Friday, June 8, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 10


17.மே.2018
தோன்லே சாப் ஏரி அமைந்திருக்கும் வெஸ்ட் பரே பகுதியிலிருந்து ஏறக்குறைய 1 கி.மி. தூரத்தில் ஆக் யோம் கோயில் இருக்கின்றது. (நேற்றைய பதிவில் அங்கு பதியப்பட்ட சிறிய விழியப் பதிவை இணைத்திருந்தேன்) சிதலமைடைந்த ஒரு கோயில் இது. கி.பி7ம் நூற்றாண்டிலிருந்து கிபி.9ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் கட்டப்பட்டதென்றும் அங்கோர் வாட் கட்டமைப்பிற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னதான கட்டமைப்பு என்றும் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

1935ம் ஆண்டு ஜோர்ஞ் ட்ரூவ (George Trouve) என்னும் பிரஞ்சு தொல்லியல் அறிஞர் தமது குழுவினருடன் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது இங்குப் புதையுண்டு கிடந்த இக்கோயிலை மீட்டெடுத்தார். மண்ணாலும், செங்கற்களாலும், கற்பாறைகளாலும் கட்டப்பட்ட கோயில் இது. 100மீட்டர் சுற்றளவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் கிடைத்த ஒரு கல்வெட்டு கம்ஹிரேஸ்வர (கம்பீரேஸ்வரர்) கடவுளுக்கு கி.பி.1001ல் கொடுக்கப்பட்ட நிவேந்தங்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. தொடர்ந்து இரு நூற்றாண்டுகளுக்கு இக்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டுச் செய்திகளைப் பற்றியும் இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

கிழக்குப் பார்த்து அமைந்திருக்கும் எஞ்சிய வாசல் பகுதியில் கி.பி.704, கி.பி.717 ஆகிய காலகட்டங்களின் செய்திகளைக் கூறும் கல்வெட்டுக்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவை இக்கோயிலின் இறைவனான கம்ஹிரேஸ்வர கடவுளுக்கு வழங்கப்பட்ட அன்னதானங்கள் பற்றிய செய்தியைக் குறிப்பிடுகின்றன. அதில் குறிப்பாக கோயிலுக்காக வழங்கப்பட்ட அரிசி, கால்நடைகள் (மாடு), துணி, ஊழியர்கள் பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன.

இங்கு அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்ட போது கண்டெடுக்கப்பட்ட இறைவடிவங்களில் 6 வெண்கல சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு இந்துக் கடவுள்களின் சிலைகள். ஏனைய நான்கு புத்தரின் சிலைகள். இவை 9 லிருந்து 35 செண்டிமீட்டர் உயரம் கொண்டவை. அவற்றுள் ஒரு சிவலிங்க வடிவமும், பெரிய புத்தர் சிலையும், பெரிய நாகர் நிலையும் கண்டெடுக்கப்பட்டன. (Encyclopedia of Ancient Asian Civilizations)

ஆக, முதாலாம் ஜெயவர்மன் இக்கோயிலின் ஆரம்ப நிலை வடிவத்தை அமைத்து பின்னர் க்மெர் பேரரசை உருவாக்கிய இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி.770-834) இதனை மேலும் பெரிதாக்கி அமைந்திருக்கலாம். இன்று இக்கோயில் அதன் சிறப்பினை இழந்து காட்சி தந்தாலும் இது உருவாக்கப்பட்ட காலத்தில் இது மிகச் சிறந்த வடிவமைப்புடன் இருந்த ஒரு கோயில் தான் என்பதை அதன் இன்றைய சிதைவுண்ட வடிவம் காட்டத்தவறவில்லை.

கி.பி 11ம் நூற்றாண்டில் அப்போதைய க்மெர் பேரரசன் முதலாம் சூரியவர்மனின் ஆணையின் படி வெஸ்ட் பரே (West Barray) நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு அவன் காலத்துக்குப் பின்னர் அவனது மகன் 2ம் உதயவர்மன் காலத்தில் அப்பணி நிறைவு செய்யப்பட்டது. இது 8 கிமீ நீளம் கொண்ட ஒரு அணை. இது கட்டப்பட்டபோது வெஸ்ட் பரே அணையின் தெற்குப் பகுதி தடுப்பு அரண் உடைந்ததால் அக் யூம் கோயில் அந்த வெள்ளத்தில் மூழ்கியது. 1935ம் ஆண்டு பிரஞ்சுத் தொல்லியல் அறிஞர் ஜோர்ஞ் ட்ரூவ இதனைக் கண்டுபிடித்து இக்கோயில் மீட்கப்பட்டு இக்கோயிலின் வரலாறு முறையாக கண்டறியப்பட்டு அத்தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டன. இன்று இக்கோயில் இதுவரை அறியப்பட்ட கோயில்களில் கம்போடியாவின் மிகப் பழமையான கோயில் எனக் குறிப்பிடப்படுகின்றது. அங்கோர் நகரின் நீண்ட வரலாற்றுக்குச் சிறப்பும் பெருமையும் சேர்க்கும் ஒரு கோயிலாகவும் இது அமைகின்றது.
https://www.efeo.fr/biographies/notices/trouve.htm









தொடரும்..
சுபா

No comments:

Post a Comment