Monday, December 29, 2003

Travelog - Seoul, S.Korea 5



மங்கோலியப் பேரரசர் ஜெங்கிஸ் கான் கொரியாவில் மீண்டும் பிறப்பார் என்று ஒரு நம்பிக்கை கொரிய மக்களுக்கு இருந்திருக்கின்றது. இதன் அடிப்படையில் 1206ல் Temujen என்ற ஒருவரை ஜெங்கிஸ் கான் என்று தேர்ந்தெடுத்து மகுடாபிஷேகம் செய்வித்து மகாராஜாவாக்கியிருக்கின்றனர்.



அரசர்களுக்கான அரண்மனைகள், அதனைச் சேர்ந்தார்போல அமைந்திருக்கும் பூந்தோட்டங்கள் ஆகியவை சியோல் நகரத்தின் பல மூலைகளில் காண முடிகின்றது. ஜப்பானியர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் இந்த அரண்மனைகளைச் சிதைக்காமல் இருந்திருந்தால் மேலும் பல கலை நயம் மிக்க அரண்மனைகளை இப்போது காண முடியும்.

சியோல் பெரிய நகரமாக இருந்தாலும், இங்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வது என்பது மிகச் சுலபமாகவே இருக்கின்றது. இந்த நகரத்தின் ஏறக்குறைய அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பொது வாகன வசதிகள் அதிலும் குறிப்பாக subway அமைந்திருப்பது பாராட்டக்கூடிய ஒரு விஷயம்.


முதல் நாள் வேண்டிய அளவிற்கு shopping செய்து முடித்து விட்டதால் மேலும் சில முக்கியமான இடங்களைப் பார்த்து வர முடிவு செய்திருந்தேன். சம்சியோங்-டோ ங் பகுதி எனது பட்டியலில் அடுத்ததாக இருந்தது. இங்குதான் சியோலின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டக் கூடிய பிரமாண்டமான கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவை இருக்கின்றன. சியோல் உலக வர்த்தக மையம் போங்கூன்சா கோவில், குக்குவோன் என அழைக்கப்படும் தேக்குவாண்டோ தலைமையகம் போன்றவை இங்கிருக்கும் சில முக்கிய இடங்கள்.




மிகப் பிரமாண்டமாக அமைந்திருக்கின்ற சியோல் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தார் போன்றே Coax Mall இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் வேடிக்கைப் ர்த்துக் கொண்டும் செல்வதுமாக இந்த இடம் இருக்கின்றது. இந்த Coax Mall உள்ளேயே 16 திரையரங்குகள் கொண்ட ஒரு சினிமா மையமும் இருக்கின்றது. அதன் அருகிலேயே இளைஞர்கள் computer games விளையாடுவதற்காக ஒரு பகுதி இருக்கின்றது. இந்த விளையாட்டை வேடிக்கைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். குளிர் காலத்தில் வெளியே செல்வதற்கு பதிலாக Coax Mall போன்ற இடங்கள் பொழுது போக்கு மையங்களாக அமைந்து விடுவதைக் காண முடிகின்றது. இங்கு எனக்கு மன நிறைவளைக்கும் படியாக சுவையான காபியும் கிடைத்தது. வர்த்தக மையத்தில் பல மூலைகளில் பொது தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த தொலைபேசிகளுடனேயே சேர்ந்தார் போல இணைய வசதி அமைந்த கணினியும் இருக்கின்றது. பொதுமக்கள் இந்த சேவையை எந்தக் கட்டணமுமில்லாமல் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Thursday, December 25, 2003

Travelog - Seoul, S.Korea 4

கொரியாவிற்குச் செல்வதற்கு முன்னர் ஒரு சில வார்த்தைகள் கொரிய மொழியில் கற்று வைத்திருப்பது முக்கியம் என்று இங்கு வந்த உடனேயே தெரிந்து கொண்டேன். மொழி தெரியாவிட்டால் நம் பாடு அதோ கதிதான். கொரிய மக்கள் ஆங்கிலம் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்; அதுவும் ஒரு சிலர் மட்டுமே. சியோல் போன்ற பெரிய நகரத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற தீவிகளிலும் சிறிய நகரங்களிலும் நிலமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான்.

கொரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் கடைகளைப் பார்த்தபடியே தேடிக் கொண்டு வரும் போது உணவு வகைகளை படம் பிடித்து வைத்திருந்த ஒரு விளம்பரப்பலகையைப் பார்த்து இங்கு நிச்சயம் நாம் சாப்பிட ஏதாவது நிச்சயமாகக் கிடைக்கும் என்று கண்ணன் அழைத்து வந்தார். ஒரு பக்கத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடும் வகையில் குட்டையான மேசைகள்; மற்றொரு பக்கத்தில் சாதாரண வகை மேஜை நாற்காலி. தரையில் உட்கார்ந்து கொரிய உணவை சாப்பிடக்கூடிய மன நிலையில் நான் இல்லை. அரண்மனையைச் சுற்றியதில் நல்ல கால்வலி. அதனால் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவோம் என்று சொல்லி கண்ணன் தேர்ந்தெடுத்த Bibimbap உணவிற்காகச் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். முதலில் ஒரு தட்டில் கிம்சி வந்தது. அவித்த கேபேஜில் அரைத்த சிவப்பு மிளகாயைக் கொட்டி அதோடு சாப்பிட கொஞ்சம் இதுவரை நான் பார்த்திராத வேர்களினாலான சாலட் கொண்டுவந்து வைத்தார்கள். பின்னர் சற்று நேரத்தில் எங்களுக்கான Bibimpab வந்தது. அழகான பெரிய
சட்டியில் வெள்ளரிக்காய், கேரட் துறுவல், tofu, மேலும் சில பெயர் தெரியாத கொரிய காய்கறிகளை அடுக்கி வைத்திருந்தார்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் சாதம் இருந்தது.
சுவைத்து ரசித்து சாப்பிடக்கூடிய வகை உணவு இல்லையென்றாலும் பார்ப்பதற்குக் கண்ணுக்கு அழகாக இந்த உணவு இருந்தது. ஊறுகாயை தொட்டுக் கொண்டு தயிர்சாதம் சாப்பிடுவது மாதிரி நினைத்துக் கொண்டு கிம்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சாப்பிட்டு முடித்தேன்.




மதிய உணவிற்குப் பின்னர் Namdaemun Market செல்ல நான் கிளம்பினேன். சியோலில் இம்மாதிரியான சாலையோரக் கடைப்பகுதிகள் சில இருக்கின்றன. அவற்றில் இந்த Namdaemun Market தான் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கு ஆண் பெண்களுக்கான உடைகள், தொப்பிகள், காலணிகள், குளிர் ஜேக்கட்டுகள், கைப்பைகள், ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் பிரச்சனையே. வெளியே குளிர் காற்றூம் அதிகமாக இருந்ததால் அதிக நேரம் வெளியே நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருக்க முடியவில்லை. கொரிய குளிர் ஜாக்கெட் ஒன்று வாங்குவதற்காக ஒரு கடைக்குள் நுழைந்தேன். அழகான இளம் சிவப்பு நிறத்திலான ஒரு ஜாக்கெட். அதனை எடுத்து விலை கேட்க ஆரம்பித்தேன். விற்பனை செய்பவளுக்கு 'Yes', 'service' என்பதைத் தவிர வேறு எந்த ஆங்கிலச் சொற்களும் தெரியாது. எனக்கு சில எண்களைத் தவிர வேறு எந்த கொரிய சொல்லும் தெரியாது. ஒரு calculator எடுத்துக் கொண்டு அதில் 120,000 வொன் என்று அழுத்திக் காட்டினாள். நான், முடியாது 30,000வொன் தான் தருவேன் என்று மாற்றி அழுத்திக் காட்ட, அவள் ஒரு விலை சொல்ல நான் ஒரு விலை சொல்ல என்று இறுதியாக 60,000 வொன் என்று முடிவானது. இந்த ஜேக்கட்டை வாங்கியதற்காக ஒரு இலவச அன்பளிப்பாக சட்டையில் அணிந்து கொள்ளும் அலங்காரப்பின் ஒன்றையும் 'service' என்று சொல்லிக்கொண்டு கொடுத்தாள்.
இங்கு பலரும் இப்படிச் சொல்லி பொருட்களை விற்பது சகஜமாக இருக்கின்றது. கொரிய பெண்கள் yes, மற்றும் service என்று சொல்வதும் ரசிக்கத்தக்கவை. yes என்பதை yessu...uu , service என்பதை servisu...uu என்று இழுத்து சொல்லிக் கொண்டு சிரிப்பது அழகாக இருக்கின்றது.

Wednesday, December 24, 2003

Travelog - Seoul, S.Korea 3

1948ல் சுதந்திரம் அடைந்த பிறகு தென் கொரியாவின் வளர்ச்சி மிகத் துரிதமாகவே நடந்திருக்கின்றது. இந்த நாட்டில் சமய சுதந்திரம் என்பது காக்கப்படுகின்றது. இந்த நாட்டின் மிகப் பழமையான மதங்களான Shamanism, பௌபத்தம், மற்றும் கொன்பூஷியனிசம் ஆகியவை இன்றளவும் இங்கு அனுஷ்டிக்கப்படுகின்ற மதங்களாகவே இருக்கின்றன. இந்த நாட்டிற்கு ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் கிற்ஸ்தவ மதம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டிய அலங்காரங்களையும் சிறப்பு விற்பனைகளையும் சியோல் நகரத்தின் எல்லா தெருக்களிலும் காண முடிகின்றது.
சியோல் உலகிலேயே ஐந்தாவது பெரிய நகரம் என்ற சிறப்பையும் கொண்டிருக்கின்றது. சியோல் நகரம் மாத்திரமே 10.3 மில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கின்றது. subway இரயிலில் பயணிக்கும் போது மாலை நேரங்களில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை வருகின்ற இந்த இரயில்களில் மக்கள் கூட்டத்தைப் பார்த்தாலே இங்குள்ள ஜன நெருக்கடியைப் பற்றி நம்மால் ஊகித்துக் கொள்ள முடியும்.

முதல் நாளே திட்டமிட்டிருந்தபடி சியோல் நகரில் இருக்கும் பழமை வாய்ந்த மிகப்பெரிய இந்த அரண்மனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். இந்த அரண்மனை முதன் முதலில் 1418ல் கட்டப்பட்டது. Sejong மகாராஜா தனது தந்தையார் Taejong மகாராஜாவிற்காக இந்த அரண்மனையைக் கட்டினார். ஜப்பானியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்துகொண்டிருந்த போது சியோல் நகரில் உள்ள இதைப்போன்ற பல அரண்மனைகளை எரித்திருக்கின்றனர். ஆனால் இந்த அரண்மனையின் அழகும் அதன் தனித்துவமிக்க வடிவமும் ஏதாவது ஒரு வகையில் அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். அதனால் இந்த அரண்மனையை ஜப்பானியர்கள் பூங்காவாகவும் மிருகக்காட்சி சாலையாகவும் சற்று மாற்றி அமைத்து, அரண்மனையின் அறைகளை அரசாங்க அலுவலகமாகவும் ஆக்கி வைத்திருந்தனர். 1980 வாக்கில் இந்த அரண்மனையைப் பாதுகாக்கும் திட்டத்தை அரசாங்கம் வகுக்க ஆர்ம்பித்தது. அப்போது இங்கிருந்த மிருகக்காட்சி சாலையை வேறிடத்திற்கு மாற்றி விட்டு முழு அரண்மணையயும் அரசாங்கத்தின் பார்வைக்கே கொண்டு வந்து விட்டது. ஜப்பானியர்கள் தென் கொரிவாலிருந்து வெளியேறிய பின்னர் 1989 வரை இங்கு அரச பரம்பரையைச் சேர்த்தவர்கள் மீண்டும் வந்து தங்கியிருந்தனர். இப்போது பொது மக்களின் பார்வைக்காகவே இந்த அரண்மனை வைக்கப்பட்டுள்ளது.



ஒவ்வொரு நாளும் மதியம் இரண்டிலிருந்து மூன்றரை வரை இங்கு ஒரு சிறப்பு வைபவம் நடைபெருகின்றது. இதனை Royal Guard changing ceremony என்கின்றார்கள். லண்டனிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெருவது போன்ற ஒன்றுதான் இதுவும். ஆனால் அங்கிருக்கும் பிரமாண்டம் இங்கில்லை. அதே போல Praque, செக் நாட்டிலுள்ள அரண்மனையிலும் இன்றளவும் மிகப்பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கும் இந்த வகை சடங்குகளை விட சற்று எளிமையாகத் தான் இங்கு இருக்கின்றது. கொரிய பாரம்பரிய உடையணிந்த காவலர்கள் அணிவகுத்து வந்து சில சடங்குகளைச் செய்து, பின்னர் உறுதி மொழி செய்து விட்டு அரண்மனை வாசலுக்கு வந்து பொறுப்பேற்றுக் கொள்வதுதான் இந்த சடங்கு. இதனைப் பார்ப்பதற்காக தினமும் சுற்றுப்பயணிகள் கூடுகின்றனர். திங்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் இந்த சிறப்பு வைபவம் தொடர்ந்து நடக்கின்றது.



அரண்மனையையும் அதனை ஒட்டிய பூங்காவையும் பார்த்து விட்டு shopping செல்வதாகத் திட்டம். மதிய உணவிற்கு கண்ணனும் வருவதாகத் தெரிவித்திருந்தார். ஆக சியோலில் பிரசித்தி பெற்ற Namdaemun Market செல்வதற்கு முன்னர் மதிய உணவிற்காக உணவுக் கடையைத் தேட ஆரம்பித்தோம்.

Monday, December 22, 2003

Travelog - Seoul, S.Korea 2

தென் கொரியாவின் வடக்குப் பகுதியில் வடகொரியா அதோடு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அமைந்திருக்கின்றன; கிழக்கில் ஜப்பான். ஆக தென் கொரியா பல ஆண்டுகளாக பலமுனை தாக்குதல்களை இந்த அண்டை நாடுகளிடமிருந்து அனுபவித்து வந்துள்ளது என்பதை தெரிந்து
கொள்ள முடியும்.

கொரிய தீபகற்பத்தின் சுற்றளவு 222,154 square kilometers. ஏறக்குறைய இங்கிலாந்தின் அளவை ஒத்தது. தென் கொரியாவின் 70 சதவிகித நிலப்பரப்பு மலைப்பாங்கானது. அதானல் எல்லா இடங்களிலும் இயற்கை அழகு நிறைந்த மலைகளைக் காண முடிகின்றது. தலைநகரான சியோலிலும் இதே நிலைதான். சியோல் நகரத்திலேயே மலைப்பகுதிகள் ஏராளமாக இருக்கின்றன. சுற்றுப்பயணிகளை கவரும் வகையில் மலை ஏற்றம் செல்வதற்கான வசதிகளையெல்லாம் சிறப்பாக செய்து வைத்திருக்கின்றனர்.



கொரியத் தலைநகரான சியோலில் சுற்றிப்பார்ப்பதற்குப் பல இடங்கள் இருக்கின்றன. கோடை காலத்தில் வருபவர்களுக்கு சியோல் நிச்சயமாக ஒரு சுவர்க்க புரியாகத்தான் இருக்கும். ஐரோப்பாவில் இருந்து இங்கு வருபவர்கள் கொரியாவில் தாராளமாச் செலவு செய்ய முடியும் என்றே சொல்லலாம். தங்கும் விடுதிகள், உணவு, மலிவான நுழைவுக் கட்டணம், மலிவான விலையில் தரமான பொருட்கள் போன்றவை இங்குள்ள சிறப்புக்கள்.



உலகின் மிகப் பெரிய Indoor Theme Park சியோலில் தான் இருக்கின்றது. குளிராக இருந்ததால் முதலில் இதற்குச் செல்வது சரி என்று தோன்றியதால் Lotte World Theme Park கிளம்பினேன். மிகப் பிரமாண்டமான வகையில் வடிவமைக்கப்பட்ட இடம் இது. 18,000 வொன் (ஏறக்குறைய 14 EUR) கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டால் எல்லா மாதிரியான விளையாட்டுக்களிலும் சேர்ந்து கொள்ளலாம். பலூனில் ஏறி Theme Park முழுவதையும் சுற்றுவது, இரயிலில் பயணித்து இந்த இடத்தை முழுமையாக சுற்றிப் பார்ப்பது, பேய் வீட்டிற்குள் சென்று பயங்கரமான அனுபவத்தைப் பெறுவது, சிந்துபாத்தோடு சேர்ந்து கொண்டு புதையல் தேடுவது, இப்படிப் பல. ஒரு நாளில் முடிக்கமுடியாத அளவிற்குப் பல அங்கங்கள் இருக்கின்றன. இப்படி விளையாடும் போது மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.




Lotte World செல்வதற்கு எந்த சிரமமும் கிடையாது. சியோல் நகரில் எந்தப் பகுதியில் Subway டிக்கெட் எடுத்தாலும் 700 வொன் தான். (ஏறக்குறைய 50 சென் EUR) இரயிலை விட்டு இறங்கியதுமே Lotte World நுழைவாசலுக்கு வந்துவிடுவோம். அதனால் இதனைத் தேட வேண்டிய அவசியமே இல்லை. உணவுக் கடைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. அதிகமாகக் கொரிய வகை உணவுகள் தான் கிடைத்தாலும், மற்ற வகை உணவுகளும் ஒன்றிரண்டு இருக்கின்றன. சைவ உணவுக்காரர்களுக்கு இங்கு திண்டாட்டம் தான். கொரியர்களுக்குக் சைவ உணவைப் பற்றிய அவ்வளவான பிரக்ஞை கிடையாது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. எந்த உணவிலும் கடல் உணவு வகைகளை சேர்க்காமல் தயாரிப்பது அவர்களுக்கு முடியாத ஒன்று போல தோன்றுகின்றது. ஆனாலும் இங்கு சில ஆலயங்களில் புத்த பிக்குகள் சைவ உணவுகளை வழங்குவதாகவும் குறிப்புக்களில் தேடி வைத்திருந்தேன். ஆனால் இந்த ஆலயங்கள் அருகாமையில் இல்லை. ஆக Pizza, cheese burger, french fries இப்படி சாப்பிட்டுத்தான் உயிர் வாழ முடியும்..:-)



ஒரு நாள் முழுதும் மிக இனிமையாகக் கழிந்தது. சியோலுக்கு வருபவர்கள் இந்த Lotte World வருவதற்கு மறக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இது நிச்சயமாக அமையும்.



மறுநாள் சியோலில் இருக்கும் மிகப்பேரிய அரண்மனைக்கு சென்று வரவேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். இந்த அரண்மனையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு வைபவம் நடக்கின்றது. அதைப் பற்றிய செய்தி நாளைக்கு!

Travelog - Seoul, S.Korea 1

எஸ்லிங்கன்(ஜெர்மனி) பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு கொரியாவைச் சேர்ந்த ஒரு தோழியும் இருந்தாள். அவளுடன் ஆங்கிலத்தில் பேசி விஷயத்தைத் தெரிந்து கொள்வது என்பது அசாதாரணமான விஷயம் என்பதை என்னைப்போலவே என்னோடு படித்த மற்ற நண்பர்களும் கூட உணர்ந்திருந்தனர். அந்த அனுபவம் மனதில் இன்னமும் மறையாமலேயே இருந்தாலும் இந்த கிறிஸ்மஸ் விடுமுறையை கொஞ்சம் வித்தியாசமாக அனுபவிக்கலாமே என்ற சிந்தனையில் மலேசியாவிற்குப் பதிலாக தென் கொரியாவிற்கு பயணம் செய்யலாம் என்று தோன்றியது. இப்போது தென்கொரியாவில் இருக்கும் முந்தைய ஜெர்மனிவாசியான நா.கண்ணனும் அங்கு இருப்பதால் நிச்சயமாக அங்கு சுற்றுலா செல்வது சிரமமாக இருக்காது என்று முடிவெடுத்து கிளம்பிவிட்டேன்.

ஜெர்மனியிலிருந்து KLM விமான சேவையின் வழி Amstredam சென்று அதன் பின்னர் Seoul செல்ல வேண்டும். பயணிக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன் Air France விமானச் சேவையும் KLM விமானச் சேவையும் தற்போது ஒன்றாக இணைந்து சேவை வழங்குகின்ற ¢ஷயத்தைப் பற்றி. வியாபாரத்தில் புதிய அணுகு முறை, வர்த்தகத் தந்திரம் என பல தொழில்நுட்ப வார்த்தைகளை வைத்து தங்களின் இந்த இணைப்புக்காண காரணத்தை அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தாலும், வியாபார ரீதியாக KLM தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் பலரும் அறிந்ததே. ஆனாலும் உலகின் மிகப் பழமையான இந்த நிறுவனம் இந்த பொருளாதார நெருக்கடியில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிப்பதை பார்பதற்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கின்றது.

Air France கொஞ்சம் தந்திரமாகச் செயல்படும் நிறுவனம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் அலுவலக விஷயமாக ப்ரான்ஸ் செல்லும் போதெல்லாம் air france வழி செல்வதுதான் வழக்கம். ஒரு விமானத்தில் குறைவாக பயணிகள் பதிவு செய்திருந்தார்கள் என்றால் ஏதாவது ஒரு காரணம் காட்டி அடுத்த விமானத்திற்கு நம்மை மாற்றி விடுவார்கள். இதனால் விமானத்திற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படும். இதனை பல முறை நான் அனுபவித்திருக்கின்றேன். ஏதாவது ஒரு நொண்டிச் சாக்கு சொல்வார்கள். விமானம் தொழில்நுட்ப கோளாறு ற்பட்டதால் அடுத்த விமானத்தில் தான் செல்ல முடியும் என்று சொல்வார்கள்; அல்லது வர வேண்டிய விமானம் இன்னும் வந்து சேரவில்லை என்பார்கள்; ஆக Air France-க்கு இது புதிய விஷயமல்ல. அதிலும் ஐரோப்பாவிற்குள் செல்லும் விமானத்தில் பயணிப்பவர்கள் நிச்சயம் இந்த னுபவத்தை பெறாமல் இருக்க முடியாது. Air France -உடன் சேர்ந்த பிறகு KLM கூட இதே நடைமுறையை கடைபிடிக்கின்றதே என்று சற்று ஆதங்கமேற்பட்டது. 11:35க்கு செல்ல வேண்டிய நான் 12:45க்கு தான் Amsterdam செல்லும் விமானத்திலேயே நுழைய முடிந்தது. ஆனால் இவர்கள் தான் வியாபரத் தந்திரம் தெரிந்த கெட்டிக்காரர்கள் ஆயிற்றே. Amstredam -லிருந்து Seoul செல்லும் விமானம் சரியான நேரத்திற்கு புறப்படும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விமானம் முழுவதும் கொரிய பயணிகள். எனது இருக்கைக்கு வந்து அமர்ந்து எனது பொருட்களை மேலே வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஏற்கனவே பக்கத்தில் இருந்த இடமெல்லாம் நிரம்பிவிட்டிருந்தது. மிச்சமிருந்த ஒரு சிறிய இடத்தில் எனது பொருட்களை வைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு கொரிய பெண் என்னிடம் ஆங்கிலத்தில் அவள் அந்த இடத்தில் அவளது பையை வைக்க வேண்டும் என்றாள். கொஞ்சம் அதிர்ச்சிதான் எனக்கு. இருப்பதோ சிறிய இடம். அதில் என்னுடைய சிறிய பையையும் குளிர் ஜேக்கட்டையும் வைப்பதற்கே இடம் போதுமானதாக இருந்தது. அவள் கையில் மூன்று பைகள். மிகவும் நீளமாக வேறு. என்னிடன் விவாதிக்க ஆரம்பித்துவிட்டாள். "எனக்கு 3 பைகள் இருக்கின்றது. உனக்கு ஒன்றுதானே. அதை நீ கையில் வைத்துக் கொள் என்னுடையதை நான் மேலே வைக்க வேண்டும்" என்று ஒரு பைத்தியக்காரத்தனமான தர்க்கம். "என்னுடைய இருக்கைக்கு மேலே இருக்கின்ற இடம் இது. என்னால் என் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு 12 மணி நேரம் பயணம் செய்ய முடியாது. வேறு இடம் பார்த்துக் கொள்" என்று சற்று கடுமையாக சொல்லி விட்டு அமர்ந்து விட்டேன். கொரியாவிற்கான பயணம், அதுவும் அவர்கள் இணத்து மக்களுடன் பேசும் முதல் உரையாடலே இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டுமா என்று மனதுக்குளேயே நொந்து கொண்டேன். அவளது பேச்சும் குரலும் ஆத்திரத்தை உண்டாக்கி இருந்தது. கொரிய மக்களே இப்படித்தான் அநாகரிகமாக நடந்து கொள்வார்களா என்ற கேள்வி மனதில் தோன்றி கொஞ்சம் பயத்தையும் உண்டாக்கி விட்டது. ஆனால் சியோல் வந்த பிறகு அந்த மக்களோடு ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாம் இந்த சிந்தனையை அடியோடு மாற்றி விட்டன. பழகுவதற்கு இனிமையான மக்கள்; அன்பானவர்கள்; அதிலும் வெளிநாட்டவரிடம் அவர்கள் காட்டும் மரியாதை ஆகியவை வியக்க வைக்கும் அளவிற்கு உள்ளன என்பதை இங்கு வந்த உடனேயே அறிந்து கொண்டேன்.




11:15 மணி நேர பயணம் இது. ஏற்கனவே கண்ணனுக்கும் எனது வருகையை தெரிவித்திருந்ததால் நிச்சயமாக விமான நிலையத்திற்கு வந்து என்னை அழைத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டிருந்தது கொஞ்சம் தைரியமாக இருந்தது. விமானம் தரையிறங்கியதும் எனது உடமைகளை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தேன். கொரியர்களோடு கொரியராக உருவத்திலும் சற்று மாற்றம் கொண்டிருந்த கண்ணன் முகம் முழுக்க புன்னகையோடு என்னை வரவேற்க நின்றிருந்தார். தனது ஆராய்ச்சி வேலைகளுகளுக்கிடையே எனக்காக நேரம் ஒதுக்கி சியோல் நகரைச் சுற்றிக்காட்ட உதவிய கண்ணனுக்கும் சியோல் நகரிலேயே ஒரு சிலை வைக்கலாம் தான்!

Tuesday, November 18, 2003

Travelog - Basel, Swizerland 6 [6 - 10 Nov]

முதல் நாள் வெகு நேரம் வேலை செய்த களைப்பு, பூரண சந்திர கிரஹணத்தைக் கண்களாலே தரிசித்த இன்பம் இவையெல்லாம் கலந்திருந்ததில் காலை 8:00 மணி வரை தூங்கிப் போனேன். முதல் நாளே wake-up call 7 மணிக்கு சொல்லி இருந்தாலும் யாரும் அழைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக 8 மணிக்கு எழுந்ததும் மணியைப் பார்த்து திடுக்கிட்டு குளித்துக் கிளம்ப ஆயத்தமானேன். உணவு விடுதியில் பீட்டர் சாப்பிட்டு விட்டு காபி குடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனோடு சேர்ந்து கொண்டு எனது காலை உணவை ஆரம்பித்தேன்.

காளான்களை நெய்யில் வருத்து வைத்திருந்தார்கள்; அதேபோல தக்காளியை சீஸ் கொண்டு அலங்கரித்து அதனை வருத்திருந்தார்கள். காலை உணவுக்கு இது சற்று அதிகம் என்றாலும் எப்போதும் சாப்பிடும் வகையிலிருந்து இது மாறுபட்டிருந்ததால் இதனை எடுத்துக் கொண்டு வந்தமர்ந்தேன். காளான் வருவல் நினைத்ததற்கும் மேலாக சுவையாக இருந்தது.



இன்று எனக்கும் பீட்டருக்கும் தான் வேலை. டேனியலும் ஸ்டெபானும் அவர்களுடைய
வேலையை முடித்து விட்டதால் எங்களுடைய வேலையை 12 மணிக்குள் முடித்து விடுவதாக திட்டம். அதனை நினைத்துக் கொண்டே கண்ணும் கருத்துமாக வேலைகளில்
மூழ்கிப்போனோம். நினைத்ததைவிட சற்று தாமதித்து 12:30 அளவில் தான் வேலை முடிந்தது. வெற்றிகரமாக அன்றைய வேலை முடிவடைந்ததை நினைத்து எங்கள் இருவருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். அதனைக் கொண்டாட வேண்டும் என நினைத்துக் கொண்டு பாசல் நகருக்குச் சென்றோம். எங்களை 2 மணிக்கு சந்திப்பதாக சுவிஸ் அலுவலக மானேஜர் மார்க்குஸ் சொல்லியிருந்தார். ஆக மீதமிருந்த 1 1/2 மணி நேரத்திற்குப் பாசலைச் சுற்றிப் பார்க்க எங்களுக்கு வாய்ப்பிருந்தது.



பாசலின் சாலைகளை அலங்கரிக்கும் Tram களில் ஏறிப் பயணிப்போம் என முடிவு செய்து பச்சை நிற Tram -ல் ஏறிக் கொண்டோ ம். சாலைகளின் இரு பக்கங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பெயர் தெரியாத ஒரு பகுதியில் இறங்கிக் கொண்டோ ம். ஞாயிற்றுக் கிழமை; அதிலும் பாசல் நகர விழா வேறு நடந்து கொண்டிருப்பதால் மக்கள் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது. வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒரு உணவு விடுதிக்கும் வந்து சேர்ந்தோம். சுவிஸர்லாந்தின் பாரம்பரிய உணவு சாப்பிடலாம் என இருவருமே முடிவு செய்ய மிக அருமையான 'ராக்லெட்' சீஸினால் சமைக்கப்பட்ட ஒரு உணவு பதார்த்தத்தை தேர்ந்தெடுத்தேன். அருமையான தேர்வு. வருக்கப்பட்ட காய்கறிகளோடு மிக நேர்த்தியாக உருளைக்கிழங்குகளை அவித்து 'ராக்லெட்' சீஸினால் அவற்றை அலங்கரித்திருந்தனர்.

ராக்லெட் பற்றி அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Raclette !




ஐரோப்பாவிற்கு வருகின்ற பலர் பயந்து கொண்டு புதிய வகையான உணவுகளை முயற்சிப்பதை தவிர்த்து விடுகின்றனர். பயத்தை விட்டு விட்டு திறந்த மனத்தோடு புதுமையான உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பழக வேண்டும். எத்தனை விதமான சைவ உணவு வகைகள் இங்கிருக்கின்றன என்பதை பட்டியலே போடலாம். அந்த அளவிற்கு பல வகை உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன.

3 மணி அளவில் தான் எங்களின் கணினி அறைக்குத் திரும்பிச் சென்றோம். நாங்கள் சற்றுதாமதமாகத்தான் திரும்புவோம் என அவருக்கு அறிவித்திருந்தாலும் எங்களுக்காக மார்க்குஸ் வந்து காத்திருந்தார். மீதமிருந்த அறிக்கை தயாரிப்பு வேலைகள், குறிப்புக்கள் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாடிவிட்டு 5 மணி அளவில் பாசலிலிருந்து புறப்பட்டோம். ரைன் நதியைக் கடந்து எங்கள் ஓப்பல் வெக்ட்ரா பயணிக்கும் போது மனதில் அலாதியான ஒரு சந்தோஷம் வந்து சேர்ந்தது. வெற்றிகரமாக எங்கள் திட்டம் நிறைவேறிய ஒரு சந்தோஷம்; இனிமையாக பாசலை சில மணி நேரங்களாவது சுற்றிப்பார்க்க கிடைத்த வாய்ப்பு; இவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள். 15 நிமிடத்தில் சுவிஸ் எல்லையைத் தாண்டி ஜெர்மனிக்குள் நுழைந்தோம்; மனதில் இனிமையான நினைவுகளைச் சுமந்து கொண்டு.

முற்றும்

Saturday, November 15, 2003

Travelog - Basel, Swizerland 5 [6 - 10 Nov]



சுவிஸர்லாந்து அதன் சுற்றிலும் இருக்கும் ஸ்பெய்ன், ப்ரான்ஸ் ஜெர்மனி ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் ஒரு சிறிய நாடுதான். சிறியதாக இருந்தாலும் அரசாங்க மேளாண்மைக்காக இதை 23 சிறிய கண்டோ ன்களாகப் ( ~மாநிலங்கள்) பிரித்திருக்கின்றனர். அந்த வகையில் பாசலும் ஒரு தனி கண்டோ ன் என்றே குறிப்பிடப்படுகின்றது. பாசல் நகரத்தின் மொத்த சுற்றளவு 555km. இந்த கண்டோ னின் தேசிய மொழி ஜெர்மன். [சுவிஸர்லாந்தில் ஜெர்மன், ப்ரெஞ்ச், இத்தாலி அதோடு மேலும் சில எனக்குப் பெயர் தெரியாத மொழிகளும் தேசிய மொழிகளாக அந்தந்த கண்டோன்களினால் தேசிய மொழிகளாகக் கொள்ளப்படுகின்றன.]

பாசலைப் பொருத்தவரை இது மேலும் இரண்டு சிறிய கண்டோ ன்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி தனித்தனியாக செய்யப்பட்டு வருகின்றது. Basel Stadt என்ற ஒன்றும் Base Land என்ற மற்றொன்றும் தான் அவை. இந்த வகையில் சிறிய சிறிய அமைப்புக்களாகப் பிரிக்கும் போது மேளாண்மை, ஆட்சி அமைப்புக்கள், சட்ட திட்டங்கள் போன்றவை சற்று எளிமையாகவே கடைபிடிக்கப்பட முடிகின்றது.

பாசலின் மிக முக்கிய சாலையான Freier Strasse-வில் தற்பொழுது 10 திரையரங்குகளைக் கொண்ட ஒரு மிகப் பெரிய கட்டடம் கட்டப்படுவதற்காக பாசல் கண்டோன் முயற்சியில் இறங்கியிருக்கின்றதாம். ஆனால் Basel Stadt மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தெரிந்து கொண்டேன். சுவிஸர்லாந்தில் எனக்குத் தெரிந்தவரை மக்கள் தீர்ப்புத்தான் மகேசன் தீர்ப்பு. அரசாங்கம் எந்த ஒரு காரியத்தையும் மக்கள் ஒப்புதல் இன்றி செய்துவிட முடியாது.

எங்கள் வேலை எதிர்பார்த்ததை விட சற்று சிரமமாகித்தான் போனது. 7 மணி அளவில் டேனியலும் ஸ்டெபானும் தங்களின் வேலையை முடித்து விட்டு கிளம்பி விட்டனர். நானும் பீட்டரும் தொடர்ந்து எங்கள் வேலையில் மூழ்கிப் போனோம். அன்றைய வேலையை முடிப்பதற்கு இரவு 12:15 ஆகிவிட்டது. பாசல் சாலைகளில் உணவுக்கடையைத் தேடி நடக்க ஆரம்பித்தோம். பல கடைகள் அந்த இரவு வேளையிலும் திறந்திருந்தன. சற்று வித்தியாசமாகப் பட்ட ஒரு கடைக்குள் நுழைந்தோம். லெபனானினிய உணவு விடுதி அது. மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட சுவர்கள்; இந்திய பாரம்பரியத்தோடு ஒட்டியது போன்ற கலைப்பொருட்கள் எல்லா மூலைகளிலும் வைக்கப்படிருந்தன.

மெனுவைப் பார்த்தால் எந்த உணவுமே புரியாத ஒன்றாகவே இருந்தது. சைவமாக எதையாவது செய்து கொடுங்கள் என்று எனது கோரிக்கையை வைத்து விட்டு காத்திருக்க புழுங்கல் அரிசி சாதமும் சாலட்டும் தயிர் பச்சடியும் கிடைத்தது. லெபனானிய உணவு வகையிலும் தயிர் முக்கிய அங்கமாக இருப்பதை நினைத்து சற்று ஆச்சரியமாக
இருந்தது.



வேலை செய்த களைப்பும் பசியும் இருந்ததால் மிகச் சாதாரணமான அந்த உணவும் அப்போது அமிர்தமாகவே எனக்குத் தோன்றியது. சாப்பிட்டு விட்டு எங்கள் தங்கும் விடுதியை நோக்கி நடந்து வருகையில் சாலையின் மூலைகளில் மக்கள் கூட்டம் நின்று கொண்டு வானத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தைக் காண முடிந்தது. என்ன அதிசயம் வானத்தில் என்று பார்த்த எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.




சந்திர கிரகணம் தோன்றியிருந்தது. இதுவரை நான் நேராக சந்திர கிரகணத்தைப் பார்த்ததில்லை. நிலவில் ஒரு சிறு பகுதியே தெரிந்திருக்க மற்ற பகுதிகளெல்லாம் மறைந்து மிக மிக மிக அழகான, அற்புதமான ஒரு காட்சியை கண்டேன். என் வாழ்க்கையில் இதுவும் ஒரு மறக்க முடியாத நாளாகிப் போனது!

Thursday, November 13, 2003

Travelog - Basel, Swizerland 4 [6 - 10 Nov]



முதல் நாள் இரவு 2 மணி வரை வேலை நீடித்து விட்டாலும் காலையில் 8:00 மணிக்கு வேலையைத் தொடங்கவேண்டும் என்பதால் காலையிலேயே ஆயத்தமானேன். தங்கும் விடுதியின் உணவகத்தில் காலை உணவு சாப்பிட நுழைந்த போது எனக்கு முன்னரே பீட்டர் வந்திருந்தான். அவனோடு நானும் சேர்ந்து கொண்டேன். சுவிஸர்லாந்தின் எல்லா பகுதிகளிலும் இலங்கைத் தமிழர்களைக் காணமுடியும். பாசலும் அதற்கு விதிவிலக்கல்ல. எங்களுக்குத் தேநீர் வழங்க வந்த இளைஞர் ஒரு இலங்கைத் தமிழர். இந்திய முகச் சாயலோடு இருந்ததால் எனக்கு கொஞ்சம் அதிகமாகவே புன்னகையையும் தெரிவித்து கொண்டார்.


உணவை முடித்துக் கொண்டு கணினி அறைக்குச் செல்வதற்கு சற்று தாமதமாக ஆகிவிட்டது. எங்களுக்கு முன்னராகவே டேனியலும் ஸ்டெபானும் வந்திருந்தனர். அவர்களோடு பேசிக் கொண்டே ஒரு வழியாக நேரம் போவது தெரியாமல் வேலையில் மூழ்கிப் போனோம். திட்டமிட்டபடி வேலையை முடிக்க மதியம் 3 ஆகிவிட்டது. பாசல் நகருக்குள் சென்று சீன உணவு சாப்பிடலாம் என டேனியல் கூறியிருந்தான். டேனியலுக்கு இந்தப் பகுதி மிகவும் பழக்கமான ஒரு பகுதி. அவனது அலுவலகம் ஏறக்குறைய 5 km தூரத்தில் தான் இருப்பதனாலும் அவனது வேலைகள் பெரும்பாலும் இந்த கணினி அறையிலேயே அமைந்து விடுவதாலும் அவனுக்கு பாசல் ஒரு புதிய இடமில்லை தான்.

Mr.Wong சீன உணவகம் Freier Strasse-விலேயே இருக்கின்றது. உள்ளே நுழைபயும் போதே மிகப் பெரிய புத்தர் சிலை ஒன்று நம்மை வரவேற்கின்றது. மலேசியாவில் உடனுக்குடன் செய்து தரப்படும் மீ கோரேங் மாதிரி இங்கேயும் உடனுக்குடன் உணவு தயாரித்துத் தருகின்றார்கள். உணவின் தரமும் சுவையும் ஜெர்மனியை விட வித்தியாசமாக இருந்தாலும், விலையைப் பொருத்தவரை ஜெர்மனி எவ்வளவோ மேல் என்றே சொல்ல வேண்டும். எந்த வகை உணவை எடுத்துக் கொண்டாலும் 20 சுவிஸ் ப்ராங்கிற்கு கீழ் கிடைக்காது என்றே சொல்லலாம் (Golden M இதில் அடக்கம் இல்லை.. )



சாப்பிட்டு விட்டு, சற்று நேர ஓய்விற்காகச் சாலையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கேளிக்கை விழா நடந்து கொண்டிருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தோம். திருவிழா என்று சொன்னால் பொதுவாக இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் கொண்டாட்டம். அதனை இங்கும் காண முடிந்தது.




பாசல் நகரம் வர்த்தகத்துறையில் மேம்பட்ட நவீன நகரங்களில் ஒன்றாக இருந்த போதிலும் பழங்கால சின்னங்களை நினைவு கூறும் வகையில் பழைய கட்டிடங்கள் தேவாலயங்கள் போன்றவற்றை பாதுகாப்பதிலும் குறை வைக்கவில்லை. சாலைகளின் பல மூலைகளில், 400 ஆண்டுகளுக்கும் மேம்பட்ட சில கட்டிடங்களை இன்றளவும் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். பழைய மாதிரிகளிலான இல்லங்களையும் ஆங்காங்கே காண முடிகின்றது. சாலையில் எங்கே பார்த்தாலும் மரங்கள்; இலையுதிர் காலமாகையால் இலைகளெல்லாம் மஞ்சளாகவும், சிகப்பாகவும் மாறிக் காட்சியளித்துக் கொண்டிருந்தன. கோடை காலத்தில் பச்சை பசேலென அழகாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். Industrialisation, modernisation என்ற பெயர்களில் காடுகள் அழிக்கப்பட்டாலும் எல்லா இடங்களிலும் இயற்கைச் சூழலை திட்டமிட்டு உருவாக்கி பாதுகாத்து வரும் பாசல் நகர அரசாங்கத்தைப்
பாராட்டத்தான் வேண்டும்.

Wednesday, November 12, 2003

Travelog - Basel, Swizerland 3 [6 - 10 Nov]



ஜெர்மனியில் ஆங்கிலப்படங்களை ஆங்கில மொழியிலேயே பார்க்க வாய்ப்பு கிடைப்பது குறைவு. காரணம் இங்கு வருகின்ற அனைத்து மொழி படங்களையும் மொழி மாற்றம் செய்து அதனை ஜெர்மானிய மொழியில் பேச வைத்து விடுவார்கள். திரைப்படங்களுக்கு மாத்திரம் இந்த கொடுமை இல்லை; மாறாக தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகின்ற எல்லா மொழி படங்களுக்கும் இதே நிலைதான். Harrison Ford-ன் வாயசைவுக்கு ஜெர்மானியர் ஒருவர் குரல் கொடுத்துக் கொண்டிருப்பார். இந்த பிரச்சனைகள் பொதுவாகவே சுவிஸர்லாந்தில் இல்லை; மாறாக எல்லா மொழிப் படங்களிலும் அதன் மொழியிலேயே தான் திரையிடப்படுகின்றன என மார்க்குஸ் சொல்லிக் கொண்டே எங்களை Freier Strasse வழியாக அழைத்து வந்தார். இந்த சாலையில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கின்றன. பார்க்கின்ற இடங்களிலெல்லாம், ஆங்கில, ப்ரான்ஸ், இத்தாலிய, ஜெர்மானிய படங்களின் விபரங்கள் போடப்பட்டிருந்தன.


பாசல் நகரத்தில் கேளிக்கைகளுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை என்பது தெரிந்தது. மக்கள் இரவு நேரத்திலும் 2 டிகிரி குளிரையும் பொருட்படுத்தாது நடந்து செல்வது எனக்கு போப்லிங்கனில் காணக்கிடைக்காத ஒரு காட்சியாகவே பட்டது. மாலை 9 மணிக்கெல்லாம் தூங்கி விடும் நகரம் போப்லிங்கன். பாசலை அதோடு நிச்சயமாக ஒப்பிட முடியாது. இரவு 12 மணிக்கும் இளைஞர்களும் சரி பெரியவர்களும் சரி சாலையோரங்களில் வேடிக்கைப் பார்த்து கொண்டு செல்கின்றனர்.




பொருளாதார ரீதியிலும் சுவிஸர்லாந்தின் மிகவும் முக்கியமான ஒரு நகரமாக பாசல் அமைந்திருக்கின்றது. கணினி தொழில் நுட்பம் மற்றும் ரசாயணப் பொருட்கள் உற்பத்தி போன்றவற்றில் ஐரோப்பாவிலேயே மிகப் புகழ்பெற்ற ஒரு நகரமாகத் திகழ்கின்றது பாசல். 1460ல் தொடங்கப்பட்ட பாசல் பல்கலைக்கழகம் இந்த நகரத்திற்குக் கிடைத்திருக்கும் மேலும் ஒரு சிறப்பு. மருத்துவம், சட்டம், உளவியல் போன்ற துறைகளில் மாணவர்களை உருவாக்கும் கூடமாகவும் இது அமைந்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

பாசல் நகரில் மட்டுமே 40க்கும் மேற்பட்ட தொல்பொருள்கூடங்கள் இருக்கின்றன. நகரின் மையைப் பகுதியிலும் சரி சற்று தள்ளிய பகுதியிலும் சரி பண்டைய நாகரிகத்தை விளக்கும் கூடங்கள், கலாச்சார மையங்கள் என சுற்றுப்பயணிகளைக் கவரும் பல இடங்களும் இங்கே இருக்கின்றன. சிவிஸர்லாந்திற்கு சுற்றுப்பயணம் வருபவர்கள் கட்டாயம் வருகை தரவேண்டிய ஒரு நகரம் பாசல்.

இப்படி பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே எங்களின் Data Center வந்து சேர்ந்தோம். மறு நாள் காலையில் செய்ய வேண்டிய வேலைக்கான ஏற்பாடுகளைச் செய்யலாமே என எங்கள் மடிக்கணினியை ஆரம்பிக்க மார்க்குஸ் எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார். சிறிய ஏற்பாடுகள் தானே என கணினியில் கையை வைத்த எங்களுக்கு ஏன் மாட்டிக் கொண்டோ ம் என சொல்லும் அளவுக்கு தொடர்ந்து நள்ளிரவு வரை வேலை அமைந்து விட்டது. எதிர்பார்க்காத நேரத்தில் தானே புதிய புதிய வேலைகள் தோன்றும்!

Tuesday, November 11, 2003

Travelog - Basel, Swizerland 2 [6 - 10 Nov]

Basel நகரம் ஜெர்மனிக்கு மட்டுமல்லாமல் ப்ரான்ஸுக்கும் மிக அருகில் இருக்கின்ற ஒன்று. இங்கு சுவிஸ் ஜெர்மானியர்களுக்கு அடுத்தார் போல மிகப் பெரிய எண்ணிக்கையிலான இஸ்ரேலியர்கள் இருக்கின்றனர். பார்ப்பதற்குச் சிறிய ஒரு நகரமாகத் தோன்றினாலும் ஐரோப்பாவின் மையப் பகுதியில் இது அமைந்திருப்பதால் வர்த்தகத்திற்கு மிகச் சிறந்த இடமாக Basel அமைந்திருக்கின்றது.

காலை 8 மணிக்கெல்லாம் வேலையைத் தொடங்கி விட்டோ ம். எங்கள் இருவரோடு மேலும் Stefan, Daniel என்ற இரண்டு வன்பொருள் பொறியியலாளர்களும் சேர்ந்து கொண்டனர். 5 மணிக்கெல்லாம் வேலையை முடித்து விட்டு மாலையில் நகரைச் சுற்றிப்பார்க்கலாம் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் இந்த ஆசையையெல்லாம் கனவாக்கும் வகையில் எதிர்பாராத பிரச்சனைகளை வரிசையாக கணினி கொடுக்க ஆரம்பித்தது. ஒரு வழியாக ஏழு மணியளவில் வேலை ஒரு முடிவுக்கு வந்தது. மதியம் நல்ல உணவு சாப்பிட வாய்ப்பு கிடைக்காததால் நல்ல இரவு உணவுக்காக காத்திருந்தோம். எங்களது சுவிஸ் அலுவலக மானேஜர் மார்க்குஸ் எங்களுக்கு இரவு உணவு விருந்தளிப்பதாக காலையிலேயே கூறியிருந்தார்.

அன்றைக்கான வேலை திருப்திகரமாக திட்டமிட்டபடி முடிவடைந்த திருப்தியில் மார்க்குஸோடு Basel நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம். எங்களின் நல்ல நேரம்; அப்போது மிகப் பெரிய திருவிழா Basel-ன் மிக முக்கிய நகரான Freier Strasse முழுதையும் ஆக்கிரமித்திருந்தது. பல விதமான கேளிக்கை விளையாட்டுக்கள் விளையாடுகின்ற மக்கள் கூட்டத்தில் புகுந்து ரைன் நதிக் கரையை அடைந்தோம். ரைன் நதியை ஒட்டியது போல Munster என்று அழைக்கப்படும் தேவாலயம் ஒன்றும் இங்கு இருக்கின்றது. அதனை ரசித்து விட்டு, ராட்டினத்தில் ஏறி மூன்று பேரும் ஒரு சுற்று வந்தோம்.

சுவிஸர்லாந்தில் புகழ் பெற்ற உணவு வகைகளின் Fondue மிக முக்கியமானது. இந்த உணவை தயாரிப்பது எளிமையான காரியம் அல்ல. இதனைக் கேள்விப்பட்டிருக்கின்றேனே தவிர இது வரை சாப்பிட்டதில்லை. ஆக Fondue சாப்பிடுவோம் என்ற எனது ஆலோசனையைப் பீட்டரும் மார்க்குஸும் ஏற்றுக் கொள்ள பாரம்பரிய உணவுகளை விற்கும் உணவு விடுதிக்குச் சென்றோம்.



Fondue என்பது முக்கியமாக சீஸ் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு உணவு. கூடை நிறைய சிறிய துண்டுகளிலான ரொட்டித் துண்டுகளை தருகின்றனர். அதோடு தொட்டுக் கொள்வதற்குச் சிறப்பான முறையில் தயாரித்த கொதித்துக் கொண்டிருக்கும் சீஸ். இதனை சாப்பிடுவதற்கென்றே தனிப்பட்ட ஒரு நீளமான கரண்டியும் இருக்கின்றது. பல வகையான சீஸ் வகைகளை நான் ஜெர்மனியில் சாப்பிட்டிருக்கின்றேன். ஆனால் இந்த சீஸில் இருக்கும் புளிப்புத்தன்மையை இது வரை அனுபவித்ததில்லை. சாப்பிட்டு முடிக்கும் வரை இந்த சீஸ் கொதித்துக் கொண்டே இருக்கும் வகையில் ஒரு குட்டி அடுப்பையும் கொடுத்து விடுகின்றனர். வித்தியாசமான இந்த உணவு வகையை சுவிஸர்லாந்து வருகின்ற அனைவருமே முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

தொடரும்...

Monday, November 10, 2003

Travelog - Basel, Swizerland 1 [6 - 10 Nov]



சுவிஸர்லாந்தின் Basel நகரம் ஜெர்மனியின் எல்லையருகே உள்ள நகரங்களில் ஒன்று. அலுவலக வேலை காரணமாக நான் அங்கு சந்திப்புக்களுக்காகச் செல்வதுண்டு. சென்ற வியாழனன்று நான்கு நாட்களுக்கு Basel சென்றிருந்தேன். அலுவலக வேலையாக இருந்தாலும் இந்த நகரைச் சுற்றிப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பையும் வீணாக்க மனமில்லாமல் கிடைத்த நேரங்களில் நகர் வலம் வந்தேன். அந்த அனுபங்கள் இதோ சில நாட்களுக்கு.

எனது மேற்பார்வையில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு Storage Area Network என சொல்லப்படும் அதிநவீன தகவல் சேகரிப்பு தொழில்நுட்பத்தை அமைத்துக் கொடுக்கும் ஒரு திட்டத்திற்கு மேளாளராக பொறுப்பேற்றிருந்ததால் Basel நேரடியாக சென்று இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம். ஸ்டுட்கார்ட் நகரிலிருந்து Basel செல்வதற்கு ஏறக்குறைய 3 மணி நேரங்கள் தான் பிடிக்கும். எனது அலுவலகத்தின் Heidelberg கிளையில் வேலை செய்யும் நண்பன் பீட்டரும் இந்த திட்டத்தில் சில வேலைகளுக்குப் பொறுப்பேற்றிருந்ததால் அவனையும் Karlsruhe நகருக்குச் சென்று அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது இலையுதிர் காலம் அல்லவா? சாலைகளின் இரண்டு புறங்களிலும் கண்களை வலிக்கச் செய்யும் சிகப்பு நிறத்தில் மரங்களின் தோற்றம். காற்றின் வேகத்தில் இலைகள் பறந்து கண்ணாடியில் மோதும் போது கொஞ்சம் தடுமாறவும் வைத்தது.

3 மணி நேரத்தில் ஜெர்மனியின் எல்லையை தொட்டுவிட்டோம். இந்த எல்லைப்பகுதியில் ஒரு புறத்தில் ஜெர்மானிய எல்லை அதிகாரிகள் பாதுகாப்புக்காக நிற்கின்றனர். ஏறக்குறைய 1 km தூரத்திலேயே சுவிஸர்லாந்து அதிகாரிகள் கையில் துப்பாக்கியோடு நிற்கும் காட்சியை காண முடியும். ஏற்கனவே எனது மானேஜர் இந்தப் பகுதியில் 20 km/p மேல் காரை செலுத்தக் கூடாது என்று எச்சரிக்கைச் செய்திருந்தார். ஆக மனதில் சற்று எச்சரிக்கையோடே இந்த இடத்தைக் கடந்தோம். எங்களை சந்தோஷமாக வரவேற்பது போல ரைன் நதி அழகாக தென்பட்டது.

ரைன் நதியின் தொடர்ச்சியை ஜெர்மனியின் பல இடங்களில் ரசித்திருக்கிறேன். இந்தப்பகுதியிலும் சுவிஸர்லாந்தின் தனித்துவத்தோடு இந்த ஆற்றை ரசிக்க முடிந்தது. Basel ஒரு தொழில்துறை நகரம். எங்கு பார்த்தாலும் வர்த்தக நிறுவனங்கள். ஒரு வகையாக சற்று நேரத்தில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தோம். Basel நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் Data Center என்று அழைக்கப்படும் கணினி அறைக்கு எங்களை அழைத்துச் செல்ல நண்பர்கள் காத்திருந்தனர்.




போப்லிங்கனில் பார்க்க முடியாத Tram பேருந்துகளை இந்த Basel நகரில் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தது. வேலையை முடித்த பிறகு இந்த பேருந்தில் ஏறி சுற்றி வர வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டேன். கணினி அறையின் எல்லா பாதுகாப்பு விபரங்களையும் எங்கள் இருவருக்கும் தெரிவித்துவிட்டு எங்களுக்குத் தரவேண்டிய அடையாள அட்டைகளையும் கொடுத்து விட்டு கணினி அறை அதிகாரிகள் சென்றவுடன் எங்கள் வேலையில் மூழ்க ஆரம்பித்தோம். தொடரும்...

Thursday, October 16, 2003

இத்தாலி - [Oct 3-5] - 11



Pisa விலிருந்து Florence செல்வதற்கு இரயிலிலேயே சென்று விடலாம். ஏறக்குறை 30 நிமிடங்கள் தான் தேவை. Florence மலைப்பாங்கான ஒரு இடம். மலைகள் சூழ்ந்த இந்த இடத்தில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் என்னுடைய பயணத்தை ஞாயிற்றுக்கிழமையே முடித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்
இருந்ததால் இங்கு அதிக நேரம் இருந்து பார்க்க முடியவில்லை.

Florence வந்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்து விமானம் வழி மிலான் புறப்பட வேண்டும். அதன் பின்னர் மிலானிலிருந்து Stuttgart வரவேண்டும். அதனால் Florence நகரைச் சுற்றிப்பார்க்கும் எண்ணத்தை சுத்தமாகக் கைவிடவேண்டிய நிலை வந்து விட்டது. Florence விமான நிலையத்தில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகம். விமானம் புறப்பட 10 நிமிடம் இருக்கும் வரை என்னுடைய டிக்கட் திக்கப்படவில்லை. அவசரத்தில் பதற்றம் அதிகரிக்கவே அதிகாரியிடம் சென்று எனது அவசரத்தைத் தெரிவித்தேன். உடனே அவர், எந்த பதற்றமும் இல்லாமல் எனது டிக்கட்டை சோதித்து அனுப்பிவைக்கவே, எனது Gate எண்ணைத் தேடி விரைந்தேன்.

அது ஒரு மறக்க முடியாத விமானப் பயனமாக ஆகிவிட்டது. இந்த Airitalia விமானம் சற்று சிறியது. அன்று வானிலையும் சரியாக இல்லை. பலத்த மேக மூட்டம், காற்று என்பதால் விமானம் மிக வேகமாக அதிர்வுகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டது. எனக்கு 2 வரிசைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு இத்தாலியப் பெண்மனிக்கு இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது ரத்த அழுத்தம் அதிகரித்து மூர்ச்சையாகி விட்டார். உடனே விமான முழுவதும் பதற்றம் அதிகரித்து விட்டது. அவருக்குத் தேவையான சிகிச்சை அளித்து விமானம் தரையிறங்கியவுடன் அவரை ஆம்புலன்ஸ் வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

மிலான் விமான நிலையத்தை அடைந்தவுடன் சற்று நேரமிருந்ததால் மிலான் நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். விமானம் மாலை 7:40க்கு. ஆக இடையில் அவ்வளவாக நேரம் இல்லை.

நகரத்தின் சில பகுதிகளில் நடந்து விட்டு அங்கிருந்து டெக்ஸி எடுத்து மீண்டும் விமான நிலையம் வந்து Luftansa விமானத்தில் Stuttgart புறப்பட்டேன். 75 நிமிட பயணம் இது. விமான நிலையம் அடைந்து அங்கிருந்த S-Bahn இரயில் நிலையம் வரும்போது மணி இரவு 9:30ஆகிவிட்டது.

இத்தாலியில் இரயிலில் பயணம் செய்தபோது இருந்த கூச்சல் சத்தம் இங்கில்லை. ஆனால் இதனைப் பொய்யாக்கும் வகையில் ஒரு நிலையத்தில் சில இளைஞர்கள் ஏறினர். அனைவரும் குடி போதையில் இருந்தது அவர்களது நடையிலேயே தெரிந்தது. அதில் ஒருவனுக்கு நடக்கவே முடியவில்லை. இவனை தூக்காத குறையாக இழுத்து வந்து உட்கார வைத்தனர் அவனது நண்பர்கள். சற்று நேரத்தில் அவர்களில் ஒருவன் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னிடமும் எனக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு ஜெர்மானியரிடமும் கொஞ்சம் பணம் கொடுக்கும் படி கெஞ்சினான். சில சில்லறைகளை நானும் கொடுத்தேன். எங்களிடம் பெற்றுக் கொண்டு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்தவர்களிடமும் அதே வசனம் பேசி சில்லறை சேர்க்க ஆரமித்தனர் இந்த இளைஞர்கள். மனிதர்களில் பல வகைகள். அதிலும் எல்லா வகையிலும் வாழ்க்கையில் வசதிகளையும் சௌகரியங்களையும் அனுபவிக்கும் நிலை இருந்தாலும் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளும் இந்த இளம் தலைமுறையினரின் போக்கு வருந்தும் வகையில் தான் இருக்கின்றது. இதையெல்லாம் நினைத்துக் கொண்டு வீட்டை அடையும் போது இரவு 10:30 ஆகிவிட்டது.

இனிமையான இந்த 3 நாட்களில் கிடைத்த அனுபவங்கள் பல; இவை என்றும் மனதை விட்டு நீங்காதவை !

முற்றும்.

Wednesday, October 15, 2003

இத்தாலி - [Oct 3-5] - 10

அது ஒரு மறக்க முடியாத நாள். எனது பல நாள் ஆசையான Campo dei Miracoli (Piazza Duomo), சாய்ந்த கோபுரத்தை பார்த்ததும் அதன் அழகில் ஒரு நிமிடம் திகைத்து நின்றேன். இந்த கோபுரத்தை 1173 கட்ட ஆரம்பித்தார்கள். ஏறக்குறைய 200 ஆண்டுகள் எடுத்தது இந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்க. இடையிடையே இதனை முடிப்பதற்குள் பல இடர்பாடுகள் வந்ததால் தான் இந்தத் தாமதம்.




கோட்டை நுழைவாயில் உள்ளே நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது வெள்ளை வெளேர் என இருக்கும் Cathedral. இதனை அழகான கோபுரத்தோடு வடிவமைத்திருக்கின்றனர். இந்த Cathedral -லின் சுவர்களிலும் கதவுகளிலும் அருமையான வேலைப்பாட்டுடன் அமைந்த சித்திரங்களையும் சிற்பங்களையும் காணமுடிகின்றது. Cathedral உள்ளே உள்ள கலைப்பொருட்கள் மற்றும் ஒவ்வொரு
தனிப்பட்ட அங்கங்களைப் பற்றிய விபரங்களை guide உதவியின்றி தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கின்றனர். 2 தொலைபேசிகளை இணைத்த ஒரு ஒலிப்பேழை இருக்கின்றது. அதில் 1 EUR நாணயத்தை போட்டால் உடனே நாம் தேர்ந்தெடுக்கும் மொழியில் ஒவ்வொன்றுக்குமான விளத்தைத் தருகின்றது.




அடுத்ததாக Pisa கோபுரத்திற்குள் செல்வதற்காக 15 EUR கொடுத்து டிக்கட் பெற்றுக் கொண்டேன். ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு முறை என ஒரு அதிகாரி வரிசையாக அனைவரையும் நிற்க வைத்து பார்வையாளர்களை அழைத்துச் செல்கின்றார். [பள்ளியில் படித்த காலங்களில் சுற்றுலா செல்லும் போது இப்படித்தான் செல்வது வழக்கம். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கே கிடைத்த அனுபவம் அந்த பழைய அனுபவங்களை ஞாபகப்படுத்தியது. கோபுரத்தின் மேலே செல்ல குறுகலான ஒரு படி
இருக்கின்றது. ஒரு படியில் ஒருவர் தான் நிற்க முடியும். மேலே செல்ல செல்ல, ஒரு பக்கம் சாய்ந்து நடப்பதை உணரமுடிகின்றது. ஒவ்வொரு தளத்திலும் சிறிய அளவிலான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து Pisa நகரைக் காண முடிகின்றது.




ஆகக் கடைசியான தளத்திற்கு வரும்போது காற்று மிக பலமாக வீசிக் கொண்டிருந்ததால் படிகளோடு ஒட்டியிருந்த இரும்புக்கம்பியை அனைவரும் இருக்கமாகப் பிடித்துக் கொண்டே ஏறி வந்தோம். பலமான காற்றை சமாளிப்பது என்பது ஒரு சிரமமான காரியம்தான். மேல் தளத்தில் சுற்றிலும் 4 பெரிய இரும்பு ஆலயமணிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஏறக்குறைய 200 kg எடையாவது இருக்கும் என்று நினைக்கின்றேன். மேலேயிருந்து பார்க்கும் போது இந்த நகரை முழுமையாகக் காணமுடியும். அவ்வளவு நுணுக்கமாக இதனை வடிவமைத்துக் கட்டியிருக்கின்றனர். பாதுகாப்புக்காக மேலேயே எப்போதும் ஒன்றிரண்டு காவல் அதிகாரிகள் எப்போதும் இருக்கின்றனர்.

Piazza Duomo அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு அதிசயம் தான். இதன் அழகை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. நேராகப் பார்க்கும் போதுதான் அதனை உணர்ந்து ரசிக்க முடியும்.

ஏறக்குறைய 4 மணி நேரங்கள் இங்கே இருந்து விட்டு ஞாபகத்திற்காக சில நினைவுச்
சின்னங்களையும் வாங்கிக் கொண்டு புறப்பட்டேன் Florence நகரத்திற்கு. அன்று மாலை எனது திட்டப்படி Stuttgart திரும்பவேண்டும். தொடரும்....

Tuesday, October 14, 2003

இத்தாலி - [Oct 3-5] - 9

அன்று மாலையே ரோமிலிருந்து Pisa செல்ல முதலிலேயே இரயிலில் இடம் பதிவு செய்திருந்ததால் 'Rome Centrale' இரயில் நிலையத்துக்கு விரைந்தேன்.



[சிலை போல வேஷமிட்டு ரோம் நகரில் நிற்கும் பெண்]

மாலை 5 மணி அளவில் இரயில் புறப்பட்டது. இந்த முறை எனது அதிர்ஷ்டம், இரயிலில் அவ்வளவாகப் பயணிகள் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்திருந்தனர். கையில் வைத்திருந்த "Tantric Ground and Paths" என்ற நூலைப் படிக்க ஆரம்பித்தேன். [இந்த நூலைப் பற்றி விரைவில் எனது Suba's Musings வலைப்பூவில் எழுதவுள்ளேன்]

ரோம் நகருக்கும் பீஸா நகருக்கும் இடையில் செல்லும் இரயில் பாதையில் ஏராளமான Tunnels இருக்கின்றன. ஒரு சில, ஏறக்குறைய 5 km நீளம் வரை செல்லக் கூடியனவாகவும் இருக்கின்றன. சரியாக இரவு 9:30 மணியளவில் இரயில் Pisa Centrale வந்து சேர்ந்தது. அங்கிருந்து நான் பதிவு செய்திருந்த Bed & Breakfast தங்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும். இந்த இடம் இருக்கும் ஊர் Empoli என்பது. வந்து இறங்கிய பின்னர் தான் தெரிந்தது Empoli, Pisa நகரிலிருந்து ஏறக்குறைய 35 km தூரம் உள்ளது என்ற விஷயம். உடனே Taxi எடுத்து Empoli செல்லக் கிளம்பினேன். பீசாவிலிருந்து எம்போலி செல்ல 100 EUR கட்டணம் வாங்கி விட்டார் ஓட்டுநர். Stuttgart - லிருந்து Pisa -விற்கு விமானத்திலேயே இதைவிட மலிவாகச் சென்று விடலாம். என்ன செய்வது? அன்றைக்கு அதிர்ஷ்டம் ஒத்துழைக்கவில்லை. எம்போலியில் பதிவு செய்திருந்த B&B உரிமையாளர் ஆங்கில-இத்தாலிய தம்பதியர். என்னை எம்போலி இரயில் நிலையத்தில் டெக்ஸி ஓட்டுநர் இறக்கி விட, நிலையத்திற்கே வந்து என்னை இந்தத் தம்பதியர் அழைத்துச் சென்றனர்.




இத்தாலியில் பிரச்சனையின்றி ஆங்கிலம் பேசும் முதல் நபரை அங்குதான் சந்தித்தேன். 39 EUR விலையில் மிக அழகிய விஸ்தாரமான அறையுடன் கூடிய இடம் இது. இத்தாலிக்கு வருபவர்கள் எம்பொலிக்கும் வந்து கட்டாயமாக குறைந்தது ஒரு நாளாவது தங்கிச் செல்ல வேண்டும். அழகிய ஓடைகள், திராட்சைக் கொடிகள், என பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கின்றது இந்த ஊர். மறுநாள் காலையில் ஆங்கிலேய பாணியிலான காலை உணவை ஏற்பாடு செய்திருந்தனர். பழங்காலத்து மாளிகையில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கும் வகையில் அலங்காரம் இருந்தது. அங்கிருந்து check-out செய்து விட்டு என்னை அந்த இத்தாலியரே இரயில் நிலையத்தில் அழைத்துக் கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றார். இரயில் Empoli யிலிருந்து மீண்டும் Pisa கிளம்பியது... தொடரும்...

Monday, October 13, 2003

இத்தாலி - [Oct 3-5] - 8

பழமை வாய்ந்த ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் மாளிகைகளுக்கு இடையில் சற்று புதிய தோற்றத்தோடு மற்றொரு பிரமாண்டமான ஒரு மாளிகை தூரத்திலேயே தெரிந்தது. அதுதான் Victor Emmanuel II நினைவகம். வரும் வழியில் சில பிச்சைக்காரர்கள், அதிலும் பெண்கள், தங்கள் முகத்தைத் துணியால் மூடிக் கொண்டு தரையில் அமர்ந்து பிச்சைக்காக தட்டை மாத்திரம் நீட்டியவாறு அமர்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர் எனக்கு முன்னால் நடந்து சாலையை கடக்க முயன்று கொண்டிருந்தார். முகமெல்லாம் சுத்தமாக வெள்ளையடித்து Scream படத்தில் வரும் வில்லனைப் போல காட்சியளித்தது அவரது முகம். பழைய ரோமானியர்களின் உடையணிந்திருந்தார். சாலையைக் கடந்து பின்னர் ஒரு சுவற்றில் ஏறி அங்கேயே அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் பார்ப்பதற்கு ஆச்சரியமாகத்தானிருந்தது.


ரோம் நகர மையத்தில் பலர் இம்மாதிரியான வேஷங்களோடு செல்வதைக் காணமுடிகின்றது. சாலைகளிலேயே நின்று கொண்டு வேடிக்கை காட்ட ஆரம்பித்து விடுகின்றனர். வருவோர் போவோர் இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு காசு போட்டு விட்டுச் செல்கின்றனர்.




இதையெல்லாம் பார்த்துக் கொண்டே Victor Emmanuel II நினைவகம் வந்து சேர்ந்தேன். மிகப் பெரிய செம்பால் ஆகிய 2 குதிரைகள் இந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்தே இதனைக் காண முடிகின்றது. இந்த பிரமாண்டமான நினைவுச் சின்னம் Giuseppe Sacconi என்பவரால் (1885-1911) வடிவமைக்கப்பட்டது. வெள்ளை பளிங்கினால் இம்மாளிகையின் பெரும் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.




அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு ரோமானிய கலையழகைச் சொல்லும் மற்றொரு இடமான Fontana Di Trevi பார்க்கக் கிளம்பினேன். சற்று களைப்பாக இருந்தாலும் இந்த இடத்தை வந்து சேர்ந்ததும் இவ்வளவு தூரம் நடந்தது வீண் போகவில்லை என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். அத்தனை அழகு இந்த இடம். இந்த Fontana விற்கு ஒரு சிறப்பு கதையும் இருக்கின்றது. யார் ஒருவர் இந்த நீரை அருந்துகிறார்களோ, அல்லது இந்தக் குளத்தில் காசு போடுகின்றார்களோ அவர்கள் மீண்டும் ரோம் வருவர் என்பது இங்குள்ள ஐதீகம். Salvi எனும் கட்டிடக் கலைஞனால் இந்த இடம் 1735-ல் உருவாக்கப்பட்டது. இதன் அழகைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த ஒரு இத்தாலிய உணவகத்தில் இத்தாலிய Milch Caffee சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நடந்து வந்த களைப்பேல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாய் பறந்து கொண்டிருந்தது.

தொடரும்..

Sunday, October 12, 2003

இத்தாலி - [Oct 3-5] - 7

வேட்டிக்கனிலிருந்து கொலோசியம் வருவதற்கு 2 பஸ்கள் எடுத்து வரவேண்டும். அதற்கு பதிலாக சீக்கிரமாக செல்ல நினைத்ததால், ஒரு Taxi எடுத்துக் கொண்டேன். 5 நிமிடங்களுக்குள் Colosseum இருக்கும் இடத்தை அடைந்தேன். Colosseum ரோமானிய நாகரிகத்தின் மிகப்பெரிய பழமை வாய்ந்த ஒரு அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.




உலகின் பல மூலைகளிலிருந்தும் வந்திருந்த சுற்றுப் பயணிகள் ஏராளம். பல வகையான முகங்கள்; வர்ணங்கள்; ஆடை அலங்காரம் என சாதாரண நாளிலேயே இந்த இடம் திருவிழா கோலம் பூண்டு இருந்தது. வாசலிலேயே பழங்காலத்து ரோமானிய உடைகளில் Gல்adiators நின்று கொண்டு வருவோர் போவோரிடம் பேசிக் கொண்டும் வித்தை காட்டிக் கொண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தனர்.

கொலோசியத்தில் உள்ள மிகப் பெரிய Amphitheatre, Vespasian என்பவனால் 72 A.D- யில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. அது முடிவுறாத நிலையில் அவன் இறந்து விடவும், அவனது மகனான Titus இந்த வேலையைத் தொடர்ந்து முடித்தான். ஹீப்ரூ சிறைக் கைதிகள் இந்தக்கட்டிடத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்டனர். இதன் உண்மையான பெயர் Flavian Amphitheatre என்றாலும் பரவலாக Colosseum என்றுதான் அழைக்கப்படுகின்றது. இது கட்டிமுடிக்கப்பட்டதும் அதற்காக சிறப்பாக ஏற்படுத்தப்பட்டிருந்த விழாவில் ஏறக்குறைய 9000 காட்டு விலங்குகள் இங்கெ பலி கொடுக்கப்பட்டதாம். அதற்குப் பின்னர்தான், உயிரை பலிவாங்கும் ஒரு வகை வீர விளையாட்டான Professional Gladiators எனப்படுபவர்கள் கலந்து கொள்ளும் சண்டை விளையாட்டுக்கள் இங்கே நிகழ்த்தப்பட்டன.




உண்மையில் இதனை விரும்பாத பேரரசர் Constantine இந்த வகை விளையாட்டை நிறுத்துவதற்காக பல முறை முயன்றும் ரோமானிய பழமை வாதிகளால் இது மறுக்கப்பட்டு தொடர்ந்து நிகழ்ந்து வந்தது என சான்றுகள் கூறுகின்றன.




கொலோசியம் உள்ளே சென்று சுற்றிப்பார்ப்பதர்க்கு 10 EURO கட்டணம் வசூலிக்கின்றனர். ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு கதை சொல்லும் வகையில் இந்த இடம் அமைந்திருக்கின்றது. [ நமது தமிழ் சினிமா பாட்டுக்களுக்கு இந்த locations இன்னும் படமாக்கப் பயன்படவில்லை என நினைக்கின்றேன். ஒரு வேளை அவர்கள் முயன்று பார்த்தும் அனுமதி கிடைக்காமல் இருக்கலாம்.(??) ] இதனை முழுமையாகப் பார்த்து விட்டு வாசலிலேயே இருந்த கடைகளில் தேடிப்பார்த்து அழகிய சில நினைவுச் சின்னங்களையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். கொலோசியம் அருகிலேயே அகழ்வாய்வுகளின் வழி கண்டெடுக்கப்பட்ட மேலும் பல கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் இருந்தன. அவற்றையும் பார்த்து விட்டு கொலோசியத்தின் எதிர்ப்புறத்தில் இருந்த ஒரு உணவுக் கடையில் உணவுக்காக அமர்ந்தேன்.



மிக அருமையாக அலங்கரிக்கப்பட்ட 4 வகை காய்களைக் கொண்ட பீஸா ( 4 seasons Pizza) ஒன்றை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எனக்கு அடுத்த மேசையில் இரண்டு ரோமானிய Gladiators ( வேஷம் அணிந்திருந்தவர்கள்) உணவுக்காக வந்து அமர்ந்தனர். அவர்களால் போட்டிருந்த எல்லா ஆடைகளோடும் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. உடனே ஒவ்வொன்றாக கழற்றி விட்டு உள்ளே அணிந்திருந்த T-Shirt -டுடன் சாப்பிட ஆயத்தமானார்கள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு இதுவும் ஒரு வேடிக்கை காட்சியாகவே அமைந்துவிட்டது. சாப்பிட்டு முடித்த பின்னர் அருகாமையிலேயே இருந்த Victor Emmanuel கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. தொடரும்...

Saturday, October 11, 2003

இத்தாலி - [Oct 3-5] - 6

சனிக்கிழமை காலை உணவை முடித்தபின்னர் Pisana Palace லிருந்து check-out செய்துவிட்டு ரோம் நகரத்திற்கு புறப்பட்டு விட்டேன். எனது குறிப்பில் முதலில் இருந்தது Vatican City.



1377- லிருந்து Vatican போப்களின் மடங்களாக இருந்து வருகின்றது. வாட்டிக்கனில் முக்கியமாகப் பார்க்க வேண்டியவை St.Peter's Basilica, Vatican Museums, மற்றும் Sistine Chapel ஆகியவையே. பெப்ரவரி 11, 1929- லிருந்து வேட்டிக்கன் ஒரு தனி மாகாணமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது. ரோமானிய சாம்ராஜ்ஜியம் இருந்த காலத்தில் St.Peter Apostle கொல்லப்பட்டார். இவரது உடல் இந்த இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்குப் பின்னர் Constatntine இந்த St.Basilica எனப்படும் உலக பிரமாண்டத்தை அந்த இடத்தில் கட்டினார்.




இப்போது இருக்கும் இந்த Basilica - வை Julius II 1503 - லிருந்து காடினார். இது முழுமையடைய 176 ஆண்டுகள் பிடித்தன. வாட்டிக்கனின் ஒவ்வொரு பகுதியும் இந்த காலகட்டத்தில் முடிவடைந்தன. அதன் பின்னர் தான் Michelangelo தனது 70-வயதில் உலகின் மிகப்பெரிய dome என்று கருதப்படும் இந்த தேவாலயத்தில் dome - ஐ திட்டமிட்டு வடிவமைக்க ஆரம்பித்தார். அவர் இறந்த பின்னரும் அவரது திட்டத்தின் படியே இது முழுமைபடுத்தப்பட்டது.


வாட்டிக்கனை முழுமையாக சுற்றிப்பார்க்க 2 நாட்கள் தேவை. உலகின் பல மூலைகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நிரம்பியிருந்தனர். [ உலகின் எந்த சுற்றுலா மையங்களுக்குச் சென்றாலும் ஜப்பானிய சுற்றுலா பயணிகளை பார்க்காமல் இருக்க முடியாது. இவர்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கின்றதோ தெரியவில்லை ] St.Peter's Basilica தேவாலயத்தில் உட்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு சிலைகளும் கண்களுக்கு விருந்து. மணிக்கணக்கில் அதன் கலை நயத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.




அன்றைக்கு மறுநாள் நிகழ்ச்சிக்காக ஆப்பிரிக்க நடனக் குழு ஒன்று அங்கு வந்திருந்தனர். மறுநாள் நடைபெறவிருக்கும் நிகழ்வுக்காக இவர்களின் ஒத்திகை ஒன்றும் வாசலிலேயே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்து விட்டு கோட்டையின் ஒரு மூலையில் வந்து அமர்ந்தேன். எனது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவரை நோக்கி இரண்டு இத்தாலிய காவலர்கள் நெறுங்கிக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்தவுடன் தனது பையைத் தூக்கிக் கொண்டு மெதுவாக நழுவ ஆரம்பித்தான் இந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞன். அவனை தடுத்து நிறுத்தி இத்த்தாலியில் காவலர்கள் விசாரிக்க அது புரியாததால் ஆங்கிலத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர். குரேஷியாவிலிருந்து போதிய பயணச்சீட்டுகளோ விசாவோ இல்லாமல் அகதியாக வந்திருக்கின்றான் இந்த இளைஞன். அவனிடம் தேவையான விஷயங்களை விசாரித்து அவனை தங்களோடே கூட்டிசென்று விட்டனர். சற்று நேரத்தில் எனக்குப் பக்கத்தில் வேறொரு இத்தாலிய வயோதிகர் வந்து அமர்ந்தார். இத்தாலியில் என்னிடம் வேட்டிக்கனின் அழகை விமர்சிக்க ஆரம்பித்தார். எனக்குப் புரியவில்லை என்று ஆங்கிலத்தில் சொன்னவுடன், சைகையிலேயே என்னிடம் மிக சுவாரசியமாக விளக்க ஆரம்பித்தார். [ சைகை மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்காமல் போய்விட்டோமே என்று மனதுக்குள் என்னையே திட்டிக் கொண்டேன் ] அவரிடம் சற்று உரையாடிவிட்டு, அதாவது சைகையிலேயே பேசிவிட்டு ரோம் நகரின் மற்றொரு அதிசயமான கொலோசியத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...

தொடரும்..

Friday, October 10, 2003

இத்தாலி - [Oct 3-5] - 5

இந்த முறை எந்த பிரச்சனையும் இன்றி 881 பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். ஏறக்குறைய 10 நிமிடங்களில் Rome மையப்பகுதிக்கு பஸ் வந்தது விட்டது. முதலில் கண்ணில் பட்டது உலகின் மிகப்பெரிய Dome என்று சொல்லப்படும் Vatican St.Basilica தேவாலயத்தின் dome. மிகப் பழமையான பிரமாண்டமான இந்தப் பகுதியைக் கடந்ததும் சற்று நேரத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டேன். மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் விளக்குகளின் வெளிச்சம் இந்த பிரமாண்டமான Rome நகரை மிக மிக அழகாக்கிக் கொண்டிருந்தது.


நேராக நடந்து St. Angelo மாளிகையை அடைந்தேன். பார்க்கும் அனைவரையும் ஒரு நிமிடம் அசர வைக்கும் அற்புதம் இந்த மாளிகை. 130 A.C- 139A.C தான் முதலில் இந்த மாளிகைக் கட்டப்பட்டது. இந்த மாளிகையை பேரரசர் Honorius 403 A.D -ல் கட்டினார் எனவும் குறிப்புகள் கூறுகின்றன. முதலில் இறந்தவர்களின் சமாதியாகவும் நினைவுச் சின்னமுமாக இருந்த இந்த மாளிகை நாளடைவில் போர் காலங்களில் தேவைப்படும் பாதுகாப்புக் கோட்டையாக மாறியது. இது ஒரு முழு மாளிகையாக உருவெடுத்தது 10ம் நூற்றாண்டில் தான். இதன் தனித்துவம் என்னவென்றால் சதுரமான அடித்தளத்தில் வட்ட வடிவிலான 4 tower-கள் இருப்பதுதான். St. Matthew, St. John, St. Mark, மற்றும் St. Luke என்று பெயரிடப்பட்ட இந்த நான்கும் தான் அவை.




இந்த பிரமாண்ட மாளிகையை அடைவதற்கு ஒரு பாலம் அமைத்திருக்கின்றனர்.இந்த பாலத்தில் கறுப்பர்கள் திருவிழா சந்தைகளில் விற்பது போல கைப்பைகள், துணி வகைகள் தொலைபேசிகள் என பலவிதமான பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். வழியில் ஒருவர் இத்தாலிய கஸ்டானியா விற்றுக் கொண்டிருந்தார். இத்தாலிய கஸ்டானியாவை வாங்கி சுவைத்துக் கொண்டே பாலத்தின் ஓரத்தில் அமர்ந்து இந்த மாளிகையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த மாளிகையின் வாசலிலிருந்து ஏறக்குறைய 50 மீட்டர் தூரத்தில் தான் vatican city இருக்கின்றது. t.Basilica தேவாலயத்தின் முகப்புப் பகுதியை அங்கிருந்தே ஓரளவு பார்க்க முடிந்தது.



அந்தப் பகுதியையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு சுவையான இத்தாலிய உணவைத் தேடி நடக்க ஆரம்பித்தேன். சற்று வாகனங்களின் சத்தமில்லாத அழகிய ஒரு இத்தாலிய உணவகம் தென்பட்டது. இத்தாலிக்கே உரிய அலங்காரத்துடன் இந்த உணவகம் காட்சியளித்தது. இத்தாலிய உணவு வகைகளில் பல வகை உண்டு அல்லவா? அதில் பிரத்தியேகமானதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற திட்டம் இத்தாலிக்கு வருவதற்கு முன்பே இர்ந்ததால், மெனுவைப் பார்த்து Gnochhi பாஸ்டா தருமாறு கேட்டுக் கொண்டேன். பொதுவாகவே பாஸ்டா வகையறாக்களை சைவமாகவே தயாரிப்பதால் எனக்கு உணவைத் தேடுவதில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படவில்லை. [இத்தாலிக்கு வருபவர்கள் சைவ உணவு கிடைக்காதோ என கொஞ்சமும் கவலைப்படத் தேவையில்லை. Pizza, Pasta, Spegheti, Macroni எனப் பலவகையான உணவு வகைகளை நாம் கேட்டுக் கொண்டால் சைவமாகவே தயாரித்துக் கொடுக்கின்றனர்]



சுவையான உணவுக்குப் பின்னர் இரவின் வெளிச்சத்தில் St.Angelo, மற்றும் அருகில் இருந்த ஏனைய இடங்களுக்கும் சென்று ரோமானிய கலைத்தன்மையையும் அதன் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு சிலையும் அழகையும் பார்க்கும் போது அதனை உருவாகியவனின் கற்பனையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இரவில் ரோம் நகரைப் கட்டாயம் பார்க்கத்தான் வேண்டும். பகலில் பார்ப்பதை விட இரவில் தான் அதன் அழகு மேலும் கூடிகின்றது என்பதை நேராகவே பார்த்து தெரிந்து கொண்டேன். தொடரும்...

Thursday, October 9, 2003

இத்தாலி - [Oct 3-5] - 4




மாலை 3:30 மணியளவில் Rome நகரை வந்தடைந்தேன். 'Rome Centrale' இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஏற்கனவே நான் இணையம் வழியாக பதிவு செய்திருந்த தங்கும் விடுதிக்குச் செல்ல ஆயத்தமானேன். Pisana Palace என்ற இந்த தங்கும் விடுதிக்கு எப்படிச் செல்லவேண்டும் என்ற சில குறிப்புக்களும் கொடுத்திருந்தார்கள். அதன்படி 'Rome Centrale' -லிருந்து Carolina நிலையத்தை மற்றொரு இரயில் மூலமாக அடைய வேண்டும். அதன் பின்னர் நடந்தே சென்று விடலாம் என ஓரளவு விளக்கம் தரப்பட்டிருந்தது. குறிப்பை வைத்துக் கொண்டு 0.77 செண்ட் கொடுத்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டேன். [ ஜெர்மனியின் இரயில்
கட்டணத்தை ஒப்பிடும் போது இது மிக மிக மலிவு.]

இந்த இரயில் ஏறக்குறைய 12 இடங்களில் நின்று விட்டு பின்னர்தான் Carolina வை அடையும். இடையில் Subaugusta என்ற ஒரு நிறுத்தமும் இருந்தது. ஆச்சரியம் தான். எனது பெயரிலும் Rome நகரில் ஒரு ஊர் இருக்கின்றதே என்று.. Carolina நிலையத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். Hotel Pisana Palace -ஐ காணவில்லை. அருகில் இருந்த கடையில் விசாரித்ததில் 889 என்ற எண் கொண்ட பஸ் எடுத்துச் செல்லவேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அந்த பஸ்ஸை எடுத்து ஓட்டுநரிடம் 'இந்த பஸ் Pisana Palace போகுமா' என்று விசாரித்தேன். அவருக்கு ஆங்கிலம் சுத்தமாகப் புரியவில்லை. அடுத்த நிறுத்ததில் இறங்கி 892 என்ற பஸ் எடுத்தால் செல்லலாம் என் அருகில் இருந்த மற்றொருவர் சைகை மொழியிலேயே தெரிவித்தார்.

அடுத்த இறக்கத்தில் இறங்கி 892 பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். பஸ் ஓட்டுநரிடம் 'Pisana செல்லுமா' என்று கேட்டு 'நிச்சயம் செல்லும்' என அவர் சொன்னதும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. 4 நிறுத்தங்களுக்குப் பிறகு அவரிடம் மீண்டும் சென்று ஆங்கிலத்தில் எப்போது Pisana வரும் என்று கேட்டேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. அடுத்த நிறுத்ததில் என்னை அழைத்து கதவை திறந்து விட்டு "இங்கே இறங்கிக் கொள்" என்று சொன்னார். Pisana வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இறங்கி சுற்றும் முற்றும் தேடினால் எனது தங்கும் விடுதியைக் காணவில்லை. என்னை நடு வழியிலேயே இறக்கி விட்ட அந்த பஸ் ஓட்டியை மனதிலேயெ திட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.


வழியில் ஒரு நபரிடம் விசாரித்ததில் பஸ் 881 தான் Hotel Pisana Palace வாசலில் நிற்கும் என்பதை அறிந்து அந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். இந்த முறை யாரையும் ஒன்றும் கேட்கவில்லை. 'பஸ் எங்கே தான் போகிறது பார்க்காலாம்' என நினைத்துக் கொண்டு ஏறி அமர்ந்தேன், டிக்கெட் வாங்கிக் கொள்ளாமலேயே! [Rome நகர பஸ்களுக்குள் டிக்கெட் விற்கப்படுவதில்லை. வெளியே கடைகளில் 0.77 செண்ட் டிக்கெட் வாங்கிக் கொண்டால் 75 நிமிடங்கள் எங்கே வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்பதை பின்னர் ஹோட்டலில் தெரிந்து கொண்டேன்] என்ன ஆச்சரியம் 5 நிமிடங்களில் பஸ் Hotel Pisana Palace வாசலை அடைந்தது.



Pisana Palace ஒரு 4 நட்சத்திரத்திர தங்கும் விடுதி. மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எனது அறையின் சாவியை பெற்றுக் கொண்டு அறைக்குச் சென்று 15 நிமிடத்திற்குள் அவசர அவசரமாக குளித்து விட்டு ஹோட்டலில் விசாரித்து பஸ் டிக்கெட்டையும் பெற்றுக் கொண்டு Rome நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டேன்.

Wednesday, October 8, 2003

இத்தாலி - [Oct 3-5] - 3

40 வயது மதிக்கத்தக்க இரண்டு இத்தாலிய ஆண்களும் 1 இளைஞனும் ஒரு முதியவரும் எனக்கு அருகாமையில் வந்து அமர்ந்தனர். அதில் ஒருவரின் இடத்தில் ஏற்கனவே மற்றொறு 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது இருக்கைக்கு அவர் reservation செய்யவில்லை. ஆனால் புதிதாக வந்த இந்த 4 பேரும் அவர்களுக்கான இருக்கைகளை ஏற்கனவே reservation செய்திருக்க வேண்டும். தனது இருக்கையில் வேறொறுவன் அமர்ந்திருப்பதைப் பார்த்த உடனே அந்த 40 வயது மதிக்கத்தக்க, நீளாமான கூந்தலைக் கொண்ட மனிதருக்கு தாங்க முடியாத கோபம் வந்திருக்க வேண்டும். இத்தாலிய மொழியில் சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

பாவம் அங்கு அமர்ந்திருந்த அந்த மனிதர். உடனே தனது பையைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர ஆரம்பித்து விட்டார். அவர் சென்று விட்ட பின்னரும் கூட இவருக்குக் கோபம் தீரவில்லை. தொடர்ந்து திட்டிக் கொண்டே அதுவும் உரக்கக் கத்தி திட்டிக் கொண்டேயிருந்தார். [ஜாக்கிரதை.. இத்தாலியில் பயணம் செய்து கண்டிப்பாக உங்கள் இருக்கைகளை முன்கூட்டியே reserve செய்து விடுங்கள்]

பொதுவாக ஜெர்மனியில் பொதுவாகனங்களில் பயணிக்கும் போது ஜெர்மானியர்கள் சத்தம் போட்டு பேசிக் கேட்டதில்லை. தங்களுக்குள் கதை பேசிக்கொண்டாலும் சத்தம் குறைத்து மிக மிக அமைதியாகத்தான் பேசுவர். யாராவது கொஞ்சம் சத்தமாகப் பேசி விட்டால் போதும் உடனே திரும்பிப் பார்ப்பர்; அதிலும் கொஞ்சம் கோபமாக முறைத்துப் பார்ப்பதுதான் அவர்களுடைய வழக்கம். அப்படிப்பட்ட மேற்கத்தியர்களுடனே வாழ்ந்து கொண்டிருந்து விட்டு இப்போது மிகச் சகஜமாக சத்தம் போட்டு பேசும் இந்த இத்தாலியர்களைப் பார்த்தபோது கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது; நமது கிராமத்து மக்களைப் பார்ப்பது போன்று.

4 மணி நேர இரயில் பயணம் அது. அதில் இந்த 4 பேரும் வந்து ஏறி அமர்ந்த நிமிடத்திலிருந்து ஓயாமால் காதை பேசிக் கொண்டே வந்தது சற்று ஆச்சரியமாகத் தான் இருந்தது. போதாக் குறைக்கு எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு இத்தாலியப் பெண்ணையும் அவர்கள் விட்டு வைக்க வில்லை. அவளிடமும் பேச்சுக் கொடுத்து அவர்களுடைய உரையாடலில் சேர்த்துக் கொண்டனர். நானும் அவர்களுடைய உரையாடலில் சேர்ந்து கொள்வேனா என்ற எதிர்பார்ப்பில் அவ்வப்போது என்னையும் பார்த்து சிரித்து வைத்துக் கொண்டனர். எனக்கு இத்தாலிய மொழி புரியாது என்பதை எந்த உணர்ச்சியும் எனது முகத்தில் காட்டாததை வைத்து ஒரளவு உணர்ந்திருக்கக் கூடும். இப்படியே சுவாரஸ்யம் குறையாத பொழுது போக்கு அம்சம் ஒன்று அறங்கேறிக் கொண்டிருக்க நான் ஜே.கே யின் 'Letters to The School' நூலை படித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தை படித்து முடிக்கும் போது, இரயில் உலகப் பிரசித்தி பெற்ற Rome நகரை மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தது.

Tuesday, October 7, 2003

இத்தாலி - [Oct 3-5] - 2


காலையில் 7 மணிக்கு Stutgart நகரிலிருந்து Milan செல்லவிருந்த விமானம் அன்று ஜெர்மனியில் விடுமுறை என்பதால் தடை செய்யப்பட்டு விட்டது. இதற்கு மாற்றாக Stutgart - லிருந்து Frankfurt சென்று அங்கிருந்து Milan செல்வதற்கு எனது பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதனால் காலையில் 4 மணிக்கெல்லாம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு விட்டேன். Frankfurt - லிருந்து Milan Linate விமான நிலயத்தை அடையும் போது மணி 9:40 ஆகிவிட்டது. அங்கிருந்து Rome -க்கு இரயில் பயணம் செல்வதாக முடிவு. ஆக இரயில் வரும் வரையில் (11:00 மணிக்கு) இந்த நகரைச் சற்று சுற்றிப் பார்க்கலாமே என நடக்க ஆரம்பித்தேன்.

கண்ணில் முதலில் தென்பட்டது 'காந்தி ரெஸ்டாரண்ட்'. இந்திய உண்வகம் ஒன்று Milan நகரத்திலேயே இருப்பதைப் பார்த்ததும் நிச்சயமாக இங்கு இந்தியர்கள் (இலங்கைத் தமிழர்களும் சேர்த்து) நிச்சயமாக இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு மேலும் நடக்க ஆரம்பித்தேன். Milan நகரில் Fashion Indsustry என்பது முக்கியமான வணிகம். உலகின் மிக முக்கிய ஆடம்பர ஆடை அணிகலன்களை சினிமா நட்சத்திரங்கள் இங்கே தான் வாங்குவார்களாம். பல வகையான மனித முகங்கள். யார் எந்த இனத்தவர் என்று கண்டு பிடிக்க முடியாதவாறு மக்கள் கூட்டம் இந்த நகரில். நடந்து வரும் வழியில் மற்றொறு இந்திய உணவகம் ராஜ்பூர் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில்.

மிலான் இரயில் நிலையம் மிக அழகான ரோமானிய கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பது அதன் தனிச் சிறப்பு. மிக நவீன அதிவேக EuroStar இரயிலில் Rome செல்வதற்கு ஆயத்தமானேன். சரியாக 11:00 மணிக்கு இரயில் மிலான் நகரை விட்டு புறப்பட்டது.



இரயில் பயணத்தின் போது பொழுதைக் கழிப்பதற்காக சிந்தனையாளர் ஜே.கே அவர்களின் 'Letters to the Schools' புத்த்கத்தைப் படிக்க ஆரம்பித்தேன். இதனைப் பற்றிய எனது சிந்தனைகளை Suba's Musings வலைப்பூவில் காணலாம்.




ஏறக்குறைய ஒரு மணி நேரம் இருக்கும். புதிதாக சில பயணிகள் அடுத்த நிறுத்தத்தில்
ஏறிக்கொண்டனர். எனது பக்கத்து இடமெல்லாம் நிரம்பிவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் சந்தைக்கடையில் இருப்பது போன்று இந்த இத்தாலியப் பயணிகள் நிலமையையே மாற்றி விட்டனர். இத்தாலியர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் தோற்றத்தில் மட்டுமல்ல; செயலிலும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்தே தெரிந்து கொண்டேன்.

To be continued....

Monday, October 6, 2003

இத்தாலி - [Oct 3-5] - 1



எனது பல நாள் ஆசைகளில் ஒன்று உலக அதிசயங்களில் ஒன்றான பீசா கோபுரத்தைப் பார்க்க வேண்டும் என்பது. ஜெர்மனிக்கு வந்து ஏறக்குறைய 5 ஆண்டுகளில் இதுவரை இத்தாலிக்கு நான் சென்றதில்லை. பல முறை முயன்றும் எதாவது ஒருதடை வந்து விடும். சென்ற வெள்ளி எனக்கு அலுவலகத்தில் விடுமுறை. ஜெர்மனியில் Reunification நாள் என்பதால் ஜெர்மனி முழுதும் இந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்க நான் இத்தாலிக்கு பறந்து விட்டேன்.




இத்தாலிக்கு ஜெர்மனியிலிருந்து செல்வதென்றால் விமானம் வழி அல்லது சாலையின் வழி அல்லது இரயில் வண்டி மூலமாகச் செல்லலாம். 3 நாள் மட்டுமே விடுமுறை என்பதால் (சனி, ஞாயிற்றுக்கிழமையைச் சேர்த்துத் தான்) விமானம் வழி செல்வதுதான் சிறந்தது என்று முடிவு செய்து விட்டேன். ஐரோப்பாவில் இயங்கும் பல சுற்றுலா நிறுவனங்கள் மலிவு விலையில் விமான டிக்கெட்டுக்களை வழங்குவதைப் பற்றி ஏற்கனவே எனது மற்றொறு வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? ( 17 Sep. தேதி வலைப்பூவைப் பார்க்கவும்) அதில் ஒன்றுதான் Opodo நிறுவனம். இந்த நிறுவனம் ஜெர்மனியிலிருந்து, அதுவும் எனக்கு வசதியான, வீட்டிற்கு அருகாமையிலேயே இருக்கின்ற Stuttgart விமான நிலையத்திலிருந்து உலகம் முழுமைக்குமான விமான சேவைகளைச் சற்று மலிவான விலையில் தருகின்றார்கள். ஆக இந்த நிறுவனத்திலேயே டிக்கெட்டை வாங்கிக் கொண்டு விட்டேன்.


எனது திட்டம் Stuttgart நகரிலிருந்து Milan சென்று பின்னர் அங்கிருந்து Rome நகருக்குச் சென்று அங்கு ஒரு நாளை கழித்து விட்டு பின்னர் வடக்கு நோக்கி Pisa வந்து, பின்னர் Florence வந்து அங்கிருந்து மீண்டும் Milan வந்து அதன் பின்னர் Stuttgart திரும்புவது. மூன்று நாட்களுக்குள் இத்தனை நகரங்களுக்கும் சென்று பார்க்க வேண்டிய முக்கியமானவற்றைப் பார்த்து விட்டு வீடு திரும்ப வேண்டும் அல்லவா? மனதைக் கவர்ந்த இந்தப் பயணத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய படங்களையும் எனது இந்தப் பயண அனுபவத்தையும் வரும் நாட்களில் உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.

நாளை தொடரும்.....