Saturday, June 2, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -6

அங்கோருக்குச் சென்ற கதை -6
17.மே.2018
பட்டுச் சேலை, பட்டு வேட்டி, பட்டு சட்டை என விரும்புவோர் ஒரு முறை எப்படி பட்டு நூல் நெய்யப்படுகின்றது எனப் பார்த்தால் இனி பட்டாடைகளை உடுத்துவதற்கு முன் ஒன்றுக்கு பல முறை யோசிக்கத்தான் செய்வார்கள். பட்டு நூலைத் தயாரிக்க நூற்றுக்கணக்கான பட்டுப்புழுக்களைக் கொதிக்கும் நீரில் போட்டு அவை மிதக்கும் போது ஒரு மரக்கம்பினால் சுற்றி சுற்றி எடுக்கும் போது அதன் உடலிலிருந்து வருகின்ற நீர் திரிந்து நூலாகின்றது. பின்னர் இதனை நூலாக்கி, அதில் வர்ணம் சேர்த்து பின் அதனை வேண்டும் வடிவில் பட்டுத்துணியாக உருவாக்குகின்றனர். இப்படி உருவாக்கப்படுகின்ற பட்டு தொழிற்சாலையில் தான் எங்களின் பயணத்தின் முதல் நிகழ்ச்சி தொடங்கியது.
சியாம் ரீப் நகரிலேயே இந்தப் பட்டு தொழிற்சாலையும் அதனை ஒட்டிய கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையமும் இருக்கின்றது. பட்டு நூல் உற்பத்தி, நூல் பிரித்தல், வர்ணம் ஏற்றுதல், நூலை தறியில் வைத்து அதனை துணி ஆக்குவது போன்ற அனைத்து பணிகளையும் பெண்களே செய்கின்றனர். இந்த தொழிற்சாலைக்குள்ளேயே ஒரு அருங்காட்சியகமும் இருக்கின்றது. பட்டு பண்டைய காலம் தொட்டு எவ்வாறு அரச வம்சத்தினரால் பயன்படுத்தப்பட்டது, எவ்வகை ஆடை அணியும் விதம் அரச குடும்பத்தின் படிநிலைக்கேற்றவாறு மாறுபடுகின்றது, சிற்பங்களில் இப்பட்டாடைகளைக் கட்டியிருக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிற்பக்கலை வடிவமைப்பு, அவற்றின் நுணுக்கங்கள் போன்ற தகவல்கள் இங்கே புகைப்படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன. (விரிவாக ஒரு அருங்காட்சியகப் பதிவில் இதனை பின்னர் விளக்குகிறேன்)
இதே போன்ற பட்டாடை உருவாக்கும் தொழிற்சாலைக்கு ஓரிரு ஆண்டுகட்கு முன்னர் நான் தாய்லாந்து சென்றிருந்த போது நேரில் சென்று பார்த்தேன். ஆக அந்த அனுபவமும் நினைவிற்கு வந்தது. இங்கு புழுக்களை வளர்க்கும் இடம், புழுக்களுக்குத் தீனியாக அளிக்கப்படும் கூன் பை (Khun PAI) என்ற தாவர வகையில் சிலவற்றை தோட்டமாகப் போட்டு வளர்ப்பதையும் எங்களுக்குக் காட்டினார்கள்.
சீனா தொடங்கி ஏனைய கிழக்காசிய நாடுகளில் பட்டு உற்பத்தி என்பது மிக நீண்டகாலமாக வழக்கில் இருக்கின்றது. தமிழகத்தில் பட்டாடை விழாக்களுக்கும் பண்டிகை நாட்களிலும் அணிந்து மகிழ்வது வழக்கமாகி விட்டது. ஆயினும் ஆசிய நாடுகளின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ஆடை என்றால் அது பருத்தி ஆடைதான். ஆக பருத்தி ஆடையையே அதிகமாக அணிந்து மகிழ்வோம்.
குறிப்பு- நான் இந்தப் பதிவில் அணிந்திருக்கும் ஆடையும் பருத்தியினால் நெய்யப்பட்ட ஆடைதான்

தொடரும்..
சுபா













No comments:

Post a Comment