Wednesday, June 20, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 17

அங்கோரில் சில நாட்கள் - 16
18.மே.2018
மெக்கோக் நதி, தொன்லே சாப் மற்றும் வளமான ஆறுகள் பாயும் பகுதிகள், இன்றைய அங்கோர் நகர் அமைந்திருக்கும் பகுதிகள் ஆகியவை பெரிய பேரரசுகள் ஆட்சி செய்து நகரங்களை அமைத்த பகுதிகளாகத் திகழ்கின்றன. நதிகளைச் சார்ந்தவாறு நாகரிகங்கள் உருவாக்கம் பெறுவது உலக நாகரிகங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு இயல்பான கூறுதான். நைல் நதிக்கரை நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், வைகை நதி நாகரிகம், டனூப் நதி நாகரிகம் என இப்படி பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
கம்போடியாவில் ஆற்றங்கரைப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் குறிப்பிடத்தக்க கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவற்றுள் பல சிதைந்த நிலையில் காணப்பட்டாலும் ஒரு சில செய்திகளை அடையாளம் காணக்கூடிய வகையில் இருப்பது பண்டைய கம்போடிய வரலாற்றை அறிய உதவும் சான்றாக அமைகின்றது. உதாரணமாக கோதாப் (Go Thap) பகுதியில் கிடைத்த கி.பி.5ம் நூற்றாண்டு சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று ”ஜெயவர்மன்” என்பவன் ”வீர(அல்லது வீரா)” என்ற ஒருவனோடு போர் புரிந்ததைக் குறிப்பிடுகிறது. நாக் தா டம்பாக் டெக் (Nak Ta Dambang Dek) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு புத்தருக்காக அமைக்கப்பட்ட வாசகங்களைக் கொண்டிருக்கின்றது. ஜெயவர்வமன் என்ற மன்னன் மன்னன் பற்றியும் அவனது மகன் ருத்ரவர்மன் பற்றியும் இதே கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இதே கல்வெட்டு மன்னனின் போர் வெற்றிகளையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு ஒரு குடியிறுப்புப் பகுதியை மன்னன் ஜெயவர்மன் உருவாக்கியதையும், அணை ஒன்றினைக் கட்டியதையும் அவனது மனைவி “குலபிரபாவதி” என்பவரைப் பற்றியும் குறிப்பிடுகிறது. ஆக கி.பி 480-520 கால வாக்கில் கம்போடியாவின் அங்கோர் மற்றும் நதிக்கரை பகுதிகளில் தொடர்ச்சியாகப் போர்கள் நடந்தமையும் ஜெயவர்மன் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்தான் என்ற விபரங்களையும் அறிய முடிகின்றது. மன்னன் ருத்ரவர்மனின் கி.பி674ம் ஆண்டு கல்வெட்டுக்கள் அவனைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றன. இந்தக் கால கட்டம் க்மெர் பேரரசு தோன்றாத காலகட்டமாகும்.

க்மெர் பேரரசு தோன்றுவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் கம்போடியாவை ஆட்சி செய்த அரசுகள் இரண்டு. ஃபூனான் (Funan) அரசின் ஆட்சி கி.பி 550 வரையான காலகட்டம். அதன் பின்னர் கி.பி 550 முதல் 800 வரை சென்லா என்ற இன்றைய வியட்நாம் நிலப்பரப்பை பூர்வீகமாகக் கொண்ட மன்னர்களின் ஆட்சியில் கம்போடியா இருந்தது. கல்வெட்டுக்களின் தகவல்கள் அடிப்படையில் கி.பி 600ல் இன்றைய மத்திய கம்போடிய பகுதியில் மன்னன் மகேந்திரவர்மன் ஆட்சிப்பொறுப்பை ஏற்கின்றான். அதன் பின்னர் கி.பி 615 முதல் ஆட்சி பொறுப்பேற்று கி.பி. 637ல் மன்னன் முதலாம் ஈசானவர்மன் இறந்தான் என்றும் அதன் பின்னர் கி.பி.635-80 காலகட்டத்தில் முதலாம் ஈசானவர்மனின் பேரன் முதலாம் ஜயவர்மன் ஆட்சி செய்தான் என்ற தகவல்களும் கிட்டுகின்றன. இக்காலகட்டத்தில் கற்கோயில்கள் பல உருவாக்கபப்ட்டன. சிவ லிங்க வழிபாடு முதன்மை பெற்ற காலகட்டம் இது. இயற்கையான மலைகள் லிங்க வடிவங்களாக அடையாளபப்டுத்தப்பட்டு மலைப்பகுதிகள் புண்ணியத்தலங்களாக போற்றப்பட்டன.

கம்போடிய வரலாற்ரில் ஜெயவர்மன் என்ற பெயர் மீண்டும் மீண்டும் வருவதைக் காண்கின்றோம். கி.பி 6 நூற்றாண்டில் குறிப்பிடப்படும் மன்னன் ஃபூனான் பேரரசை ஆண்ட ஜெயவர்மன். பின்னர் கி.பி.7ம் நூற்றாண்டில் குறிப்பிடப்படுபவன் சென்லா பேரரசை ஆண்ட முதலாம் ஜெயவர்மன். பின்னர் மீண்டும் ஒரு ஜெயவர்மன் பெயர் முக்கியத்துவம் பெறுகிறது. அவனே இரண்டாம் ஜெயவர்மன். இவனே அங்கோர் நகரை உருவாக்கி க்மெர் பேரரசை நிறுவிய மாமன்னன்.

இந்த மன்னர்களின் பெயர் பட்டியலை வாசிக்கும் போது பொறிதட்டும் ஒரு விசயம் கம்போடிய பேரரசுகளுக்கும் தமிழகத்தை ஆண்ட பல்லவ பேரரசை ஆண்ட மன்னர்கள் பெயர்களுக்கும் இருக்கும் பெயர் ஒற்றுமை. கம்போடிய சென்லா பேரரசை கி.பி 600ல் ஆட்சி செய்தவன் பெயர் மன்னன் மகேந்திரவர்மன். தமிழகத்தில் பல்லவ பேரரசின் ஈடு இணையற்ற மாமன்னனாக கி.பி600 – 630 ஆட்சி செய்தவன் பெயரும் மகேந்திரவர்மன். சிந்திக்க வேண்டிய, ஆராய்ச்சிக் குறிய ஒன்றல்லவா..??










குறிப்புக்கள்: The civilization of Angkor by Charles Higham

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment