Monday, April 11, 2016

அயர்லாந்தின் அழகில்...! கெல்ட் மொழியும் நம்பிக்கைகளும் - 11

கி.மு. 58 முதல் கி.மு. 50 நிகழ்ந்த கேலிக் போர் என்பது ஐரோப்பிய நிலப்பகுதியில் நடந்த பற்பல போர்களில் வரலாற்றில் இடம் பெற்ற போர்களில் ஒன்று. கேலிக் அதாவது இந்த கெல்ட் இனக்குழுவின் ஒருபகுதியினரை எதிர்த்து சீஸரின் ரோமானியப் படை மேற்கொண்ட போர் இது. அந்தப் போரின் போது தனது அபிப்ராயத்தை குறிப்பிடும் சீஸர், கெல்ட் இனக்குழு மக்களில் முனிவர்களைப் பற்றியும் தன் கருத்தைப் பதிந்து வைக்கின்றார். இந்த முனிவர்கள் எனப்படுவோர் வருங்காலத்தைக் கணிக்கக்கூடிய, மந்திரங்கள் தெரிந்த, பூஜைகளையும் சடங்குகளையும் செய்கின்ற ஒருவர். இந்த முனிவர்களுக்கு கெல்ட் இனக்குழுவில் உயர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்த முனிவர்கள் தமது சமயமானது தமது கல்வி முறையை எழுத்து வடிவில் மக்களுக்கு வழங்குவதை தடை செய்வதாக பிரகடனப் படுத்தி வைத்திருந்தனர் என்றும் வாய்மொழியாகவே அவர்கள் தங்கள் சிந்தனைக் கருவூலங்களை மனன முறையில் வழிவழியாக வழங்கி வந்தனர் என்றும் சீஸரின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதே வேளை பொது விடயங்களுக்கான தேவைகளுக்குக் கிரேக்க லிபியை அவர்கள் பயன்படுத்தினர் என்றும் இதன் வழி அறிய முடிகின்றது.

ஜியோர்ஞ் பூஹ்னான் (1506 - 1582) என்ற ஸ்கோட்டிஷ் மொழியறிஞர் தாம் முதன் முதலாக கெல்ட் மொழியை இன்று வாழும் ஏனைய பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பினை ஆய்ந்தறிந்து வெளியிட்டவர். கெல்ட் மக்கள் தங்கள் மொழிக்கான எழுத்துருவை நிர்ணயித்துக் கொண்டபின்னர், அதாவது கிருஸ்து பிறப்புக்குப் பின்னான காலகட்டத்தில் இந்த கெல்ட் மொழியானது அதன் அடிபப்டை வடிவத்திலிருந்து பல்வேறு வகையான மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு புதிய புதிய மொழிகளாக வடிவெடுத்து விட்டது.

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் எனும் போது அதில் அடங்கும் மொழிகளாக பெருவாரியான ஐரோப்பிய மொழிகள், ஈரானிய மொழி, வட இந்திய மொழி ஆகியன அமைகின்றன. உதாரணமாக பெயர் என்னும் சொல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஒலிக்கப்படும் விளக்கம் பற்றி அறியும் போது இம்மொழிகளுக்கான ஒற்றுமைக் கூற்றை அறியக்கூடியதாக உள்ளது. Nama - Anglo Saxon (north East Germany) என்ற சொல், Name - English என்றும், Namn - Gothic என்றும், Name - Deutsch, என்றும், Naam - Dutch, என்றும், onama - Greek, என்றும்Namman - Sanskrit, என்றும் aimn - Irish உள்ளன. இதே போன்ற சொற்களை ஒற்றுமைகளைக் காட்ட நன்கு பட்டியலிடலாம். இன்று அறியக்கூடிய மிகப் பழமையான இந்தோ-ஐரோப்பிய இலக்கிய வடிவம் என்றால் அது ஹைட்டைட் (Hittite) மொழியும் சமஸ்கிருத மொழியும் எனக் கூறலாம்.ஹைட்டைட் மொழியின் எழுத்துப்படிவங்கள் கி.மு 1900 வாக்கில் உருவாக்கபப்ட்டவை என்றும் சமஸ்கிருத வேதங்கள் கி.மு 1000லிருந்து 500 வரை என்றும் சொல்லலாம்.

The Celt நூலின் ஆசிரியர் ஐரிஷ் கேலிக் மொழிக்கும் சமஸ்கிருத வேத கூறுகளுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுகின்றார். சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் புழக்கத்தில் இருக்கும் இந்த இரண்டு மொழிகளுக்கும் இருக்கும் ஒற்றுமையைக் கூறும் போது மொழியியல் மட்டுமல்லாது சமூஅக நடைமுறைகள், மக்கள் வாழ்வியல் கூறுகள், புராணங்கள் ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைக் கூறுகளைக் குறிப்பிடுகின்றார்.

புராணங்களை எடுத்துக் கொள்ளும் போது சில ஒப்பீடுகள் சுவாரசியமாக இருக்கின்றன.

ஐரிஷ் கேலிக் புராணத்தில் இருக்கும் Danu தானு(டனு) அல்லது அனு (Anu), பழைய கேலிக் கெல்ட சமூகத்தில் இருக்கும் வழிபடப்படும் ஒரு தாய் தெய்வம். அவளே புனிதம் அவளே புனித நதி. ஐரோப்பாவில் ஓடும் டனுப் நதி இந்த தாய் தெய்வத்தின் பிரதிபலிப்பாக கெல்ட் சமய வழக்கத்தில் உள்ளது. நதியின் முக்கியத்துவம் இந்திய புனித கங்கையோடு ஒப்பிடும் போது கங்கை பல சடங்குகளைச் செய்ய பயன்படும் ஒரு புனித ஸ்தலமாக இருப்பதைக் கான்கின்றோம். கெல்ட் மக்கள் நதியில் நைவேத்தியங்களை வைத்து படைத்து நதி அன்னைக்கு சமர்ப்பணம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அதே போல கங்கை நதியில் சடங்குகளைச் செய்து கங்கா நதிக்கு சமர்ப்பணம் செய்வது இந்திய தேசத்திலிருக்கும் ஒரு பண்பாக இருப்பதைக் காண்கின்றோம். வேத புராணத்தில் Danu நதியுடன் தொடர்புடைய ஒரு தெய்வமாகக் கருதப்படுகின்றார். பண்டைய கெல்ட் சமயத்தின் படி கெல்ட் மக்கள் தாம் (Danu) தானுவின் சந்ததியினர் எனத் தம்மை நம்புகின்றனர். புனித நீராகிய (Danu) தானுவின் வழியில் ஆகாயக் கடவுள் தோன்ற அவர்களின் சந்ததியினரே தாம் என்பது கெல்ட் மக்களின் நம்பிக்கை.

ஐரோப்பாவில் பல பகுதிகளில் அகழ்வாய்வுகL செய்யப்பட்டு கெல்ட் மக்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் வெளியிடப்பட்டன. இதில் பிரத்தியேகமாக கெல்ட் மக்களின் வழிபாட்டில் இருக்கும் எண்ணற்ற கடவுளர்களைப் பற்றி இந்த தொல்லியல் ஆய்வுகள் சான்றுகளை வழங்குவதாக அமைந்தன. அதுமட்டுமன்றி இரு சக்கரத் தேர்கள், ஆபரணங்கள், சிறப்பு சடங்கு பொருட்கள் ஆகியனவும் இவ்வகை ஆய்வுகளில் கிடைத்தன.

இந்த கெல்ட் இனமக்கள் மிக விரிவாக தமது ஆரம்ப மையப்புளியிலிருந்து பல இடங்களுக்குப் பெயர்ந்து தங்கள் பண்டைய கெல்ட் பண்பாட்டை தாங்கள் புலம்பெயர்ந்த புதிய நிலப்பகுதிகளில் அச்சூழலையும் உள்வாங்கிக் கொண்டு புதிய பரிமாணத்தில் புதிய பண்பாடுகளை உருவாக்கிக் கொண்டனர். கெல்ட் மக்களைப் பற்றி ஆராயும் போது இவர்கள் தாம் இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த ஆரிய இனக்குழுவினரோ என்ற எண்ணம் எழுகின்றது.

இனி தொடர்ந்து இக்கட்டுரையில் எனது பயணத்தில் 3ம் நாள் செய்திகளை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.









Tuesday, April 5, 2016

அயர்லாந்தின் அழகில்...! அயர்லாந்தில் செல்ட்டிக் பண்பாட்டின் தாக்கம் - 10

அயர்லாந்து மக்கள் தொகையில் ஏறக்குறைய 87% விழுக்காட்டு மக்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தோராக இருக்கின்றனர். எனது பயணத்தின் போது கிழக்கு, மேற்கு, தெற்கு மைய அயர்லாந்து என சென்ற இடங்கள் அனைத்திலும் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயங்கள் பல கண்களுக்குத் தென்பட்டன. ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயங்களின் உள்ளேயும் சென்று பார்த்து அவற்றின் வரலாற்றுப் பின்னனிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பினையும் இப்பயணத்தில் என்னால் பெற முடிந்தது. அப்படி நான் சென்று பார்த்த தேவாலயங்களில் ஏனைய ஐரோப்பிய தேவாலயங்களில் இருக்கும் குறியீடுகளிலிருந்து மாறுபட்ட வடிவங்களில் அமைந்த குறியீடுகளை அங்கே பரவலாகக் காணக்கூடியதாகவும் இருந்தது.


இதனைப் பற்றி அறிந்து கொள்ள நான் விசாரித்தபோது அயர்லாந்தின் கத்தோலிக்க சமயம் என்பது அங்கே முன்னரே வழக்கில் இருந்த செல்ட்டிக் பண்பாட்டிற்குள் உள்வாங்கப்பட்ட கத்தோலிக்க மதத்தின் ஒரு வடிவம் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இது, செல்ட்டிக் பண்பாடு, பாரம்பரியம் என்பன என்ன என்ற எனது தேடுதலை தொடக்கி வைத்தது. அதற்காக இச்சுற்றுப்பயணத்திலேயே செல்ட்டிக் பண்பாட்டையும் வரலாற்றையும் விளக்கும் இரண்டு நூல்களை பயணத்தில் இருந்த வேளையிலேயே ஒரு நூலகத்தில் வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். அதில் ஒன்றின் பெயர் The Celts. இதன் ஆசிரியர் Peter Berresford Ellis. இன்னொரு நூல் How the Irish saved Civilization. இதனை எழுதியவர் Thomas Cahill. இந்த நூல்கள் ஐரோப்பாவில் செல்ட்டிக் பாரம்பரியத்தின் வளர்ச்சி, வரலாறு, நிகழ்ந்த மாற்றங்கள், அயர்லாந்து இன்று செல்ட்டிக் மரபை பின்பற்றும், அதாவது இந்த மரபு இன்றும் வாழும் வகையில் இருக்கும் விசயங்களை விளக்குவதில் சிறந்த பங்களிப்பதாக உள்ளதை வாசிக்கையில் உணர்ந்தேன்.

அயர்லாந்தின் வரலாறு பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்த வரலாறு. அன்று கலைக்கும், பண்பாட்டிற்கும், வீரத்திற்கும், ஆளுமைக்கும் நிகழ்ந்த இந்த தொடர் மாற்றங்கள் இன்று வேற்று வகையில் நிகழ்கின்றன. இப்போது மையப் பொருளாக அயர்லாந்தை ஆக்கிரமித்திருப்பது பொருளாதார நிலைத்தன்மையும் இந்த நாடு காணும் ஏற்றத் தாழ்வும் எனச் சொல்லலாம்.

அயர்லாந்தின் அகழ்வாய்வு, தொல்லியல் ஆய்வுகள் ஆகியனவற்றின் சான்றுகள் தருகின்ற குறிப்புக்கள் கிமு.6000 ஆண்டு வாக்கில் அயர்லாந்தில் மக்கள் குடியிருந்தமைக்குச் சான்று தருகின்றன. இக்காலகட்டத்தில் வேட்டைத் தொழில் செய்வோர் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர். பின்னர் கற்காலத்தில், அதாவது கி.மு 3000 வாக்கில் அயர்லாந்து மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு என சிறுகச் சிறுக நாகரிக வளர்ச்சி பெர்றவர்களாகப் பரிமாணம் பெற்றனர். இதற்குச் சான்றுகளாக இங்கே இன்றும் காணக்கிடைக்கின்ற ஈமக்கிரியை கல்வட்டங்கள், கல்திட்டைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.



ஏறக்குறைய கி.மு 1500 வாக்கில் அயர்லாந்து நாகரிக வளர்ச்சியைக் காணும் வகையில் கட்டுமாங்கள், நகர்ப்புற அமைப்பு, கோட்டைகள் அமைப்பு என்ற வகையில் வளர்ச்சி அடைந்தது. இதற்குச் சான்றாக Inishmore பகுதியில் இருக்கும் Dun Aengus கோட்டையின் எச்சங்களும் Grianan of Aileach பகுதியில் இருக்கும் Donnegal கோட்டைகளின் சிதைந்தை பகுதிகளையும் குறிப்பிடலாம். இதற்கு ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் அயர்லாந்துக்குச் செல்ட்டிக் பாரம்பரியத்தைப் பின்பற்றும் இனக்குழுவினரின் வருகை அமைகின்றது. இது நிகழ்ந்த காலகட்டம் ஏறக்குறைய கி.மு. 6 எனக் குறிப்பிடலாம். செல்ட் இனக்குழு மக்கள் மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். மத்திய ஐரோப்பா என நான் குறிப்பிடுவது இன்றைய ஆஸ்திரியா, ஹங்கேரி, ரோமேனியா ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பகுதிகளைக் குறிப்பிடுவது.


இப்படி வந்த செல்ட்டிக் மக்கள் நாகரிகத்தில் உயர்ந்தவர்களாகவும் அதாவது இரும்பு போன்ற உலோகங்களினால் கருவிகள் செய்யக்கூடியவர்களாக இருந்தனர். தங்கள் வாழ்விடத்தை மிகுந்த பாதுகாப்பு அறன் போன்ற கோட்டைகளைக் கட்டி, அதிலும் வட்ட வடிவிலான கோட்டைச் சுவர்களை எழுப்பி இவர்கள் வாழ்ந்து வந்தனர். செல்ட் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான உலோகக் கருவிகளும் ஏனைய சில சான்றுகளும் டப்ளின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொடரும்...

Monday, April 4, 2016

அயர்லாந்தின் அழகில்..! - டப்ளின் நகர சாலைகளில் 9

அயர்லாந்தின் மிக முக்கிய நகரம், தலை நகரம், வர்த்தக நகரம் என்ற சிறப்புக்களோடு கலைத்துவமும் பரிமளிக்கும் ஒரு நகரம் டப்ளின். எனது பயணத்தின் இரண்டாம் நாள் ஒரு நாள் முழுதும் இந்த நகரத்தை நாங்கள் சுற்றிப் பார்க்க எனக்கு வாய்ப்பு அமைந்தது. காலையில் தங்கும் விடுதியிலேயே ஐரிஷ் வகை காலை உணவு. இதில் பிரத்தியேகமாக ஏதும் காணப்படவில்லை.  லண்டனில் காலை உணவு சாப்பிட்டவர்களுக்கு இதற்கும் அயர்லாந்தில் தங்கும் விடுதிகளில் கிடைக்கும் உணவிற்கு வித்தியாசம் இல்லாமல் இருப்பதை உணரலாம்.  இங்கிலீஷ் உணவு வகைகள் போலவே டோஸ்ட் ரொட்டி,  முட்டை, சாசேஜ், தேனீர், காப்பி, பழங்கள் என அமைந்திருக்கும். சற்று அலுப்பைத் தரக்கூடிய ஒரு காலை உணவு. எனக்கு பிடிக்காத காலை உணவு வகை. பிடிக்கவில்லையென்றாலும் காப்பியும் ஜேம் தடவிய ரொட்டியும் மட்டும் சாப்பிட்டு விட்டு  டப்ளின் நகரைப் பார்க்கப் புறப்பட்டோம்.

டப்ளினில் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. அவை எல்லாவற்றையும் ஒரு நாளில்  பார்த்து முடிக்க முடியாது என்ற காரணத்தால் பகலில் சாலையில் நடந்து சென்று எந்த இடங்களைப் பார்த்து வரலாம் என திட்டமிட்டோம். எங்கள் பயண திட்டத்தில் மேலும் ஒரு நாள் இறுதியாக டப்ளினில் இருக்கும் வகையில் பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.  ஆக அவசரப் பட்டுக் கொண்டு செல்லாமல் நிதானமாக முக்கிய இடங்களைப் பார்த்து தகவல்கள் சேகரித்து வருவதோடு டப்ளின் சாலைகளில் நடந்து மக்களையும் சாலை காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டும் என்றும் ஆவல் இருந்தது. ஆக இரண்டு இடங்களை மட்டும் பார்ப்போம் என முடிவு செய்து கொண்டேன்.


டப்ளினுக்கு சிறப்பு சேர்க்கும் சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களாக கீழ்க்கண்பவற்றை குறிப்பிடலாம்.
  • ட்ரினிடி காலேஜ், நூலகம்
  • கெல்ஸ் புத்தகம்
  • டப்ளின் கோட்டை
  • டப்ளின் துறைமுகம்
  • ஃபீனிக்ஸ் பார்க்
  • செயிண்ட் பேட்ரிக் கேத்தீட்ரல்
  • க்ரிஸ்ட் சர்ச் கெத்தீட்ரல்
  • டெம்பல் பார்
  • கின்னஸ் ஸ்டோர்
  • டப்ளின் மிருகக்காட்சி சாலை

இதில் ஏற்கனவே வந்திறங்கிய முதல் நாளே ட்ரினிடி காலேஜ், நூலகம், கெல்ஸ் புத்தகம் ஆகிய இரண்டையும் பார்த்து விட்டமையால் இரண்டாம் நாள் டப்ளின் கோட்டையையும், கின்னஸ் ஸ்டோர் தொழிற்சாலையையும் பார்த்து விட்டு சர்ச் கெத்தீட்ரல் பார்த்து வருவோம் என முடிவு செய்து கொண்டேன். இவை மூன்றுமே டப்ளின் நகர மையத்திலேயே இருப்பதால் நடந்தே சென்று வரலாம் என்று முடிவு செய்து கொண்டேன். முதல் நாள் டப்ளின் வந்திருந்தமையால் ஏறக்குறைய இவை இருக்கின்ற இடங்களை அறிந்திருந்திருந்தேன். ஆக இவற்றைத் தேடித் திரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. அத்தோடு எங்கள் பயண வழிகாட்டி எங்களுக்கு டப்ளின் நகர சாலை வரைபடம் ஒன்றையும் அளித்திருந்தார் அதில் மிகத் தெளிவாக சாலை வரைபடங்கள் சுற்றுப்பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகியவை பெயர்களோடும் குறியீடுகளோடும் வழங்கப்பட்டிருந்தன. 

காலை 10 மணி அளவில் எங்களைச் சுற்றுலா பஸ் அழைத்து வந்து ட்ரினிட்டி காலேஜ் வளாகத்தின் மேற்கு புறக் கதவின் அருகில் இறக்கி விட்டுச் சென்று விட்டது. சுதந்திரமாக ஒரு நாள் டப்ளினில் கூட்டமாக இல்லாமல் தனியாகச் சென்று நமக்குப் பிடித்த வகையில் நேரம் எடுத்துக் கொண்டு பார்க்க விரும்பும் விஷயங்களைப் பார்த்து வரலாம் என்ற நினைப்பே ஒரு விதத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. சில வேளைகளில் குழுவாக பயணிப்பது சுவாரசியமளிக்கும் ஒன்று தான். ஆனால் சில வேளைகளில் அது நச்சரிப்பாகவும் அமைந்து விட வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட அனுபவமும் 2 முறை எனக்கு நிகழ்ந்தது. அதனைப் பிறகு குறிப்பிடுகிறேன். 

அன்று காலை சற்று மேக மூட்டமாகவும் சீதோஷ்ணம் ஏறக்குறைய 17 டிகிரி வாக்கிலும் அமைந்திருந்தது. காலையில் பயணம் ஆரம்பித்த சமயம் சிறு தூரலும் இருந்தது. அயர்லாந்தின் சீதோஷ்ணம் பற்றி தனியாக ஒரு பதிவிட வேண்டும். இங்கே குடையில்லாமல் செல்லக்கூடாது என்பதை முன்னரே தெரிந்திருந்ததால் நான் எனது பேக்பேக்கில் ஒரு குடையும் வைத்திருந்தது மிகவும் பயணளித்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் சற்று நேரத்தில் தூரல் நின்று சூரியன் இன்முகத்தைக் காட்டி பிரகாசமாக சிரிக்க, சாலையில் நடந்தே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பயணம் செல்வது சுவாரசியமாக அமைந்தது.

ட்ரினிடி காலேஜ் வாசலிலிருந்து இறங்கி நேராக நடந்து டேம் (Dame Street) சாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. டப்ளின் கோட்டை இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. கூகள் வரைபடத்தைக் காண்க.


டப்ளின் கோட்டைக்குச் செல்லும் வழியில் சாலையின் இரண்டு பகுதிகளில் உள்ள கடைகளையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்துக் கொண்டே சென்றேன். ஏறக்குறைய 525,000 மக்கள் தொகை கொண்ட நகரம் டப்ளின். இங்கு பெரும்பாலானோர் ஐரிஷ் இனத்தவர்களே. டப்ளினில் மட்டுமல்ல (Republic of Ireland) அயர்லாந்து முழுதும் கேலிக் கத்தோலிக்க வகை பண்பாட்டு சமயத்தைச் சார்ந்தவர்களே மிகப் பெறும்பாண்மையினர்.  ஒரு குறைவான அளவில் ஐரோப்பாவின் பிற பகுதிகளான இத்தாலியர்கள், ஜெர்மானியர்கள், ஸ்பேனீஷ்காரர்கள் இருக்கின்றார்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இங்கிலாந்து மக்களும் இருக்கின்றனர். ஆசிய மக்களையும் ஆங்காங்கே காண முடிந்தது. இந்தியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், வியட்னாமியர்கள், தாய் மக்கள் சிலர் டப்ளின் நகரில் வசிக்கின்றனர் என்பதை சாலையில் செல்வோரைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது. 

ஆங்காங்கே சீன உணவகங்கள், தாய் உணவகங்கள், இந்திய உணவகங்கள் இருக்கின்றன. ஒரு மலாய் உணவகமும் கூட ஒன்று இருப்பதைப் பார்த்து அதிசயித்தேன். 


டப்ளின் ஒரு கலாச்சார மையம் என்றால் அது மிகையில்லை. சாலையில் ஆங்காங்கே இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை வாசித்துக் கொண்டு இசை மணம் பறப்பிக் கொண்டிருக்கும் காட்சி இந்த நகரத்திற்கு உயிரூட்டும் ஒன்று. 


டப்ளின் நகரின் மத்தியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அமைந்திருக்கும் ஜியோர்ஜியன் டப்ளின் கட்டிடங்களின் (வீடுகளின்)  கதவுகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை. 

வெள்ளை நிற தொடர் வீடுகளுக்குக் கண்களைப் பளிச்செனக் கவரும் கவர்ச்சியான வர்ணத்தில் அமைக்கப்பட்ட கதவுகளும் அதற்கு எழில் சேர்க்கும் கருப்பு நிற கைப்பிடிகளும் பார்ப்பதற்கே மிக அழகு. இவை ஜியோர்ஜியன் (Georgian) வகை கட்டிடக் கலையின் எச்சங்களாக இன்றும் டப்ளின் நகரத்தை அலங்கரிப்பவை. ஜியோர்ஜியன் டப்ளின் பற்றி மேலும் பிறகு தொடர்கிறேன். 





களிமண்ணில் உருவாகும் நாய்குட்டி வடிவங்கள்.. கலைத்திறன் நாய் குட்டியின் கண்களில் தெரிகின்றது.





சாலையோர இசைக் கலைஞர்கள்




ஜியோர்ஜியன் வகை வீடுகள்





இந்திய உணவகம் ஒன்று .. டப்ளின் நகரில்






பெண்கள் சிகை அலங்காரம் செது கொள்ள பல வர்ணங்களில் வல வகைகளில் தலை முடி.


சாலையைச் சுற்றிப் பார்க்க் ரிக்‌ஷா வண்டி.



தொடரும்..