Tuesday, November 4, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 12

தாய்லாந்தில் முதல் பாதி நாள் பார்த்த காட்சிகளே மனதில் 'எங்கு காணினும் புத்தர்' என்ற சிந்தனையை எழுப்பியிருந்தது. ப்ரா மங்கோன் போபிட் விகாரையைப் பார்த்து விட்டு கடைகளுக்கு இடையே நடந்து உணவுப் பொருட்களைப் பார்த்துக் கொண்டும் சிலவற்றை வாங்கிக் கொண்டும் வந்து பேருந்தில் சிறிது சாப்பிட்டு விட்டு அமர்ந்து விட்டோம். மதிய உணவுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் எங்கள் பயண வழிகாட்டி ஏற்பாடு செய்த்கிருந்தார். அங்கு செல்ல ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகும் என்றபடியால் பேருந்தில் அமர்ந்த வாறு ஒரு பக்க சாலை காட்சிகளை ஓடும் பேருந்திலிருந்தே கவனித்துக் கொண்டு பயணத்திக் கொண்டிருந்தோம்.

மதிய உணவை அக்குறிப்பிட்ட இடத்தில் சாப்பிட்ட பின்னர் எங்கள் பயணம் சுக்கோத்தை நகரை நோக்கிச் செல்வதாக ஏற்பாடு. அயோத்தையாவிற்கும் சுக்கோத்தை நகருக்கும் ஏறக்குறைய 346 கிமீ தூரம். ஆக அந்த வழியிலேயே இடையில் இருக்கும் ஒரு உணவகத்தில் தான் எங்கள் மதிய உனவு ஏற்பாடாகியிருந்தது.

சாலையில் செல்லும் போதே தாய்லாந்தின் பசுமையான நெல் வயல்களை நான் கவனிக்கத் தவறவில்லை. விவசாயம் இன்னாட்டின் அதி முக்கிய தொழில். அரிசு உணவு என்பதே தாய் மக்களின் பிரதான உணவு. இதன் அடிப்படையில் நல்ல நில வளமும் நீர்வளமும் வே|று நிறைந்திருப்பதால் இங்கு விவசாயம் மிகச் செழிப்பாகவே நடைபெறுகின்றது.

தாய்லாந்து அரிசி வகை பற்றி பலர் அறிந்திருக்கலாம். ஐரோப்பாவில் மிகப் பரவலாகக் கிடைக்கும் அரிசி வகைகளில் தாய்லாந்தின் ஜாஸ்மீன் அரிசி மிகப் பிரபலம். ஜெர்மனியில் உள்ள சீன, தாய்லாந்து  வியாட்நாம் உணவகங்களிலும், அவசர உணவகங்களிலும் இந்தத் தாய் வகை ஜாஸ்மீன் அரிசியே மிகப் பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகையாக உள்ளது. இந்த அரிசி வகை பளிச்சென்று வெண்மையாக இருப்பதுடன் சற்றே பிசுபிசுப்புத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். நான் இந்திய வகை சமையலுக்கு இதனைச்  சமைத்து முயற்சித்திருக்கின்றேன். ஆனால் இந்த அரிசி நமது இந்திய குழம்பு வகைகளுக்கு பொருந்துவதாக இல்லை. தாய்லாந்து வகை உணவு அல்லது ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு இவை பொருத்தமாக உள்ளன. சுவையும் சேர்கின்றது.

வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டு வரும் நமக்கு ஆங்காங்கே சாலைகளில் விற்கப்படும் வழிபாட்டு சிலைவடிவங்கள் கண்களுக்குத் தென்படும். சேவல், யானை, காவலாளி, பாம்பு , பொம்மை வடிவங்கள், தெய்வச் சிலை வடிவங்களில் பிரம்மா, விநாயகர், புத்தர் சிலைகள் என பல வடிவங்கள் சாலையோரங்களில் விற்கப்படுவதைக் காணலாம். இதனைப் பார்க்கும் போது திருநெல்வேலியிலிருந்து கயத்தாறு செல்லும் சாலையில் நான் ஒரு முறை பயணித்த போது சாலை ஓரத்தில் விற்கப்படும் மண்பாண்ட வடிவ குதிரை வடிவங்களும் ஏனைய மண்பாண்ட வடிவங்களும் தான் மனதில் நிழலாடின.




ஏறக்குறைய ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் நாங்கள் உணவு உண்ண ஏற்பாடாகியிருந்த உணவகம் வந்து சேர்ந்தோம். வாசலில் பார்த்தால் உணவகம் என்ற அடையாளமே தெரியாமல் ஒரு பூங்காவிற்குள் செல்வது போல தோற்றமளித்தது. பசுமை அழகு கண்களைக் கொள்ளை கொண்டது. இளம் பசுமை அந்த இடத்தின் ரம்மியத்தியத்தை அதிகரித்தது. பூக்கள் அந்த அழகுக்கு அழகு சேர்த்தன. இதற்கிடையே நடுவில் ஒரு தனி இடத்தில் மேசை போடப்பட்டு அங்கே அழகழகாக வரிசையாக உணவுப் பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. சூடான ஜாஸ்மின் அரிசியின் சுவையும் தாய்லாந்து தேங்காய்பால் குழம்பின் மனமும் அந்த நேரத்துப் பசியை அதிகரித்தன.




சாப்பிட்டு விட்டு சற்று அந்தப் பூங்காவை வலம் வந்தேன். உணவகத்தை மிகச் சிரத்தையெடுத்துப் பசுமை நிறைந்த பூங்காவாக்கி இருந்தனர். பூங்காவின் மையத்தில் நம் கண்களுக்கு நன்கு பழகிய ஒரு வடிவம்.. ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் என்னை தூரத்திலிருந்தே கவர்ந்தது.



ஆகா.. என்ன அழகு என வியந்து அருகில் சென்று பார்த்தேன். சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கின்றார் போலும் என பார்ப்பவரை நினைக்க வைக்கும் வகையில் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தார்  தொந்திக் கணபதி.

தொடரும்...

சுபா

Wednesday, October 15, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 5

யாத்திரை தொடர்கின்றது - 4

செப்டம்பரில் தோமஸ் பெக்கட் பற்றி சொல்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். ஒரு மாதமாகிவிட்டது. 
யார் அந்த தோமஸ் பெக்கட்.. என விட்ட கதையைத் தொடர்வோம்.. 

காண்டபெரி இன்றைய புகழைப் பெற முக்கியக் காரணமாக இருப்பவர் இவர் தாம். 




ஒரு ஆர்ச்பிஷப் என்ற உயர் பதவி வகித்தவர். அப்படிப்பட்டவர் வீரர்களின் போர்வாளினால் தாக்கிக் கொல்லப்பட்டு உயிர் இழந்தார் என்பது இவரது வரலாறு. இறந்தும் நன்மை வழங்கும் தன்மையுடைய ஒரு நிலை என்பது உலகில் சிலருக்குத் தான் அமையும் அத்தகைய  ஒரு வாய்ப்பு அமையப் பெற்றவர். தன்னால் ஒரு நகருக்கே சிறப்பு கிடைக்க வகை செய்தவர்.  அதனால் இவரைப் பற்றி பேசாது நாம் காண்டபரி புகழ் பாட முடியாது. ஆக இவரைப் பற்றி தெரிந்து கொள்வோமே.

கி.பி1118ம் ஆண்டு ஒரு ஆங்கிலேய வர்த்தகருக்கு மகனாகப் பிறந்தவர் இவர். பொருளாதார வசதி நிறைந்த குடும்பம் அவரது. வசதியான வாழ்க்கை அமைந்ததால் பாரீஸுக்குச் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு இவருக்கு மிக இளம் வயதிலேயே அமைந்தது.  இயல்பாகவே நிர்வாகத் திறமையும் ஆளுமையும் கொண்டவராகத் திகந்தார் பெக்கட். 

அவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது 1154ல் நடந்த ஒரு நிகழ்வு. அச்சமயம் காண்டபரி நகரின் தலைமை மதகுருவாக இருந்த தியோபால்ட், தோமஸ் பெக்கட்டை ஒரு சந்தர்ப்பத்தில் மன்னர் 2ம் ஹென்றிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.   அதுமுதல் மன்னர் 2ம் ஹென்றியும் தோமஸ் பெக்கட்டுக்கும்  இடையே நெருக்கமான நட்பு பிறந்தது. 

 1161ம் ஆண்டு தலைமை குரு தியோபால்ட் திடீரென இறந்து போகவே தலைமை குருவுக்கான இடம் காலியாக இருந்தது. இந்த இடத்தை நிரப்ப தோமஸ் பெக்கட் தான் சரியான நபராக இருக்க முடியும் என நினைத்த மன்னர் 2ம் ஹென்றி கத்தோலிக்க மத தலைமை பீடத்தை அணுகி போப்பாண்டவரிடம் பேசி தோமஸ் பெக்கட்டை காண்டபரியின் தலைமை குருவாகவும் ஆக்கி விட்டார். 




தகுதி என்னும் வகையில் தேவையான சமய பின்புலம் இவருக்கு அமைந்திருக்க வில்லை. ஆயினும் மன்னரின் தோழமை என்ற பலமான ஒரு காரணமிருக்க எந்த பிரச்சனையும் எதிர்ப்பும் இல்லாமல் தோமஸ் காண்டபரியின் தலைமை மத குருவாக பதவி ஏற்க சுலபமான வழி அமைந்தது.

காண்டபெரி நகரின் சமய மத குரு என்னும் ஒரு பதவி இங்கிலாந்தின் ஒட்டுமொத்த கத்தோலிக்க ஆளுமையையும் குறிக்கும் தன்மையுடயது  என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். அத்தகைய முக்கியப் பணி தோமஸ் பெக்கட் அவர்களை வந்தடைந்தது. மன்னர் 2ம் ஹென்றி தோமஸ் பெக்கட் தனது நண்பர் என்ற சிந்தனையில் தனது ஆட்சிக்கும் சமய சம்பந்தமான அனுகூலங்கள் இதன் வழி கிடைக்கும் என நம்பியிருந்தார். ஆனால் அவர் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் வகையில் நில நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின..

அவை என்ன .. அடுத்த சில நாட்களில் வந்து சொல்கின்றேன்.

தொடரும்...

படங்கள்: காண்டபரி வரலாறுறு அருங்காட்சியகத்தில் பதிந்தவை.


சுபா

Friday, September 12, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 4

யாத்திரை தொடர்கின்றது - 4

காண்டபெரி ராஜா ராணி கதையைத் தொடர்கிறேன்...

கி.பி 3ம் நூற்றாண்டு வாக்கிலே தற்போதைய காண்டபெரி நகரிலே அடிப்படையில் ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலிருந்து வந்து சேர்ந்த யூட்டஸ், சாக்ஸன்  இனக் குழுவினர் நிறைந்திருந்தனர். கி.பி. 407ம் ஆண்டு வாக்கில் காண்டபெரி நகரை விட்டு ரோமானியப் படைகள் சென்று விட்ட பின்னர் அங்கே இப்பகுதியில் ஒரு சில குடியானவர்கள் மட்டுமே விவசாயம் செய்து கொண்டு கோட்டைப் பகுதிக்கு உள்ளே வசித்து வந்தனர். இது ஒரு சிறு நகரமாக அப்போது உருவாகியிருந்தது. இந்த சாக்ஸன் இனக்குழுவைச் சேர்ந்தவர் கெண்ட் அரசர் ஏதல்பெர்ட்(Ethelbert).  இவர் அப்போதைய ப்ரான்ஸ் நாட்டின் இளவரசி   பெர்தா (Bertha) வை மணந்தார்

அப்போது ப்ரான்ஸ் கத்தோலிக்க மதத்தைத் தழுவி இருந்தது. ஆக மகாராணியார் பெர்தாவும் கத்தோலிக்க கிறிஸ்து மதத்தைச் சார்ந்தவர் என்பதை அறியலாம். சாக்ஸன் இனத்து மகாராஜா ஏதல்பெர்டோ இயற்கை  பேகன் வழிபாட்டு முறையை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

ரோம் நகரின் கத்தோலிக்க  மடம் இங்கிலாந்தின்  கெண்ட் பேரரசுக்குப் பாதிரியார் ஆகுஸ்தீன் அவர்களை அனுப்பி வைத்தது. கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரான பெர்தா தாமும் இதே மதத்தைச் சார்ந்தவர் என்ற அடிபப்டையில் பாதிரியாரை வரவேற்றார் என்பதோடு மட்டுமல்லாமல் கெண்ட் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம பரவ அரசு சார்ந்த உதவிகளையும் செய்தார். 

முதலில் காண்டெபெரி காத்தீட்ரல் காண்டெபெரி நகர கோட்டைக்குள் கி.பி 597ல் கட்டப்பட்டது.  இங்கே பாதிரியார் ஆகுஸ்தீன் சமய நடவடிக்கைகளை ஏற்படுத்தவும்  அது சமயம் இது முக்கிய இடமாகத் திகழ்ந்தது.


​கெத்தீட்ரல்


கி.பி 598ம் ஆண்டில் பாதிரியார் ஆகுஸ்தீனும் அவரோடு வந்து சேர்ந்த ஏனைய கத்தோலிக்க சாதுக்களும் காண்டெபெரி கோட்டைக்கு வெளிப்புறத்தில் ஒரு மடத்தை நிறுவினர். இந்தக் கட்டிடம் இன்னமும் இருக்கின்றது.  


St Augustine's Abbey

படிப்படியாக காண்டபெரி மிகப் பெரிய சமய மத போதனை நடைபெறும் நகரமாக உருபெற ஆர்மபித்தது. ரோம் நகரின் கத்தோலிக்க மத பீடத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஆணையின் படி கி.பி.603ம் ஆண்டு காண்டபெரி ஆர்ச்பிஷப் கொண்ட ஒரு தேவாலயத்தையும் உள்ளடக்கி ஒரு பெரும் கத்தோலிக்க சமய நகரமாக உயர்ந்தது.

கெண்ட் பேரரசு அதன் ஆதிக்கத்தை விரிவாக்க இங்கிலாந்து முழுமையும் கத்தோலிக்க மதம் பரவியது. போப்பின் ஆணையின் படி தொடர்ந்து பல மத போதகர்கள் வருவதும் தேவாலயங்கள் கட்டப்படுவதும் என்று கொஞ்சம் கொஞ்சமாக கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கம் இங்கு நிலைபெற்றது. 

இது தான் இந்த ராஜா-ராணி கதை. அடுத்து கெண்டபெரிக்கே முக்கியமான தோமஸ் பெக்கட் கதையைச் சொல்கிறேன். கேட்க ஆவல் உண்டு தானே ?

தொடரும்...

Saturday, September 6, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 11

இந்தத் தாய்லாந்துப் பயணத் தொடரில் இன்னமும் நாம் அயோத்தையாவில் தான் இருக்கின்றோம். :-)

இதுவரை அயோத்தையாவில் நான் ஒரு நாளில் பார்த்த மூன்று புத்த விகாரைகளைப் பற்றி விளக்கியிருக்கின்றேன்.  அயோத்தையாவில் இந்த மூன்று பௌத்த ஆலயங்கள் மட்டும் தான் இருக்கின்றனவா எனக் கேட்டு விடாதீர்கள். மறக்க வேண்டாம்... அயோத்தையா 250 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அரச நகரம். ஆக மிக அதிக எண்ணிக்கையிலான பௌத்த விகாரைகள் நிறைந்த ஒரு ஊர். ஆக செல்லும் இடமெல்லாம் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட பௌத்த ஆலயங்களையும், மடங்களையும், சிதிலமடைந்த விகாரைகளையும் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே தான் செல்வோம்.



ப்ரா மங்கோன் போபிட் விகாரையைக் கடந்து நாங்கள் நடந்து எங்கள் பஸ் நிறுத்தியிருக்கும் இடம் வரும் வரையில் நடந்து வரவேண்டும். இந்தப் பகுதியில்  நடைபாதையின் இரு பக்கங்களிலும் மிக அதிகமான உணவுக் கடைகள் இரு புறங்களிலும் நிறைந்து காணப்படுகின்றன.


கோயிலுக்கு வரும் சுற்றுப் பயணிகளும் பக்தர்களும் செல்லும் போது வாங்கிச் செல்லும் வகையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. தாய்லாந்து உணவு வகையில் சைவ உணவு அசைவ உணவு என கடுமையான வித்தியாசத்தைக் காணமுடியவில்லை. கோயில் வளாகத்திலேயே அசைவ உணவுகள் விற்கும் கடைகள் பல கடல் உணவு வகைகளை வைத்து விற்பனை செய்வதையும் காணலாம்.




கடைகளில் பார்த்துக் கொண்டே வரும் போது நான் அறிந்த மலேசிய பலகாரங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா என என் கண்கள் நோட்டமிட்டுக் கொண்டேயிருந்தன. மலேசிய பலகாரங்கள் பலவகை. அவற்றை சுவைத்தவர்கள் மீண்டும் மலேசிய உணவுகளையே நாடிச் செல்வர். ஆக எனக்கும் அங்கு ஏதாவது எனக்குப் பிடித்த சுவையில் ஏதேனும் கிடைக்குமா என அறிய ஆவல். அதே வேளை பயணத்தில் இருக்கும் போது அதிகமாக சாப்பிடுவதும் தேவையற்றது என்ற சிந்தனையும் மனதில் ஓடியதால் பார்த்துக் கொண்டேயாவது வருவோமே என எண்ணி நோட்டமிட்டுக் கொண்டு வந்தேன். 

அடிப்படையாகவே மலாய், இந்தோனீசிய, தாய்லாந்து உணவுகள் ஏறக்குறைய, தேங்காய், அரிசி மாவு, மரவள்ளிக் கிழங்கு மாவு, சர்க்கரை, கடலை போன்றவற்றால் செய்யப்படுவதால் சுவை அதிக வித்தியாசம் இருக்காது. ஆனால் செய்முறையில் வித்தியாசம் இருக்கும். உதாரணமாக பேங்காங் எனப்படும் பலகாரம் இந்தோனீசிய வகையின் சுவை செய்முறை வேறு, தாய்லாந்து வகையின் சுவை செய்முறை வேறு, மலேசிய வகையின் சுவை செய்முறை வேறு. ஆக ஏதேனும் சிறு மாற்றங்களுடன் இவை இருப்பதை வாங்கி சாப்பிட்டு பார்த்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். 

இந்த எண்ணமும் மனதில் ஓட நானும் இருக்கும் இந்த பல்வேறு வகை பலகாரங்களில் எதனை வாங்கலாம் என யோசித்துக் கொண்டே வந்தேன்.  வாழைப்பழத்தில் செய்த பலகாரம் பிடிக்கும். அதோடு மரவள்ளிக் கிழங்கு, தேங்காய் ஆகியவற்றில் செய்தவையும் பிடிக்கும். ஆக இந்த வகைகளில் கொஞ்சமாக வாங்கிக் கொண்டேன்.பேருந்தில் பயணிக்கும் போது இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த நாட்களிலும் சாப்பிட்டுக் கொண்டே செல்லலாமே என முன்னேற்பாடாக!.



அந்தச் சந்தையில் நடந்து கொண்டே வரும் போது ஒரு சிறிய பகுதி என் கண்களைக் கவர்ந்தது. ஒரு இளம் பெண் அமர்ந்து கொண்டு தோசைக்கல் போன்ற ஒன்றில் கையால் மாவினை தோசை வார்ப்பது போல வார்த்து அது காய்ந்து வெந்ததும் அதனை அழகாக கையால் சுரண்டி எடுத்து காயவைத்து பின்னர் ஆறி காய்ந்தவற்றை   ஒரு ப்ள்ஸ்டிக் பைக்குள் வைத்து கட்டி கட்டி அடுக்கிக் கொண்டிருந்தார். இது வெள்ளை, பச்சை, இளம் சிவப்பு வர்ணங்களில் தயாராகிக் கொண்டிருந்தது. என் கவனத்தை இது ஈர்க்கவே இதில் பச்சையிலும் இளஞ்சிவப்பிலும் 2 பைகள் வாங்கிக் கொண்டேன்.  சாப்பிடும் போது ஆச்சரியப் பட்டுப் போனேன். நாம் நன்கு பழகிய சோன் பப்படி தான் அது. தூள் தூளாக மெலிதாக வரும் இந்த பதார்த்தத்தை ஓரிரு நாட்கள் வைத்திருந்து சிறிது சிறிதாக சாப்பிட்டு மகிழ்ந்தேன். 



இப்படி சந்தையைச் சுற்றி விட்டு வந்த எங்களுக்கு பேருந்தில் ஏறியதும் எங்கள் பயண வழிகாட்டியிடமிருந்து சுவைத்துப் பார்க்க சில பலகாரங்களும் கிடைத்தன. எல்லோரும் சுவைத்துப் பார்க்க வேண்டுமென நினைத்து சில மாறுபட்ட வகை இனிப்பு பதார்த்தங்களை எங்களுக்காக வாங்கி வைத்திருந்தார். இதனை சாப்பிடும் போதே அதிகமாகச் சாப்பிட வேண்டாம் எனவும், ஏனெனில் எங்களுக்காக ஓரிடத்தில் மதிய உணவு தயாராகிக் கொண்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டுச் சொல்லி பார்வையாலேயே பசி தீர்த்துக் கொள்ளுங்கள் என சொல்லாமல் சொல்லி விட்டார் :-)

பாங்காக் நகரில் காலையில் புறப்பட்டதிலிருந்து பல இடங்களுக்குச் சென்ற அசதி, பஸ் பயணம் என எல்லாம் சிறிது அசதியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மதிய உணவு சாப்பிட்டால் தான் மீண்டும் தெம்பு வரும் என்று மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

தொடரும்...


சுபா

Saturday, August 30, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 3

கண்டெபரி நகர் யூனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாதுக்கக்கப்பட வேண்டிய வரலாற்று நகர் என்ற சிறப்பைப் பெறுகின்றது. இரண்டாயிரம் ஆண்டு பழமை.. வரலாற்றுச் சின்னங்கள் நகர் முழுதும் இருக்கின்றன. இங்கு வருகின்ற சுற்றுப் பயணிகளுக்குக் காண்டெபெரி  பல அரிய தகவல்களை வழங்கக் காத்திருக்கின்றது.

கி.பி.5ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ரோமானியப் பேரரசின் தாக்கம் படிப்படியாக பலமிழக்க ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலிருந்து குடியேறிய யூட்டஸ் இனக்குழு மக்களின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. ஜெர்மனியில் மிக முக்கிய இனக்குழுக்கள் யூட்டஸ், ஏங்கல்ஸ், சாக்ஸன் ஆகியவை.  ஆக இந்த  யூட்டஸ், ஏங்கல்ஸ், சாக்ஸன் இனக்குழுவினர் இங்கிலாந்திற்கு கடல் மார்க்கமாகப் பயணித்து இப்பகுதிக்கு வந்து குடியேற்றம் செய்து தங்கள் ஆளுமை விரிவாக்கியிருந்தனர்.


சாக்ஸன், யூட்டஸ் ஏங்கல்ஸினக்குழுக்கள் ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்திற்கு புலம் பெயர்வதைக் காட்டும் வரைபடம்
நன்றி (படம்) http://www.cglearn.it/mysite/civilization/uk-culture/history-of-britain/


ரோமானியப் படைகளின் முக்கியத்துவத்தைப் பின் தள்ளி  யூட்டஸ் குழுவினரின் ஆட்சி இங்கிலாந்தில் தலையெடுக்க ஆரம்பித்தது. இந்த ஆட்சி தொடங்கியது கெண்டபரியில். The kingdom of Kent  கெண்ட் பேரரசு ஆரம்பத்தில் பேகன் சடங்கு முறைகளை அதிகாரப்பூர்வ சடங்கு முறையாக தனது ஆட்சியில் நடைமுறை வழக்கத்தில் கொண்டிருந்தது. ஆனால் 5ம் நூற்றாண்டில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வொன்று கெண்ட் பேரரசு கத்தோலிக்க மதத்தை தழுவும் நிலையை ஏற்படுத்தியது.

கெண்ட் பேரரசின் முழுமையான மதமாற்றத்தினால் இங்கிலாந்து முழுமையும் கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் நிலை உருவாகியது.

சரி.. இந்த வரலாற்று நிகழ்வு என்ன என்று தெரிந்து கொள்ள ஆரவ்ம் இருக்கின்றது தானே.. இது ஒரு ராஜா ராணி கதை.. அதனை அடுத்து சொல்கிறேன்..:-)

தொடரும்

சுபா

Sunday, August 24, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 10


​​வாட் ப்ரா சி சன்பெட் புத்த விகாரை மற்றும் பர்மிய படையினரால் சேதம் செய்யப்பட்ட அரச மாளிகை, புத்த ஆலய வளாகம், மடங்கள் இருந்த பகுதிகளுக்கு நேர் வடக்குப் ப்குதியில் அமைந்திருப்பது தான் ப்ரா மங்கோன் போபிட் விகாரை.




இந்த பௌத்த ஆலயத்தை முதலில் பார்த்த போது இதுவரை பார்த்த ஏனைய பிரமாண்டமான ஆலயங்களை விடவும் சிறியதாகவும் வடிவத்தில் புதியதாகவும் இருப்பதை அறியவும் உணரவும் முடிந்தது.  புதிய முன் மண்டப வடிவம் இக்கோயிலுக்கு அமைந்திருந்தாலும் கூட இதுவும் ஒரு பழமையான ஆலயம் தான்.

தாய்லாந்தில் அமர்ந்த நிலையில் நாம் பார்க்கக் கூடிய மிகப் பெரிய புத்தர் சிலைகளிலில் இக்கோயிலில் இருப்பதும் ஒன்று. புத்தரின் முழு வடிவம் மட்டுமே 9.5மீ உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. புத்தரின் முகத்தை நிமிர்ந்து தலையை உயர்த்தித் தான் பார்க்க முடியும். அடித்தளப்பகுதியில் இருந்து கணக்கிட்டால் 12.5மீ உயரம் இந்தச் சிலை. ஆக எவ்வளவு பிரமாண்டமாக இச்சிலை அமைந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.




இந்த பௌத்த விகாரை 1797ம் ஆண்டு பர்மிய படையினரால் முழுமையாக அழிக்கப்பட்டது. 1956ம் ஆண்டில் நிகழ்ந்த மறுசீரமைப்பின் போது இக்கோயில் புது வடிவம் பெற்று சிறப்புடன் தற்சமயம் அமைந்துள்ள வடிவத்தை பெற்றது. தாய்லாந்தின் பண்டைய ஆலய கட்டிட அமைப்பிலிருந்து மாறுபட்டு, எளிய புதிய வடிவத்தில் இக்கோயில் அமைப்பு அமைந்திருக்கின்றது என்பதே ஒரு பெரிய வித்தியாசம் தான்.

ஆலயத்தின் மையத்தில் அமைந்திருப்பது இந்த உயரமான 12.5மீ உயரமுள்ள வெண்கலச் சிலை. ஆலத்தின் பின்புறங்களில் வரிசையாக சற்றே சிறிய வடிவங்களில் வெண்கலச் சிலைகள் சில அமர்த்தப்பட்டிருக்கின்றன. சிலைகளின் மேல் பக்தர்கள் தங்கக் காகிதங்களை வாங்கி ஒட்டி தங்கள் வேண்டுதலை தெரிவித்து வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தினமும் இப்படி இந்த புத்தர் சிலைகளின் மேல் ஒட்டப்பட்டும் தங்கக் காகிதங்கள் அனைத்தும் அவ்வப்போது தூய்மைப்படுத்தப்படுகின்றன.




இதே ஆலயக் கட்டுமான வடிவில் அமைந்திருப்பதுதான் மலேசிய நாட்டின் பினாங்கு மானிலத்தில் அமைந்திருக்கும் புத்தர் ஆலயம். பினாங்கைப் பொருத்தவரை இந்த Reclining Buddha  ஆலயம் தாய்லாந்து கட்டிடக் கலைக்கு உதாரணமாக அமைந்திருப்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

பழமையான கோயில்களில் நாம் பார்ப்பது போன்று ஆங்காங்கே சிறிய சிறிய ஸ்தூபாக்களை உருவாக்காமல் ஒரு கட்டிடத்திற்குள் மையமாக ஒரு சிலை மட்டுமே அமைந்தும், சில வெண்கலச் சிலைகளும், வழிபாட்டு மங்கலச் சின்னங்களான ஊதுபத்தி, தாமரை மலர்கள் ஆகியன புத்தர் சிலைக்கு முன் வைக்கப்பட்டதுமான அமைப்பயே காண முடிகின்றது.



ஆலயத்தின் வெளிப்புறத்திலும் ஊதுபத்தி ஏற்றி வழிபடுவதற்கும், சிறிய விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவதற்கும் இடங்கள் அமைக்கபப்ட்டிருக்கின்றன. ப்ராமங்கோன் போபிட் விகாரை வழிபாட்டில் இருக்கும் ஒரு ஆலயமாகவும் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது வழிபாட்டிற்காக வரும் உள்ளூர் மக்களும் கோயிலுக்கு வருவதால் கோயில் முழுமைக்கும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதை காண்போம்.


எங்களை அழைத்து வந்த பயண வழிகாட்டி 25 நிமிடங்கள் கோயிலைப் பார்க்க அனுமதி வழங்கி விட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தெரிவித்து அங்கு எல்லோரும் மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி சென்று விட நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். இதற்கு முன்னரே கோயில்களைச் சுற்றிப் பார்த்த களைப்பு வேறு. ஆக கோயிலின் முன் பகுதியில் விற்கப்படும் இளநீரை வாங்கிப் பருகி இளைப்பாறிக் கொண்டு கோயிலின் உட் சென்று முழுமையாக பார்த்து வழிபட்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு வெளியேறினோம்.



கோயிலை விட்டு வெளியே வந்து சாலைப் பகுதியை அடைய அமைக்கப்பட்டுள்ள சாலையில் இரு பகுதிகளிலும் உணவுப் பொருட்கள் விற்கும் சிறு வியாபாரிகள் கடைகளைப் போட்டிருந்தார்கள். பல வர்ணங்களில் பல உணவு வகைகள். தாய்லாந்து உணவு வகைகளையும் வெவ்வேறு வகையான இப்பதார்த்தங்களையும், சிலர் நேராக சுடச் சுட உணவுப் பொருட்களைத் தயாரிப்பதையும் பார்த்துக் கொண்டே நடந்தோம்.

தொடரும்

Friday, August 22, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 2

ரோமானியப் பேரரசு மூன்று முறை இங்கிலாந்தைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டன. முதலில் ஜூலியஸ் ஸீசர் கிமு.55 ஆண்டு இந்த முயற்சியை மேற்கொண்டார். இதற்காக அப்போதைய இங்கிலாந்திற்கு வர்த்தகம் செய்ய வருவோரை அணுகி இந்த நிலப்பரப்பின் செய்திகளை அறிந்து கொண்டு படையெடுத்துச் சென்று கைப்பற்ற என்ன செய்யலாம் என்ற தயாரிப்பு வேலைகளை எல்லாம் செய்து கொண்டு இங்கிலாந்தின் கெண்ட் கவுண்டி இருக்கும் பகுதிக்கு ரோமானியப் படைகள் வந்து சேர்ந்தன.

ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.  ரோமானியப் படைகள் வெற்றி காணாமலேயே திரும்பின. இக்காலகட்டத்தில் இங்கிலாந்து செல்ட்டிக் இனக்குழுக்களின் ஆளுமையில் தான் இருந்தது. செல்ட்டிக் சமூகத்தில் வெவ்வேறு இனக்குழுக்கள் அவரவர் குழுத் தலைவர்களின் தலைமைத்துவத்துடன் இயங்கி வந்தன.

இங்கிலாந்தையும் ரோமானிய பேரரசுக்குள் இணைத்து பெரிய பேரரசை நிர்மாணிக்க ஜூலியஸ் ஸீசர் கண்ட கனவு நிறைவேறவில்லை. மீண்டும் கி.மு. 54ம் ஆண்டு 30,000 படை வீரர்களைத் திரட்டிக் கொண்டு கெண்ட் நகரை வந்தடைந்தது ரோமானியப் படை. அங்கே இனக்குழுத் தலைவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து போரை எதிர்கொள்ளத் தயாராக தேர்களுடன் இருப்பதைக் கண்டு பின்வாங்கி கிமு.54 செப்டம்பர் மாதம் வெற்றியின்றியே திரும்பியது ஸீஸரின் ரோமானியப் படை.


இங்கிலாந்து வந்த ரோமானியப் படைகளின் போர் கப்பல் 
தங்கத்தில் செய்யப்பட்ட வடிவம் இது.
லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது



ஆனால் ஏறக்குறைய அதற்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரோமானியப் படைகள் இங்கிலாந்தைக் கைப்பற்றி ஆள எண்ணம் கொண்டு இதே கெண்ட் பகுதிக்கு வந்து சேர்ந்தன. அப்போது ரோமானியப் பேரரசராக இருந்தவர் க்ளவ்டியஸ். இம்முறை கெண்ட் பகுதி தொடங்கி இங்கிலாந்தின் தெற்குப் பகுதி அனைத்தையும் ரோமானியப் பேரரசு வெற்றி பெற்று தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தது.



ரோமானியப் பேரரசர் க்ளவ்டியஸ் தனது வெற்றியைக் கொண்டாடும் காட்சி. இது தங்கத்தால் செய்யப்பட்ட வடிவம்.
இது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது


​ரோமானியப் படைகள் இந்த மூன்றாம் முறை எளிமையாக இங்கிலாந்தின் தெற்குப் பகுதியை கைப்பற்றவில்லை என்பது உண்மை. ஆனால் சில செல்டிக் இனக்குழுக்களின் தலைவர்கள் ரோமானியப் படைக்கு சாதகமாக இயங்கி​ நட்பு பாராட்டி ரோமானிய படையின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தனர்.

ஒரு சில இனக்குழுக்களின் தலைவர்களோ ரோமானியப் படைகளை எதிர்த்துப் போரிட்டனர். ஆயினும் ரோமானியப் படையே இறுதியில் வெற்றி பெற்று இங்கு ரோமானிய ஆட்சியை முதன் முறையாகத் தொடங்கப்பட்டது. இது நடந்தது கி.பி.51ம் ஆண்டு.

ரோமானிய படையினருக்கும் செல்ட்டிக் இனக்குழு மக்களின் படையினருக்கும் நடந்த போரின் சான்றாக கிடைக்கும் போர்க்கருவிகள், மனித எலும்புக் கூடுகள் ஆகியவை கெண்ட் நகரில் ஆங்காங்கே அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு இடம் தான் இன்றைய காண்டபெரியும்.

இங்குள்ள ரோமன் அருங்காட்சியகத்தில் இங்கே கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கருவிகள், மனித எலும்புக் கூடுகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொடர்வோம்....

சுபா