Wednesday, May 11, 2016

அயர்லாந்தின் அழகில்...! கோல்வே நகரில் - 13

காலையில் டப்ளின் நகரிலிருந்து தொடங்கிய எங்கள் பயணம் பின்னர் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் சுற்றிப்பார்த்தல் என்பது மட்டுமல்லாது இடையில்  அயர்லாந்தின் மேலும் சில புற நகர்ப்பகுதிகளையும் மதிய உணவு வேளையில் பார்க்கும் வாய்ப்புடன் அமைந்திருந்தது.



 நாள் முழுதும் பயணம் என்ற நிலையில், தங்கும் விடுதிக்கு வந்த போது மிகுந்த களைப்புடன் எல்லோரும் இருந்தாலும் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த பகுதியில் சுற்றிப் பார்த்து வரலாம் என்ற எண்ணமும் இருந்ததால் மாலை ஏழு மணி வாக்கில் மீண்டும் சந்தித்து வெளியே சேர்ந்தே எல்லோரும் செல்வோம் எனப் பேசிக் கொண்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டோம்.



எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதி மிக ரம்மியமான ஒரு கிராமப்பகுதியை ஒட்டிய சிறு நகரில் அமைந்திருந்தது. அருமையான நான்கு நட்சத்திர தங்கும் விடுதி அது. மாலையில் மீண்டும் அனைவரும் சந்தித்து மாலை உணவு உண்ண சேர்ந்து நடந்தே சென்றோம்.




அந்தப் பயணக்குழுவில் வந்திருந்த ஏனைய அனைவருமே ஜெர்மானியர்கள் தாம். அவர்களுடன் பல தகவல்களைப் பேசிக் கோண்டு சென்று மாலை உணவு சாப்பிட்டு வந்த போது ஒருவரைப் பற்றி மற்றொருவர் மேலும் அறிந்து கொள்ள முடிந்தது.




மறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பயணமானோம்.

கால்வே நகர் அழகியதொரு நகரம். டப்ளின் போல வாகன நெரிசல் இல்லையென்றாலும் இது அயர்லாந்தின் முக்கிய ஒரு வர்த்தக நகரம் என்ற சிறப்பை பெற்றது.கேல்டாஹ்ட் (Gaeltacht)  பகுதியின் தலைநலைகர் என்ற சிறப்பும் பெற்றது. கேல்டாஹ்ட் பகுதி ஐரிஷ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி என அடையாளப்படுத்தப்படும் பகுதி. கலை, இசை, ஓவியம் என்ற வகையில் பிரசித்தி பெற்ற நகரம் இது என்பதும் கூடுதல் செய்தி.

13ம் நூற்றாண்டில் ஆங்லோ-நோர்மன் டி பர்கோ குடும்பத்தினர் இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்னர் நோர்மன் இனக்குழுவினரின் ஆதிக்கத்தில் இப்பகுதி வந்தது. இப்பகுதியை பதினான்கு குடும்பங்கள் பிரித்து ஆட்சி செய்ததால் இது City of tribes என்றும் குறிப்பிட்டு அழைக்கப்பட்டது.15ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அயர்லாந்தின் ஏனைய பகுதி ஆட்சியாளர்கள் இங்கிலாந்தின் ஆட்சிக்கு எதிராகப் போர் கொடி உயர்த்திய போது  கால்வே எந்த எதிர்ப்பையும் காட்டாமல் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு உட்பட்டு அமைதியாக இருந்தது.   பின்னர் படிப்படியான வளர்ச்சியை பெற்றதோடு அண்டை நாடுகளான ஸ்பெயின், பிரான்சு போர்த்துக்கல் ஆகிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை விரிவு படுத்தி இந்த நகரம் தனித்துவத்துடன் செழித்து வளர்ந்தது,

அன்றைய நாளில் காலையில் கால்வே நகரில் ஒரு மணி நேரம் சுற்றிப்பார்க்க எங்களுக்கு பயண வழிகாட்டி அனுமதி அளித்திருந்தார்.  நகரின் மையப்பகுதியில் நடந்து சென்று கடைவீதிகளில் சிலர் நினைவுச் சின்னங்களை வாங்கிக் கொண்டனர். நான் மனதிற்குப் பிடித்த காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.




எங்கள் பேருந்து தொடர்ந்து கில்மோர் அபேய் (Kylemore Abbey)  மாளிகையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

தொடரும்

சுபா

No comments:

Post a Comment