Monday, April 22, 2019

ரொமேனியா பயணம் - 23- சிந்தனைகள்

நான்கு நாட்கள் ருமேனியாவின் தலைநகர் Bucharest மற்றும் துறைமுகப்பட்டினம் Constanta என இந்த ஈஸ்டர் விடுமுறை நல்ல வகையில் கழிந்தது.
புக்கரெஸ்ட் நகரில் இருந்த நான்கு நாட்களும் இந்த இன மக்களின் இன்றைய நிலையை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது. கம்யூனிஸ ஆட்சிக்குப் பின்னர் பல மாறுதல்களைச் செய்ய வேண்டும் என முயற்சித்தாலும் பொருளாதார மேம்பாடுகளைச் சரியாக முன்னெடுக்காத நாடு என்றே எண்ணத் தோன்றுகிறது.
நாட்டின் மொத்த மக்கள் தொகை 20 லட்சம். ரொமேனியர்களில் பலர் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் புலம் பெயர்ந்து விட்டார்கள். அங்கேயே வேலை செய்து கொண்டு தங்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உள்ளூரில் வேலை இல்லா திண்டாட்டமும் உயர்வாகவே இருக்கின்றது.
தொழில் வாய்ப்பும் குறைவு.. தொழில்நுட்ப வளர்ச்சியும் குறைவு...இந்த சூழலில் ருமேனிய மக்களின் பொருளாதார மேம்பாடு என்பது பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. வணிகம் சிறப்பாக இல்லாததால் அயல் நாட்டு மக்களையும் காண முடியவில்லை. குறிப்பாக ஏறக்குறைய எல்லா தலைநகரங்களிலும் இருக்கும் சீனர்கள், சீனர்களின் கடைகள் இங்கு ஒன்றை கூட நான் பார்க்கவில்லை.
அடிப்படையில் மக்கள் மிக அன்பாக பழகுகிறார்கள். தெரியாத விஷயங்களை கேட்டால் உடன் வந்து தயங்காமல் உதவுகின்றார்கள். ஆசிய மக்களைப் போன்று நண்பர்களுடன் கூடி மகிழ்ந்து உறவாடும் மக்களாக இவர்கள் இருக்கின்றார்கள். இது மேற்கு ஐரோப்பிய கலாச்சாரத்தில் இருந்து சற்று மாறுபட்டதாகவே இருக்கின்றது.
மிகத் தீவிரமாக அமெரிக்க மோகம் வளர்ந்து வருவது இங்கு தெரிகின்றது. இது ரொமேனியா மக்களின் பண்டைய கலாச்சார பண்புகளை மறக்கச் செய்துவிடும் என்று அபாயமும் தெரிகின்றது.
இங்கு உள்ள அருங்காட்சியகங்கள் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் நிச்சயமாக இடம்பெறவேண்டும். இங்குள்ள அரும்பொருட்கள் ஐரோப்பிய வரலாற்று மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் புராதன சின்னங்களாக இருக்கின்றன.
புக்கரெஸ்ட் விமான நிலையம் சிறியது. ஆகையினால் பயணிகள் அலைமோதிக் கொண்டு இருப்பதைக் காண முடிகின்றது. இந்த நாட்டில் பெருமளவில் பொருளாதார மேம்பாடு நிச்சயமாக தேவை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் பெற்றிருப்பதால் இதற்கான சாத்தியக்கூறுகள் படிப்படியாக நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அழகிய இயற்கை சூழல், எனக்கு பிடித்த வகையில் பல அருங்காட்சியகங்கள், குறைந்த விலையில் பொதுப் போக்குவரத்து என்பது கவர்ச்சிகரமான அம்சங்கள்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தாலும் கூட அத்தகைய சூழலிலும் தங்கள் தாய்மொழி மேல் மிகுந்த ஈடுபாட்டுடனும் பற்றுடனும் இந்த மக்கள் இருக்கின்றார்கள் என்பது இவர்கள் மேல் மேலும் உயர் மதிப்பை அளிக்கின்றது. நாட்டின் எல்லா இடங்களிலும் ருமேனிய மொழியிலேயே எல்லா செய்திகளும் வழங்கப்படுகின்றன. ருமேனிய மொழிக்கு அடுத்து தான் ஜெர்மானிய மொழி மற்றும் ஆங்கில மொழியில் சில விளக்கங்களை ஆங்கங்கே காணமுடிகின்றது.
சுற்றுலாத்துறை எனும் பொழுது இந்த நாடு குறிப்பாக புகாரஸ்ட் நகரம் மேலும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக முக்கிய இடங்கள் இருக்கும் பகுதிகளுக்கான விளம்பரங்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு இடத்தையும் தேடி கண்டுபிடித்து செல்வதில் சுற்றுலாப்பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஜெர்மனியில் ஊற்றாகி ஐரோப்பாவின் 10 நாடுகளை கடந்து பயணிக்கும் டனுப் நதி ரொமேனியாவின் நிலத்தை வளப்படுத்தும் ஒரு நதி. ரொமேனியாவைக் கடந்து கருங்கடலில் இந்த நதி கலக்கிறது.
மீண்டும் வாய்ப்பு அமைந்தால் இந்த நாட்டின் வட பகுதி மலைப்பிரதேசங்கள் சென்று பார்த்து வர வேண்டும்... இதன் ஒரு பகுதியாக இருந்து இன்று தனி நாடாக விளங்கும் மால்டோவா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது.
-சுபா


ரொமேனியா பயணம் - 22- ஐரோப்பிய கலைப்படைப்புகள்

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாமன்னர் முதலாம் கார்லின் ஆட்சி ரொமேனிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. அவருடைய அரண்மனை வளாகம் முழுவதும் இன்று ரொமேனிய கலை அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அரண்மனை வளாகம். ஒருபக்கம் ஐரோப்பிய கலைகள். மறுபக்கம் ரொமேனிய நாட்டிற்கே உரித்தான கலைகள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு இங்கு அரும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 70,000 ஆகும்.
3 மணி நேரங்களை இந்த அரண்மனையின் வளாகத்தின் உள்ளே செலவிட்டேன். அரண்மனையின் கட்டிடம், அதன் அமைப்பு, பளிங்கினால் செய்யப்பட்ட மாளிகையின் பல்வேறு பகுதிகள் ... என மாளிகையே ஒரு அருங்காட்சியகம் தான் எனலாம். அதில் வைக்கப்பட்டிருக்கின்ற அரும்பொருட்கள் உலகின் மிகச் சிறந்த ஓவியர்களது கைவண்ணத்தில் உருவானவை.
ஐரோப்பிய கலைப்படைப்புகள் எனும்போது பழமையான கிருத்துவ மத பின்னணி கொண்ட கலைப்படைப்புகள் என்பன ஒரு புறம். அதற்கு மாற்றாக பதினைந்தாம் நூற்றாண்டில் கிளர்ந்தெழுந்த renaissance புரட்சியின் காலத்தில் தோன்றிய புதிய கலைப்படைப்பு பாணிகள்... அவற்றின் சார்பில் எழுந்த படைப்புகள்... என்பது ஒருபுறம். அந்தவகையில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கலை பள்ளிகளில் உருவாக்கப்பட்ட பல கலைப்படைப்புகள் மன்னர் முதலாம் கார்ல் அவர்களின் சேகரிப்பில் இருந்தன. அவற்றைக் கொண்டுதான் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ரொமேனிய நாட்டின் பிரபுக்கள் சிலர் சேகரிப்பில் இருந்த கலை படைப்புகளும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறத் தொடங்கின.
இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களும் கலைப்பொருட்களும் ஒவ்வொரு தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய renaissance புரட்சி என்பது இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் தொடங்கியது. பண்டையகால ஓவிய மரபில் அன்னைமேரி, குழந்தையைத் தூக்கிக் கொண்டிருக்கும் அன்னை மேரி, இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் ஏற்றப்பட்டஓவியம், தேவதைகள் வானில் பூச்சொரிதல், இயேசு கிறிஸ்து, அன்னை மேரி குழந்தையை தாங்கிக் கொண்டிருக்கும் போது அவரைக் காண வரும் தூதுவர்கள் என்பது போன்றே மீண்டும் மீண்டும் ஓவியங்கள் அமைந்திருக்கும். பண்டைய ஐரோப்பியக் கலை படைப்புகள் பெரும்பாலும் சோக நிகழ்வை வெளிப்படுத்துவனவாகவும் இருக்கும்.
இந்த பாணியிலிருந்து மிகப்பெரிய மாற்றத்தை கிபி 15ஆம் நூற்றாண்டில் ரெனைசான்ஸ் சீர்திருத்த காலம் உருவாக்கியது. பல்வேறு புதிய விஷயங்களை, இயற்கை, கட்டிடங்கள், அலங்காரம், மனித உடல், சிந்தனைப் புரட்சி, மறைமுகமான வெளிப்பாடுகள்... என்ற வகையில் இக்காலகட்டத்தில் புதிய கலை படைப்புகள் உருவாக்கம் கண்டன. அந்த வகையில் லியனாடோ டா வின்சி, மைக்கலாஞ்சலோ, ரபேல் போன்றோரை நாம் குறிப்பிடலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்கள் விலை மதிப்பிட முடியாதவை. அத்தனை அரும்பொருட்கள் இந்த அரண்மனைக்குள் உள்ளன. மன்னர் கட்டிய அரண்மனையில் இன்று மன்னரின் வாரிசுகள் இல்லை என்றாலும் அவர் சேகரித்த அரும்பொருட்களள் இங்கே இருக்கின்றன.
இந்த அரண்மனைக்கு எதிர்புறத்தில் மன்னர் முதலாம் கார்ல் அவர்களின் சிலை மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இது கார்ல் பல்கலைக்கழகத்தின் முன்னே அமைந்துள்ளது. மன்னரின் பெயரிலேயே இந்த பல்கலைக்கழகமும் பெயரிடப்பட்டுள்ளது. ரொமேனியாவின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் ஒரு அங்கமாக இந்த அருங்காட்சியகத்தை நிச்சயமாகக் கூறலாம்.
-சுபா








ரொமேனியா பயணம் - 21- சூரியன்

ரொமேனியா பயணம் - 20- ட்ராகுலா

Dracula - நம்மில் பலர் பார்த்து பயந்த டிராகுலா திரைப்படத்தின் கதை பின்னணி ரொமேனிய நாட்டுடன் தொடர்பு கொண்டது. இதைப்பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன் இங்குள்ள அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் Dracula பற்றிய செய்திகள்..



Sunday, April 21, 2019

ரொமேனியா பயணம் - 19-புக்காரஸ்ட் கிராம அருங்காட்சியகம்

புக்காரஸ்ட் கிராம அருங்காட்சியகம்.
ரொமேனிய மக்கள் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். இன்றும் அதன் தொடர்ச்சியை தான் காண்கின்றோம். மிகப் பெரிய தொழில் புரட்சியோ தொழில் வளர்ச்சியோ இங்கு பெரிதாக காணப்படவில்லை. விவசாயம் , விவசாயம் சார்ந்த தொழில்கள்.. மீன் பிடித்தல் என்பது போன்ற வகையிலேயே இந்த நாட்டின் மிகப் பரவலான மக்களின் வாழ்க்கை அமைந்திருக்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் உள்நாட்டில் வேலை போதாமையால் பல இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி இங்கிலாந்து அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்தார்கள். பலர் திருட்டுத்தனமாகவும் தகுந்த ஆவணங்கள் இன்றியும் பணிகளுக்காக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து விடுகின்றார்கள். சட்டவிரோதமாக பணிபுரிய வந்து பின்னர் திருப்பி அனுப்பப்படும் பலர் இருக்கின்றார்கள் நன்கு கல்விகற்று ஜெர்மனியில் தொழிலை வாங்கிக்கொண்டு ஜெர்மனியிலேயே வாழ்ந்துவிடும் ரொமேனியர்களும் இருக்கின்றார்கள். மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், கணினித் துறையிலும் என பலர் ஜெர்மனியில் இன்று தனது வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஜெர்மனியின் மக்கள் தொகையில் மிகக் குறிப்பிடத்தக்க வகையில் ரொமேனிய மக்களும் இடம் பெறுகின்றார்கள்.
-சுபா

https://www.facebook.com/subashini.thf/videos/2403422683234448/







ரொமேனியா பயணம் - 18- கிராமங்கள் அருங்காட்சியகம்

புக்காரெஸ்ட் நகரில் உள்ள கிராமங்கள் அருங்காட்சியகம் இது. மிக வித்தியாசமாக ரொமேனியாவின் பண்டைய காலம் தொட்டு கிராமங்களில் உள்ள வீடுகளை காட்சிப்படுத்தும் ஒரு வளாகம் -திறந்தவெளி அருங்காட்சியகம். இதில் 370 பழங்கால கிராமத்து வீடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 60,000 அரும்பொருட்கள் அதிலும் குறிப்பாக விவசாயம்.. கிராமத்து வாழ்க்கை, ஆகியவற்றை விபரிக்கும் வகையிலான பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. மிக பிரமாண்டமான முறையில் கண்களைக் கவரும் வகையில் பசுமையான தோட்டத்தின் உள்ளே இந்த வளாகம் அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்து செல்லும் பொழுது நம்மை கடந்த நூற்றாண்டுகளுக்கு இங்கு உள்ள வீடுகள் அழைத்துச் சென்று விடுகின்றன. ஆங்காங்கே இசைக்கருவிகளை வாசித்து கொண்டிருக்கும் கலைஞர்கள் கிராமத்து விவசாய பொருட்கள் ,பலகாரங்கள் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் பெண்மணிகள் அமர்ந்திருக்கிறார்கள். சமய போதகர்கள் ஒரு பகுதியில் அமர்ந்து இருக்கின்றார்கள் .அனைவரும் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர் ...விற்பனைக்கும் வைத்திருக்கின்றனர்..
இத்தகைய அருங்காட்சியகத்தை பார்க்கும்போதெல்லாம் மனதில் தமிழகத்திலும் இப்படி தமிழ் பண்பாட்டை விவரிக்கும் நேர்த்தியான ஒரு கிராம அருங்காட்சியகம் வைப்பது அவசியம் என்ற எண்ணம் எனக்கு எழுகிறது.
-சுபா

https://www.facebook.com/subashini.thf/videos/2403424883234228/






ரொமேனியா பயணம் - 17- கிளி ஜோசியம்

நம்ம ஊர் கிளி ஜோசியம் இங்கே ரொமானியாவிலும் இருக்கின்றது. சிந்தி இன மக்கள் இந்த கிளி ஜோசியம் பார்க்கும் வேலையை செய்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களில் இரண்டு பேர் கையில் ஒரு பலகை போல வைத்துக் கொண்டு அதன் மேல் ஒரு பெட்டிக்குள் சோதிடம், குறி செல்வதற்கான புகைப்படங்களுடன் கூடிய எழுத்துக்கள் அடங்கிய காகிதங்களை வைத்திருக்கின்றார்கள். அதில் ஒரு சங்கிலி கட்டி மூன்று கிளிகளை வைத்திருக்கின்றார்கள். அந்தப் பலகையை கையில் தூக்கிக் கொண்டு குடும்பம் குடும்பமாக சாலைகளில் gypsy மக்கள் செல்கின்றார்கள். இவர்களிடம் யார் ஜோதிடம் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த வகை ஜோதிடக்காரர்கள் இங்கு இருக்கின்றார்கள். அவர்கள் வேகமாக சத்தமாகப் பேசிக் கொண்டே செல்வதால் நிறுத்தி புகைப்படம் எடுக்க முடியவில்லை.
-சுபா

ரொமேனியா பயணம் - 16- orthodox கிறித்துவ தேவாலயம்

ரொமேனியாவின் ஒரு orthodox கிறித்துவ தேவாலயம்.
இந்த வகை கிருத்துவம் சார்ந்த கோயில்கள் மிகுந்த கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. கட்டிடங்களின் உள்ளே முழுமையாக சுவர் சித்திரங்கள் அலங்கரிக்கின்றன. புகாரஸ்ட் நகரின் அனைத்து தேவாலயங்களிலும் காலையிலேயே மக்கள் வழிபாட்டிற்கு வந்து விடுகின்றார்கள். ஆர்த்தடாக்ஸ் சமயத்தின் சின்னங்களான குருமாரின் ஓவியம், நூல்கள் ஆகியவற்றின் முன் மண்டியிட்டு வணங்கி தொழுகின்றார்கள். காலையில் ஒரு வழிபாட்டின்போது orthodox சமயகுரு ஒருவர் பொதுமக்களுக்கு ஆசி வழங்குவதை பார்த்தேன். மக்கள் வரிசையாக நின்று ஆசி பெற்றுக்கொண்டு பின்னர் கோயிலின் சின்னங்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்து வழிபாடு செய்துவிட்டு அமைதியாக செல்கின்றார்கள். பின்னணியில் ஒலிபெருக்கியில் சமய பாடல் மெலிதாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. ரொமேனிய மக்கள் மிகத் தீவிரமாக ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றுபவர்கள்.
-சுபா
https://www.facebook.com/subashini.thf/videos/2403254583251258/








Saturday, April 20, 2019

ரொமேனியா பயணம் - 15- உணவு

ரொமேனியாவில் மக்கள் பொதுவாக அதிகமாக இறைச்சி உணவு மற்றும் மாவினால் தயாரிக்கப்பட்ட பலகாரங்களைத் தான் சாப்பிடுகின்றார்கள். தலைநகர் புகாரஸ்டில் வணிக பகுதிகள் எல்லா இடங்களிலும் pizza hut ,McDonald's, KFC பார்க்கமுடிகின்றது. பல இடங்களில் இத்தாலியன் பாஸ்தா பீட்சா வகைகள் கிடைக்கின்றன. ரொமேனியாவின் பாரம்பரிய உணவு கடைகளை பார்ப்பது அரிதாக இருக்கிறது.
நகரின் மையத்தில் கணேஷா கஃபே என்ற பெயரில் ஒரு உணவகம் இருக்கின்றது. வட இந்தியர் நடத்தும் உணவகம்.






இப்படி தினம் தினம் இந்த ஊரில் சாப்பிட்டால் பத்து நாட்களில் 10 கிலோ எடை கூடிவிடலாம். 

ரொமேனியா பயணம் - 14- ரோமானிய எச்சங்கள்

ஐரோப்பாவின் இன்றைய பல நாடுகளில் ரோமானியப் பேரரசின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதை மறுக்க முடியாது. ஒரு காலத்தில் ஐரோப்பாவை தன் கைக்குள் வைத்து இருந்தது ரோமானியப் பேரரசு.
ஒரு காலத்தில் வல்லரசாக ஆட்சி செலுத்திய பேரரசுகள் இன்று வரலாற்றில் மட்டுமே இடம் பிடிக்கும் வகையில் அமைந்திருப்பதை காண்கின்றோம். ரொமேனியாவில் ரோமானிய பேரரசு தனது தடயங்களை மிக ஆழமாக பதிந்து சென்றிருக்கின்றது. கிமு 2 ஆம் நூற்றாண்டு தொடங்கி இங்கு கிரேக்க கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கிபி 1, கி பி 2 காலகட்டம் தொடங்கிய வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிய தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் இங்கு ரோமானிய பேரரசுகளின் தாக்கம் இருந்ததை சான்று பகர்கின்றன. வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமாக சில நூற்றாண்டுகள் தொடர்ந்து இருந்திருக்கின்றது Constanta.
கிரேக்க நாகரிகத்தின் தாக்கம், அதன் பின்னர் மிக அழுத்தமாக ரோமானிய பேரரசின் தாக்கம், சில நூற்றாண்டுகள் இடைவெளியில் துருக்கியைச் சேர்ந்த ஒட்டோமான் பேரரசின் தாக்கம் என அந்நிய நாடுகள் ரொமேனியாவை கைப்பற்றி ஆட்சி செய்த தடயங்கள் நிறைய கிடைக்கின்றன.
அதில் குறிப்பாக கருங்கடலின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இந்த Constanta நகரம் விளங்குகிறது . இத்தாலியிலிருந்து இப்பகுதிக்கு வருவதற்கும் துருக்கியிலிருந்து இப்பகுதிக்கு வருவதற்கும் இங்கு உள்ளூர் மக்களை தாக்கி கைப்பற்றி நாட்டை கைப்பற்றி தனது ஆட்சியை நிறுவி பேரரசை நிலைநாட்டுவதற்கும் நல்ல வாய்ப்பாக இது அமைந்திருந்தது.
ரொமேனியாவின் மக்கள் அடிப்படையில் படை பலமற்றவர்கள். சாதாரண வாழ்வியல், விவசாயம், நாடோடி வாழ்க்கை என வாழ்பவர்கள். அந்தச் சூழலில் மிக பலம் பொருந்திய பேரரசுகளுக்கு இப்பகுதியை தாக்கி கைப்பற்றி ஆட்சி செய்வதில் பெரிய எதிர்ப்போ அல்லது பிரச்சினையோ எழவில்லை.
ஆனால் அன்று பலம் பொருந்திய வகையில் ஆட்சி செய்த ரோமானிய படைகளும் இன்று இல்லை. துருக்கிய ஒட்டோமான் படைகளும் இன்று இல்லை. கொன்ஸ்டன்டா இன்று படிப்படியாக அதன் பழமை குறைந்து வெறிச்சோடிப் போன நிலையில் காட்சி அளிக்கின்றது. மக்கள் தொகை மிகக் குறைவு. மிக முக்கியமான துறைமுகப் பகுதி தான் என்றாலும் கூட வணிக வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. கோடை காலத்தில் மட்டுமே இங்கு சுற்றுலா வணிகத்திற்கு வாய்ப்பளிக்கின்றது. மற்றபடி பார்க்கும்போது இந்த நகர் இன்று அதன் வளம் இழந்து வறுமையை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றது.
அருங்காட்சியகங்கள் வரலாற்றை சொல்கின்றன. அன்று அப்படி இருந்த ஒரு நகரமா இப்படி இருக்கின்றது என்று நம்மை வியக்க வைக்கின்றது இங்கு நாம் காணும் வரலாற்று சின்னங்கள். நம்மை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன இங்கு அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மண்பானைகளும், மொசைக் வடிவங்களும், ரோமானிய தெய்வ வடிவங்களும், ரோமானிய கல்லறை கட்டுமானங்களும்.
அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தால் நிகழ்காலத்தில் நிற்கின்றோம். நிகழ்காலம் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை நம் கண்முன் காட்டுகின்றது. எல்லா இடங்களும் தூங்கி வழிவது போல்.. சுறுசுறுப்பு இல்லாததுபோல்.. யாருமற்ற தனித் தீவுக்கு வந்ததுபோல் ஒரு சூழலை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த உலகில் எதுவுமே நிலை இல்லை என்பதைத்தான் வரலாறு தொடர்ச்சியாக காட்டிக் கொண்டே இருக்கின்றது.
இந்தக் கருங்கடல் எத்தனையோ போர்வீரர்களையும் வணிகர்களையும் சந்தித்திருக்கும்.மனிதர்கள் வருகின்றார்கள் வாழ்கின்றார்கள்.. மறைகிறார்கள். ஆனால் இயற்கை தன்னை புதுப்பித்துக் கொண்டு அப்படியே இருக்கின்றது. அப்படித்தான் இந்த கருங்கடலும்; தான் மட்டும் உயிர்ப்புடன் ஓயாத அலை ஓசையுடன் நம்மை வியக்க வைக்கின்றது.
-சுபா