Wednesday, June 6, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -8

அங்கோருக்குச் சென்ற கதை - 8

17.மே.2018

தொன்லே சாப் ஏரிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான வீடுகள் என் கவனத்தை ஈர்த்தன. அவை ஒரு வகை நீண்ட வீடுகள். நிலத்திலிருந்து ஏறக்குறைய  இரண்டிலிருந்து மூன்று அடி உயரமாக அமைக்கப்பட்டவை. கால்கள் வரிசையாக அமைக்கப்பட்டு அவற்றின் மேல் உயரத்தில் நீண்ட பலகையால் அமைக்கப்பட்ட வீடுகள் தொடர்ச்சியாக இருப்பது போன்ற கட்டுமானம். அதுமட்டுமன்றி சாதாரணமாக நாம் காணும் தனி வீடுகளைப் போலன்றி இவை நீளமாக , பல குடும்பங்கள் இணைந்து வாழும் வகையில் இந்த நீண்ட வீடுகள்  அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டிலேயே  இரண்டு பேருக்கு மேல் இருந்தால் சண்டையும் சச்சரவும் முளைத்து விடும். இந்த நீண்ட வீடுகளில் எப்படி மக்கள் சமாளிக்கின்றனரோ என யோசித்துக் கொண்டேன். :-)

தொன்லே சாப் ஏரிப் பகுதி மட்டுமல்ல, கம்போடியாவின் பல பகுதிகள் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் செய்தியை நாம் செய்தி ஊடகங்களின் வழி அறிந்திருப்போம். இதுதான் வீடுகள் இப்படி கால் வைத்து உயரமாக அமைக்கப்பட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணம்.

ஏரியின் மீன்பிடித்தல் தொழில் முக்கியத் தொழில். அதோடு இணைந்த வகையில் விவசாயமும் இம்மக்களின் முக்கியத் தொழிலாகும். படகுகளில் ஆண்கள் ஏரிக்குள் சென்று வலைவீசி மீன் பிடித்து வருவதும், ஏரிக்கரையில் பெண்கள் மீன்களை உலர வைத்து கருவாடுகள் தயாரிப்பதும் இங்கு ஏரிக்கரையோர மக்களின் அன்றாட வாழ்க்கையாக இருக்கின்றது. 

கம்போடிய மக்கள் தொகையில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் கம்போடிய க்மெர் மக்களாகும். இதற்கு அடுத்த எண்ணிக்கையில் வியட்நாமியர்கள் ஏறக்குறைய 8 விழுக்காட்டினர் கம்போடியாவில் வாழ்கின்றனர். பிரான்சின் கட்டுப்பாட்டில் கம்போடியா சில காலங்கள் இருந்தமையால் இங்கு பிரஞ்சு மக்களும் சிறிய எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.  இவர்களோடு சீனர்களும் சாம் இன மக்களும் சிறுபாண்மையில் இங்கு வசிக்கின்றனர்.  

உலகின் வறுமையான நாடுகளில் கம்போடியாவும் ஒன்று. ”என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?” எனக் கேட்கத் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் பேரரசாக இருந்த கம்போடியா இன்று மாபெரும் வீழ்ச்சியை அனுபவித்து சிறிது சிறிதாக மீண்டு வருகின்றது. மக்களின் மீட்சியும் நாட்டின் பொருளாதார மீட்சியும் ஆளும் அரசாங்கத்தின் கைகளில் தான் இருக்கின்றது.








தொடரும்..
சுபா

No comments:

Post a Comment