Saturday, September 23, 2017

போலந்து - போலந்து நோக்கி இப்போது பயணம் 1



க்ராக்காவ் - 400 ஆண்டுகளுக்கு முன் வரை போலந்து நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்த நகரம். இன்று கலாச்சார மையம் என்ற புகழுடன் திகழும் நகர். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் கலாச்சார நகரம் என்ற சிறப்பும் கொண்ட நகரம். இந்த நகர் புராண நாயகன் க்ராக்குஸ் என்பவரால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 10ம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பாவின் பிரசித்தி பெற்ற நகரங்களுள் ஒன்றாக இந்த நகரம் வளர்ச்சியடைந்தது. மங்கோலியப் படைகள் இந்த நகரை 1241ம் ஆண்டு தாக்கியபோது முற்றிலுமாக இந்த நகரம் சேதமடைந்தது. இதனை அடுத்து 1257ம் ஆண்டு இந்த நகரம் சீரமைக்கப்பட்டு புது வடிவம் கண்டது. 

வெளியிலிருந்து இந்த நகர் தாக்கப்படாமல் காக்கும் வகையில் இந்த நகரைச் சுற்றி ஒரு சுவற்றினை உருவாக்கினர். யூதர்கள் அதிகமாக வந்து க்ராக்கவில் குடியேறத்தொடங்கினர். பொருளாதார ஆதிக்கம் பெற்ற இனமாக யூதர்கள் இப்பகுதியில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டனர்.

1364 வாக்கில் இந்த நகரம் பொருளாதாரச் சிறப்புடன் திகழ்ந்தது . 1364ல் மன்னர் 3ம் காசிமியர் க்ராக்காவ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். செக் நாட்டின் ப்ராக் பல்கலைக்கழகத்திற்கு அடுத்து உருவாக்கப்பட்ட, இன்றும் புகழுடன் விளங்கும் ஒரு பழமையான பல்கலைக்கழகமாக இது திகழ்கின்றது. இங்குதான் உலகம்் புகழும் விஞ்ஞானி நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் அவர்கள் தமது கல்வியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

16ம் நூற்றாண்டில் இத்தாலியில் நிகழ்ந்த ரெனைசான்ஸ் சீரமைப்பு நிகழ்வுகள் க்ராக்காவிலும் எதிரொலித்தன. புதிய பாணியிலான சிற்பக் கலைகள், கட்டிடக் கலைகள், என பழமைக்கு மாறான சமூக மாற்றங்கள் இங்கும் நிகழ்ந்தன.

18ம் நூற்றாண்டில் போலிஷ்-லித்துவானியா பிரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக பரந்த ஆஸ்திரிய பேரூஷிய பேரரசில் இடம்பெறும் நிலை போலந்துக்கும் ஏற்பட்டது. 1809ம் ஆண்டு பேரரசன் நெப்போலியன் போனபார்ட்டின் போர்ப்படை க்ராக்காவ் நகரையும் கைப்பற்றியது. 1815ம் ஆண்டு நடைபெற்ற வியன்னா காங்ரஸ் க்ராக்காவ் நகருக்கு ஓரளவு சுதந்திரத்துடன் கூடிய ஆட்சி அதிகாரத்தை வழங்கியது.

போலந்து யூத இன மக்கள் அதிகமாக வாழ்ந்த நாடுகளில் ஒன்று. 2ம் உலகப் போரின் போது போலந்து மிகப் பாதிப்புக்குள்ளாகியது. 6. 9.1939 நாசி படைகள் க்ராக்காவ் நகரை வந்தடைந்தன. க்ராக்காவ் நகரின் கசிமியர் பகுதி யூதர்கள் வசிக்கும் பகுதியாக இருந்தது. 60,000 யூதர்கள் இங்கு வசித்து வந்தனர். 2ம் உலகப் போருக்கு பின்னர் இந்த கசிமியர் பகுதியில் எஞ்சிய யூதர்களின் எண்ணிக்கை 5,000 .

க்ராக்காவ் நகருக்கு புற நகராக இருக்கும் அவுஸ்விட்ஸ் பிர்கெனாவ் பகுதியில் தான் நாசி அரசுக்கு எதிராக குரல் எழுப்பியோரை சிறை பிடித்து அடைத்து வைத்திருந்தனர்.

2ம் உலக்போரின் காலத்தில் ஹிட்லரின் நாசிப்படைகளால் உருவாக்கப்பட்ட மிகபெரிய வதை முகாம் (Nazi concentration camps) இந்த அவுஸ்விட்ஸ் பிர்கெனாவ் சிறைதான். இங்கு நாசி படைகள் செய்த கொடூரங்கள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன. 2ம் உலகப்போர் காலத்தில் இந்த வதை முகாமில் 1.2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். அதில் மிகப்பெரும்பாண்மையோர் யூத மக்களே.

போலந்துக்கென்று தனி மொழி உண்டு. போலிஷ் இதன் அதிகாரப்பூர்வ மொழி. இது ஸ்லாவிக் மொழி குடும்பத்தைச் சேர்ந்தது. ஜெர்மனி ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் தாக்கத்தினால் டோய்ச் மொழியும் இங்கு ஓரளவு புழக்கத்தில் உள்ளது. போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெறும் நாடுகளில் ஒன்று. ஜெர்மனிக்கு அருகில் எல்லை நாடாக இருந்தாலும் தனித்துவத்துடன் திகழும் ஒரு நாடு எனலாம்.

சுபா,
ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து.

ரைன் நதிக்கரையில் - 5

மீண்டும் ரைன் நதிக்கரையில் நான்
கோடை முடிந்ததோ என
தவித்த என் மனதிற்கு
புத்தொளியாய் 
இன்றைய மாலைக் கதிரவனின் காட்சி.
அழகான பெண்ணை
மேலும் அழகாக்கும் சேலை போல
ரைன் நதியின் இயற்கை அழகைக் கூட்டும்
பருத்திச் சேலையாய் சூரியன்.
இந்த அழகை மட்டுமே ரசிக்கும்
என் மனதில்
நதியின் இயல்பான சலசலப்பும்
பறவைகளும் மட்டுமே
நெருக்கமாக.
நடந்து செல்லும் மனிதர்கள்
கண்களிலிருந்து தூரமாய்.
தொடர்ந்து நடக்கின்றேன் நான்
ரைன் நதிக் கரையில்.





Tuesday, September 12, 2017

ரைன் நதிக்கரையில் -4

ரைன் நதிக் கரையில் மீண்டும் நான்...
கூட்டம் கூட்டமாக வெள்ளைப் புறாக்கள்
புறாக்களைப் போலவே மனிதர்களும்
தனித்திருப்பதில் இல்லா மகிழ்ச்சி
கூட்டமாக இருப்பதில் மனம் காணும் நிறைவு
பொதுமக்களை மறந்து
குடித்த போதை தலைக்கேறி தள்ளாடி நடக்கும் பருத்த மனிதர்
கப்பல்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய்
அன்புடன் பார்த்து சிரித்துச் செல்லும் துருக்கிய உணவுக் கடைக்காரர்
இவற்றினூடே நான்
இயல்பான நதியின் சலனத்தை
ரசித்து நடக்கின்றேன்
-சுபா


Tuesday, September 5, 2017

ரைன் நதிக்கரையில் - 5

ரைன் நதிக்கரையில்.. மீண்டும் நான்
நதி அதன் இயல்பான சலனத்துடன் பயணிக்கிறது
தாயகத்தில் உற்ற நண்பர்கள் தாக்கப்பட்ட செய்தியின் சோகம்
மனதில் நிறைந்து வழிகிறது.
சமூகத்துக்கு நன்மை செய்ய நினைப்போர்
பலம் படைத்தவர்களால் தாக்கப்படுதல்
தொடரும் நிகழ்வு..
நடக்கின்ற நிகழ்வுகள் ஏற்படுத்தும்
மனக் காயங்கள்..
ஒன்றன் தொடர்ச்சியாக மற்றொன்று
இந்த சிந்தனைகளிலிருந்து வெளிவராது
புறக்காட்சியைக் காண விரும்பா மனத்துடன்
அகக்காட்சியில் மூழ்கி..
நடக்கின்றேன் நான்
-சுபா


Tuesday, August 1, 2017

ரைன் நதிக்கரையில் - 3


மீண்டும் ரைன் நதிக்கரையில் நான்...

அது என்னை ஈர்க்கிறதா, நான் அதனை ஈர்க்கின்றேனா, என்ற சிந்தனையுடன்..

சிலர் ஜோகிங் செய்து கொண்டிருக்கின்றனர்..

இளைஞர்கள் முகமெல்லாம் புன்னகையாக அரட்டையில் மூழ்கியிருக்கின்றனர்..

இளம் பெற்றோர் குழந்தைகளுடன் நடக்கின்றனர்..

காதலர்கள் இயற்கையை ரசித்துக் கொண்டு அவர்கள் உலகில் சஞ்சரிக்கின்றனர்..

கப்பல்கள் என் நடையை மிஞ்சும் வேகத்துடன் இருபுறமும் பயணிக்கின்றன..

வாத்துகளும், மைனாக்களும் உணவு தேடித் திரிகின்றன...

ரைன் அதன் இயல்பான சலனத்துடன் ஓடிக் கொண்டிருக்கின்றது.
....இவற்றை வாசித்தவாறு நான் நடக்கின்றேன் சற்றே தணிந்த காய்ச்சலுடன்.

குறிப்பு: நலம் விசாரித்த அனைத்து தோழர்களுக்கும் சகோதர சகோதரியருக்கும் என் மனமார்ந்த நன்றி. காய்ச்சல் வந்தால் ஒரு வாரம் சிரமப்படத்தானே வேண்டும்..

Tuesday, July 25, 2017

ரைன் நதிக்கரையில் - 2

Subashini Thf feeling relaxed.


மீண்டும்..
ரைன் நதிக் கரையோரத்தில் நடைபயணம்

மழைத்தூறல்
பலர் நனைந்து விடுவோம் என பயந்து ஒளிந்து விட்டனர்
சிலர் மழையில் நனைந்த படி நடக்கின்றனர்
சில கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன...
சில புறாக்கள் விட்டுப் போன உணவுகளை கொத்தித் தின்கின்றன..
ரைன் நதி எப்போதும் போல் அதன் இயல்பான சலனத்துடன் ஓடிக் கொண்டிருக்கின்றது.
...இவற்றை ரசித்தபடி நான் நடந்து கொண்டிருக்கின்றேன்.
-சுபா


Tuesday, July 11, 2017

ரைன் நதிக்கரையில் -1


இப்போது..

லுட்விக்ஸ்ஹாபன் ரைன் நதிக்கரையோரக் காட்சி..

- இளைஞர்கள் ஒன்று கூடி கதை பேசிக்கொண்டிருக்கின்றனர்

- கிறித்துவ மதப்பிரச்சாரகர் இருவர் தங்கள் கையேடுகளை வைத்துக் கொண்டு யாரும் தங்களிடம் வருவார்களா என அன்புடன் புன்னகைத்து அமர்ந்திருக்கின்றனர்.
-சிலர் ஜாகிங் செல்கின்றனர்
-நீளமான 2 கப்பல்கள் ரைன் நதியில் இரு வேறு துருவங்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றன
- சிலர் கொண்டு வந்த உணவை தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்
-சிலர் செல்போனில் மூழ்கி விட்டனர்
-ஒரு வீடு இல்லாதவர் பியர் பாட்டிலும் தனது மூட்டை முடிச்சுகளுடனும் ஒரு நாயுடன் அமர்ந்திருக்கின்றார்.
- நதி அதன் இயல்பான சலனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது
....
இவர்களோடு நான்..இவர்களை வாசித்தவாறு நடக்கின்றேன்.

சுபா