Saturday, March 28, 2015

படம் சொல்லும் தமிழகம் 2013 - 13

2013ல் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயம் நான் கோவிலூருக்குச் செல்வதற்கு முன்னர் காரைக்குடியில் எடுத்த புகைப்படம். அதிகாலை நேரத்து புத்துணர்ச்சியுடன் படத்தில் டாக்டர்.சந்திரமோகனும் டாக்டர்.காளைராசனும்.


படத்தின் பின்னால் இருப்பது ஒரு செட்டினாட்டு இல்லம். ஆனால் தற்சமயம் இது ஒரு வர்த்தகக் கூடமாக மாறியிருக்கின்றது. பழனிச்சாமி பாத்திரக் கடையும் வலது புறத்தில் ஒரு அடகுக்கடையும் ஏனைய சில கடைகளும் உள்ளே இருக்கின்றன. மழை பேய்ந்து ஓய்ந்த நேரம். சாலையில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது.  சாலையோரத்து காய்கறிக்கடை. ஒரு ஆட்டோ ரிக்‌ஷா.. சில மோட்டார் சைக்கிள்கள். அதிகாலை நேரத்து இளம் வெயிலுடன்.

Wednesday, March 18, 2015

படம் சொல்லும் தமிழகம் 2015 - 13



சேலை அணியும் போது அதற்கு ஏற்றார்போல வர்ணங்களில் வளையல்கள் அணிவது பெண்களுக்குப் பிடித்த விஷயம். வண்ண வண்ண வளையல்களைப் பிடிக்காத பெண்களும் இருப்பார்களா என்ன..?

இம்முறை ஜனவரி மாதம் சென்னையில் இருந்த சமயம்  கிடைத்த சிறிய இடைவேலையில் சந்தைக்குச் சென்று சாலை ஓரக் கடைகளில் வளையல்கடைக்காரரிடம் வளையல் வாங்கிக் கொண்டேன். பல வர்ணங்களில்..சந்தைக் கடைகளில் பேரம் பேசி வாங்குவதே மகிழ்ச்சி. நாம் வாங்குவதால் வியாபாரிகள் முகத்தில் எப்படி மகிழ்ச்சி ஏற்படுகின்றதோ அதற்கு பல மடங்கு மகிழ்ச்சி வாங்கிக் கொள்ளும் நமக்கும் ஏற்படுகின்றது தான்.

Saturday, March 7, 2015

(Trier) ட்ரியா - ரோமானிய பழம் நகரம் + கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊர் - 2

ட்ரியா நகரில் எடுத்த சில புகைப்படங்கள்.. மேலும் சில இங்கே..

போர்ட்ட நீக்ராவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

















நகர மையத்திற்குள் செல்லும் போது எடுத்த   சில புகைப்படங்கள்

ஃபாஹ்வெர்க் வகை வீடுகள்


விடது புறத்தில் கார்ல் மார்க்ஸ் இல்லம்
சந்தைகக்கடைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றது


கார்ல் மார்க்ஸ் சிலை 



சந்தையில் விற்பனை 


கிறிஸ்மஸ் மார்க்கெட்



தேவாலயத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்










தேவாலயத்தின் உள்ளே உள்ள ஆர்கன் இசைக்கருவி




ஏசு பெருமானின் ஒரு சால்வைத்துணி இருப்பதாகச் சொல்லப்படும் இடம்








அரச மாளிகை பகுதி

































Friday, March 6, 2015

(Trier) ட்ரியா - ரோமானிய பழம் நகரம் + கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊர்

​ஜெர்மனியில் பல சிறு நகரங்கள் உலகப் புகழ் நிறைந்த வரலாற்றைப் பின்னனியாகக் கொண்டு திகழ்பவை. வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை என எந்த மானிலத்திற்குச் சென்றாலும் அல்லது இந்த நாட்டின் எந்த எல்லைக்குச் சென்றாலும் ஏதாவது ஒரு வரலாற்றுச் சிறப்புச் செய்தியை வருவோருக்கு வழங்க குறையேதும் வைப்பதில்லை இந்த நாடு.




இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த சிறிய நகரம் தான் ட்ரியா. மோசல் நதியின் கரையோரங்களில் அமைந்த நகரங்களில் ஒன்று இது. மோசல் நதிக்கரையோரம் என்பது எழில் தவழும் ஒரு பகுதி. காணும் இடமெங்கும் மலைப்பாங்கான இடங்களில் திராட்சை தோட்டங்கள் நிறைந்திருக்க, ஆங்காங்கே பல கோட்டைகள் செல்லும் பாதைகளில் தென்படுவதைக் கண்டு ரசிக்கலாம்.

ஸ்டுட்கார்ட் நகரிலிருந்து ஏறக்குறைய 320 கிமீ தூரத்தில் இந்த நகரம் இருக்கின்றது. ஒரு காலத்தில் ரோமானியப் பேரரசின் வடபகுதியில் தலை நகரமாக விளங்கிய சிறப்பு கொண்டது ட்ரியா எனும் போது இந்த நகரின் தனிச்சிறப்பினை ஓரளவு நம்மால் ஊகிக்க முடியும். ட்ரியாவின் எல்லையில் அமைந்திருக்கும் சிறிய ஐரோப்பிய நாடு லுக்ஸெம்பர். ஆக ஏறக்குறைய 20 கிமீ தூரத்தில் ஜெர்மனியிலிருந்து லுக்ஸம்பெர்க் சென்று விடலாம். இரு நாடுகளுக்குமான எல்லை  நகரமாக அமைந்திருக்கின்றது ட்ரியா.



ரோமானியப் பேரரசு தமது ஆட்சியை விரிவாக்கியபோது ஜெர்மானிய நிலப்பகுதியில் முதலில் உருவாக்கிய நகரம் ட்ரியா. கி.மு.1ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நகரம் இது. இந்த நகரில் இன்றளவும் வானை நோக்கி நிமிர்ந்து நிற்கும் நகரின் கத்தீட்ரல் தான் ஜெர்மனியின் மிகப்பழமையான கத்தீட்ரல்.கிபி.2ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.




இந்த நகரின் நுழைவாயில் கதவு  Porta Nigra  என அழைக்கபப்டுவது. கி.பி 1ம் நூற்றாண்டு எனக் கணக்கிடப்படப்படும் இந்த எல்லைக்கதவு நகரின் மையப்பகுதி நுழைவாயிலாக அமைந்திருக்கின்றது. ஒரு வகை கருமையான கற்களால் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருப்பதால் இதற்கு இப்பெயர் வழக்கில் நிலைத்து விட்டது.




பல நூற்றாண்டுகளாக பல வரலாற்று நிகழ்வுகள் இந்த சிறு கோட்டையில் நடைபெற்றிருக்கின்றன. தொடர்ச்சியாக சில நூற்றாண்டுகள் கத்தோலிக்க மதஸ்தாபனத்தின் தொடர்பு மையமாகவும் திகழ்ந்த்து வந்தது. அதன் பின்னர்.    1802ல் நெப்போலியன் போனபார்ட் இந்த கோட்டையோடு இணைக்கப்பட்டிருந்த தேவாலயத்தையும்  சமய மடத்தையும் கலைக்க, அதன் பின்னர் இந்த கட்டிடம் மீண்டும் ரோமானிய அரசின் முந்தைய வடிவத்திற்கே மீண்டது.




1986ம் ஆண்டு போர்ட்டா நிக்ரா யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அறிய சின்னம் என தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.





ட்ரியாவில் ரோமானியப் பேரரசு அமைத்த கோட்டையின் தடையங்களை ஓரளவே காண முடிகின்றது. ஆயினும் இங்கே அரச குடும்பத்தினர் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட தெப்பக்குளம் ஒரு அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.




சுடுநீர் குளம் ஒரு பகுதியிலும் குளிர்ந்த  நீர் குளம் மற்றொரு பகுதியிலும் என இரண்டு பெரிய குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குளங்களில் நிலையான நீர் தேக்கம் என்றில்லாமல் தேவைப்படும் போது நீர்பாய்ச்சி விடும் வகையில் சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. வித்தியாசமான ஒரு தெப்பக்குள கட்டுமானம் இது என்பதில் ஐயமில்லை.




நகரின் மையத்திலேயே க்ளேடியேட்டர்கள், அதாவது வீரர்கள் போரிடும் மைதானமும் இருக்கின்றது. வட்ட வடிவ மேடையில் வீரர்களுக்கிடையே யுத்தம் நடக்கும் போது பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க என மேல் பகுதியில் வட்டமாக அமரும் இருக்கைகளை கற்களாளேயே வடிவமைத்திருக்கின்றனர். இவ்வகை மிகப் பெரிய ஆம்ஃபிதியேட்டர்களை, கிரேக்கம், இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகளில் நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.




ட்ரியாவின் அரச மாளிகையும் பூந்தோட்டமும் மிக நல்ல வகையில் பராமரிக்கப்படும் நிலையில் இருப்பவை. 12ம் நூற்றாண்டு கட்டிடமாகிய இதன் முன் புறத்தில் நல்லதொரு பூந்தோட்டம் இருக்கின்றது. அதன் இருபக்க சாலைகளிலும் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் சிலைகள் அற்புதப் படைப்புக்கள்.









இந்த நகரில் தான் 19ம் நூற்றாண்டின் சிறந்த தத்துவ மேதைகளில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் பிறந்தார். உலக அரசியல் சித்தாந்தங்களில் மாற்று சிந்தனையை வெளிப்படுத்தி புதிய அரசியல் தத்துவம் ஒன்றினை படைத்த சிறப்பு இவரைச் சாரும். இவரது பிறந்த இல்லம் இருப்பதும் இப்பகுதியில் தான்.




20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் இந்த கட்டிடம் எந்த முக்கியத்துவமும் பெறாத நிலையில் தான் இருந்தது. 1928ம் ஆண்டில் SPD  அரசியல் கட்சி இந்த கட்டிடத்தை வாங்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டது. ஹிட்லரின் நாஸி ஆட்சியின் போது இந்தக் கட்டிடம் ஒரு அச்சு ஆலையாக அமைக்கபப்பட்டிருந்தது. அதன் பின்னர் 1947ம் ஆண்டு மேமாதம் 5ம் தேதி இந்த கட்டிடம் ஒரு அருங்காட்சியகமாக உருமாற்றம் கண்டது. அது முதல் தொடர்ந்து அருங்காட்சியகமாகவே இருந்து வருகின்றது. ஒருவருடத்திற்கு ஏறக்குறைய 32,000 வருகையாளர்கள் இந்த அருங்காட்சியகம் வந்து செல்கின்றனர் என்று அருங்காட்சியகக் குறிப்பில் உள்ளது.



இந்த நகருக்கு நான் சென்ற ஆண்டில் நவம்பர் மாத இறுதியில் வாகனத்திலேயே பயணம் மேற்கொண்டிருந்தேன். மோசல் நதிக்கரையின் ஓரத்திலேயே பனி மூட்டங்களுக்கிடயே பயணித்து செல்வதே புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. நகரின் வரலாற்று சிறப்புக்கள், தேவாலயம், ரோமானிய நாகரிகத்தின் பழமைச் சின்னங்கள், கார்ல் மார்க்ஸ் பிறந்த இல்லம் என ஒரு நாள் சுற்றிப்பார்த்து அடுத்த நாள் லுக்ஸெம்பெர்க் சென்று வந்தேன்.

லுக்ஸெம்பர்க் பயணக் குறிப்பை மற்றுமொரு பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா