Tuesday, June 7, 2016

அயர்லாந்தின் அழகில்...! மொஹீர் மலை 18

லிமெரிக் பகுதியில் பண்டைய ஈமக்கிரியை கல்திட்டை சின்னங்களைப் பார்த்து விட்டு எங்கள் பேருந்து பயணம் தொடர்ந்தது. இப்போது மழை சாரல் நின்று சற்றே வெயில் வர ஆரம்பித்திருந்தது. நாங்கள் அடுத்துச் செல்ல பயணத்தில் திட்டமிடப்பட்டிருந்த பகுதி மொஹிர் மலை உச்சி. எங்கள் பயணம் அயர்லாந்தின் மேற்கு பகுதியில் தொடர்ந்தது. 

அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒட்டிய நிலப்பகுதி அது. கடல் பகுதியிலிருந்து 214மீட்டர் உயரம் அமைந்த பகுதி. அயர்லாந்தின் சுற்றுலா தலங்களில் முக்கியமான இடமாகக் குறிப்பிடப்படுவது. 


இந்த உயரமான பகுதியில் அமைந்திருக்கும் பாறைகள் அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒட்டினார் போல அமைந்தவை. 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிறு ஆறுகள் பாய்ந்து ஓடும் நிலப்பகுதி இது. உறுதியான பாறைகளைச் சுற்றி மணற்கல் அழுத்தம் சேர்ந்து உருவாக்கப்பட்ட இயற்கை அமைப்பாக இது அமைந்திருக்கின்றது. 

இந்தப் பகுதியில் மட்டும் இருபது வெவ்வேறு வகையான 300,000 பறவைகள் வாழ்கின்றன என்று இங்குள்ள குறிப்புக்கள் சொல்கின்றன. 

எங்களை அழைத்து வந்த பேருந்து கீழடிவாரத்திலேயே நின்று விட நாங்கள் உள்ளே சென்று கட்டணம் கட்டி டிக்கட்டை பெற்றுக் கொண்டு இப்பகுதியைக் காணச் சென்றோம். காற்று மிகப் பலமாக வீசிக் கொண்டிருந்தது. உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இங்கே செல்ல வேண்டாம் என எங்கள் பயண வழிகாட்டி கூறியிருந்தார். 

சுற்றுப்பயணிகளைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. வீடுகளோ குடியிருப்புப் பகுதியோ ஏதும் இல்லை. வெட்ட வெளி. அட்லாண்டிக் சமுத்திரம், அந்தச் சமுத்திரத்தை அண்டிய பாறை நிலப்பகுதி, சில்லென்று வீசும் பலமான காற்று, பசுமையான புல்வெளி. 

ஏதோ புதியதொரு உலகத்திற்கு வந்து விட்டது போல மனதில் எண்ணம் தோன்றியது. 

மேலே செல்லச் செல்ல மலைப் பகுதியில் சமுத்திரத்தை அண்டிய பகுதிக்கு அருகில் வரை சென்று காணலாம். ஒரு அளவிற்கு மேல் செல்லக்கூடாது எனத் தடை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். காற்று பலமாக வீசும் போது மனிதர்களையும் காற்று அடித்துச் சென்று விடும் அபாயம் இருப்பதால் இத்தகைய ஏற்பாட்டினைச் செய்திருக்கின்றார்கள். 

நான் நீண்ட தூரம் பயணம் செய்து மலையுச்சியின் அழகையும் சமுத்திரத்தின் அழகையும் ரசித்தேன்.ஆயினும் காற்றின் அழுத்தம் மனதில் சிறு கலக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. எத்தனை ஆண்டு பழமையான அமைப்பு இது என எண்ணிப்பார்த்த போது உலகம், பேரண்டம், இந்தப் பேரண்டத்தில் உள்ள கோள்கள் என எல்லாமே என்னை வியக்கவைப்பதை மறுக்கமுடியவில்லை. எவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு துகள் போன்று நாம் இருக்கின்றோம் என்பதுவும், நமது நிலையாமையும், நிரந்தரமற்ற மனித வாழ்க்கையின் இயல்பையும் நினைத்துக் கொண்டேன். அதற்கு மாறாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே நிற்கும் இந்த மலைகளும் சமுத்திரங்களும் ஆறுகளும் அதன் பெருமையை வெளிப்படுத்திக் கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. 

மலை உச்சியில் இயற்கையின் பிரம்மாண்டத்தைப் பார்த்து ரசித்து விட்டு கீழே வரும் வழியில் ஒரு பெண்மணி ஐரிஷ் இசைக்கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். அவரது இசையை சிலர் ஓரமாக நின்று கேட்டு ரசித்து அவரது சிடிக்களை விரும்பியோர் வாங்கிக் கொண்டும் சென்றனர். 


அங்கே இரண்டு மணி நேரங்கள் செலவிட்டு இயற்கை அழகில் மனதைத் தொலைத்தபடி மீண்டும் பேருந்து இருக்கும் இடத்தை நோக்கி எங்கள் குழுவில் இருந்த அனைவரும் வந்து சேர்ந்தோம். எல்லோரும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் திரும்பியதில் எங்கள் பயண வழிகாட்டிக்கு மன திருப்தி இருந்தது முகத்தில் தெரிந்தது. மாலை வேளை நெருங்கிக் கொண்டிருந்தமையால் அங்கிருந்து புறப்பட்டு மேலும் தென் மேற்கு அயர்லாந்தில் எங்கள் பேருந்து பயணத்தைத் தொடர்ந்தது.











தொடரும்..
சுபா




Friday, June 3, 2016

டென்மார்க் பயணம் - 26-30 மே, 2016




எனது அண்மைய டென்மார்க் பயணம் எனக்கு தனிப்பட்ட வகையில் மிக மன நிறைவை தந்ததொரு பயணம். இதில் எனது நீண்ட கால விருப்பத்தைச் செயல்படுத்த முடிந்தது. 

டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோப்பன்ஹாகன் நகரில் முதலில் இறங்கும் முன் ஜெர்மனி தலைநகரம் பெர்லின் போன்று இருக்கலாம் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. விமான நிலையம் விட்டிறங்கி நகர மையம் சென்றடைந்ததும் இது தான் டென்மார்க்கின் தலைநகரமா? சரியான ஊருக்குத்தான் வந்துள்ளோமா என்ற சந்தேகம் வந்து விட்டது. 

ஏனென்றால் கோப்பன்ஹாகனில் நான் எதிர்பார்த்த அளவு மக்கள் கூட்டத்தை நெரிசலைக் காணவில்லை. இங்கே ஸ்டுட்கார்ட் நகரத்தில் இருக்கும் கூட்ட நெரிசல் அளவில்  கூட மக்களைக் காணவில்லை. 

டென்மார்க்கின் மொத்த மக்கள் தொகை 5 மில்லியன் தான் என்று அறிந்து கொண்டேன் 

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தால் சைக்கிள் பயணிகள் சர் சர்ரென்று பயணித்துக் கொண்டேயிருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் மைய சாலைகளில் சைக்கிள் பயணிகள். 

கோப்பன்ஹாகனில் டேனீஷ் அரசின் பெருமையைச் சொல்லும் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்குக் குறைவில்லை. உறுதியான ஆளுமையை அவை இன்றும் பறைசாற்றுகின்றன.  தூய்மையான நகரம்.
இங்கே பொது போக்குவரத்து என்பது பாராட்டும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகளும் ரயில் வண்டிகளும் வந்து விடுகின்றன. 

பொது மக்கள் மிக அன்பானவர்கள். எனக்குத்தான் இப்படி வாய்க்கின்றதோ என யோசிக்கும் வகையில் நான் சென்ற இடங்களிலெல்லாம் இனிமையாகப் பேசிப்பழகும் டேனிஷ் மக்கள். 

அதுமட்டுமா.. அங்கு சந்தித்த திரு ஆதவன் குடும்பத்தாரும், ஞானமலர் குடும்பத்தாரும் என்னை அன்பாகக் கவனித்துக் கொண்டதில் அவர்கள் வீட்டுப் பெண் போலவே ஆகிப்போன ஒரு அனுபவம் ஏற்பட்டது எனக்கு. என் கட்டுப்பாடான விடாப்பிடியான செயல்பாடுகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு என்னை இவர்கள் பார்த்துக் கொண்டனர் என்றே சொல்வேன். இவர்கள் அன்பை மறக்க முடியாது.

எங்கெங்கு காணினும் பசுமை. இயற்கை அழகை கூட்டும் கடற்கரையோரங்கள் .. துறைமுகப்பகுதிகள்.. கப்பல்கள்.. என மனதை இலகுவாக்கும் இயற்கை சூழல் நிறைந்த நாடு டென்மார்க். குட்டி குட்டி தீவுகள் ஆங்காங்கே.. எதனை ரசிப்பது எதனை விடுவது என திகைத்துத்தான் போனேன். 

மல்லேஸ்வரி, ஜனனி இருவருடனும் இன்னமும் கூட நேரம் செலவிட்டிருக்கலாம் என்றும் மனதில் தோன்றுகின்றது.. மீண்டும் வருவேன்.. விட்டுப் போன அருங்காட்சியகங்களையும் சுவடிகளையும் ஒரு காரணமாக வைத்துக் கொண்டு மீண்டும் வருவேன் :-)

Tuesday, May 24, 2016

அயர்லாந்தின் அழகில்...! ஈமச்சடங்கு கல்திட்டைகள் 17

மானுடவியல் கூறுகளை ஆராய முற்படும் போது உலகமெங்கிலும் உள்ள மக்களிடையே பல்வேறு ஒற்றுமைக் கூறுகள் இருப்பதைக் கண்டறிய முடிவதோடு மக்கள் சிந்தனைகளிலும் பல விசயங்களில் ஒற்றுமை இருப்பதைக் காண்கின்றோம். அடிப்படையில் எங்கிருந்தால் என்ன? மனித இனம் என்பது, பௌதிக கோட்பாடுகளின் அடிப்படையில் ஹோமோ செப்பியன்கள் என்ற இனத்தினிலிருந்து கிளைத்தவர்கள் தானே. 

இப்படி பொதுக்கூறுகளை, அதிலும் பண்டைய மக்களின் வாழ்வியல் கூறுகளில் காணும் போது, குறிப்பாக ஒரு சில விசயங்களில் இருக்கின்ற ஒற்றுமைகள் என்பன, இவ்வகை ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக்கு ஆச்சரியத்தை அளிக்கத்தவருவதில்லை, எனது பல பயணங்களிலும் சரி, அருங்காட்சியகத் தகவல் சேகரிப்புக்களிலும் சரி, மானுடவியல் சார்ந்த அருங்காட்சியகங்களில் பொதுவாக வாழ்விடங்கள் அமைத்தல், வாழ்வியலில் அடங்கும் பல்வேறு சடங்குகள், ஈமக்கிரியைச் சடங்குகள், விவசாயம், இறப்புக்குப் பின் மனித உடல் என்பன போன்ற விசயங்களில், பல ஒற்றுகள் பல இனங்களுக்கிடையே இருப்பதைக் கண்டிருக்கின்றேன். அப்படி ஒரு ஆச்சரியத்தை அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்திற்குச் சென்ற போது நேரில் பார்த்து வியந்தேன். 

எங்களின் பயணத்தில் அடுத்ததாக அமைந்தது லிமெரிக் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கற்கால ஈமச்சடங்கு கல்திட்டைக்கான பயணம். போல்னப்ரோன் (Poulnabrone) என அழைக்கப்படும் இந்தச் சின்னம் அயர்லாந்தின் பாதுகாக்கப்படும் அறிய தொல்பொருள் சின்னங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. 

அயர்லாந்தின் மேற்குப் பகுதியில் பரவலாக இவ்வகையான ஈமச்சடங்கு கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 90 கல்திட்டைகள் அடையாளம் காணப்பட்டு தொல்பொருள் சின்னங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதே போன்ற கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவிலும் இருப்பதாகவும் இவை நியோலித்திக் காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் என்றும் அங்கிருந்த தகவல் பலகையிலிருந்து அறிந்து கொண்டேன். 

இவ்வகை கல்திட்டைகளின் வடிவங்கள் குறிப்பிட்ட வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு நிற்கும் தூண்கள். அதற்கு மேலே படுக்க வைத்தார்போன்ற அமைப்பில் கூரை போல ஒரு கல்திட்டை வைக்கப்பட்டிருக்கும். முன் பகுதியில் வாசல் போன்ற அமைப்புடன் இது காட்சியளிக்கும். இறந்தவரின் உடல் இதன் கீழ் புதைக்கப்பட்டு வைக்கப்படும். சமாதி போன்ற ஒரு அமைப்புதான் இது! 



இவ்வகையான சமாதிகளில் இறந்தவர் உடலை வைத்துப் புதைக்கும் போது அங்கே அவருக்குப் பிடித்த, அவர் பயன்படுத்திய, அவர் சென்றிருக்கும் புதிய உலகத்தில் அவர் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வைக்கப்படும் பொருட்கள் என அனைத்தும் சேர்த்து வைத்துப் புதைக்கப்படுவது இதன் அடிப்படை அம்சம். இதே ஈமச்சடங்கு கூறுகள் எகிப்து, சூடான், ஆப்பிரிக்கா, இந்தியா, ஐரோப்பா, என நமக்குக் கிடைக்கின்ற இவ்வகை ஈமச்சடங்கு சின்னங்களின் எச்சங்களின் வழி அறிய முடிகின்றது. ஏறக்குறைய எல்லா இனங்களிலுமே இவ்வகையான சமாதிகளுக்கு வந்து இறந்தோரை நினைத்து வழிபடுவது என்பதும் வழக்கத்தில் இருக்கின்றது என்பதும் வியப்பளிக்கும் செய்தியே. 



போல்னப்ரோன் கல்திட்டையை அயர்லாந்து அரசு பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச்சின்னமாக அறிவித்து இப்பகுதியை முழுமையாகப் பாதுகாத்துள்ளது. இப்பகுதியில் கல்திட்டைகள் என்றால் என்ன, இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வு நிலை, நியோலித்திக் கால சூழல், இங்கு வந்து குடியேறிய மக்கள், ஈமச்சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் ஆகிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. 

இது சுற்றுப்பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக இருப்பதால் இங்கே சில கடைகளும் இருக்கின்றன. அங்கே இரும்பு, வெள்ளி ஆகிய உலோகங்களில் காதணிகள், அலங்காரப்பொருட்கள் ஆகியன செய்யும் ஒரு பகுதிக்குச்சென்றேன். அங்கே கெல்ட் குறியீடு ஒன்றினை தேர்ந்தெடுத்து, அதில் இரும்பில் ஒரு காதணி செய்ய வைத்து வாங்கிக் கொண்டேன். ஏறக்குறைய 15 நிமிடத்தில் நான் தேர்ந்தெடுத்த வடிவத்தில் ஒரு ஜோடி அழகான காதணி ஒன்றை அந்த வியாபாரி எனக்கு செய்து கொடுத்தார். 



இங்கு நான் கண்ட கல்திட்டைகள் போன்ற கற்காலச் சின்னங்களை நான் 2012ம் ஆண்டு தமிழகத்தின் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள மல்லச்சத்திரம் பகுதிக்குச் சென்றிருந்தபோது பார்த்தேன். அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்தில் நான் பார்த்த கல்திட்டை வடிவத்தை ஒத்த வகையிலேயே இங்கே மல்லச்சத்திரத்திலும் சிறு வேறுபாட்டுடன், ஆனால் அதே வடிவில் என, பல கல்திட்டைகள் இங்கே இருக்கின்றன. முன்பு 200க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் இங்கே மல்லச்சத்திரத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் தற்சமயம் ஏறக்குறைய 20 கல்திட்டைகளைத்தான் காணமுடிகின்றது. ஆயினும் கூட இப்பகுதி இன்னமும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னமாக அடையாளம் காணப்படவில்லை என்பதும், இங்கு வந்து போகும் பொதுமக்கள் இக்கல்திட்டைகளைச் சேதப்படுத்தியும் அவற்றின் கூரைகளைப் பெயர்த்துக் கொண்டுபோய் தங்கள் வீடுகளில் ஏதாவது ஒரு காரியத்திற்குப் பயன்படுத்துவது என்பது நிகழ்வது வேதனைக்குறியது. 







அயர்லாந்தில் வரலாற்று புராதனச் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு அவை அந்த நிலத்து மக்களின் வரலாற்றைச் சொல்கின்ற அடையாளமாக மதிக்கப்படுகின்றது. இந்த நிலை இன்னமும் தமிழகத்தில் பெருவாரியாக ஏற்படவில்லை என்பது நிதர்சனம்! இது மாற வேண்டும். தொல்லியல் வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட பெருவாரியான அளவில் வேண்டும் என்பதே எமது அவா! 


தொடரும்.. 
சுபா

Friday, May 20, 2016

அயர்லாந்தின் அழகில்...! அயர்லாந்து உணவு வகை - 16

அயர்லாந்தில் இருந்த முதல் மூன்று நாட்களும் எனக்கு ஏறக்குறைய உள்ளூர் உணவு பற்றிய சிறு அறிமுகம் ஆகியிருந்தது. அதில் நான் மிக சலித்துக் கொண்ட உணவு என்றால் அது காலை உணவு தான். எப்போதும் வெள்ளை ரொட்டித்துண்டுகள், அவற்றிற்கான பட்டர், ஜாம், அவித்த பீன்ஸ், அவித்து எண்ணெயிலோ நெய்யிலோ வாட்டிய உருளைக்கிழங்குகள்.. என்றே மூன்று நாட்களைக் கழித்திருந்தேன். அசைவப்பிரியர்களுக்குப் பன்றி இறைச்சியைப் பதப்படுத்தி சமைத்தும் வைத்திருந்தார்கள். இது இங்கிலாந்தின் காலை உணவேதான். அயர்லாந்திலும் இது ஒட்டிக் கொண்டு விட்டது போலும். முதல் நாள் சாப்பிடவே பிடிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்கள் சலிப்பில்லாமல் ஏதோ கடமைக்குச் சாப்பிடுகின்றோம் என்று சாப்பிட ஆரம்பித்து விட்டேன். பிடிக்காத மனிதர்களைக் கூட சில வேளைகளில் சில காரணங்களுக்காக நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொள்கின்றோமே.. அப்படித்தான்!

ஐரீஷ் மக்கள் விரும்பிச் சாப்பிடும் பாரம்பரிய உணவுகள் சிலவற்றை பற்றி அறிந்து கொண்டேன். அவற்றைப் பற்றி இன்றைய பதிவில் சொல்கிறேன்.

மிக முக்கிய உணவாக அமைவது கேபேஜோடு சேர்த்துச் சமைத்த பன்றி இறைச்சி சமையலும் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி, காரட் போட்டுத் தயாரிக்கும் சூப்பும் என்று சொல்லலாம். அயர்லாந்தில் விஸ்கியும் கின்னஸ் மதுபானமும் புகழ்பெற்றவை என்பதால் சமையலிலும் மதுபானத்தைக் கலந்து சமைக்கும் வழக்கம் இந்தப் பாரம்பரிய உணவில் உண்டு.

ஏறக்குறைய ஒவ்வொரு நாள் சமையலிலும் ஏதோ ஒரு வகையில் உருளைக்கிழங்கு இடம்பெறுவதையும் பார்த்தேன். அவித்த உருளைக்கிழங்கை அப்படியே, அல்லது அவித்த உருளைக்கிழங்கை நெய்யில் வாட்டியோ, அல்லது எண்ணையில் பொரித்தோ, அல்லது அவித்த உருளைக்கிழங்கை மென்மையாக அரைத்தோ அல்லது ஃப்ரென்ச் ப்ரைஸ் போன்றோ... உருளைக்கிழங்கு இல்லாத சமையலில்லை என்ற வகையில் ஐரீஷ் சமையல் இருக்கின்றது. ஆசிய உணவு வகையில் இருப்பது போல அரிசி முக்கிய உணவு அல்ல என்பதால் அரிசிக்குப் பதிலாக உருளைக்கிழங்கு அந்த இடத்தை நிரப்பி விடுகின்றது.





நான்காம் நாள் காலையில் கோல்வேயிலிருந்து நாங்கள் புறப்பட்டு (County Limerick) லிமெரிக் மாவட்டம் நோக்கிப் பயணித்தோம். போகும் வழியில் சில தேவாலயங்களையும் கோட்டைகளையும் பார்த்துக் கொண்டே சென்றோம்.ஓரிடத்தில் சந்தை போட்டிருந்தார்கள் அங்கே தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. அது உழவர் சந்தை. அங்கே சில பெண்மணிகள் சமையல் செய்து கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டும் இருந்தனர்.

நமக்கு நன்கு பழக்கமான சமோசா வகையில் சில உணவு பதார்த்தங்கள் கிடைத்தன அவற்றுள் கீரையை வைத்தும் உருளைக்கிழங்கைச் சமைத்து வைத்தும் தயாரித்திருந்தார்கள். பார்க்கும் போதே ஆவலைத்தூண்டுவதாக இருந்தமையால் அதில் சில வாங்கிக் கொண்டேன். சுவை நன்றாகவே இருந்தது.





அயர்லாந்தில் செம்மறி ஆடுகள் மிக அதிகம் என்றும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மாடுகளும் அதிகம் என்பதால் இங்கே பால், சீஸ், தயிர் போன்ற பதார்த்தங்களுக்கும் குறைவேயில்லை. செம்மறி ஆட்டின் இறைச்சியையும் உள்ளூர் மக்கள் சமைத்துச் சாப்பிடுகின்றனர்.

எனக்கு மாலை உணவும் மதிய உணவும் பெரும்பாலும் உருளைக்கிழங்கு வகையறாக்கள், கீரைக் காய்கறி பதார்த்தங்கள், சூப் என்பதோடு இத்தாலிய உணவுகளையும் சாப்பிட்டதால் சமாளிக்க முடிந்தது.

இத்தாலிய உணவான பாஸ்டா, ஸ்பெகட்டி போன்றவை சற்று ஆசிய உணவுகளின் சுவையை ஒத்திருப்பதால் இத்தகைய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டதால் பயணத்தில் உணவுக்குக் கஷ்டப்படும் நிலை ஏற்படவில்லை. அயர்லாந்தில் சைவ உணவுக்காரர்களுக்கு உணவு விஷயத்தில் பிரச்சனை இல்லை. எல்லா உணவகங்களிலும் நல்ல காய்கறி உணவுகள் நன்கு கிடைக்கின்றன.
















தொடரும்..

சுபா

Wednesday, May 18, 2016

அயர்லாந்தின் அழகில்...! வண்ணக் கோலங்கள் 15

மதியம் உணவு வேளையைக் கடந்து ஏறக்குறை இரண்டரை மணி வாக்கில் கோல்வே நகரின் மையப்பகுதியை வந்தடைந்தோம். மழைத்தூறல் இன்னமும் இருந்ததால் அனைவருமே மழைக்கோட் அணிந்து கொண்டும் குடைகளை ஏந்திக் கொண்டும் நடக்க வேண்டியதாக இருந்தது. எங்கள் பயண வழிகாட்டி அயர்லாந்தில் வருஷம் முழுவதும் மழை பெய்வதால் எப்போதும் குடையுடனே செல்வதுதான் உதவும் என்று கூடுதலாக அழுத்தம் தந்து சூழலை விளக்கினார்.




சுற்றிப்பார்க்கச் செல்லும் போது எப்போதுமே நல்ல வெயிலாக இருந்தால் பார்க்க வேண்டியனவற்றைப் பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் ஏதுவாக இருக்கும். ஆனால் மழை பெய்ய ஆரம்பித்து விட்டாலோ மழையிலிருந்து நம்மை நனையாமல் பார்த்துக் கொள்ள கவனம் எடுப்பதில், பார்க்க வேண்டியனவற்றில் பலவற்றை தவற விடக்கூடிய சந்தர்ப்பமும் நிகழ்ந்து விடும். இது சற்று கவலையையும் தரத்தானே செய்யும்.


​ 

என்னுடன் வந்த ஏனைய ஜெர்மானிய பயணிகள் பேருந்துப் பயணத்தின் போதே மழையை நினைத்து புலம்பிக் கொண்டே வந்தனர். "இந்த வாரத்தில் சுற்றுலா பதிவு செய்தது பெரிய தவறாகிவிட்டது" எனப் பலர் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டே வந்தனர். இந்தக் குறைபாடுகளைக் கேட்ட எங்கள் பயண வழிகாட்டிச் சொன்னார். ஜெர்மானிய மக்களின் இயல்பு, எப்போதும், "இன்னும் கூட சரியாகச் செய்திருக்கலாமோ" என்றே இருக்கும். ஆனால் அயர்லாந்து மக்களின் இயல்போ இதற்கு மாற்றாக " இதற்கு மேல் மோசமாக இல்லாமல் இருக்கின்றதே - இதுவே பரவாயில்லை" என்பதாக இருக்கும் என்று சொன்னபோது ஏனைய ஜெர்மானிய சுற்றுப்பயணிகள் இதனை ஒப்புக் கொண்டனர்.

​ 

ஆக "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழமொழிக்கு ஏற்ப மனதில் எல்லாச் சூழலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டால் ஏமாற்றம் நம்மை அதிகமாகத் தாக்காது என்பதை இந்த இரண்டு சமூகங்களுக்கிடையேயான அடிப்படை குண நலன்கள் பற்றிய விளக்கம் நன்கு புரியவைப்பதை நேரிலேயே அறிந்து கொண்டேன்.


​ 


kooல்வே நகரில் ஒரு உணவகத்தில் மதிய உணவை சப்பிட்டு விட்டு சாலையோரத்தில் நடந்து சென்று ரசித்துக் கொண்டிருந்தோம். டப்ளினை விட இங்கே ஒவ்வொரு கடையும் வீடுகளும் வண்ண வண்ண கோலத்தில் கண்களைக் கவர்வதாக அமைந்திருந்தன.


​ 
வீட்டுக்குப் பூசப்பட்ட வர்ணங்கள் மிகக் கவர்ச்சியான வர்ணங்களாகவும் சாலையில் போவோரைத் திரும்பிப்பார்க்க வைக்கும் வகையிலும் இருந்தன. சில கட்டிடங்களில் ஓவியங்கள் வரைந்து அவை சாலையில் வருவோர் போவோர் நின்று பார்த்துச் செல்லும் வகையில் அமைந்திருந்ததையும் கவனித்து ரசித்தேன்.


​ 


கால்வே நகரிலே ஒரு இந்திய உணவகமும் இருக்கின்றது. அங்கே வரும் சுற்றுப்பயணிகளுக்காக இது இருக்குமா அல்லது இங்கே கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்களும் இருப்பார்களா என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. ஆயினும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்திய உணவு ஆங்கிலேயர்களின் அன்றாட உணவில் இணைந்து ஒன்றாக விட்டது என்பதும் வீட்டிலேயே கூட ஆங்கிலேய மக்கள் இந்திய உணவுகளைச் சமைத்து சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஆனால் அயர்லாந்தில் இன்னமும் அந்த அளவிற்கு இந்திய உணவு பயன்பாடு விரிவடைந்திருக்குமா என யோசனை இருந்தது. எங்கள் பயண வழிகாட்டியிடம் கேட்ட போது பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கிலேயர்கள் இந்திய உணவுகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் அயர்லாந்து ஐரீஷ் மக்கள் இன்னமும் இந்திய உணவுக்கு அதிக அளவில் அறிமுகம் பெறவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.



சாலைகளின் பல பகுதிகளைச் சுற்றிப்பார்த்த பின்னர் ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் அமர்ந்து காப்பி சாப்பிட்டு விட்டு பேருந்து இருக்கும் இடம் நோக்கி வரும் போது மாலை ஆறு ஆகியிருந்தது. அன்றைய நாள் நல்ல முறையில் திருப்திகரமாக அமைந்த மகிழ்ச்சியில் மறு நாள் நிகழ்ச்சிகளை எண்ணி மகிழ்ந்திருந்தது என் மனம்.


தொடரும்

சுபா

Tuesday, May 17, 2016

அயர்லாந்தின் அழகில்...! கில்மோர் அபேய் (Kylemore Abbey) 14

கோல்வே மாவட்டத்தில் உள்ள கோன்னிமாரா நகர் கில்மோர் அபேய் மாளிகைக்காகவே புகழ்பெற்றது என்பது மிகையன்று. ஆங்கில திரைப்படங்களில் நாம் காணும், பெரும் காட்டுக்குள் இருக்கும் மனிதர்கள் அற்ற மாளிகை போன்று தான் எனக்கு இந்த மாளிகையைப் பார்த்த முதல் கணம் எண்ணம் தோன்றியது. சுற்றிலும் பச்சை பசேல் என மரங்கள் சூழ ஒரு பெரிய ஏரியைப் பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கில்மோர் மாளிகை.



இது மாளிகை என்ற போதிலும்கன்னிகாஸ்திரிகள் மடம் என்பது தான் இதற்குப் பொருந்தும். இந்த மாளிகையை முதலில் தனக்காக கட்டிக் கொண்டவர் மிட்சல் ஹென்ரி என்ற பெரும் பணக்கார மருத்துவர். இவர்களது குடும்பம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் லாபத்தை ஈட்டியவர்கள். மிட்சல் ஹென்ரியும் அவர் மனைவி மார்கரெட்டும் இப்பகுதியில் இந்த நிலத்தை தமக்காக வாங்கிய பின்னர் இந்த மாளிகையைக் கட்டி அமைத்தனர். இதன் அருகாமையில் விக்டோரியன் ஸ்டைல் பூந்தோட்டம் ஒன்றையும் இவர்கள் அமைத்தனர். இந்தப் பகுதியை வடிவமைக்க 300,000 மரங்களையும் செடிகளையும், அதிலும் இப்பகுதியில் வளரக்கூடிய தன்மை கொண்டவையாகத் தேர்ந்தெடுத்து வாங்கி அக்காலத்திலேயே அதாவது 1880ம் ஆண்டுகளில் இவர்கள் இம்மாளிகையையும் நந்தவனத்தையும் அமைத்து உருவாக்கினர் என்பது வியப்பாக இருக்கின்றது அல்லவா?

ஏறக்குறை 40,000 அடி பரப்பளவைக் கொண்டது இந்த மாளிகை. இதில் 70 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் பிரத்தியேகமான அலங்காரத்துடன் இன்னமும் இருக்கின்றன. தனது மனைவி மார்கரெட் மறைந்த போது அவர் நினைவாக ஹென்ரி ஒரு தேவாலயத்தையும் அருகிலேயே அமைத்திருக்கின்றார். பின்னர் இவர் இங்கிலாந்து மாற்றலாகி வந்து விட்டார்.

​ 

அதற்குப்பின் மான்செஸ்டர் பிரபுவும் அவரது மனைவியும் இந்த மாளிகையை வாங்கினாலும் அதீத கடனால் அவர்கள் இந்த மாளிகையை விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. 1920ம் ஆண்டில் அயர்லாந்தின் பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகள் இந்த மாளிகையை வாங்கினர். இந்த பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகல் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒய்ப்ரெஸ் நகரில் 1600கள் தொடங்கி பெண்களுக்கான கன்னிகாஸ்திரிகள் பாடசாலையை நடத்தி வந்தனர். முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் பெரும் சேதத்தை இவர்கள் சந்திக்கவே அமைதியை நாடி ஓரிடத்தைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த இடம் புகலிடமாக அமைந்ததால் இப்பகுதியை மேன்சஸ்டர் பிரபுவிடமிருந்து வாங்கிக் கொண்டு இங்கே கன்னிகாஸ்திரிகள் மடத்தையும் கல்விக்கூடத்தையும் அமைத்தனர்.

பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகள் தங்கள் மடத்தில் அனைத்துலக உயர்கல்வி மையம் ஒன்றைத் தொடங்கினர். இந்த மாளிகையின் சில அறைகளை வகுப்பறைகளாக மாற்றினர்.

அக்காலகட்டத்தில் இரண்டு இந்திய இளவரசிகள் இங்கே வந்து கல்வி கற்றிருக்கின்றனர் என்ற செய்தியை புகைப்படத்தோடு இந்த மாளிகையில் பார்த்த போது ஆச்சரியப்பட்டேன். 1920ம் ஆண்டில் இந்திய இளவரசர் ரஞ்சிட்சிங்ஜி அயர்லாந்தின் பாலினாஹிச் மாளிகையை வாங்கினார். மன்னர் ரஞ்சித்தின் மகள்களான இளவரசி ராஜேந்திர குமாரியும் இளவரசி மன்ஹேர் குமாரியும் இந்த கில்மோர் மாளிகை கன்னிகாஸ்திரிகள் கல்விக்கூடத்தில் உயர்கல்வி படிக்க 1923ம் ஆண்டில் இங்கே வந்தனர், 1930ம் ஆண்டில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இங்கே வைத்திருக்கின்றார்கள்.




இன்றைய சூழலில் கில்மோர் மாளிகையைச் சுற்றுப்பயணிகள் வந்து பார்க்க அனுமதித்திருக்கின்றனர். அதற்கு தனிக்கட்டணமும் வசூலிக்கின்றனர்.

எங்களைப் பேருந்து இங்கே அழைத்து வந்த சமயம் மழைத்தூறல் ஆரம்பித்து விட்டது. ஆக முதலில் மாளிகைக்குச் சென்று அதன் வரலாற்றை அறிந்து கொள்வதில் சிறிது நேரம் செலவிட்டோம். அதன் பின்னர் தன் மனைவிக்காக ஹென்ரி கட்டிய தேவாலயத்தைப் பார்த்து அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பூங்கா பகுதிக்குச் சென்றோம்.

​ 

மழைத்தூறல் விடுவதாக இல்லை. ஆயினும் மழை இந்தப் பூங்காவை ரசிப்பதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்று மழை ஜேக்கட் போட்டுக் கொண்டு பூங்காவிற்குள் இறங்கி நடந்து அதன் அழகை ரசித்தேன். ஆங்காங்கே புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன்.






அன்றைய நாளில் நாங்கள் நான்கு மணி நேரங்களை கோல்வே நகரில் செலவிடலாம் என்றும் விரும்புவோர் அங்கேயே மதிய உணவும் சாப்பிடலாம் என்றும் எங்கள் பயண வழிகாட்டிக் கூறவே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் முடிவடையும் நேரம் வரவே பேருந்துக்கு விரைந்து சென்று அடுத்த இலக்கை நோக்கி பயணமானோம். 

Wednesday, May 11, 2016

அயர்லாந்தின் அழகில்...! கோல்வே நகரில் - 13

காலையில் டப்ளின் நகரிலிருந்து தொடங்கிய எங்கள் பயணம் பின்னர் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் சுற்றிப்பார்த்தல் என்பது மட்டுமல்லாது இடையில்  அயர்லாந்தின் மேலும் சில புற நகர்ப்பகுதிகளையும் மதிய உணவு வேளையில் பார்க்கும் வாய்ப்புடன் அமைந்திருந்தது.



 நாள் முழுதும் பயணம் என்ற நிலையில், தங்கும் விடுதிக்கு வந்த போது மிகுந்த களைப்புடன் எல்லோரும் இருந்தாலும் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த பகுதியில் சுற்றிப் பார்த்து வரலாம் என்ற எண்ணமும் இருந்ததால் மாலை ஏழு மணி வாக்கில் மீண்டும் சந்தித்து வெளியே சேர்ந்தே எல்லோரும் செல்வோம் எனப் பேசிக் கொண்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டோம்.



எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதி மிக ரம்மியமான ஒரு கிராமப்பகுதியை ஒட்டிய சிறு நகரில் அமைந்திருந்தது. அருமையான நான்கு நட்சத்திர தங்கும் விடுதி அது. மாலையில் மீண்டும் அனைவரும் சந்தித்து மாலை உணவு உண்ண சேர்ந்து நடந்தே சென்றோம்.




அந்தப் பயணக்குழுவில் வந்திருந்த ஏனைய அனைவருமே ஜெர்மானியர்கள் தாம். அவர்களுடன் பல தகவல்களைப் பேசிக் கோண்டு சென்று மாலை உணவு சாப்பிட்டு வந்த போது ஒருவரைப் பற்றி மற்றொருவர் மேலும் அறிந்து கொள்ள முடிந்தது.




மறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பயணமானோம்.

கால்வே நகர் அழகியதொரு நகரம். டப்ளின் போல வாகன நெரிசல் இல்லையென்றாலும் இது அயர்லாந்தின் முக்கிய ஒரு வர்த்தக நகரம் என்ற சிறப்பை பெற்றது.கேல்டாஹ்ட் (Gaeltacht)  பகுதியின் தலைநலைகர் என்ற சிறப்பும் பெற்றது. கேல்டாஹ்ட் பகுதி ஐரிஷ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி என அடையாளப்படுத்தப்படும் பகுதி. கலை, இசை, ஓவியம் என்ற வகையில் பிரசித்தி பெற்ற நகரம் இது என்பதும் கூடுதல் செய்தி.

13ம் நூற்றாண்டில் ஆங்லோ-நோர்மன் டி பர்கோ குடும்பத்தினர் இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்னர் நோர்மன் இனக்குழுவினரின் ஆதிக்கத்தில் இப்பகுதி வந்தது. இப்பகுதியை பதினான்கு குடும்பங்கள் பிரித்து ஆட்சி செய்ததால் இது City of tribes என்றும் குறிப்பிட்டு அழைக்கப்பட்டது.15ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அயர்லாந்தின் ஏனைய பகுதி ஆட்சியாளர்கள் இங்கிலாந்தின் ஆட்சிக்கு எதிராகப் போர் கொடி உயர்த்திய போது  கால்வே எந்த எதிர்ப்பையும் காட்டாமல் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு உட்பட்டு அமைதியாக இருந்தது.   பின்னர் படிப்படியான வளர்ச்சியை பெற்றதோடு அண்டை நாடுகளான ஸ்பெயின், பிரான்சு போர்த்துக்கல் ஆகிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை விரிவு படுத்தி இந்த நகரம் தனித்துவத்துடன் செழித்து வளர்ந்தது,

அன்றைய நாளில் காலையில் கால்வே நகரில் ஒரு மணி நேரம் சுற்றிப்பார்க்க எங்களுக்கு பயண வழிகாட்டி அனுமதி அளித்திருந்தார்.  நகரின் மையப்பகுதியில் நடந்து சென்று கடைவீதிகளில் சிலர் நினைவுச் சின்னங்களை வாங்கிக் கொண்டனர். நான் மனதிற்குப் பிடித்த காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.




எங்கள் பேருந்து தொடர்ந்து கில்மோர் அபேய் (Kylemore Abbey)  மாளிகையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

தொடரும்

சுபா

Tuesday, May 10, 2016

அயர்லாந்தின் அழகில்...! க்ளோன்மெக்னோய்ஸ் மடம் -12

ஷானன் பகுதியில் ஒஃபேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் செயிண்ட் சியேரன் அவர்களால் கி.பி.544ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. செயிண்ட் சியேரன்  இப்பகுதிக்கு வந்தடைந்தபோது இங்கே கத்தோலிக்க மதம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இங்கே செயிண்ட் சியேரன்   சந்திந்த  Diarmait Uí Cerbaill அவர்களின் உதவியுடன் இந்தப் பகுதியில் முதல் தேவாலயத்தைக் கட்டினார். முதலில் கட்டப்பட்ட தேவாலயம் சிறிய வடிவில் மரத்தால் அமைக்கப்பட்ட வடிவினைக் கொண்டது. அதனைச் சுற்றி சிறிய சிறிய தேவாலயங்களை இவர் அமைத்தார். Diarmait Uí Cerbaill இப்பகுதியில் செல்வாக்குள்ளவராகத் திகழ்ந்தார்.  கத்தோலிக்க மடத்தை அமைத்து Diarmait Uí Cerbaill யை அயர்லாந்தின் முதல் அரசராக  பட்டம் சூட்டி அமர்த்தினார் செயிண்ட் சியேரன் . அதே ஆண்டில் தனது 33வது வயதைடையும் முன்னரே வெகுவாக அப்பகுதியைத் தாக்கிய ப்ளேக் நோயினால் உடல் நலிவுற்று, செயிண்ட் சியேரன் அவர்கள் மறைந்தார். இவரது சமாதி இவர் அமைத்த முதல் தேவாலயத்தின் கீழேயே அமைக்கப்பட்டது.




இந்தத் தகவலைக் கேள்விப்பட்டபோது  தமிழக மன்னர்கள் அல்லது சாதுக்களுக்காக அமைக்கும் பள்ளிப்படை கோயிலும் நினைவாலய அமைப்பும் என் நினைக்கு வந்தது. சமய குருமார்களின் சமாதிக்கு மேல் ஆலயம் எழுப்பும் ஒரு பண்பு 6ம் நூற்றாண்டு வாக்கில்  அயர்லாந்திலும் இருந்திருக்கின்றது. இதனை என்ணிப் பார்க்கும் போது பொதுவாகவே மக்கள் சமய நெறியில் உயர்ந்தோர் இறக்கும் போது அவர்களின் பூத உடலை புதைத்து அவர் நினைவாக அவர்கள் வழிபடும் தெய்வ வடிவங்களை வைத்து போற்றி வழிபடுவது அந்த சமயப் பெரியவருக்கு அவர்கள் வழங்கும் மரியாதையாகக் கருதுகின்றனர் என்பதையும் உலகின் பல சமூகங்களில் இத்தகையச் சிந்தனை ஒற்றுமை மனிதர்களுக்கிடையே சமய, இன பேதம் கடந்து எழுவதையும் காண முடிகின்றது.

அடிப்படையில் மனிதர்கள் எல்லோருக்குமே இன மொழி வேறுபாட்டுடன் அவர்கள் எங்கேயிருந்தாலும் கூட மனிதர்களுக்கிடையே பற்பல ஒற்றுமைகள் இருப்பதை மானுடவியல் கூறுகளைக் கவனிக்கும் போது தெளிவாகக் காண முடிகின்றது.




க்ளோன்மெக்னோய்ஸ் மடம் பல இன்னல்களுக்கு ஆளானது என்பதை இங்குள்ள அருன்காட்சியகத்தின் குறிப்புக்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.  தொடர்ந்து ப்ளேக் நோய் தாக்கியதால் மடத்தில் தங்கியிருந்த மாணவர்களில் பலர் நோயினால் வாடி மறைந்தனர். ஆயினும் இந்த மடம் 8ம் நூற்றாண்டு தொடங்கி 12ம் நூற்றாண்டு வரை விரிவான வளர்ச்சி கண்டது. இப்பகுதியை ஸ்கேண்டினேவியாவிலிருந்து வந்த வைக்கிங் என்று ஆங்கிலத்தில் நாம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் குறைந்தது ஏழு முறையாவது தாக்கியுள்ளனர்.  அதுமட்டுமல்லாது ஐரிஷ் படை 27 முறை இப்பகுதியில் தாக்குதல் நடத்தியும் இது வீழ்ச்சியடையவில்லை. கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் இங்கிருந்த மரக்கட்டிடங்கள் மாற்றம் செய்யப்பட்டு இங்கு கற்கோயில்கள் உருவாக்கப்பட்டன.




இந்த மடாலயம் இருக்கும் பகுதியில் ஒரு கேத்திட்ரல், ஏழு தேவாலயங்கள், 3 பெரிய கற்சிலுவைகள் மற்றும் இறந்தோரின் சமாதிகள் ஆகியன இருக்கின்றன. இங்குள்ள சமாதிகளில் கேலிக் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இப்பகுதியில் இருக்கும் Cross of the Scriptures அயர்லாந்தின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகத் திகழ்வது. இதன் அசல் வடிவம் அங்கேயே உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வெளிப்புறத்தில் அதன் மாதிரி வடிவம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.



இந்தச் இலுவை ஏனைய கத்தோலிகக் சிலுவையிலிருந்து மாறுபட்ட வடிவத்தைக் கொண்டது. 4 மீட்டர் உயரம் கொண்டது.  கற்சிலுவையான இதில் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் காட்சிகளும், ஏசு கிறிஸ்து இறுதியாக தன் நம்பிக்கையாளர்களுடன் உணவு உண்ணும் காட்சியும் பின்னர் ஏசு கிறிஸ்து மீண்டெழும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. கேலிக் குறியீடுகளும் அலங்காரங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.



எங்கள் சுற்றுலா பயணிகள் குழு இங்கே சென்றடைந்த போது  மாலை 4 மணியாகியிருந்தது. முதலில் இங்கிருக்கும் அருங்காட்சிகயத்தினுள் சென்று அங்கே க்ளோன்மெக்னோய்ஸ் கத்தோலிக்க சமய  மடம் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டோம். பின்னர் வெளியே வந்து க்ளோன்மெக்னோய்ஸ் மடத்தின் தேவாலயங்கள், சமாதிகள் ஆகியனவற்றைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

க்ளோன்மெக்னோய்ஸ் மடம் இருக்கும் பகுதி மிக ரம்மியமானது. தூரத்தில் ஓடும் ஓடைகள்... புல் மேயும் அழகிய பசுக்கள்... குளிர்ச்சியான காற்று என மனதிற்கு பசுமையை வாரி வழங்கியது இயற்கை சூழல். அப்பகுதில் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களைச் செலவிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.




அன்றைய மாலை எங்களுக்கு கோல்வேய் நகரிலேயே தங்குவதற்கான  வசதி சுற்றுலா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்தில் ஏறி அமர்ந்ததும்  எப்போது தங்கும் விடுதி வரும் என்று ஆவலுடன் சாலையை நோக்கிக் கொண்டிருந்தேன். எங்கள் பேருந்தும் சற்று நேரத்தில் அழகியதொரு கிராமப்பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் வாசலில் வந்து நின்றது.


தொடரும்...
சுபா

Monday, April 11, 2016

அயர்லாந்தின் அழகில்...! கெல்ட் மொழியும் நம்பிக்கைகளும் - 11

கி.மு. 58 முதல் கி.மு. 50 நிகழ்ந்த கேலிக் போர் என்பது ஐரோப்பிய நிலப்பகுதியில் நடந்த பற்பல போர்களில் வரலாற்றில் இடம் பெற்ற போர்களில் ஒன்று. கேலிக் அதாவது இந்த கெல்ட் இனக்குழுவின் ஒருபகுதியினரை எதிர்த்து சீஸரின் ரோமானியப் படை மேற்கொண்ட போர் இது. அந்தப் போரின் போது தனது அபிப்ராயத்தை குறிப்பிடும் சீஸர், கெல்ட் இனக்குழு மக்களில் முனிவர்களைப் பற்றியும் தன் கருத்தைப் பதிந்து வைக்கின்றார். இந்த முனிவர்கள் எனப்படுவோர் வருங்காலத்தைக் கணிக்கக்கூடிய, மந்திரங்கள் தெரிந்த, பூஜைகளையும் சடங்குகளையும் செய்கின்ற ஒருவர். இந்த முனிவர்களுக்கு கெல்ட் இனக்குழுவில் உயர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்த முனிவர்கள் தமது சமயமானது தமது கல்வி முறையை எழுத்து வடிவில் மக்களுக்கு வழங்குவதை தடை செய்வதாக பிரகடனப் படுத்தி வைத்திருந்தனர் என்றும் வாய்மொழியாகவே அவர்கள் தங்கள் சிந்தனைக் கருவூலங்களை மனன முறையில் வழிவழியாக வழங்கி வந்தனர் என்றும் சீஸரின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதே வேளை பொது விடயங்களுக்கான தேவைகளுக்குக் கிரேக்க லிபியை அவர்கள் பயன்படுத்தினர் என்றும் இதன் வழி அறிய முடிகின்றது.

ஜியோர்ஞ் பூஹ்னான் (1506 - 1582) என்ற ஸ்கோட்டிஷ் மொழியறிஞர் தாம் முதன் முதலாக கெல்ட் மொழியை இன்று வாழும் ஏனைய பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பினை ஆய்ந்தறிந்து வெளியிட்டவர். கெல்ட் மக்கள் தங்கள் மொழிக்கான எழுத்துருவை நிர்ணயித்துக் கொண்டபின்னர், அதாவது கிருஸ்து பிறப்புக்குப் பின்னான காலகட்டத்தில் இந்த கெல்ட் மொழியானது அதன் அடிபப்டை வடிவத்திலிருந்து பல்வேறு வகையான மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு புதிய புதிய மொழிகளாக வடிவெடுத்து விட்டது.

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் எனும் போது அதில் அடங்கும் மொழிகளாக பெருவாரியான ஐரோப்பிய மொழிகள், ஈரானிய மொழி, வட இந்திய மொழி ஆகியன அமைகின்றன. உதாரணமாக பெயர் என்னும் சொல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஒலிக்கப்படும் விளக்கம் பற்றி அறியும் போது இம்மொழிகளுக்கான ஒற்றுமைக் கூற்றை அறியக்கூடியதாக உள்ளது. Nama - Anglo Saxon (north East Germany) என்ற சொல், Name - English என்றும், Namn - Gothic என்றும், Name - Deutsch, என்றும், Naam - Dutch, என்றும், onama - Greek, என்றும்Namman - Sanskrit, என்றும் aimn - Irish உள்ளன. இதே போன்ற சொற்களை ஒற்றுமைகளைக் காட்ட நன்கு பட்டியலிடலாம். இன்று அறியக்கூடிய மிகப் பழமையான இந்தோ-ஐரோப்பிய இலக்கிய வடிவம் என்றால் அது ஹைட்டைட் (Hittite) மொழியும் சமஸ்கிருத மொழியும் எனக் கூறலாம்.ஹைட்டைட் மொழியின் எழுத்துப்படிவங்கள் கி.மு 1900 வாக்கில் உருவாக்கபப்ட்டவை என்றும் சமஸ்கிருத வேதங்கள் கி.மு 1000லிருந்து 500 வரை என்றும் சொல்லலாம்.

The Celt நூலின் ஆசிரியர் ஐரிஷ் கேலிக் மொழிக்கும் சமஸ்கிருத வேத கூறுகளுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுகின்றார். சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் புழக்கத்தில் இருக்கும் இந்த இரண்டு மொழிகளுக்கும் இருக்கும் ஒற்றுமையைக் கூறும் போது மொழியியல் மட்டுமல்லாது சமூஅக நடைமுறைகள், மக்கள் வாழ்வியல் கூறுகள், புராணங்கள் ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைக் கூறுகளைக் குறிப்பிடுகின்றார்.

புராணங்களை எடுத்துக் கொள்ளும் போது சில ஒப்பீடுகள் சுவாரசியமாக இருக்கின்றன.

ஐரிஷ் கேலிக் புராணத்தில் இருக்கும் Danu தானு(டனு) அல்லது அனு (Anu), பழைய கேலிக் கெல்ட சமூகத்தில் இருக்கும் வழிபடப்படும் ஒரு தாய் தெய்வம். அவளே புனிதம் அவளே புனித நதி. ஐரோப்பாவில் ஓடும் டனுப் நதி இந்த தாய் தெய்வத்தின் பிரதிபலிப்பாக கெல்ட் சமய வழக்கத்தில் உள்ளது. நதியின் முக்கியத்துவம் இந்திய புனித கங்கையோடு ஒப்பிடும் போது கங்கை பல சடங்குகளைச் செய்ய பயன்படும் ஒரு புனித ஸ்தலமாக இருப்பதைக் கான்கின்றோம். கெல்ட் மக்கள் நதியில் நைவேத்தியங்களை வைத்து படைத்து நதி அன்னைக்கு சமர்ப்பணம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அதே போல கங்கை நதியில் சடங்குகளைச் செய்து கங்கா நதிக்கு சமர்ப்பணம் செய்வது இந்திய தேசத்திலிருக்கும் ஒரு பண்பாக இருப்பதைக் காண்கின்றோம். வேத புராணத்தில் Danu நதியுடன் தொடர்புடைய ஒரு தெய்வமாகக் கருதப்படுகின்றார். பண்டைய கெல்ட் சமயத்தின் படி கெல்ட் மக்கள் தாம் (Danu) தானுவின் சந்ததியினர் எனத் தம்மை நம்புகின்றனர். புனித நீராகிய (Danu) தானுவின் வழியில் ஆகாயக் கடவுள் தோன்ற அவர்களின் சந்ததியினரே தாம் என்பது கெல்ட் மக்களின் நம்பிக்கை.

ஐரோப்பாவில் பல பகுதிகளில் அகழ்வாய்வுகL செய்யப்பட்டு கெல்ட் மக்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் வெளியிடப்பட்டன. இதில் பிரத்தியேகமாக கெல்ட் மக்களின் வழிபாட்டில் இருக்கும் எண்ணற்ற கடவுளர்களைப் பற்றி இந்த தொல்லியல் ஆய்வுகள் சான்றுகளை வழங்குவதாக அமைந்தன. அதுமட்டுமன்றி இரு சக்கரத் தேர்கள், ஆபரணங்கள், சிறப்பு சடங்கு பொருட்கள் ஆகியனவும் இவ்வகை ஆய்வுகளில் கிடைத்தன.

இந்த கெல்ட் இனமக்கள் மிக விரிவாக தமது ஆரம்ப மையப்புளியிலிருந்து பல இடங்களுக்குப் பெயர்ந்து தங்கள் பண்டைய கெல்ட் பண்பாட்டை தாங்கள் புலம்பெயர்ந்த புதிய நிலப்பகுதிகளில் அச்சூழலையும் உள்வாங்கிக் கொண்டு புதிய பரிமாணத்தில் புதிய பண்பாடுகளை உருவாக்கிக் கொண்டனர். கெல்ட் மக்களைப் பற்றி ஆராயும் போது இவர்கள் தாம் இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த ஆரிய இனக்குழுவினரோ என்ற எண்ணம் எழுகின்றது.

இனி தொடர்ந்து இக்கட்டுரையில் எனது பயணத்தில் 3ம் நாள் செய்திகளை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.









Tuesday, April 5, 2016

அயர்லாந்தின் அழகில்...! அயர்லாந்தில் செல்ட்டிக் பண்பாட்டின் தாக்கம் - 10

அயர்லாந்து மக்கள் தொகையில் ஏறக்குறைய 87% விழுக்காட்டு மக்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தோராக இருக்கின்றனர். எனது பயணத்தின் போது கிழக்கு, மேற்கு, தெற்கு மைய அயர்லாந்து என சென்ற இடங்கள் அனைத்திலும் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயங்கள் பல கண்களுக்குத் தென்பட்டன. ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயங்களின் உள்ளேயும் சென்று பார்த்து அவற்றின் வரலாற்றுப் பின்னனிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பினையும் இப்பயணத்தில் என்னால் பெற முடிந்தது. அப்படி நான் சென்று பார்த்த தேவாலயங்களில் ஏனைய ஐரோப்பிய தேவாலயங்களில் இருக்கும் குறியீடுகளிலிருந்து மாறுபட்ட வடிவங்களில் அமைந்த குறியீடுகளை அங்கே பரவலாகக் காணக்கூடியதாகவும் இருந்தது.


இதனைப் பற்றி அறிந்து கொள்ள நான் விசாரித்தபோது அயர்லாந்தின் கத்தோலிக்க சமயம் என்பது அங்கே முன்னரே வழக்கில் இருந்த செல்ட்டிக் பண்பாட்டிற்குள் உள்வாங்கப்பட்ட கத்தோலிக்க மதத்தின் ஒரு வடிவம் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இது, செல்ட்டிக் பண்பாடு, பாரம்பரியம் என்பன என்ன என்ற எனது தேடுதலை தொடக்கி வைத்தது. அதற்காக இச்சுற்றுப்பயணத்திலேயே செல்ட்டிக் பண்பாட்டையும் வரலாற்றையும் விளக்கும் இரண்டு நூல்களை பயணத்தில் இருந்த வேளையிலேயே ஒரு நூலகத்தில் வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். அதில் ஒன்றின் பெயர் The Celts. இதன் ஆசிரியர் Peter Berresford Ellis. இன்னொரு நூல் How the Irish saved Civilization. இதனை எழுதியவர் Thomas Cahill. இந்த நூல்கள் ஐரோப்பாவில் செல்ட்டிக் பாரம்பரியத்தின் வளர்ச்சி, வரலாறு, நிகழ்ந்த மாற்றங்கள், அயர்லாந்து இன்று செல்ட்டிக் மரபை பின்பற்றும், அதாவது இந்த மரபு இன்றும் வாழும் வகையில் இருக்கும் விசயங்களை விளக்குவதில் சிறந்த பங்களிப்பதாக உள்ளதை வாசிக்கையில் உணர்ந்தேன்.

அயர்லாந்தின் வரலாறு பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்த வரலாறு. அன்று கலைக்கும், பண்பாட்டிற்கும், வீரத்திற்கும், ஆளுமைக்கும் நிகழ்ந்த இந்த தொடர் மாற்றங்கள் இன்று வேற்று வகையில் நிகழ்கின்றன. இப்போது மையப் பொருளாக அயர்லாந்தை ஆக்கிரமித்திருப்பது பொருளாதார நிலைத்தன்மையும் இந்த நாடு காணும் ஏற்றத் தாழ்வும் எனச் சொல்லலாம்.

அயர்லாந்தின் அகழ்வாய்வு, தொல்லியல் ஆய்வுகள் ஆகியனவற்றின் சான்றுகள் தருகின்ற குறிப்புக்கள் கிமு.6000 ஆண்டு வாக்கில் அயர்லாந்தில் மக்கள் குடியிருந்தமைக்குச் சான்று தருகின்றன. இக்காலகட்டத்தில் வேட்டைத் தொழில் செய்வோர் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர். பின்னர் கற்காலத்தில், அதாவது கி.மு 3000 வாக்கில் அயர்லாந்து மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு என சிறுகச் சிறுக நாகரிக வளர்ச்சி பெர்றவர்களாகப் பரிமாணம் பெற்றனர். இதற்குச் சான்றுகளாக இங்கே இன்றும் காணக்கிடைக்கின்ற ஈமக்கிரியை கல்வட்டங்கள், கல்திட்டைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.



ஏறக்குறைய கி.மு 1500 வாக்கில் அயர்லாந்து நாகரிக வளர்ச்சியைக் காணும் வகையில் கட்டுமாங்கள், நகர்ப்புற அமைப்பு, கோட்டைகள் அமைப்பு என்ற வகையில் வளர்ச்சி அடைந்தது. இதற்குச் சான்றாக Inishmore பகுதியில் இருக்கும் Dun Aengus கோட்டையின் எச்சங்களும் Grianan of Aileach பகுதியில் இருக்கும் Donnegal கோட்டைகளின் சிதைந்தை பகுதிகளையும் குறிப்பிடலாம். இதற்கு ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் அயர்லாந்துக்குச் செல்ட்டிக் பாரம்பரியத்தைப் பின்பற்றும் இனக்குழுவினரின் வருகை அமைகின்றது. இது நிகழ்ந்த காலகட்டம் ஏறக்குறைய கி.மு. 6 எனக் குறிப்பிடலாம். செல்ட் இனக்குழு மக்கள் மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். மத்திய ஐரோப்பா என நான் குறிப்பிடுவது இன்றைய ஆஸ்திரியா, ஹங்கேரி, ரோமேனியா ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பகுதிகளைக் குறிப்பிடுவது.


இப்படி வந்த செல்ட்டிக் மக்கள் நாகரிகத்தில் உயர்ந்தவர்களாகவும் அதாவது இரும்பு போன்ற உலோகங்களினால் கருவிகள் செய்யக்கூடியவர்களாக இருந்தனர். தங்கள் வாழ்விடத்தை மிகுந்த பாதுகாப்பு அறன் போன்ற கோட்டைகளைக் கட்டி, அதிலும் வட்ட வடிவிலான கோட்டைச் சுவர்களை எழுப்பி இவர்கள் வாழ்ந்து வந்தனர். செல்ட் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான உலோகக் கருவிகளும் ஏனைய சில சான்றுகளும் டப்ளின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொடரும்...

Monday, April 4, 2016

அயர்லாந்தின் அழகில்..! - டப்ளின் நகர சாலைகளில் 9

அயர்லாந்தின் மிக முக்கிய நகரம், தலை நகரம், வர்த்தக நகரம் என்ற சிறப்புக்களோடு கலைத்துவமும் பரிமளிக்கும் ஒரு நகரம் டப்ளின். எனது பயணத்தின் இரண்டாம் நாள் ஒரு நாள் முழுதும் இந்த நகரத்தை நாங்கள் சுற்றிப் பார்க்க எனக்கு வாய்ப்பு அமைந்தது. காலையில் தங்கும் விடுதியிலேயே ஐரிஷ் வகை காலை உணவு. இதில் பிரத்தியேகமாக ஏதும் காணப்படவில்லை.  லண்டனில் காலை உணவு சாப்பிட்டவர்களுக்கு இதற்கும் அயர்லாந்தில் தங்கும் விடுதிகளில் கிடைக்கும் உணவிற்கு வித்தியாசம் இல்லாமல் இருப்பதை உணரலாம்.  இங்கிலீஷ் உணவு வகைகள் போலவே டோஸ்ட் ரொட்டி,  முட்டை, சாசேஜ், தேனீர், காப்பி, பழங்கள் என அமைந்திருக்கும். சற்று அலுப்பைத் தரக்கூடிய ஒரு காலை உணவு. எனக்கு பிடிக்காத காலை உணவு வகை. பிடிக்கவில்லையென்றாலும் காப்பியும் ஜேம் தடவிய ரொட்டியும் மட்டும் சாப்பிட்டு விட்டு  டப்ளின் நகரைப் பார்க்கப் புறப்பட்டோம்.

டப்ளினில் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. அவை எல்லாவற்றையும் ஒரு நாளில்  பார்த்து முடிக்க முடியாது என்ற காரணத்தால் பகலில் சாலையில் நடந்து சென்று எந்த இடங்களைப் பார்த்து வரலாம் என திட்டமிட்டோம். எங்கள் பயண திட்டத்தில் மேலும் ஒரு நாள் இறுதியாக டப்ளினில் இருக்கும் வகையில் பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.  ஆக அவசரப் பட்டுக் கொண்டு செல்லாமல் நிதானமாக முக்கிய இடங்களைப் பார்த்து தகவல்கள் சேகரித்து வருவதோடு டப்ளின் சாலைகளில் நடந்து மக்களையும் சாலை காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டும் என்றும் ஆவல் இருந்தது. ஆக இரண்டு இடங்களை மட்டும் பார்ப்போம் என முடிவு செய்து கொண்டேன்.


டப்ளினுக்கு சிறப்பு சேர்க்கும் சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களாக கீழ்க்கண்பவற்றை குறிப்பிடலாம்.
  • ட்ரினிடி காலேஜ், நூலகம்
  • கெல்ஸ் புத்தகம்
  • டப்ளின் கோட்டை
  • டப்ளின் துறைமுகம்
  • ஃபீனிக்ஸ் பார்க்
  • செயிண்ட் பேட்ரிக் கேத்தீட்ரல்
  • க்ரிஸ்ட் சர்ச் கெத்தீட்ரல்
  • டெம்பல் பார்
  • கின்னஸ் ஸ்டோர்
  • டப்ளின் மிருகக்காட்சி சாலை

இதில் ஏற்கனவே வந்திறங்கிய முதல் நாளே ட்ரினிடி காலேஜ், நூலகம், கெல்ஸ் புத்தகம் ஆகிய இரண்டையும் பார்த்து விட்டமையால் இரண்டாம் நாள் டப்ளின் கோட்டையையும், கின்னஸ் ஸ்டோர் தொழிற்சாலையையும் பார்த்து விட்டு சர்ச் கெத்தீட்ரல் பார்த்து வருவோம் என முடிவு செய்து கொண்டேன். இவை மூன்றுமே டப்ளின் நகர மையத்திலேயே இருப்பதால் நடந்தே சென்று வரலாம் என்று முடிவு செய்து கொண்டேன். முதல் நாள் டப்ளின் வந்திருந்தமையால் ஏறக்குறைய இவை இருக்கின்ற இடங்களை அறிந்திருந்திருந்தேன். ஆக இவற்றைத் தேடித் திரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. அத்தோடு எங்கள் பயண வழிகாட்டி எங்களுக்கு டப்ளின் நகர சாலை வரைபடம் ஒன்றையும் அளித்திருந்தார் அதில் மிகத் தெளிவாக சாலை வரைபடங்கள் சுற்றுப்பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகியவை பெயர்களோடும் குறியீடுகளோடும் வழங்கப்பட்டிருந்தன. 

காலை 10 மணி அளவில் எங்களைச் சுற்றுலா பஸ் அழைத்து வந்து ட்ரினிட்டி காலேஜ் வளாகத்தின் மேற்கு புறக் கதவின் அருகில் இறக்கி விட்டுச் சென்று விட்டது. சுதந்திரமாக ஒரு நாள் டப்ளினில் கூட்டமாக இல்லாமல் தனியாகச் சென்று நமக்குப் பிடித்த வகையில் நேரம் எடுத்துக் கொண்டு பார்க்க விரும்பும் விஷயங்களைப் பார்த்து வரலாம் என்ற நினைப்பே ஒரு விதத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. சில வேளைகளில் குழுவாக பயணிப்பது சுவாரசியமளிக்கும் ஒன்று தான். ஆனால் சில வேளைகளில் அது நச்சரிப்பாகவும் அமைந்து விட வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட அனுபவமும் 2 முறை எனக்கு நிகழ்ந்தது. அதனைப் பிறகு குறிப்பிடுகிறேன். 

அன்று காலை சற்று மேக மூட்டமாகவும் சீதோஷ்ணம் ஏறக்குறைய 17 டிகிரி வாக்கிலும் அமைந்திருந்தது. காலையில் பயணம் ஆரம்பித்த சமயம் சிறு தூரலும் இருந்தது. அயர்லாந்தின் சீதோஷ்ணம் பற்றி தனியாக ஒரு பதிவிட வேண்டும். இங்கே குடையில்லாமல் செல்லக்கூடாது என்பதை முன்னரே தெரிந்திருந்ததால் நான் எனது பேக்பேக்கில் ஒரு குடையும் வைத்திருந்தது மிகவும் பயணளித்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் சற்று நேரத்தில் தூரல் நின்று சூரியன் இன்முகத்தைக் காட்டி பிரகாசமாக சிரிக்க, சாலையில் நடந்தே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பயணம் செல்வது சுவாரசியமாக அமைந்தது.

ட்ரினிடி காலேஜ் வாசலிலிருந்து இறங்கி நேராக நடந்து டேம் (Dame Street) சாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. டப்ளின் கோட்டை இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. கூகள் வரைபடத்தைக் காண்க.


டப்ளின் கோட்டைக்குச் செல்லும் வழியில் சாலையின் இரண்டு பகுதிகளில் உள்ள கடைகளையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்துக் கொண்டே சென்றேன். ஏறக்குறைய 525,000 மக்கள் தொகை கொண்ட நகரம் டப்ளின். இங்கு பெரும்பாலானோர் ஐரிஷ் இனத்தவர்களே. டப்ளினில் மட்டுமல்ல (Republic of Ireland) அயர்லாந்து முழுதும் கேலிக் கத்தோலிக்க வகை பண்பாட்டு சமயத்தைச் சார்ந்தவர்களே மிகப் பெறும்பாண்மையினர்.  ஒரு குறைவான அளவில் ஐரோப்பாவின் பிற பகுதிகளான இத்தாலியர்கள், ஜெர்மானியர்கள், ஸ்பேனீஷ்காரர்கள் இருக்கின்றார்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இங்கிலாந்து மக்களும் இருக்கின்றனர். ஆசிய மக்களையும் ஆங்காங்கே காண முடிந்தது. இந்தியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், வியட்னாமியர்கள், தாய் மக்கள் சிலர் டப்ளின் நகரில் வசிக்கின்றனர் என்பதை சாலையில் செல்வோரைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது. 

ஆங்காங்கே சீன உணவகங்கள், தாய் உணவகங்கள், இந்திய உணவகங்கள் இருக்கின்றன. ஒரு மலாய் உணவகமும் கூட ஒன்று இருப்பதைப் பார்த்து அதிசயித்தேன். 


டப்ளின் ஒரு கலாச்சார மையம் என்றால் அது மிகையில்லை. சாலையில் ஆங்காங்கே இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை வாசித்துக் கொண்டு இசை மணம் பறப்பிக் கொண்டிருக்கும் காட்சி இந்த நகரத்திற்கு உயிரூட்டும் ஒன்று. 


டப்ளின் நகரின் மத்தியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அமைந்திருக்கும் ஜியோர்ஜியன் டப்ளின் கட்டிடங்களின் (வீடுகளின்)  கதவுகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை. 

வெள்ளை நிற தொடர் வீடுகளுக்குக் கண்களைப் பளிச்செனக் கவரும் கவர்ச்சியான வர்ணத்தில் அமைக்கப்பட்ட கதவுகளும் அதற்கு எழில் சேர்க்கும் கருப்பு நிற கைப்பிடிகளும் பார்ப்பதற்கே மிக அழகு. இவை ஜியோர்ஜியன் (Georgian) வகை கட்டிடக் கலையின் எச்சங்களாக இன்றும் டப்ளின் நகரத்தை அலங்கரிப்பவை. ஜியோர்ஜியன் டப்ளின் பற்றி மேலும் பிறகு தொடர்கிறேன். 





களிமண்ணில் உருவாகும் நாய்குட்டி வடிவங்கள்.. கலைத்திறன் நாய் குட்டியின் கண்களில் தெரிகின்றது.





சாலையோர இசைக் கலைஞர்கள்




ஜியோர்ஜியன் வகை வீடுகள்





இந்திய உணவகம் ஒன்று .. டப்ளின் நகரில்






பெண்கள் சிகை அலங்காரம் செது கொள்ள பல வர்ணங்களில் வல வகைகளில் தலை முடி.


சாலையைச் சுற்றிப் பார்க்க் ரிக்‌ஷா வண்டி.



தொடரும்..