Friday, March 14, 2025

பரோட்டா ஆராய்ச்சி



நூல் பரோட்டாவை ஆராய்ச்சி செய்த போது..

🙂
லண்டன் வெம்பிலியில் நமது தோழர் ரஞ்சனாவுடன் (லண்டன் தமிழ் அருங்காட்சியக பொறுப்பாளர்), பேராசிரியர் டாக்டர் சிரீகாந்தானுடன் நாங்கள்..






இங்கிலாந்தில் சில நாட்கள் - 7



லண்டன் நகரில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும் ஏதாவது ஒரு வரலாற்றுச் சிறப்பைக் கொண்டிருக்கிற பகுதிகளாகவே இருக்கின்றன. அப்படித்தான் நாங்கள் தங்கி இருக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் க்ரிக்கல்வூட் பகுதி. இப்பகுதியில் வசித்த Amy Johnson
என்பவர்தான் இங்கிலாந்திலிருந்து 1930ல் ஆஸ்திரேலியாவிற்குத் தனியாக விமானம் ஓட்டிச்சென்ற முதல் பெண்மணி என்ற செய்தியை அறிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல, இங்கிலாந்தில் பெண்களுக்கான Votes for Women என ஓட்டுரிமை பற்றி பிரச்சாரம் செய்து அதற்காக போராட்டங்கள் நடத்திய Gladice Keevil என்பவர் வாழ்ந்த பகுதியும் இதுதான். இவர் 1908 ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டார்.
ஏராளமான சிறு சிறு கடைகள் நிறைந்த பகுதியாக இப்பகுதி இன்று இருக்கின்றது. தேம்ஸ் லிங்க் என்ற பெயர் கொண்ட ரயில் போக்குவரத்து சேவையும் இப்பகுதியில் இயங்குகிறது.
அங்கிருந்து இன்று ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக ஹாலோவே பகுதிக்குச் சென்றிருந்தோம். அப்பகுதியில் ஒரு தேவாலயம் இருக்கிறது. இது மேரி மேக்தலின், அதாவது இயேசுவாகிய ஜீசஸின் மனைவி என அறியப்படுகின்ற சமய தூதராகக் கருதப்படுபவர். மிகப்பெரிய அளவிலான வியக்க வைக்கும் அளவில் அமைந்த ஒரு பழம் தேவாலயமாக இது காட்சியளிக்கிறது. செயின்ட் மேரி மெக்டலின் தேவாலயம் என இதற்குப் பெயர் வழங்கப்பட்டிருக்கின்றது. St Mary Magdalene, Hope Church Islington என்ன அழைக்கப்படுகின்ற இந்த தேவாலயம் இங்கிலாந்தின் அரசு மதமான Church of England கீழ் அமைகிறது.
இந்த தேவாலயத்தைப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதன் கட்டுமானத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்து புறப்பட்டு வெளியே வரும்போது தற்செயலாக இடது பக்கம் பார்த்தபோது ஆச்சரியப்பட்டுப் போனேன். மெட்ராஸ் ப்ளேஸ் (Madras Place) என இச்சாலைக்குப் பெயர் வழங்கப்பட்டிருந்தது. ஆஹா என்ன ஆச்சரியம்.. நமக்குப் பிடித்த மெட்ராஸ் இங்கேயும் இருக்கிறதா என நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.
நாங்கள் சந்திக்க வந்திருந்த நண்பரை பார்த்து பேசிவிட்டு புறப்பட்டோம். தோழர்கள் சுனிதா, ராஜா ஆகியோரது மகள் நந்தனா, இங்கே பட்டப்படிப்பு படிக்கும் பெண். எங்களைச் சந்திக்க வந்திருந்தார். அங்கேயே மதிய உணவே முடித்துக் கொண்டு அங்கிருந்து நாங்கள் லண்டன் நகர மையத்திற்குப் புறப்பட்டோம்.
இங்கிலாந்தின் சுப்ரீம் கோர்ட் வளாகம் இருக்கும் பகுதியைக் கடந்த போது உள்ளே சென்று பார்த்து வர ஆவல் ஏற்பட்டது. பார்வையாளர்களை உள்ளே வர அனுமதிக்கின்றார்கள். ஒரு கோட்டை போன்ற வெள்ளை நிற கட்டிட அமைப்பில் சுப்ரீம் கோர்ட் அமைந்திருக்கின்றது. அங்கிருந்த அதிகாரி எங்களை கோர்ட் அரை ஆறுக்குச் சென்று நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கை பார்க்க சொல்லி அனுப்பி வைத்தார்.
அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அறைக்குச் சென்றோம். மூன்று நீதிபதிகள், அவர்களில் நெடுவில் அமர்ந்திருந்த பெண் நீதிபதி வழக்குக்கான தீர்ப்பை வாசித்துக் கொண்டிருந்தார். இது ஒரு பெண் குழந்தை கொலை பற்றிய ஒரு வழக்கு. கொலை செய்ததாக நம்பப்படும் கைதி சிறையில் இருந்து வரும் கணினி தொடர்பில் கேமராவில் இரண்டு ஸ்கிரீன்களில் காட்டப்பட்டுக் கொண்டிருந்தார். கணினியில் தெரிந்த அந்த அறை வெள்ளை நிறத்தில் இருந்தது. இங்கு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறையில் கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாயாராக இருக்க வேண்டும் ஒரு பெண்மணி, முகத்தில் ஆழ்ந்த சோகத்துடன் கூண்டில் வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமைதியாக அமர்ந்து நீதிபதி வாசிக்கும் தீர்ப்பை கேட்டுக் கொண்டிருந்தார்.
சில வழக்கறிஞர்கள் தலையில் வெள்ளை நிறத்திலான போலி முடியை அணிந்திருந்தார்கள். பண்டைய காலத்தில் வழக்கறிஞர்கள் அணிகின்ற இந்த முறை இன்றும் தொடர்வது ஆச்சரியப்படுத்தியது. தீர்ப்பு முழுவதும் வாசிக்கப்படும் முன்பே நாங்கள் அறையை விட்டு வெளியே வந்தோம். இக்கொலை வழக்கை கேட்க மனம் வரவில்லை என்பது தான் உண்மை.
நாங்கள் வெளியே வரும்போது வாசல் பகுதியில் ஓர் இளைஞர் கணினியோடு நின்று கொண்டிருந்தார். அவர் ஆங்கிலத்தில் வருவோர் போவரிடம் "நீதி சரியில்லை நீதிபதிகள் சரியில்லை" என "அவர் கடமையை அவர் செய்வதுபோல" பேசிக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து புறப்பட்டோம்.
டெம்பிள் சர்ச் - இப்பெயர் கேட்பதற்குச் சற்று ஆச்சரியம் அளிக்கலாம். ஆம். நாவலாசிரியர் டேன் பிரவுன் தனது புகழ்பெற்ற டாவின்சி கோட் என்ற நாவலில் குறிப்பிட்டிருக்கும் வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று. நாவலில் பேராசிரியர் லாங்டன் சோஃபியுடன் ஹோலி கிரேயிலைத் தேடிக்கொண்டு லண்டனுக்கு வந்தவுடன் அவர் வருகின்ற முதல் தேவாலயம் இதுவாகக் காட்டப்படும்.
இந்த தேவாலயத்தில் இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள், அதாவது கிபி 1000 காலவாக்கில் கொல்லப்பட்ட நைட் டெம்ப்ளர் 10 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. நான்கு உடல்கள் ஒரு பகுதியிலும் மற்றொரு பகுதியில் நான்கு கல்லறைகளும் மறுபுறத்தில் மேலும் இரண்டு கல்லறைகள் ஆகியவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
ஜெருசலத்தில் புனித தேவாலயத்தில் பாதயாத்திரை செய்ய வருவோருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரச கட்டளையிட்டு சட்டம் இயற்றிய பிறகு இங்கிலாந்தின் டோவர் பகுதியில் முதலில் ஒரு பாதுகாப்பு அரணாக டெம்பிள் சர்ச் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு கோயில் இந்த டெம்பிள் சர்ச். இந்தக் கோயில் சிதலமடையாமல் இன்றுவரை முழுமையாகக் காட்சியளிக்கிறது. போரின் போது ஒரு பகுதி சேதம் அடைந்தாலும் மீண்டும் அது புனரமைக்கப்பட்டு இன்று முழுமையாகவே காட்சியளிக்கின்றது.
பிரம்மாண்டமான இந்த தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக நேரம் எடுத்து பார்வையிட்டு குறிப்புகளைப் பதிந்து கொண்டேன். நைட் டெம்ப்ளர் பற்றிய ஒரு நூலையும் இங்குள்ள கடையில் வாங்கிக் கொண்டேன். நைட் டெம்ப்ளர் பற்றிய விரிவான முழுமையான செய்திகளை வழங்குகின்ற புகைப்படங்கள் நிறைந்த அருமையான நூலாக இது இருக்கின்றது. பல தகவல்களை இது வழங்குகின்றது.
கிறித்துவ மதம் என்பது வாத்திக்கனை அடிப்படையாகக் கொண்ட கத்தோலிக்க மதம் அல்லது ப்ரொடஸ்டென்ட் மதம் அல்லது மெதடிஸ் சர்ச் அல்லது யோகோவா விட்னஸ் மட்டும்தான் என நான் நினைத்து விட முடியாது. ஏராளமான கிளைகள் கொண்டது கிருத்துவ மதம். அதன் ஒவ்வொரு கிளைகளும் தனித்துவமிக்கவை. அவற்றுள் பல சடங்குகளும் இணைகின்றன.
இந்த நினைவுகளோடு அங்கிருந்து புறப்பட்டு வெஸ்ட் மின்ஸ்டர் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து நடந்து சீனா டவுன் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்தோம்.
திருவிழா கூடியது போல கூட்டம் நிறைந்திருந்தது. பார்க்கின்ற இடமெல்லாம் சிவப்பு நிற விளக்குகள் வரிசை வரிசையாக கயிறுகளில் கட்டப்பட்டு தோரணங்கள் போல சாலை முழுவதும் தொங்கிக் கொண்டு காட்சியளித்தன.
ஏராளமான உணவுக் கடைகள் இப்பகுதி முழுவதும் நிறைந்திருக்கின்றன. வெவ்வேறு வகையான சீன உணவு வகைகள் விற்கப்படும் கடைகள் இப்பகுதி முழுவதும் நிறைந்துள்ளன.
இரவு உணவுக்காக ஒரு அழகிய உணவகத்திற்குள் சென்றோம். சோயா சாஸ் கலந்து க்ரில் செய்யப்பட்ட கோழி மற்றும் அரிசி சோறு கண்களை கவர்வதாக இருந்தது. அதோடு சிங்கப்பூர் மீகூன் ஒன்றும் ஜெஸ்மின் தேநீரும் ஆர்டர் செய்துவிட்டு சீனா டவுனை ரசித்தோம்.
சீனர்கள் லண்டனில் இப்பகுதியில் மையம் கொண்டிருக்கின்றார்கள். இப்பகுதியில் உள்ள ஏராளமான கடைகளையும் சீனர்கள் நடத்துகின்றார்கள். முன் பகுதியில் நுழைவாயில் போன்ற ஒரு பகுதியை அமைத்து சீனர் கோயிலுக்குள் செல்வது போல உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு பகுதி இருக்கின்றது. சீனா டவுன் முழுவதும் சிவப்பு நிற காகித விளக்குகள் தொஙகுவது இரவில் கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
சீனர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் மிக உறுதியாக ஆழமாக வர்த்தகத்தின் வழி தங்கள் கால்களை ஊன்றி விடுகின்றார்கள். வணிகம், பொருளாதாரம் இவற்றில் முழுமையான கவனத்தை வைத்து தங்களின் பொருளாதார மேன்மையை சீனர்கள் தக்க வைத்துக் கொள்கின்ற


































னர்.
இங்கிலாந்திற்குள் இருக்கின்றோமா அல்லது சீனாவில் இருக்கின்றோமா என நம்மை திகைக்க வைக்கும் அளவில் லண்டனின் சீனா டவுன் இருக்கின்றது.
-சுபா
14.3.2025
லண்டன், இங்கிலாந்து


Thursday, March 13, 2025

இங்கிலாந்தில் சில நாட்கள் -6



லண்டன் நகருக்குள் செல்வதற்கு தினமும் நாங்கள் பேருந்து எண் 113 எடுத்து பின்னர் பேக்கர் ஸ்ட்ரீட் வந்து அங்கிருந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வது வழக்கமாக இருக்கிறது.
நேற்று அப்படி பேருந்திலிருந்து இறங்கும்போது மக்கள் கூட்டமாக ஓர் இடத்திற்கு செல்வதைக் கண்டு அது எதுவாக இருக்கும் என்று அருகில் சென்று பார்த்த போது தான் தெரிந்தது, அதுதான் மிகவும் பிரபலமான டிடெக்டிவ் ஏஜென்ட் ஷெர்லாக்ஸ் ஹோம் கதாபாத்திரத்தின் அருங்காட்சியகம் என்று.
டிடெக்டிவ் கதைகள் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது ஷெர்லாக் ஹோம்ஸ். அவரை நினைவு கூறும் வகையில் லண்டன் நகரில் அமைந்திருக்கிறது The Sherlock Holmes Museum . ஷெர்லாக் ஹோம் கதாபாத்திரங்களை பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தனியார் அருங்காட்சியகம் இது. 1990ஆம் ஆண்டில் இது திறக்கப்பட்டது. புனைக்கதையில் வருகின்ற அதே முகவரி 221B Baker Street.
இச்சாலையில் எண்கள் 237 க்கும் 241 க்கும் இடையில் இந்தக் கட்டிடம் இருந்தாலும் வெஸ்ட்மின்ஸ்டர் நகர சபையின் அனுமதியை பெற்று அதே என்னை இந்த கட்டிடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.
1815 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஜோர்ஜியன் வகை கட்டுமானம் கொண்ட கட்டிடம் இது. டிடெக்டிவ் ஏஜென்ட் ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் டாக்டர் வாட்சன் இருவரும் திருமதி ஹட்சன் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கும் இல்லமாக இது கதைகளில் காட்டப்படும். ஷெர்லாக் ஹோம் திரைப்பட தொடரில் இடம்பெறுகின்ற பல காட்சிகளின் ஓவியங்கள், நூல்கள், பொருட்கள் ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன.
இந்த அருங்காட்சியத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் பேக்கர் ஸ்ட்ரீட்டிலிருந்து மெட்ரோபோலிட்டன் ட்யூப் எடுத்து நாங்கள் பிரித்தானிய நூலகம் சென்றடைந்தோம். முதல் நாள் நாங்கள் பட்டியலில் கொடுத்திருந்த ஆவணங்கள் எங்களுக்காக அங்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தன. இணையர் கௌதம சன்னா தனது தேடலில் மூழ்கிப் போனார்.
நான் கடந்த நூற்றாண்டு அதற்கு முந்தைய நூற்றாண்டு ஆக இரு நூற்றாண்டுகளில் மலேசியா அதிலும் குறிப்பாக பினாங்கு சார்ந்த சஞ்சீவிகளைப் பட்டியலிட்டுக் கொடுத்திருந்தேன். பெரிய பெரிய பைண்டிங் செய்யப்பட்ட நூல் தொகுப்புகளாக அவை அங்கே வைக்கப்பட்டிருந்தன.
பினாங்கு ஞானாசிரியன், சிங்கை நேசன், ஜனோபகாரி, தேசோபகாரி, The Penang Times, The Penang News, பினாங்கு விஜயகேதனன் ஆகிய 1880கள் தொடங்கி வார மாத நாளிதழ் பத்திரிகைகள் அடங்கிய சில கட்டுகளைப் பார்வையிட வாய்ப்பு கிடைத்தது.
பினாங்கு மாநிலத்தில் மற்றும் ஈப்போ, கோலாலம்பூர், சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த சில செய்திகள் இவற்றில் வெளிவந்திருக்கின்றன. மதராஸ் பட்டினத்தில் இருந்து மலாயாவிற்கு வந்த கப்பல்கள் பற்றிய சில செய்திகளும், வியாபாரிகள் சங்கங்கள், நிகழ்ந்த சில கொலைகள் பற்றிய தகவல்கள், அதற்கு கிடைக்கப்பட்ட தண்டனைகள், நீதிமன்ற வழக்குகள் பற்றிய செய்திகள் போன்றவை இதில் இடம்பெறுகின்றன.
அயல்நாட்டு செய்திகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையிலான போர் பற்றிய செய்தி ஒவ்வொரு வாரமும் ஒரு பக்க செய்தியாக இடம்பெறுவது ஆச்சரியமூட்டுகிறது. அது தவிர இங்கிலாந்து செய்திகள், மகாராணியார் பற்றிய செய்திகள் ஆகியவை முக்கியத்துவம் கொடுத்து இடம்பெறுகின்றன.
பொதுவாகவே இந்த வார பத்திரிகைகளில் நான்கு பக்கங்கள் மட்டுமே உள்ளன. முதல் பக்கம் இந்த பத்திரிகை பற்றியும் சந்தாதாரர்கள் விவரம் பற்றியும் சில விளம்பரங்களும் இடம்பெறுகின்றன. இரண்டாம் பக்கமும் மூன்றாம் பக்கமும் மட்டும் தான் செய்திகளைக் கொண்டிருக்கின்றன. நான்காம் பக்கம் விளம்பரங்கள் அடங்கிய பகுதியாக அமைந்து விடுகிறது.
இப்பத்திரிகைகள் இங்கு பிரித்தானிய நூலகத்தில் நெடுங்காலமாக பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் எத்தனை பேர் இதனைத் திறந்து பார்த்திருப்பார்கள் என்பது முக்கியமான கேள்வி. மலாயாவின் கடந்த இரு நூற்றாண்டு வரலாற்றின் சில செய்திகளை அறிந்து கொள்ள இவற்றை ஆய்வு செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இவை மட்டுமின்றி மேலும் பல பத்திரிகைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. வாய்ப்பு கிடைத்தால் ஜெர்மனிக்கு திரும்புவதற்கு முன் மீண்டும் ஒருமுறை சென்று அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது.
பிரித்தானிய நூலகத்தின் அருகிலேயே மலேசிய உணவகம் ஒன்றும் இருக்கின்றது. இரு ஆண்டுகளுக்கு முன் வந்த போது நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தியிருந்தார். அதே உணவகத்துக்குச் சென்று வருவோம் என்று நடக்கத் தொடங்கினோம். குறுக்குச் சந்துகளில் நடந்தால் ஏறக்குறைய ஆறு நிமிடத்தில் இந்த உணவகத்தை வந்து அடைந்து விடலாம். கட்டிடத்தின் அடித்தளத்தில் சிறிய அறையில் ஏறக்குறைய 50ல் இருந்து 60 பேர் அமரக்கூடிய வகையில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
மலேசிய உணவுகளான நாசி லெமாக், ஆயாம் கோரேங், கொய்தியாவ் கோரேங் ஆகிவற்றை ஆர்டர் செய்து கொண்டோம். ரொட்டி சானாய் பார்த்தவுடன் அதிலும் ஒன்று இணைத்துக் கொண்டோம். பல மாதங்களாக உணவையே பார்க்காதவர்கள் உணவைப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஆவல்.. தாய்நாட்டின் உணவு அல்லவா? 🙂
ஆனால் என்னதான் நம் நாட்டு உணவு என அயல்நாடுகளில் தயாரித்துக் கொடுத்தாலும் சொந்த நாட்டின் உணவின் சுவை இங்கு கிடைப்பதில்லை. ஆனாலும் குறை சொல்வதற்கில்லை நல்ல சுவை தான். 🙂
மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பிரித்தானிய நூலகம் வந்தடைந்தோம். அங்கு நான் பார்ப்பதற்காக ஆர்டர் செய்து வைத்திருந்த தரங்கம்பாடியின் வரைபடம் 1679 ஆம் ஆண்டில் தயாரித்து உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட வரைபடம் இது. டேனிஷ் அரசினால் வெளியிடப்பட்ட இந்த வரைபடம் இணையத்தில் இருந்தாலும் நேரில் பார்க்கும் பொழுது துல்லியமாக அதில் குறிப்பிடப்படும் தகவல்களைக் காண முடிகிறது. 1600 காலகட்டங்களில் குறிப்பாக 1620 டேனிஷ் அரசு தரங்கம்பாடியில் அதிகாரப்பூர்வமாக கால் பதித்த பின்னர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு கோட்டையைக் கட்டி டேனிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்கிய காலகட்டம். 17 ஆம் நூற்றாண்டின் தரங்கம்பாடியின் நிலையை இந்த வரைபடம் துல்லியமாகக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. கோட்டை பகுதி அருகாமையில் உள்ள டேனிஷாரின் கட்டிடங்கள் பூங்காக்கள் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.
பிலிப் பால்டியூஸ் டச்சு அதிகாரியாக இலங்கையிலும் பின்னர் நாகை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில உள்ளடங்கிய சோழமண்டல கடற்கரை பகுதிகளில் பணியாற்றியவர். ஒரு டச்சு பாதிரியார் மற்றும் அரசு அதிகாரி. இவர் எழுதிய ஒரு பெரும் தொகுப்பு இன்றைக்கு ஏறக்குறைய 300 ஆண்டுகள் கால வாக்கில் சோழமண்டல கடற்கரையின் நிலையை நமக்கு கண்கூடாக காட்டும் ஒரு ஆவணமாகத் திகழ்கிறது.
அவரது கையெழுத்துப் பிரதி ஆவணமான இதனைக் காண்பதற்கு அனுமதி கேட்டிருந்தேன். அதனையும் எடுத்து வைத்திருந்தார்கள். ஏறக்குறைய மூன்று கிலோ எடை கொண்ட நூல் தொகுப்பு அது. முழுவதும் கையெழுத்தால் ஆனது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் அதனை எடுக்க முடியவில்லை. இன்று இணையத்தில் இந்த நூல் pdf கோப்பாக கிடைக்கின்றது. தமிழ்நாடு மற்றும் இலங்கை தொடர்பான இன்றைக்கு 300 ஆண்டுகள் கால வாக்கிலான சூழலை அறிந்து கொள்ள ஆய்வு செய்பவர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய நூல் இது.
இந்த அரிய ஆவணங்களைப் பார்வையிட்டு ஒரு முழு நாளும் ஏறக்குறைய 8 மணி நேரங்கள் பிரித்தானிய நூலகத்தில் எங்கள் இருவரது நேரமும் செலவானது.
பழைய தாட்களைத் திறந்து பார்த்து ஆய்வு செய்யும் போது ஒவ்வொரு முறையும் அது வெளிப்படுத்தும் தூசிகள் எனக்கு மூச்சு பிரச்சனையை ஏற்படுத்தும். இருமல் ஏற்படத் தொடங்கி விடும். நேற்று முழு நாள் பழைய பத்திரிகைகளைப் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்தத் தொல்லை ஏற்படத் தொடங்கியது. இதிலிருந்து விடுபடுவது என்றால் காலாற ஒரு மணி நேரமாவது வெளியே தூய காற்றில் நடந்தால் சிறப்பாக இருக்கும் என வெளியே நடக்கத் தொடங்கினோம். ஆனால் குளிர் காற்று மற்றும் மழை வரும் அறிகுறி தென்பட்டதால் நடைப்பயணத்தைக் குறைத்துக் கொண்டு ட்யூப் மற்றும் பேருந்து எடுத்து எங்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.
ஒரு நாள் முழுமையாக பழம் ஆவண ஆய்வில் முடிந்தது. மணமும் நிறைந்தது.
-சுபா
13.3.2025
லண்டன், இங்கிலாந்து