Saturday, April 27, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 11

ஆஸ்திரியாவை நினைக்க வைக்கும் மனிதர்கள் - 1

ஐரோப்பாவில் பலருக்கும் பரிட்சயமில்லாத நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று என்று தான் சொல்வேன். சுற்றுலா பயணம் என்றாலே பலருக்கும் சுவிஸர்லாந்து தான் ஞாபகத்திற்கு வரும்.  அல்லது ப்ரான்ஸின் தலைநகரமான பாரீஸ் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இயற்கை அழகின் மொத்த உருவமாக இருக்கும் ஜெர்மனியின் தெற்குப் பகுதியும் ஆஸ்திரியாவும் பலருக்கு அறிமுகமானதில்லை. ஆனாலும் ஆஸ்திரியாவில் பிறந்தோ அல்லது இங்கே வாழ்ந்து புகழ்பெற்ற சிலரை நிச்சயமாக பலர் அறிந்திருக்கலாம். அப்படிப் பட்ட சிலரைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்ளலாமே என நினைக்கின்றேன்.

இசைப்ரியர்களுக்கு பரிட்சயமான பெயர்களில் யோகன் ஸ்ட்ரவுஸ்  (Johann Strauß), மோஸார்ட் (Wolfganf Amadeus Mozart), ப்ரான்ஸ் ஷூபெர்ட், அண்டொன் ஃபோன் வேபர்ன் போன்ற இசை மேதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மோஸார்ட் (1756 - 1791) 

Inline image 6

ஆஸ்திரியாவைப் பிரபலப்படுத்தும் சாக்லெட்கள், நினைவுச் சின்னங்களில் மோஸார்ட்டின் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த இசை மேதை உலகப்புகழ்பெற்று விளங்கினார் என்பதை அறிந்த பலர் இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர் என்ற தகவலை அறியாதிருப்பர். ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர் இவர். ஒரு வயலின் ஆசிரியரும் இசையமைப்பாளருமாகிய தனது தந்தையைப் போலவே இசையில் தீவிர ஆர்வம் கொண்டவர். இளமை காலத்திலேயே இவரது இசைப் புலமை வியக்கும் தன்மை பெற்றிருந்தது. 50க்கும் மேற்பட்ட சிம்பொனிக்களையும்  24 ஓப்பரா இசைப்படைப்புக்களையும் உருவாக்கியவர். இவரது Don Giovanni  ஒப்பரா இன்றும் ஐரோப்பா மட்டுமின்றி உலகப்புகழ்பெற்ற ஓப்பரா படைப்புக்களில் ஒன்றாகத் திகழ்வது. மோஸார்ட்டின் இன்னொரு புகழ்மிக்க ஓப்பரா The Magic Flute. யூடியூபில் இந்த ஓப்பரா முழுமையாக ஒன்றை இங்கே கண்டு களிக்கலாம். http://www.youtube.com/watch?v=b11ElH3qm2M

Inline image 5
யோகன் ஸ்ட்ரவுஸ் (1825 - 1899) 
யோகன் ஸ்ட்ரவுஸ் பொதுமக்கள் விரும்பி மகிழும் நாட்டிய மெல்லிசை (dance music and light music) க்குப் புகழ்பெற்று விளங்கியவர். 
Inline image 7

500க்கும் மேற்பட்ட படைப்புக்களை உருவாக்கியவர். ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னாவில் பிறந்து வளர்ந்தவர் இவர். தனது தந்தையின் விருப்பத்திற்கும் மாறாக இசையில் நாட்டத்தை வளர்த்து வந்தவர் தன்னை இசையமைப்பாளராக வளர்த்துக் கொண்டு மிகத் திறமையாக பல்வேறு தரப்பினரின் தேவைக்கேற்ற வகையில் தனது இசையைப் பிரபலப்படுத்தினார். உள்ளூரில் மட்டுமல்லாது ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ச்பெர்க், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து பெரிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றார். மெல்லிசை மட்டுமன்றி ஓப்பரா படைப்புக்களிலும் தனது நாட்டத்தை செலுத்தியவர் இவர். இவரது "A Night in Venice",  "The Gypsy Baron" ஆகியவை இன்றும் பலரால் பேசப்பட்டும் பயண்படுத்தப்படும் ஓப்பரா படைப்புக்கள்.


இசைத்துறைக்குச் சிறப்பு சேர்த்தோரைப் போல பல ஓவியக் கலைஞர்களும் ஆஸ்திரியாவில் பிறந்து உலகப் புகழ் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.  உதாரணமாக குஸ்தாவ் க்லிம்ட், அங்கெலிக்கா காவ்மான்  ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

Inline image 4
Klimt, Gustav (1862 - 1918)

குஸ்தாவ் க்லிம்டின் ஓவியங்களைப் பரவலாக ஐரோப்பாவின் பல நிதி நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் நான் பார்த்திருக்கின்றேன். இவர் ஆஸ்திரியாவின் வியன்ன்னா அருகில் உள்ள பாவ்ம்கார்ட்டன் பகுதியில் பிறந்தவர். 


Inline image 3

இவரது படைப்புக்கள் வர்ணக் கலவையாக பரிமளிக்கும். மொஸைக் வடிவில் புள்ளி புள்ளியாக வர்ணங்கள் உருவங்களை உருவாக்கி நிற்கும். பாத்திரப்படைப்புக்கள் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையினதாகவும் அமைந்திருக்கும். இணையத்தில் தேடினால் இங்கே அவரது படைப்புக்களாக உருவாகிய பல படங்களைக் காணலாம்.

Saturday, April 20, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 10


30.12.2012

நகருக்கு நடைப்பயணம்

ரோய்ட்ட நகருக்கு அருகாமையில் உள்ள சிற்றூரில் எங்கள் தங்கும் விடுதி இருந்தமையால்  ரோய்ட்ட நகருக்குள் சென்று அந்த நகரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. ஒவ்வொரு நாளும் பனிப் பாதை பயணம், அடுத்து ஏரன்பெர்க் மலைப் பயணம் என்று அமைந்து ரோய்ட்ட நகரின் அருகாமையிலுள்ள இடங்களுக்குச் செல்வதாகவே அமைந்திருந்தது எங்கள் பயணத்தின் முதல் சில நாட்கள். இதனால் இந்த நாளில் ரோய்ட்ட நகருக்குச் சென்று வருவோமே என முடிவு செய்து கொண்டோம். 

எங்கள் தங்கும் விடுதியிலிருந்து நகருக்குச் செல்ல  ஏறக்குறைய 5 கிலோ மீட்டர் தூரம் இருந்தது. ஆக இதனையும் ஒரு நாள் நடைப்பயணமாக வைத்துக் கொள்வோம் என முடிவாகியது.

அன்று பனித்தூரல் இல்லை. ஆனால் முதல் நாள் கொட்டிய புதிய பனி ஏற்கனவே இருந்த பனியின் மேல் கொட்டியிருந்ததில் அப்பகுதியே புதுப் பொலிவுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அன்று காலை வேளையில் சூரியனை மறைத்துக் கொண்டு மேக மூட்டமாக  இருந்தமையால் நகருக்கு நடந்து செல்லும் பாதையில் மக்கள் நடமாட்டமும் குறைவாகத் தான்  இருந்தது. கிராமத்திலிருந்து வெளியே வரும் போது பல பழம் வீடுகள். வீடுகள் ஒவ்வொன்றிலும் அதன் வெளிப்புற வெண்மையான சுவற்றில்  வெவ்வேரு வகையில் சில சித்திரங்களைத் தீட்டி வைத்திருக்கின்றனர். 


அவை கிராம மக்களின் தொழிலை விளக்கும் வகையிலும் அவர்களின் பழமையான உடைகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களாகவும் அமைந்து சாலையில் செல்வோருக்கு இவற்றைப் பார்த்துக் கொண்டே செல்ல ஆர்வத்தை அளிப்பவையாக அமைந்திருக்கின்றன. அழகுணர்ச்சியை எத்தனையோ வகைகளில் மக்கள் கலைவடிவங்களில் தங்களுக்கேற்ற வகையில் வெளிப்படுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கின்றனர் என்று யோசிக்க வைத்தது இக்காட்சிகள்.



ரோய்ட்ட நகர் மிகப் பழமை வாய்ந்த நகரம் என முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். இங்கே இன்னகரின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் சில கட்டிடங்கள் இன்னமும் அதன் பழமை சிறப்பு மாறாமல் பாதுகாக்கப்படுவது பற்றி சுற்றுலா கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தமையால் அதில் உள்ள விஷயங்களை வரிசையாகப் பார்த்து வருவோம் என் முடிவெடுத்துக் கொண்டோம். முதலில் 5 கிமீதூரம் நடந்து வந்த களைப்பு தீர ஒரு ரெஸ்டாரண்டில்  காபி வாங்கி அருந்தினோம். அந்தக் குளிருக்கு சூடான காப்பி இதமாக இருந்தது.

பயணக் கையேட்டில் குறிப்பிட்டிருந்த வகையிலேயே கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டு நடந்தோம். Untermarkt  பகுதியில் தொடங்கும்  போது ஒரு கிணறு முதலில் தென்படுகின்றது. 1901ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கிணறு. இன்னமும் இது குடிநீருக்காகப் பயன்படுத்தப்படும் கிணறாக உள்ளது. 

அடுத்து உடனே வருவது ஹோட்டல் மோரென். இது 1765ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடம். முதலில் கட்டியவரின் பெயரிலே இந்த ஹோட்டலின் பெயர் இது வரை அமைந்திருந்தாலும் இதன் உரிமையாளர்கள் மாறிவிட்டனர் என்ற குறிப்பை வாசித்துக் கொண்டேன்.



இதற்கு பக்கத்திலேயே டவ்கர் ஹ்வுஸ் Tauscher Haus  எனும் கட்டிடம் வருகின்றது.  18ம் நூற்றாண்டு பழமை கொண்ட இது அதில் உள்ள சுவர் சித்திரத்திற்காக புகழ் பெற்று விளங்குகின்றது. 

அன்னை மேரியின் இந்தச் சித்திரத்தை ரோய்ட்ட நகரின் அக்காலத்து புகழ் பெற்ற பாரோக் சித்திரக் கலைஞர் யோகன் ஜேக்கப் செய்லர் வரைந்திருக்கின்றார். 350 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தச் சித்திரம் இன்னமும் மிகத் தெளிவாக உள்ளது. 



இதைத் தொடர்ந்து சென்றால் 18ம் நூற்றாண்டு வரை உப்புக் கிடங்கு வைக்கப்பட்டிருந்த  ஒரு கட்டிடத்தை வந்தடைவோம். இது கிடங்கு என்ற நிலை மாறி தற்சமயம் பல கடைகள் இங்கே உள்ளே அமைந்திருக்கின்றன. 


இங்கு பார்க்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு கதை இருக்கின்றது. ஒவ்வொன்றுமே அதன் வடிவத்திலும் சரி அதன் சுவற்றில் தீட்டப்பட்டுள்ள சித்திரங்களிலும் சரி அது கொண்டுள்ள வரலாற்றுச் செய்தியிலும் சரி தனித்துவம் பெற்றே அமைந்திருக்கின்றன.

அடுத்து நேராக Grüner Haus என்ற பழமையானதொரு வீட்டினைக் கண்டோம். இது 16ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த வீடு.  இதில் தற்சமயம் ஒரு அருங்காட்சியகமும் அமைந்திருந்தது. நாங்கள்  திரும்பி வரும் வழியில் மீண்டும் இங்கு வந்து ஒரு காப்பியும் கேக்கும் சாப்பிட்டுத் திரும்பினோம். அருமையான Renaissance  சித்திரங்கள் இந்தக் கட்டிடத்தை முழுதுமாக அலங்கரிக்கின்றன.



இந்த நகருக்குள்ளேயே மூன்று சாலைகளில் நடப்பதற்குள்  5 தேவாலையங்களைப் பார்த்து விட்டோம்.  சிறிதும் பெரிதும் என பெரும்பாலும் 17ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவையாக உள்ளவை இவை. 

இப்படி ஒவ்வொரு கட்டிடமாகப் பார்த்துக் கொண்டே சுற்றுலா கையேட்டில் வழங்கப்பட்டிருந்த விளக்கங்களை வாசித்துக் கொண்டே பார்த்து வந்தோம். மெதுவாக மேகக் கூட்டம் கலைந்து சூரிய வெளிச்சம் வர பயணம் மேலும் சுவாரசியமாக இருந்தது. அன்றைய மதியப் பொழுதை ரோய்ட்ட நகரிலேயே கழித்த  பின்னர் மீண்டும் தங்கும் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

அன்று முழுமையாக ஏறக்குறைய 12 கி.மீ  தூர நடைப்பயணமாக அமைந்தது.  ரோய்ட்ட நகரின் கட்டிடக் கலையை ரசித்து வந்த்தில் அலுப்பு தெரியவில்லை. 












ரோய்ட்ட நகரச் சின்னம்







தொடரும்...

அன்புடன்
சுபா