Tuesday, May 10, 2016

அயர்லாந்தின் அழகில்...! க்ளோன்மெக்னோய்ஸ் மடம் -12

ஷானன் பகுதியில் ஒஃபேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் செயிண்ட் சியேரன் அவர்களால் கி.பி.544ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. செயிண்ட் சியேரன்  இப்பகுதிக்கு வந்தடைந்தபோது இங்கே கத்தோலிக்க மதம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இங்கே செயிண்ட் சியேரன்   சந்திந்த  Diarmait Uí Cerbaill அவர்களின் உதவியுடன் இந்தப் பகுதியில் முதல் தேவாலயத்தைக் கட்டினார். முதலில் கட்டப்பட்ட தேவாலயம் சிறிய வடிவில் மரத்தால் அமைக்கப்பட்ட வடிவினைக் கொண்டது. அதனைச் சுற்றி சிறிய சிறிய தேவாலயங்களை இவர் அமைத்தார். Diarmait Uí Cerbaill இப்பகுதியில் செல்வாக்குள்ளவராகத் திகழ்ந்தார்.  கத்தோலிக்க மடத்தை அமைத்து Diarmait Uí Cerbaill யை அயர்லாந்தின் முதல் அரசராக  பட்டம் சூட்டி அமர்த்தினார் செயிண்ட் சியேரன் . அதே ஆண்டில் தனது 33வது வயதைடையும் முன்னரே வெகுவாக அப்பகுதியைத் தாக்கிய ப்ளேக் நோயினால் உடல் நலிவுற்று, செயிண்ட் சியேரன் அவர்கள் மறைந்தார். இவரது சமாதி இவர் அமைத்த முதல் தேவாலயத்தின் கீழேயே அமைக்கப்பட்டது.




இந்தத் தகவலைக் கேள்விப்பட்டபோது  தமிழக மன்னர்கள் அல்லது சாதுக்களுக்காக அமைக்கும் பள்ளிப்படை கோயிலும் நினைவாலய அமைப்பும் என் நினைக்கு வந்தது. சமய குருமார்களின் சமாதிக்கு மேல் ஆலயம் எழுப்பும் ஒரு பண்பு 6ம் நூற்றாண்டு வாக்கில்  அயர்லாந்திலும் இருந்திருக்கின்றது. இதனை என்ணிப் பார்க்கும் போது பொதுவாகவே மக்கள் சமய நெறியில் உயர்ந்தோர் இறக்கும் போது அவர்களின் பூத உடலை புதைத்து அவர் நினைவாக அவர்கள் வழிபடும் தெய்வ வடிவங்களை வைத்து போற்றி வழிபடுவது அந்த சமயப் பெரியவருக்கு அவர்கள் வழங்கும் மரியாதையாகக் கருதுகின்றனர் என்பதையும் உலகின் பல சமூகங்களில் இத்தகையச் சிந்தனை ஒற்றுமை மனிதர்களுக்கிடையே சமய, இன பேதம் கடந்து எழுவதையும் காண முடிகின்றது.

அடிப்படையில் மனிதர்கள் எல்லோருக்குமே இன மொழி வேறுபாட்டுடன் அவர்கள் எங்கேயிருந்தாலும் கூட மனிதர்களுக்கிடையே பற்பல ஒற்றுமைகள் இருப்பதை மானுடவியல் கூறுகளைக் கவனிக்கும் போது தெளிவாகக் காண முடிகின்றது.




க்ளோன்மெக்னோய்ஸ் மடம் பல இன்னல்களுக்கு ஆளானது என்பதை இங்குள்ள அருன்காட்சியகத்தின் குறிப்புக்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.  தொடர்ந்து ப்ளேக் நோய் தாக்கியதால் மடத்தில் தங்கியிருந்த மாணவர்களில் பலர் நோயினால் வாடி மறைந்தனர். ஆயினும் இந்த மடம் 8ம் நூற்றாண்டு தொடங்கி 12ம் நூற்றாண்டு வரை விரிவான வளர்ச்சி கண்டது. இப்பகுதியை ஸ்கேண்டினேவியாவிலிருந்து வந்த வைக்கிங் என்று ஆங்கிலத்தில் நாம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் குறைந்தது ஏழு முறையாவது தாக்கியுள்ளனர்.  அதுமட்டுமல்லாது ஐரிஷ் படை 27 முறை இப்பகுதியில் தாக்குதல் நடத்தியும் இது வீழ்ச்சியடையவில்லை. கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் இங்கிருந்த மரக்கட்டிடங்கள் மாற்றம் செய்யப்பட்டு இங்கு கற்கோயில்கள் உருவாக்கப்பட்டன.




இந்த மடாலயம் இருக்கும் பகுதியில் ஒரு கேத்திட்ரல், ஏழு தேவாலயங்கள், 3 பெரிய கற்சிலுவைகள் மற்றும் இறந்தோரின் சமாதிகள் ஆகியன இருக்கின்றன. இங்குள்ள சமாதிகளில் கேலிக் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இப்பகுதியில் இருக்கும் Cross of the Scriptures அயர்லாந்தின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகத் திகழ்வது. இதன் அசல் வடிவம் அங்கேயே உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வெளிப்புறத்தில் அதன் மாதிரி வடிவம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.



இந்தச் இலுவை ஏனைய கத்தோலிகக் சிலுவையிலிருந்து மாறுபட்ட வடிவத்தைக் கொண்டது. 4 மீட்டர் உயரம் கொண்டது.  கற்சிலுவையான இதில் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் காட்சிகளும், ஏசு கிறிஸ்து இறுதியாக தன் நம்பிக்கையாளர்களுடன் உணவு உண்ணும் காட்சியும் பின்னர் ஏசு கிறிஸ்து மீண்டெழும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. கேலிக் குறியீடுகளும் அலங்காரங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.



எங்கள் சுற்றுலா பயணிகள் குழு இங்கே சென்றடைந்த போது  மாலை 4 மணியாகியிருந்தது. முதலில் இங்கிருக்கும் அருங்காட்சிகயத்தினுள் சென்று அங்கே க்ளோன்மெக்னோய்ஸ் கத்தோலிக்க சமய  மடம் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டோம். பின்னர் வெளியே வந்து க்ளோன்மெக்னோய்ஸ் மடத்தின் தேவாலயங்கள், சமாதிகள் ஆகியனவற்றைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

க்ளோன்மெக்னோய்ஸ் மடம் இருக்கும் பகுதி மிக ரம்மியமானது. தூரத்தில் ஓடும் ஓடைகள்... புல் மேயும் அழகிய பசுக்கள்... குளிர்ச்சியான காற்று என மனதிற்கு பசுமையை வாரி வழங்கியது இயற்கை சூழல். அப்பகுதில் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களைச் செலவிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.




அன்றைய மாலை எங்களுக்கு கோல்வேய் நகரிலேயே தங்குவதற்கான  வசதி சுற்றுலா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்தில் ஏறி அமர்ந்ததும்  எப்போது தங்கும் விடுதி வரும் என்று ஆவலுடன் சாலையை நோக்கிக் கொண்டிருந்தேன். எங்கள் பேருந்தும் சற்று நேரத்தில் அழகியதொரு கிராமப்பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் வாசலில் வந்து நின்றது.


தொடரும்...
சுபா

2 comments:

தனிமரம் said...

தொடருங்கள் சுற்றுலா தொடர்கின்றேன் வாசிக்க!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புதிய இடங்கள். அரிய செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

Post a Comment