இல் இந்த டெம்பிள் சர்ச் கட்டப்பட்டது.
இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு வந்து அங்கிருந்து கால்நடையாக மற்றும் குதிரைகளில் பயணம் செல்லும் புனித பயணிகள் ஜெருசலம் வரை வந்து சேர்வதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இவர்கள் மேற்கொண்டிருந்தனர். கடல் பகுதியில் கப்பல் வழியாக யாத்திரிகர்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாக இந்தப் பகுதி பாதுகாப்பு அரணாகவும் விளங்கியிருக்கக்கூடும். தங்கும் விடுதிகளும் வர்த்தக மையங்களும் இங்கு இயங்கி இருக்கக்கூடும். மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகவே இது அக்காலத்தில் திகழ்ந்திருக்க வேண்டும். இன்று இப்பகுதி பாதுகாக்கப்படுகின்ற ஒரு வரலாற்றுச் சின்னமாக அமைந்திருக்கின்றது. ஆனால் இதற்குத் தொடர்ச்சியாக வருகின்ற பகுதிகள் தனியார் உடமைகளாக அறிவிப்பு பலகைகள் போடப்பட்டு பொதுமக்கள் செல்ல முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது என்பது இன்றும் கூட இங்கு நைட் டெம்பளர் அமைப்பைச் சார்ந்த தொடர்பாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கலாம் என்ற ஊகத்திற்கும் வழிவகுக்கின்றது.
டோவர் நகரில் இத்தகைய வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட்டு தகவல்களைச் சேகரித்துக் கொண்டு அங்கிருந்து கேன்டர்பரி நகருக்கு புறப்பட்டோம். ஏறக்குறைய 27 மைல் தூர சாலைப் பயணம்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை இங்கு கிலோமீட்டர் அளவை பயன்பாடு இல்லை. மாறாக மைல், ஃபீட் அளவை முறை தான் பயன்பாட்டில் உள்ளது. ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து வந்தவுடன் நாமும் இந்த மாற்றத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். வாகனத்தில் உள்ள ஜிபிஎஸ் சிஸ்டம் மிகத் துல்லியமாக எப்படி இடங்களுக்குச் சென்றடைகின்றதோ அதேபோல இங்கிலாந்துக்கு வந்தவுடன் அளவை மாற்றத்தையும் உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கி விடுகிறது. மைல் அளவை கிலோமீட்டர் அளவில் நமக்குத் தெரிவிக்க தொடங்கி விடுகிறது. ஜிபிஎஸ் அதன் சாட்டிலைட் சிஸ்டம் என்பது இன்றைய நூற்றாண்டில் நாம் எல்லோருக்குமே கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும்.
கேண்டபரி நான் எனது முனைவர் பட்ட ஆய்வை செய்த பல்கலைக்கழகம் இருக்கும் நகரம். ரோமானிய அருங்காட்சியகம் மற்றும் மேக்னா கார்ட்டா எனப்படும் முக்கியமான வரலாற்று ஆவணம் இருக்கக்கூடிய ஆவண பாதுகாப்பகம் இருக்கின்ற ஒரு பழம் நகரம். இங்கிலாந்து முழுமையாக கத்தோலிக்க மதத்தை உள்வாங்கிக் கொண்டதற்குத் தொடக்கப் புள்ளி இங்குதான் அமைந்தது. இங்கு அமைந்திருக்கும் பெரும் தேவாலயம் அதன் கட்டுமானத்திற்கும் புகழ்பெற்றது. இங்கு வாகனத்திலேயே சில பகுதிகளைச் சுற்றி பார்த்து கோட்டை வளாகங்கள் பகுதியில் சிறிது நேரம் செலவிட்டு பின்னர் அங்கிருந்து லண்டன் நகரை நோக்கி புறப்பட்டோம்.
ஏறக்குறைய 90 கிலோமீட்டர் தூரம். ஒரு மணி நேரத்தில் செல்லக்கூடிய தூரம் தான். ஆனால் லண்டன் நகரை நெருங்க நெருங்க வாகனங்களின் எண்ணிக்கை நமக்கு தலை சுற்றலை ஏற்படுத்தி விடுகிறது.
நேரடியாக ஹைகேட் செமிட்ரி இருக்கின்ற பகுதிக்குச் செல்வதற்காகத் திட்டமிட்டு இருந்தோம். லண்டனின் மையப் பகுதியில் இருந்து இங்கு செல்வதற்கு அதாவது 18 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு இரண்டே கால் மணி நேரம் ஆனது.
லண்டன் நகருக்குள் வாகனத்தில் வராமல் இருப்பது சிறப்பு. வெளிப்புறங்களில் வாகனத்தில் எளிதாகப் பயணிக்க முடிகின்றது. ஆனால் லண்டன் நகருக்குள் வந்த பின்னர் பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவது தான் சிறப்பு.
திட்டமிட்ட நேரத்திற்கும் 40 நிமிடங்கள் தாமதமாக ஹைகேட் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு லண்டன் நகரில் வசிக்கும் தோழர் பாஸ்கர் எங்களுக்காகக் காத்திருந்தார். மதிய உணவிற்கு ஒரு இங்கிலீஷ் உணவகம் சென்றோம். பிரித்தானிய உணவு வகைகளில் ஒன்றான Chicken Pie with Smashed potatoes சாப்பிட விரும்பியதால் அதனை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். எந்த ஊருக்கு வருகின்றோமோ அந்த ஊரின் முக்கிய உணவுகளைச் சாப்பிட்டு பார்ப்பது தானே அந்த ஊரை பற்றி நாம் அறிந்து கொள்ள உதவும். ஒரு நாட்டின் அல்லது நகரின் பண்பாடு என வரும்போது மக்கள் சுற்றுச்சூழல் ஆகிவற்றோடு உணவும் முக்கியத்துவம் பெறுகின்றது அல்லவா?
மதிய உணவிற்குப் பிறகு ஹைகேட் கல்லறை பகுதிக்குச் சென்றடைந்தோம். இங்குதான் கால் மார்க்ஸ் மற்றும் ஜெனி மார்க்ஸ் இருவரது உடல்களும் புதைக்கப்பட்ட கல்லறை பகுதி இருக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன் இங்கு நேரில் சென்றிருக்கின்றேன். ஆயினும் மீண்டும் செல்வது மாமேதை கால் மார்க்சை மீண்டும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு போல மனதிற்கு நெருக்கமான ஒரு விஷயமாகவே தோன்றுகின்றது என்பதால் மீண்டும் அங்கு சென்று வந்தோம். ஏராளமான கல்லறைகள் இருந்தாலும் நடு நாயகமாக கார்ல் மார்க்ஸ் தலைப்பகுதியின் உருவச் சிலையுடன் இந்தக் கல்லறை இங்கு வருவோரை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. ஒரு கல்லறைக்கு இவ்வளவு வருகையாளர்களா என வியக்க வைக்கும் அதிசயம் இந்தப் பகுதி. கல்லூரி மாணவர்கள் ஆய்வாளர்கள் பொதுமக்கள் எல்லா வயதினர் இனம் மதம் மொழி கடந்து இங்கு வந்து நின்று கார்ல் மார்க்ஸை பல நிமிடங்கள் உற்றுப் பார்க்கின்றார்கள், சிந்திக்கின்றார்கள், அருகே தரையில் அமர்ந்து கொள்கின்றார்கள், இந்த வளாகம் முழுவதும் சுற்றி வருகின்றார்கள். லண்டனுக்கு வருகின்ற சுற்றுப்பயணிகளை ஈர்க்கின்ற ஒரு முக்கிய இடமாக இப்பகுதி அமைந்திருக்கின்றது.
அங்கிருந்து நாங்கள் தங்கியிருக்கும் தங்கும் விடுதிக்குச் சென்று சேர்ந்தோம். சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு மீண்டும் நகரை நோக்கி புறப்பட்டோம்.
இசைஞானி இளையராஜாவின் சிம்பனி அரங்கேற்றம். Eventim Apollo அரங்கில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் காரில் வராமல் பொது போக்குவரத்தை எடுத்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம். ஏழு மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்தது. ஆனால் முன்னரே பார்வையாளர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
லண்டன் நகரை அதிசயிக்க வைக்கும் வகையில் தமிழ் மக்கள் கூடி நிறைந்து அரங்கம் காட்சியளித்தது. தமிழ் இசை ஜாம்பவான் இங்கிலாந்தின் புகழ்மிக்க இசை அரங்கத்தை ஆக்கிரமித்திருந்தார். தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் மாபெரும் நிகழ்வு. இந்த இசை பிரமாண்டத்தோடு இன்றைய நாளின் பயணம் இனிதே நிறைவடைந்தது.
-சுபா
8.3.2025
லண்டன், இங்கிலாந்து




















Saturday, March 8, 2025

இங்கிலாந்தில் சில நாட்கள் - 1


ஐரோப்பாவில் ஒரு பயணத்தை திட்டமிடுவது என்றால் நமது காரில் பொருத்தப்பட்டு இருக்கின்ற ஜி பி எஸ் சிஸ்டம் ஏறக்குறைய தெளிவான பயண நேரத்தை நமக்கு அறிவித்து விடும். அதன் அடிப்படையில் திட்டமிட்டு எவ்வளவு பெரிய நீண்ட தூர பயணம் ஆனாலும் நம்மால் ஏற்பாடு செய்த விட முடியும்.

பிரான்ஸ் வடமேற்கு எல்லையில் உள்ள கலே துறைமுகத்திலிருந்து புறப்படுகின்ற ஃபெரி மதியம் 1:15க்குப் பதிவு செய்திருந்தோம். ஆக காலை 3 மணிக்கு லியோன்பெர்க் கிராமத்திலிருந்து புறப்பட்டால் காலை 11 மணிவாக்கில் துறைமுகப் பகுதி வந்து வட முடியும் என ஜிபிஎஸ் சொல்லிவிட்டது. ஆகவே இடையில் ஓரிரு சிறிய ஓய்வு.. அவற்றையும் கணக்கில் சேர்த்துக் கொண்டு அதிகாலை 3 மணிக்கு வாகனத்தில் புறப்பட்டோம்.
வீட்டில் இருந்து துறைமுகம் வரை மொத்தம் 710 கிலோ மீட்டர் தூரம். இடையில் லக்ஸம்பர்க், பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளையும் கடந்து வர வேண்டும்.
ஐரோப்பாவில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நாட்டு எல்லையில் பாஸ்போர்ட் கண்ட்ரோல் இல்லை என்பதால் நேரத்தை விரயமாக்காத தொடர்ச்சியான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. ஆகவே நேர்த்தியான சாலைகள், திட்டமிட்ட பயணம் என்ற அடிப்படையில் பயணத்தைத் திட்டமிட முடிகிறது.
ஒரே நாளில் ஜெர்மனியில் இருந்து மேலும் மூன்று நாடுகளைக் கடந்து இங்கிலாந்தில் மதியம் 2 மணிக்கு வந்து சேர்ந்தது அதிலும் சாலை வழியாக பயணம் என்பது சாத்தியமான ஒன்றுதான் என்பதை இந்தப் பயணம் நிரூபித்து விட்டது.
கலே துறைமுகப் பகுதி மிகத் திட்டமிட்ட வகையில் கட்டப்பட்டிருக்கின்றது. நீண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு பகுதி. பொதுமக்கள் பயணிக்கின்ற பேருந்துகளுக்கு ஒரு பகுதி. கார்களுக்கு வேறு பகுதிகள்.
ஒவ்வொரு காருக்கும் அது எந்த வரிசையில் கப்பலில் வந்து நிற்க வேண்டும் என்பது குறித்த தகவல் துறைமுகத்தில் நுழையும்போது நமக்கு வழங்கப்பட்டு விடுகின்றது.
ஐரோப்பிய எல்லையில் ஐரோப்பிய சுங்கத்துறை அதிகாரிகள் நமது பாஸ்போர்ட்டுகளை சோதிக்கின்றார்கள். அதன் பின்னர் வாகனத்தில் எவ்வகையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்பதை மற்றொரு இடத்தில் சோதிக்கின்றார்கள். இதனைக் கடந்து ஏறக்குறைய 50 மீட்டர் தூரம் வந்தவுடன் இங்கிலாந்து நாட்டின் சோதனை தொடங்குகிறது. ஊழியர்கள் அனைவருமே அன்பாக சிரித்த முகத்துடன் தான் பணியாற்றுகின்றார்கள். நமக்கு இன்றைக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். 🙂
ஃபெரி ஏறக்குறைய 300-400 பேர் பயணிக்க கூடிய வகையில் அமைந்திருக்கிறது. உள்ளேயே உணவகங்கள் உள்ளன.. ஓய்வெடுக்கும் பகுதிகள் உள்ளன. ஏறக்குறைய 1 1/4 மணி நேர பயணம்.
நமது வாகனத்தை அடித்தளத்தில் நிறுத்திவிட்டு மேல் தளத்தில் சென்று உணவருந்தலாம். ஓய்வெடுக்கலாம்.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான இங்கிலீஷ் சேனலைக் கடந்து இங்கிலாந்து நாட்டின் கடற்கரையான டோவர் துறைமுகப் பகுதியை வந்தடைந்ததும் அங்கிருந்து எந்தவிதமான சோதனைகளும் இல்லாமல் வாகனத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு பயணிக்க முடிகிறது.
டோவர் இப்பகுதியில் முக்கியமான துறைமுக நகரம். வரலாற்றுப் பழமை கொண்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் ரோமானியப் பேரரசு இங்கிலாந்தைக் கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்ட போது ஜூலியஸ் சீசரின் படைகள் வந்திறங்கிய பகுதி இது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான வீடுகள் பல இங்கிருக்கின்றன. இன்றும் ஈராயிரம் ஆண்டு சிதலமடைந்த ரோமானியக் கட்டிடங்களைக் காண முடிகிறது.
அதற்கு அருகில் Folkestone அமைந்திருக்கின்றது. முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப்போர் மட்டுமின்றி இங்கிலாந்தில் நடந்த பல போர்கள் இந்த நகரின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றன.
இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்ட ஒரு தேவாலயத்தின் மணிக்கூண்டு பகுதி மாத்திரம் எஞ்சிய நிலையில் உள்ள ஒரு வளாகத்தை போர்களை நினைவுபடுத்தவும் போரில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் என சிறப்பித்துப் பூங்காவாக அமைத்திருக்கின்றார்கள். இந்த நகரம் முழுவதும் இங்கிலாந்து வரலாற்றில் சந்தித்த பல போர் பற்றிய அடையாளங்கள் தான் அதிகமாக இருக்கின்றன.
இன்றைய பயணத்தில் பார்த்து பதிந்தவை:
-டோவர் ரோமானிய வளாகம்
-டோவர் பூங்கா
-Folkestone War Memorial
- The Battle of Britain Memorial
- Folkestone Town
- Folkestone World War I Memorial
-Folkestone Normandy War Memorial
இவை ஒவ்வொன்றும் பற்றியும் விரிவாக எழுதலாம் ஆனால் இப்போது நேரம் போதாது.
மாலை வேலைகளில் Folkestone நடைபாதைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் பிச்சைக்காரர்கள் தங்களது மூட்டைகளை இழுத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடப்பதையும் காணமுடிகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட சிலரும் இப்படி அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.
Folkestone பகுதியில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆங்காங்கே இந்திய உணவகங்கள் தென்படுகின்றன.
இங்கிலாந்தின் ஒவ்வொரு நகரமும் ஏராளமான வரலாற்றையும் வரலாற்று சின்னங்களையும் கொண்டிருக்கின்றன. ‌ கடந்த காலங்களில் இங்கிலாந்துக்கான எனது முந்தைய பயணங்களில் பல தகவல்களை வழங்கி இருக்கின்றேன். இந்தப் பயணத்தில் புதிதாகச் செல்லும் பகுதிகளில் நான் காண்கின்ற வரலாற்றுத் தகவல்களை வாய்ப்பு கிடைக்கும் போது பகிர்கிறேன்.
-சுபா
Folkestone, England


































Friday, March 7, 2025

இங்கிலாந்துக்கு காரில் பயணம்

இங்கிலாந்துக்கு பலமுறை விமானம் வழி பயணத்திருக்கின்றேன். சாலை வழியாகப் பயணம் செய்து கடலைக் கடந்து சென்றடைய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இன்று அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது.

ஜெர்மனியில் லியோன்பெர்க் கிராமத்தில் இருந்து சாலை வழியாக பயணம் செய்து லக்சம்பர்க் நாட்டைக் கடந்து பெல்ஜியம் சாலைகளில் பயணித்து பிரான்சின் வடமேற்கு பகுதியில் பயணம் செய்து காலே நகரில் செயல்படுகின்ற ஃபெரி எடுத்து இப்போது அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
ஏறக்குறைய 7 மணி நேர சாலை பயணம்.
இங்கு பயணிக்கும் போது கிமு 55 மீண்டும் கிமு 54 ஆகிய காலகட்டங்களில் ஜூலியஸ் சீசர் தனது ரோமானிய படைகளை அழைத்துக் கொண்டு இங்கிலாந்தைக் கைப்பற்ற செய்த முயற்சியில் தோல்வி கண்டு திரும்பியதும் அதன் பின்னர் ரோமானிய பேரரசு மீண்டும் கிபி 49 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றியதும் நினைவுக்கு வந்தது.
இந்த வரலாற்று நினைவுகளோடு மேலும் இப்பகுதி முழுவதும் கொட்டிக் கிடக்கும் வரலாற்று சிந்தனைகளையும் மனதில் தேக்கிக்கொண்டு பயணிக்கின்றேன். சுவாரசியமான இந்த பயணத்தைப் பற்றி அவ்வப்போது எனது பயண குறிப்புகளைப் பகிர்கின்றேன் காணொளிகளையும் பகிர்கின்றேன்.
-சுபா











Sunday, May 15, 2022

மலேசியப் பயணம் முடித்து...

நேற்று மாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டேன். கோலாலம்பூர் விமான நிலையத்தில், குறிப்பாக நான் அங்கு இருந்த வேளையில் ஏராளமான பயணிகள் விமானத்திற்குக் காத்திருப்பதைக் காண முடிந்தது.

கோவிட்-19 பிரச்சனையால் கடந்த இரண்டு ஆண்டுகள் சவுதி அரேபியாவிற்குப் புனித வழிபாட்டிற்குச் செல்ல முடியாத பலரும் குழுக்களாகப் பயணத்தைத் தொடங்கி இருக்கின்றனர் போலும். ஏராளமான பயணிகள் வெள்ளை உடை அணிந்து ஆணும் பெண்ணுமாகக் கூட்டம் கூட்டமாக விமான நிலையம் முழுமையும் இருந்தார்கள்.
விமான நிலையம் வந்ததும் எனக்குக் கொரோனா சோதனை தேவையா என அறிந்து கொள்வதற்காக அங்கு நடந்து வந்து கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு மலாய் இனத்து காவல் அதிகாரியை நிறுத்தி அவரிடம் கேட்டேன். அவர் என்னிடம் இது பற்றி தனக்கு அதிகமாகத் தகவல் தெரியாது என்றாலும் ஒரு மூலையில் இதற்கான தகவல்கள் வழங்கப் படுகின்றன என்பதை விவரித்து கூறினார். பிறகு நான் எங்கிருந்து வருகிறேன் எனக் கேட்டதும் நான் பினாங்கிலிருந்து வருகிறேன் என்று சொன்னேன். உடனே அவரும் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் எனச் சொல்லி அங்குள்ள எந்தெந்த பள்ளிக்கூடங்களில் அவர் படித்தார் என்பதையும் கூறி நான் எங்கு படித்தேன் என்பதையும் கேட்டு சற்று நேரம் பேசிவிட்டு சென்றார். மலாய் இனத்து மக்களின் நட்புணர்வுடன் கூடிய பழகும் தன்மைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
எனது பயணம் ஓமான் ஏர் வழியாக. ஆகவே முதல் விமானத்தை எடுத்து மஸ்கட் வந்தடைந்து பிறகு மஸ்கட் நகரிலிருந்து பிராங்பேர்ட் நகரத்துக்கு எனப் பயணம் அமைந்திருந்தது. வரிசையாக டிக்கெட் கவுண்டரில் இருக்கின்ற மக்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல ஜோடிகள் மாற்றினத்துத் தம்பதிகளாகக் காட்சி அளித்தார்கள்.
என் பின்னால் நின்றிருந்த ஒரு தம்பதியர் அவர்களாகவே என்னிடம் வந்து பேச்சு கொடுத்தார்கள். ஆண் துபாயைச் சார்ந்தவர். அவர் மனைவி ஒரு ஜப்பானியர். இந்தத் தம்பதியருக்கு ஒரு குழந்தையும். அந்த ஜப்பானிய பெண்மணி இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற உடையணிந்து முகத்தை மறைக்காமல் காட்சி அளித்தார்.
வரிசையில் எனக்கு முன் ஒரு இளம்பெண் ஐரோப்பிய முக சாயலில் இருந்தாள். அந்தப் பெண் இந்திய வடநாட்டில் ஏதாவது ஒரு சமய நிறுவனத்தில் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் எனும் வகையில் தோற்றம் இருந்தது. கழுத்தில் 2 முறை சுற்றப்பட்ட ருத்ராட்ச மாலை. மென்மையான சுடிதார் போன்ற ஆனால் தொள தொள எனக் காட்சி அளிக்கும் ஒரு உடை. அதில் துப்பட்டாவை நடனமாடும் பெண்கள் மேல் இறுக்கி கட்டி இருக்கும் வகையில் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். இது ஒருவகை புது மாடல் என்று கூட சொல்லலாம் 😀.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு முக சாயலில் வெவ்வேறு உடை அலங்காரங்கள் எனக் காட்சி அளித்துக் கொண்டிருந்தார்கள்.
வருகின்ற ஒவ்வொரு பயணிகளிடமும் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ளாமல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் வகையில் கவுன்டரில் அமர்ந்திருந்த பணியாளர்கள் இயங்கிக் கொண்டிருந்தது எனக்கு உண்மையில் மனதிற்கு நெகிழ்வாக இருந்தது. வருகின்ற பயணிகள் மனச் சோர்வு அடையாமல் அவர்களைப் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என இந்த ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது.
மலேசிய விமான நிலையம் மட்டுமல்ல... அரசு அலுவலகங்கள்.. வர்த்தக நிறுவனங்கள்.. கடைகள்.. உணவகங்கள் என எங்கு சென்றாலும் மலாய் இன மக்களின் அன்பான புன்னகை வெளிப்படுத்தி பேசும் பண்பு எனக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
இந்தப் பயணத்தில் நிறைய மலாய்க்காரர்களுடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. பல்வேறு சொந்த காரியங்களுக்காக அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய காரணம் இருந்ததால் அத்தகைய வாய்ப்புகள் அமைந்தன. மலாய்க்காரர்களின் கடமை உணர்வும் துரிதமாகப் பணிபுரியும் பாங்கும் அத்தருணங்களில் என்னால் உணர முடிந்தது.
முன்னர் பொதுவாகப் பேசும்போது மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்றும் அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளினால்தான் அவர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்றும் சிலர் கூறுவதை கேட்டிருக்கின்றேன். ஆனால் இந்த எனது பயணத்தில் நான் சென்ற இடங்களிலெல்லாம்... அலுவலகங்களில் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் கடமை உணர்வுடனும் இன பேதம் பார்க்காமல் அன்போடு பழகும் மலாய் மக்களின் குணத்தை நேரில் பார்க்க முடிந்தது.
மலேசியா சுவையான உணவுக்கு மட்டுமல்ல.. அன்பான மலாய் இனத்து மக்களின் கரிசனமான உபசரிப்பு இருக்கும் புகழ் பெற்ற ஒரு நாடு.
மலேசியாவின் தனித்துவமிக்க சிறப்பே பல்லின மக்கள் சுமூகமாக நட்புறவுடன் வாழும் ஒரு சூழல் என்பது தான். தற்போதைய அரசியல் நிலைமைகள் சீரடைந்தால் மலேசியா மீண்டும் கிழக்காசிய பகுதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரு நாடாக விளங்கும்.

-சுபா
ஸ்டுட்காட், ஜெர்மனியிலிருந்து

Friday, July 2, 2021

பிரான்சு பயணக்குறிப்பு - 4

 லியானார்டோ டாவின்சி தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. கலையை அறிதலிலும் ஆய்வுகள் செய்வதிலும் புதிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு வழங்குவதிலுமே அவரது வாழ்நாள் கழிந்தது. ஒரு மனிதரால் இவ்வளவு காரியங்களைச் செய்ய முடியுமா என்றால் முடியும் என்பதற்குச் சான்றாக லியானார்டோ டா வின்சி திகழ்கிறார்.

என்னிடம் லியானார்டோ டா வின்சி பற்றி கேட்டால் நேரம் செல்வதே தெரியாத அளவிற்குப் பேசிக் கொண்டிருப்பேன்.
லியானார்டோ டாவின்சி மோனாலிசா ஓவியத்தை வரைவதற்கு 4 வருடங்கள் எடுத்துக் கொண்டார். 1503ம் ஆண்டு தான் இந்த ஓவியத்தை அவர் வரையத் தொடங்கினார். இடையில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வது. பிறகு மீண்டும் வரைவது. இப்படியே சென்றது அவரது காலம். தான் எங்கே சென்றாலும் மோனாலிசா ஓவியத்தைக் கையோடு எடுத்துக் கொண்டே செல்வார். இறுதியில் அவர் பிரான்சுக்குத் தனது இறுதிக் காலத்தில் சென்று விட்டபோதும் அவர் கையோடு கொண்டு சென்ற சொத்து நான்கு ஓவியங்கள். அதில் மோனாலிசாவும் ஒன்று.
கலைஞர்கள் மனதில் என்னதான் ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை யார் அறிவார்?
டாவின்சியின் இறுதி காலத்தில் அவரைத் தன்னோடு அழைத்துக் கொண்டார் பிரான்சு மன்னர் முதலாம் பிரான்சிஸ். அப்போது தான் கொண்டு வந்த மோனாலிசா ஓவியத்தை தனது இறுதி நாள் வரை வைத்திருந்தார் டாவின்சி. டாவின்சியின் மறைவுக்குப் பின்னர் அரச சொத்தாகவே மோனாலிசா ஓவியம் இருந்தது.
1799ம் ஆண்டு நெப்போலியனின் கவனத்திற்கு இந்த ஓவியம் வந்தபோது அவர் தனது படுக்கை அறையில் இந்த ஓவியத்தை வைத்திருந்தார். 1804ம் ஆண்டில் லூவ்ர அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறக்கப்பட்ட போது மோனாலிசா ஓவியம் பொது மக்கள் பார்வைக்கு வந்தது.
மோனாலிசா வரைந்து முடிக்கப்படாத ஓவியம் என்றே அறியப்படுகிறது. மீண்டும் மீண்டும் இந்த ஓவியத்தின் மீது வர்ணங்களைக் குழைத்து தீட்டிக் கொண்டேயிருந்தாலும் டாவின்சியின் மனம் நிறைவு பெறவில்லை.
இந்த ஓவியத்தைத் தீட்ட டாவின்சி ஸ்டுமாட்டோ (Stumato) என்ற ஒரு புது உத்தியைக் கையாண்டார். நிழலிலிருந்து வெளிச்சம் தெரியும் வகையில் இந்த ஓவியத்தை அவர் வரைந்துகொண்டேயிருந்தார்.
மோனாலிசா ஓவியத்திற்கு முகம் கொடுத்தவர் யார் என்ற கேள்வியும் விடைதெரியாது பல காலங்கள் இருந்தது. பணம் படைத்த Isabella d’Este என்பவரோ என்று சிலரும், Marquise of Mantua அல்லது ஃப்ராங்காவில்லா அரசி Costanza d’Avalos என்றும் சில அனுமானங்கள் உலவின. சிலர் இது லியானார்டோ தன்னையே பெண்ணாகப் பாவித்து உருவாக்கிய ஒன்றோ என்றும் கருதினர். அல்லது அவருக்கு உதவியாளராக இருந்த Gian Giacomo Caprotti யாக இருக்குமோ என்றும் கருதினர். ஆனால் இன்று அவர் இத்தாலியிலும் பிரான்சிலும் நன்கு அறியப்பட்ட வணிகரின் மனைவி Francesco del Giocondo ஆக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
இந்த ஓவியத்தில் நெஞ்சுப் பகுதி ஒரு பக்கமாக சாய்ந்த வகையிலும் முகம் நேராகவும் இருக்கும். ஓவியங்களுக்கு முகத்தை சீரியசாக வைத்துக் கொள்ளும் அக்காலகட்டத்தில், மறைந்தும் மறையாமலும் தெரிந்து தெரியாமலும் ஒரு இளம் புன்னகை இந்த ஓவியத்தின் முகத்தில் தெரியும் வகையில் கம்பீரமான பெண்ணின் தோற்றமாக இதனை டாவின்சி படைத்திருக்கின்றார்.
எனக்கு என்னவோ மோனாலிசா டாவின்சி தன்னையே வரைந்ததாகத்தான் தோன்றுகின்றது.
ஒரு ஓவியம் இத்தனை காலங்கள் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றது என்பது ஆச்சரியம் தான். இந்த ஆச்சரியம் பிரான்சின் லூவ்ரவில் தான் இருக்கின்றது. இதனைக் காண ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய இந்த அருங்காட்சியகத்துக்கு 16 மில்லியன் மக்கள் வருகின்றார்கள்.
மோனாலிசாவின் கண்களையே உற்றுப் பாருங்கள். அக்கண்கள் நம்மோடு கதை பேசும்.
தொடர்வேன்..
-சுபா