Tuesday, May 17, 2016

அயர்லாந்தின் அழகில்...! கில்மோர் அபேய் (Kylemore Abbey) 14

கோல்வே மாவட்டத்தில் உள்ள கோன்னிமாரா நகர் கில்மோர் அபேய் மாளிகைக்காகவே புகழ்பெற்றது என்பது மிகையன்று. ஆங்கில திரைப்படங்களில் நாம் காணும், பெரும் காட்டுக்குள் இருக்கும் மனிதர்கள் அற்ற மாளிகை போன்று தான் எனக்கு இந்த மாளிகையைப் பார்த்த முதல் கணம் எண்ணம் தோன்றியது. சுற்றிலும் பச்சை பசேல் என மரங்கள் சூழ ஒரு பெரிய ஏரியைப் பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கில்மோர் மாளிகை.



இது மாளிகை என்ற போதிலும்கன்னிகாஸ்திரிகள் மடம் என்பது தான் இதற்குப் பொருந்தும். இந்த மாளிகையை முதலில் தனக்காக கட்டிக் கொண்டவர் மிட்சல் ஹென்ரி என்ற பெரும் பணக்கார மருத்துவர். இவர்களது குடும்பம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் லாபத்தை ஈட்டியவர்கள். மிட்சல் ஹென்ரியும் அவர் மனைவி மார்கரெட்டும் இப்பகுதியில் இந்த நிலத்தை தமக்காக வாங்கிய பின்னர் இந்த மாளிகையைக் கட்டி அமைத்தனர். இதன் அருகாமையில் விக்டோரியன் ஸ்டைல் பூந்தோட்டம் ஒன்றையும் இவர்கள் அமைத்தனர். இந்தப் பகுதியை வடிவமைக்க 300,000 மரங்களையும் செடிகளையும், அதிலும் இப்பகுதியில் வளரக்கூடிய தன்மை கொண்டவையாகத் தேர்ந்தெடுத்து வாங்கி அக்காலத்திலேயே அதாவது 1880ம் ஆண்டுகளில் இவர்கள் இம்மாளிகையையும் நந்தவனத்தையும் அமைத்து உருவாக்கினர் என்பது வியப்பாக இருக்கின்றது அல்லவா?

ஏறக்குறை 40,000 அடி பரப்பளவைக் கொண்டது இந்த மாளிகை. இதில் 70 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் பிரத்தியேகமான அலங்காரத்துடன் இன்னமும் இருக்கின்றன. தனது மனைவி மார்கரெட் மறைந்த போது அவர் நினைவாக ஹென்ரி ஒரு தேவாலயத்தையும் அருகிலேயே அமைத்திருக்கின்றார். பின்னர் இவர் இங்கிலாந்து மாற்றலாகி வந்து விட்டார்.

​ 

அதற்குப்பின் மான்செஸ்டர் பிரபுவும் அவரது மனைவியும் இந்த மாளிகையை வாங்கினாலும் அதீத கடனால் அவர்கள் இந்த மாளிகையை விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. 1920ம் ஆண்டில் அயர்லாந்தின் பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகள் இந்த மாளிகையை வாங்கினர். இந்த பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகல் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒய்ப்ரெஸ் நகரில் 1600கள் தொடங்கி பெண்களுக்கான கன்னிகாஸ்திரிகள் பாடசாலையை நடத்தி வந்தனர். முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் பெரும் சேதத்தை இவர்கள் சந்திக்கவே அமைதியை நாடி ஓரிடத்தைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த இடம் புகலிடமாக அமைந்ததால் இப்பகுதியை மேன்சஸ்டர் பிரபுவிடமிருந்து வாங்கிக் கொண்டு இங்கே கன்னிகாஸ்திரிகள் மடத்தையும் கல்விக்கூடத்தையும் அமைத்தனர்.

பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகள் தங்கள் மடத்தில் அனைத்துலக உயர்கல்வி மையம் ஒன்றைத் தொடங்கினர். இந்த மாளிகையின் சில அறைகளை வகுப்பறைகளாக மாற்றினர்.

அக்காலகட்டத்தில் இரண்டு இந்திய இளவரசிகள் இங்கே வந்து கல்வி கற்றிருக்கின்றனர் என்ற செய்தியை புகைப்படத்தோடு இந்த மாளிகையில் பார்த்த போது ஆச்சரியப்பட்டேன். 1920ம் ஆண்டில் இந்திய இளவரசர் ரஞ்சிட்சிங்ஜி அயர்லாந்தின் பாலினாஹிச் மாளிகையை வாங்கினார். மன்னர் ரஞ்சித்தின் மகள்களான இளவரசி ராஜேந்திர குமாரியும் இளவரசி மன்ஹேர் குமாரியும் இந்த கில்மோர் மாளிகை கன்னிகாஸ்திரிகள் கல்விக்கூடத்தில் உயர்கல்வி படிக்க 1923ம் ஆண்டில் இங்கே வந்தனர், 1930ம் ஆண்டில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இங்கே வைத்திருக்கின்றார்கள்.




இன்றைய சூழலில் கில்மோர் மாளிகையைச் சுற்றுப்பயணிகள் வந்து பார்க்க அனுமதித்திருக்கின்றனர். அதற்கு தனிக்கட்டணமும் வசூலிக்கின்றனர்.

எங்களைப் பேருந்து இங்கே அழைத்து வந்த சமயம் மழைத்தூறல் ஆரம்பித்து விட்டது. ஆக முதலில் மாளிகைக்குச் சென்று அதன் வரலாற்றை அறிந்து கொள்வதில் சிறிது நேரம் செலவிட்டோம். அதன் பின்னர் தன் மனைவிக்காக ஹென்ரி கட்டிய தேவாலயத்தைப் பார்த்து அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பூங்கா பகுதிக்குச் சென்றோம்.

​ 

மழைத்தூறல் விடுவதாக இல்லை. ஆயினும் மழை இந்தப் பூங்காவை ரசிப்பதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்று மழை ஜேக்கட் போட்டுக் கொண்டு பூங்காவிற்குள் இறங்கி நடந்து அதன் அழகை ரசித்தேன். ஆங்காங்கே புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன்.






அன்றைய நாளில் நாங்கள் நான்கு மணி நேரங்களை கோல்வே நகரில் செலவிடலாம் என்றும் விரும்புவோர் அங்கேயே மதிய உணவும் சாப்பிடலாம் என்றும் எங்கள் பயண வழிகாட்டிக் கூறவே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் முடிவடையும் நேரம் வரவே பேருந்துக்கு விரைந்து சென்று அடுத்த இலக்கை நோக்கி பயணமானோம். 

No comments:

Post a Comment