Saturday, May 11, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 15

காட்சிகள் பல.. அனுபவங்களைப் போல..


குளிர் போக்க தயாராக இருக்கும் விறகுகள்.. அலங்கரிப்பாக


சுபா.. தங்கும் விடுதியில்

இலையில்லையென்றாலும் மரங்கள் அழகே..

ஏரியின் கரை சொல்லும் கதை

கிராமத்துக் காப்பிக் கடை

மலையின் நிழல் ஏரியில்..

பனி படர்ந்த மலை உச்சி

நீரோடை

ஆற்றிலே பனி

கிராமத்து வீடு

குடி நீர் குடிக்கலாம் வாருங்கள்


பனி படர்ந்த சாலையில் பயணம்

எனது கால் ஸ்கீ

ஸ்கீ விளையாடும் மக்கள்

ஒரு அப்பாவும் ஒரு குழந்தையும் பனியில் விளையாடும் காட்சி

குளிர் போக்க அனல்

மரத்திலிருந்துத்  தலையை எட்டிப்பார்க்கும் முழு நிலா

ரோய்ட்ட கிராமம்

சுபா



இது என்ன அழகு !

தனியாக .. 

வெள்ளை நிறத்திலும் இத்தனை அழகா

யார் வருகின்றார்கள்...?

சுபா

ஏரென்பெர்க் மலையின் மேல் உள்ள பெரிய சிலுவை

தனிமை இல்லை

கவிதை சொல்லும் காட்சி

நானே இந்த ஊர் ராஜா



சுவையான ஐஸ்க்ரீமுடன்...

பயணம் முற்றும்


அன்புடன்
சுபா

Friday, May 10, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 14


போதும் பனி..

ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சியில் அமைந்திருக்கும் சுவிஸர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து மாறுபட்டது ஆஸ்திரியா. ஏனைய நாடுகள் ஆல்ப்ஸ்மலைத்தொடர்ச்சியில் ஒருபகுதி என்ற வகையில் அமைந்திருப்பது. ஆனால் ஆஸ்திரியாவைப் பொருத்தவரை முழுமையாக ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியில் அடங்கியிருக்கும் ஒரு நாடு இது என்றே குறிப்பிட வேண்டும். இதைப்போல இங்கிருக்கும் மற்றொரு குட்டி நாடான லிக்ஸெஸ்டைனும் அமைகின்றது.

மேற்கு, கிழக்கு வடக்கு தெற்கு என எல்லா பகுதிகளும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியில் அடங்கியிருக்கும் வகையில் ஆஸ்திரியாவின் பூகோள அமைப்பு அமைந்துள்ளது.உயரமான மலைப்பகுதி, அப்பகுதிகளில் அடர்ந்திருக்கும் பசுமையான மரங்கள்  பின்னர் தாழ்வாக இறங்கும் பகுதிகள், பனி கரைந்து உருவாக்கும் நீரோடை இவைகளே இந்த நாட்டில் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும் காட்சி. மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் இயற்கையான பள்ளத்தாக்குகளில் மனித குடியேற்றமேற்பட்டமையின் காரணத்தால் கிராமங்கள் நகரங்கள் பெருநகரங்கள் என ஊர்கள் அமைந்திருப்பதைக் காண்போம்.

ஆஸ்திரியா முழுமையும் மலைகள் என்றமைந்திருந்தாலும் இங்கே மிகத் தரமான சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மலை உச்சிக்குச் செல்லும் பாதை கூட விரிவாக தரமாக வாகனம் ஓட்டிச் செல்வோர் சிரமமின்றி பயணிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் இங்கே பனிக்காலம் இருப்பதால் பனி கொட்டி சாலையை நிரப்பிவிடும் வேளையில் அதனை சுத்தம் செய்ய வரும் வாகனங்கள் அடிக்கடி வந்து சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை தூக்கி நகர்த்திக்கொட்டி சாலையை பனி இல்லாமல் ஆக்கி விடுகின்றன. மலைப்பகுதி பயணங்கள் எனும் போது கேபிள் கார் பயணம் பரவலாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மலையடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்லும் கேபிள் கார் வசதிகள் மிக விரிவாக புழக்கத்தில் உள்ளன.

குளிர்கால விளையாட்டுக்கள் வருடம் முழுக்க இங்கே தடையில்லாமல் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. விண்டர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு மைதானம் இங்குள்ள சீபெல்ட் (Seefeld)  நகரில் தான் அமைந்திருக்கின்றது.  பனிக்கால விளையாட்டுக்களில் பயிற்சி பெற விரும்புவோர் எந்த தயக்கமுமின்றி ஆஸ்திரியாவின் எல்லா பகுதிகளில் தடையின்றி அமைந்திருக்கும் பனி விளையாட்டுப் பள்ளிகளில் பதிந்து பயிற்சி பெற முடியும்.

விண்டர் விளையாட்டுப் போட்டிகள் ஆசிய நாடுகளில் அவ்வளவாகப் பிரபலமாகாவிடினும் கூட ஐரோப்பா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் முக்கிய விளையாட்டுக்களாக அமைந்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டி விளையாட்டுக்கள் பனிவெளி, பனிமலையை சார்ந்தும்  நிகழ்வதால் ஆஸ்திரியா எப்போதும் வருகையாளர்கள் நிறைந்து காணப்படும் ஒரு நாடாகவே உள்ளது. எவ்விதமான குளிர்கால பனி விளையாட்டுக்கள் மக்கள் ஈடுபடுபவை என்பது பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த விக்கி பகுதி நல்லதொரு அறிமுகத்தைத் தரலாம். http://en.wikipedia.org/wiki/Winter_sport

அன்றாட அலுவலக தேவைகளின் சிந்தனைகளிலேயே பெரும்பாலும் உழன்று கொண்டிருக்கும் எங்கள் சிந்தனையிலிருந்து விடுபட்டு புதிதான அனுபவம் பெற வேண்டும் என்ற வகையிலேயே எங்களின் பயணத்தை அமைத்திருந்த்தோம். குளிர் காலத்தில் விடுமுறை என்றாலே ஏற்படும் பயம், சோம்பல் ஆகியவற்றை விலக்கி அந்த நேரத்திலும் ஏதாகினும் உடலுக்குப் பயிற்சியாக அமையும் சில முயற்சி செய்யலாமே என்ற வகையில் ஒரு சுறுசுறுப்பான பயணமாக அமைக்க திட்டமிட்டிருந்தோம். அதன் படியே ஒவ்வொரு நாளும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங், நடைப்பயணங்கள் என அமைந்தன. குளிர் பொதுவாகவே  -4 டிகிரி என்ற போதிலும் பனியில் நடைப்பயணமும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் பயணங்களும் அந்தக் குளிரிலும் எங்களைக் கரைய வைத்தன.

அன்பான உபசாரம், சுவையான உணவு, இயற்கையின் அழகு, உடலுக்கு நலம் தரும் பயிற்சி என முழுமையான மன நிறைவளித்த மேலும் ஒரு பயணமாக இந்தப் பயணம் எங்களுக்கு அமைந்தது.

இந்தப் பயணம் முடிந்தது. பயணங்கள் நிறைந்த வாழ்வின் பதிவுகளாக இன்னொரு பயணம் விரைவில் தொடரும்.

இந்தப் பனிப்பயணத்தின் பதிவில் என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவரையும் மேலும் வேறொரு பயணத்திற்கு அழைத்துச் செல்வேன். காத்திருங்கள் ..:-)



அன்புடன்
சுபா

Saturday, May 4, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 13


புது வருடத்தில் புது அனுபவம்புது அனுபவம் 

2012ம் ஆண்டின் சில்வெஸ்டர் தினம் எங்களுக்கு இங்கேயே அமைந்தது. நாங்கள் தங்கியிருந்த தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் 31ம் நாள் இரவு கொண்டாட்டத்தைத் தங்கும் விடுதியிலேயே ஏற்பாடு செய்திருந்தனர். இரவு 12 மணிக்கு முன்னரே வானவேடிக்கைகள் தொடங்கி விட்டன. அங்கும் இங்குமாக மத்தாப்புக்களின் வெடிச்சத்தம். தங்கும் விடுதியில் அன்று மிகச் சிறப்பான இரவு விருந்தும் இசை நிகழ்ச்சியும் வேறு ஏற்பாடாகியிருந்தது. ஹோட்டல் இருப்பது சற்றே  மலைப்பாங்கான இடமாக இருந்ததால் அங்கிருந்து வானவேடிக்கைகளைப் பார்ப்பதற்கு மிக நன்றாக அமைந்திருந்தது. ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே  ஆண்டின் இறுதி நாளான 31ம் நாள் முடிந்து மறுநாள் பிறக்கும் புதிய வருடத்தை மக்கள் வானவேடிக்கைகளை வெடித்து மகிழ ஆஸ்திரிய அரசாங்கம் மக்களுக்கு அனுமதி வழங்குகின்றது.

1ம் திகதி எங்களின் விடுமுறையின் இறுதி நாள். அன்று ஒரு நாள்  அங்கேயே கழித்துவிட்டு மறு நாள் 2ம் தேதி இல்லம் திரும்புவதாகப் பயணத் திட்டம் அமைந்திருந்தது.

வருடத்தின் முதல் நாள்.  மனதில் பதிந்து ஞாபகத்தில் நிற்கும் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். அதனால் வித்தியாசமான ஒரு அனுபவமாக பனியில் விலங்குகள் நடந்து சென்ற பாதையைத் தேடிச் செல்லும் ஒரு நடவடிக்கை ஒன்றில் ஒரு குழுவாகச் செல்ல என் பெயரையும் பதிந்து கொண்டிருந்தேன். பீட்டருக்கு இப்பயணத்தின் இறுதி நாள் மீண்டும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் காலையிலேயே தனது ஸ்கீ சகிதம் புறப்பட  நான் காலை 11 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடாகியிருந்த இந்தச் சந்திப்பு நடைபெறும் இடத்தைக்  கொடுத்திருந்த  வரைபடத்தில் தேடிக் கொண்டு சென்றேன். எனக்கு முன்னர் ஒரு ஜோடி அங்கே வந்து காத்திருந்தனர்.

பயண வழிகாட்டி (நீல நிற உடையில்) இப்பகுதியில் உள்ள விலங்குகளைப் பற்றிய அறிமுகம் தருகின்றார்.

சற்று நேரத்தில் ஒரு சிலர் வந்து சேர ஏறக்குறைய 20 பேர் கூடி விட்டோம். எங்கள் வழிகாட்டியும் வந்து சேர்ந்தார். முதலில் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டு இந்தப் பயணத்துக்கான கட்டணத்தையும் கட்டி விட்டு எங்கள் வழிகாட்டி அளித்த அறிமுக விளக்கத்தை கேட்டுக் கொண்டோம்.

இது வித்தியாசமான ஒரு நடவடிக்கை என்றே எங்கள் பயண வழிகாட்டியின் விளக்கத்திலிருந்து புரிந்து கொண்டேன். அதாவது மலைப்பகுதியின் கீழ் பகுதியிலிருந்து எங்கள் தேடுதல் தொடங்கும். அதற்காக அவர் ஒரு பகுதியை காலையிலேயேச் சென்று பார்த்து உறுதி செய்து கொண்டு வந்திருந்தார். முதலில் மலையடிவாரப்பகுதியில் தொடங்கும் போது நரிகளின் கால் தடையங்களை வைத்துக் கொண்டு அவை வந்து சென்ற பாதையைப் பின்பற்றி செல்ல வேண்டும். பின்னர் அடுத்து வருகின்ற வெவ்வேறு பிராணிகளின் கால் தடையங்களையும் வைத்துக் கொண்டு அவை எந்த  பிராணியின் கால் தடையம் எனக் கண்டு அவற்றைப் பற்றி விளக்கம் பெற்றுக் கொண்டே செல்ல வேண்டும். மாலை ஐந்து மணிக்குள் கீழே இறங்கி வந்து விட வேண்டும். இடையில் சாப்பிடவும் சற்று ஓய்வெடுக்கவும் நேரம் இருக்கும் என்று அறிமுகம் கொடுத்து விட்டார்.


அன்று காலையில் பனி நன்கு தூறி  முடித்திருந்ததால் மென்மையான பனி எங்கிலும் நிறைந்திருந்தது. மனிதர்கள் இன்னமும் அந்தப் பகுதியில் நடந்து செல்லவில்லை என்பதைச் சேதமடையாமல் இருந்த பனியைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது.  இரவில் நரிகள் நடமாடிய பகுதியை முதலில் தேடிச் சென்று அங்கிருந்து பயணத்தைத் தொடங்கினோம்.

பாடம் செய்த நரியின் உடல்

நரி நடந்து சென்ற பாதை  நேர் கோட்டில் சிறு சிறு கால்கள் பனியில் பதித்த  அச்சுக்களின் கோர்வை போன்று அமைந்திருந்தது. ஆச்சரியம். நான் எதிர்பார்த்ததோ இரண்டு கால்கள் பக்கம் பக்கமாக வைத்து மனிதர் அல்லது நாய் பூனை நடப்பது போல இருக்குமோ என்று. ஆனால் நரி நடந்து செல்லும் போது நேர்கோட்டில் முதலில் ஒரு கால் பின்னர் அதே வரிசையில் அடுத்த கால் எனவும் அதே போல பின்னங்கால்களும் என்ற வகையில் அமைந்திருந்தது என்பதை அவர் காட்டிய தடயங்களிலிருந்து தெர்ந்து கொண்டோம். நரி எப்படி நடக்கும் என்றும் அவர் செய்து காட்டியமையால் அப்போது அதனை முழுமையாக தெரிந்து கொள்ளவும் முடிந்தது.

நரியின் கால் தடயங்கள்


நரிகள் நடந்து சென்ற  பாதையிலேயே சென்று கொண்டிருந்த போது அடுத்து முயல்கள்  நடந்து சென்ற தடயங்களைக் கண்டோம். முயல் தாவிக் குதித்துச் செல்வதை நன்கு அதன் தடயங்களிலிருந்து காண முடிந்தது. முதல் கால் அச்சு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் சிறு தூரம் இருக்கின்றது.

முயல் கால் தடயங்கள்


முயல் பாதையில் அதன் தடயங்களைப் பின்பற்றி வரும் போது மிகச் சிறிதான சில கால்பதிவுகளை காண முடிந்தது. அவை எலிகளின் கால் தடயங்கள். அத்தடயங்கள் இறுதியாக ஒரு பைன் மரத்தைச் சென்றடைவதைக் கண்டோம்.

எலியின் குட்டிக் கால்களின் தடயங்கள்


ஆக இரவில் மனிதர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்த மிருகங்களின் உலகம் விழித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர முடிந்தது.

இதை முடித்து மேலும் சற்று உயரமான பகுதிக்கு நடக்க ஆரம்பித்தோம். அங்கே தான் காட்டு ஆடுகள் வந்து செல்லும் தடையங்களைக் காண முடியும் என்று எங்கள் வழிகாட்டி கூறியதால அவரை பின்தொடர்ந்தோம்.

அனைவரும் மலையில் நடந்து எங்கள் பயண வழிகாட்டியைத் தொடர்ந்து செல்கின்றோம்


இடையில் ஓரிடத்தில் நிறுத்தி நாங்கள் எங்களுடன் கொண்டு வந்திருந்த சாண்ட்வீச்சினைச்  சாப்பிட்டு சற்று இளைப்பாறினோம். எங்கள் பயண வழிகாட்டி கையோடு தேநீரும் ப்ளாஸ்கில் போட்டு கொண்டு வந்திருந்தார். அவை அவரது பேக்பேக்கில் இருந்தது. எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சமாக தேனீரைப் பருகிக்கொண்டோம். அந்தக் குளிருக்கு இந்த பழச்சாறு தேனீர் மிக இதமாகத்தான் இருந்தது. மீண்டும் நடக்கலானோம்.

ஒரு வகை காட்டு ஆட்டின் கால்


ஓரிடத்தில் மிகத்தெளிவான தடயங்கள் கிடைத்தன. அங்கே எங்களை நிறுத்தி தான் கையோடு கொண்டு வந்திருந்த வெவ்வேறு வகையான காட்டு விலங்குகளின் கால் பகுதிகளை எங்களுக்குக் காட்டி அந்த ஆடுகளைப் பற்றிய விரிவான விளக்கத்தை கொடுத்து அக்கால்களை பனியில் வைத்து அத்தடயங்களை எங்களுக்கு உறுதி செய்து எவ்வகை காட்டு ஆடுகள் இங்கே இருக்கலாம் என்று எங்களுக்கு விளக்கினார்.

மானின் தலை எலும்புக்கூடி - விளக்கம் தருகின்றார்.


இந்த விளக்கமெல்லாம் பெற்ற பின்னர் மலைப்பாதையில் இறங்கி மீண்டும் கீழே புறப்படலானோம். இப்போது பனியில் பல கால்களின் தடயங்கள் ஏற்பட்டிருந்தன. விலங்குகளுக்குப் போட்டியாக மனிதர்க்ளும் நடந்திருப்பது நன்கு தெரிந்தது. :-)

மாலை மணி ஐந்து வாக்கில் நாங்கள் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தோம். எல்லோரிடமும் விடைபெற்று எங்கள் பயண வழிகாட்டி செல்ல நானும் எங்கள் தங்கும் விடுதி நோக்கி திரும்பினேன். இது மிக  வித்தியாசமானதொரு புது அனுபவமாக எனக்கு அமைந்தது.

பைன் மரங்கள் அதில் உள்ள பூக்கள்


பைன் மரப் பூக்கள் எலிகளுக்கும் அணில்களுக்கும் உணவாகின்றன


தொடரும்...

சுபா

Wednesday, May 1, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 12


ஆஸ்திரியாவை நினைக்க வைக்கும் மனிதர்கள் - 2

ஆஸ்திரியாவின் புகழை உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பவர்களில் இசைக் கலைஞர்களும் ஓவியர்களும் மட்டும்தானா என்று சிலர் கேட்கலாம். இன்னும் பலரும் இருக்கின்றார்கள். அவர்களை மறந்து விட முடியுமா? அவர்களில் ஒரு சிலரைப் பார்ப்போமே!

சிக்மண்ட் ப்ராய்ட் (1856 - 1939) 


உளவியல் துறைக்கு இவரது பங்களிப்பு விலைமதிக்க முடியாதது என்று கருதப்படுவது. மே மாதம் 6ம் திகதி 1856ல் ஆஸிதிரியாவின் தெற்கு மொரோவியாவில் பிறந்தவர். வியன்னா பல்கலைகழகத்தில் நியூரோலொஜி துறையில் பட்டம் பெறுவதற்கும் முன்னரே இவர் மருத்துவமும் படித்தவர். உளவியல் பிரச்சனைகளின் மூல காரணங்களை ஆராய்வதாக அமைந்தவை  இவரது ஆய்வுகள். உள்ளத்தின் அடித்தளத்திலே புதைந்து கிடைக்கும் காம உணர்வுகள் எவ்விதம் பல்வேறு வகையில் உளவியல் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாகின்றன என்ற வகையில் இவர் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். இவரது மிகப் பிரசித்தி பெற்ற ஆய்வு நூல் The Interpretation of Dreams. இது 1900 ஆண்டு வெளிவந்த்தது. அவர் இறுதிக் காலம் வரை வியன்னாவில் இருக்கவில்லை.  தான் இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்னர் இவர் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். தற்சமயம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பெர்க்காஸா 19ல் அவர் முன்னர் இருந்த ஆய்வகத்தை மியூசியமாகவும் வைத்திருக்கின்றரகள். ஆக வியன்னா செல்பவர்கள் சென்று பார்த்து வர வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று என்று குறித்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

சிக்மண்ட் ப்ராய்ட் பற்றிய ஒரு வீடியோ பதிவுடன் அவரது வாழ்க்கை குறிப்பையும் http://www.biography.com/people/sigmund-freud-9302400 என்ற பக்கத்தில் காணலாம். இதில் உள்ள ஒரு வீடியோ பதிவில் இவர் காதல் மருத்துவர் என்று சிறப்புடன் அழைக்கப்பட்டாலும் தான் பெண்களை என்றுமே முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்வதாகக் குறிப்பிடுகின்றனர். :-)


அடோல்ப் ஹிட்லர் (1989 - 1945)



ஏப்ரல் மாதம் இவர் வாழ்வில் முக்கியமான ஒரு மாதமாகத்தான் இருந்திருக்கின்றது. ஏப்ரல் 20ல் பிறந்து ஏப்ரல் 30ல் இறந்தவர். ஆஸ்திரியாவில் பிறந்தவர் ஆனாலும் ஜெர்ம்னியோடு தன் வாழவை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். ஆரிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கி தானே அதன் தளபதியாக இருக்க வேண்டும் என மிகச் சூசகமாக தன் திட்டங்களை வகுத்து செயல்படுத்தியவர். யூத மக்களை அழிப்பதே தனது ஆரிய தேசத்தைத் தூய்மை படுத்த ஒரு வழி என்று தனக்கு ஒரு சித்தாந்ததை வளர்த்து அதனையே ஜெர்மானிய மக்களின் சிந்தனையில் திணித்து மக்களை இயக்கியவர். ஹிட்லர் பெயரும் மீசை ஸடைலும் அறியாதவர்கள் உலகில் எந்த நாட்டிலுமே இருக்க முடியாது. ஜெர்மனியின் சான்ஸலராக 1933 முதல் 1945 வரை இருந்தவர்.

ஹிட்லர் பிறந்து வளர்ந்தது ஹங்கேரிக்கு அருகில் உள்ள ஆஸ்திரியாவின் ப்ரானாவ் பகுதியில். தனது 3 வயதில் இவரது குடும்பம் ஆஸ்த்ரியாவிலிருந்து ஜெர்மனிக்குக் குடியேறினர். முதலாம் உலகப் போருக்குப் பின்னர் படையில் சேர்ந்து பின்னர் படிப்படியாக நாஸி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஜெர்மனியின் சான்ஸலராகியதும் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஜெர்ம்னியில் மட்டுமல்லாமல், போலந்தைக் கைப்பற்றி பின்னர் ஸ்கேண்டினேயாவுக்கு போர்தொடுக்க ஆரம்பித்ததுடன் ப்ரான்ஸ், பெல்ஜியம், லுக்ஸம்பெர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தனது படையை அனுப்பினார். அதோடு நில்லாமல் ஸ்டாலினுடன் செய்து கொண்ட ஒப்பந்ததையும் மீறி ரஷ்யாவிற்கு 3 மில்லியன் ஆட்கள் கொண்ட படையை அனுப்பி வைத்தார். 2ம் உலகப்போருக்குக் காரணகர்த்தாவாக தன்னை ஆக்கிக் கொண்டார்.

1945ல் இவரது படைகள் தோல்வி கண்டு வருவதையும் தனது சித்தாந்தம் வெற்றி பெறாது என்பதையும் உணர்ந்து கொண்டார். ஏப்ரல் 29ம் தேதி தனது காதலியான ஈவா ப்ரவுனை பெர்லினில் ஒரு பங்கரில் திருமணம் செந்து கொண்டார். மறு நாள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

ஈவா ப்ரவுன் தற்கொலை செய்து இறக்கவில்லை என்றும் உயிருடன் பின்னர் பல ஆண்டுகள் இருந்ததாகவும் பல தகவல்கள் உலாவினாலும் அவர் ஹிட்லருடன் ஒரே நாளில் இறந்து விட்டதாகத்தான் எல்லோரும் நம்புகின்றோம். ஹிட்லர் செய்து வைத்த மிகப் பெரிய சேதம் ஜெர்மனியில் இன்றும்தொடர்ந்து பேசப்பட்டும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றன. பல திரைப்படங்கள் அக்கால நிலையை விளக்குவனவாக வெளிவந்திருக்கின்றன. ஆஸ்திரியாவில் பிறந்தாலும் ஜெர்மனியில் தனது வாழ்க்கையை ஐக்கியப்படுத்திக் கொண்ட சர்வாதிகாரிதான் ஹிட்லர்.

ஹிட்லரின் இளமைக் கால படங்கள், பல சரித்திர விவரணங்கள் அடங்கிய மிக அருமையான ஒரு வீடியோ பதிவையும் மேலும் பல வரிசைக்கிரமாமன விளக்கங்களையும் இங்கே காணலாம்.  http://www.biography.com/people/adolf-hitler-9340144?page=4


அர்னோல்ட் ஷ்வார்ட்ஸ்னெகர் (1947 ..)


அமெரிக்காவின் ஹாலிவூட் பிரபலமாகிவிட்டதோடு கலிபோர்ணியாவின் கவர்னராகவும் உயர்ந்த இவரும் ஆஸ்திரிய பூர்வீகத்தைக் கொண்டவர்தான். ஆக்‌ஷன் படங்கள் என்றால் நினைவில் வருபவர். The Terminator  படத்தைப் பார்த்தவர்கள் நம்மில் பலர் நிச்சயமாக இருப்போம். உயரம், அவரது தீவிர பயிற்சி செய்த உறுதியான உடல் ஆகியவை ஆக்‌ஷன் படங்களுக்கும்  சைன்ஸ் பிக்‌ஷன் படங்களுக்கும் இவரை  தகுதியாக்கின.

இவரைப் பற்றிய பல தகவல்கள் http://www.biography.com/people/arnold-schwarzenegger-9476355?page=1 வலைப்பக்கத்தில் காணலாம்.

Saturday, April 27, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 11

ஆஸ்திரியாவை நினைக்க வைக்கும் மனிதர்கள் - 1

ஐரோப்பாவில் பலருக்கும் பரிட்சயமில்லாத நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று என்று தான் சொல்வேன். சுற்றுலா பயணம் என்றாலே பலருக்கும் சுவிஸர்லாந்து தான் ஞாபகத்திற்கு வரும்.  அல்லது ப்ரான்ஸின் தலைநகரமான பாரீஸ் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இயற்கை அழகின் மொத்த உருவமாக இருக்கும் ஜெர்மனியின் தெற்குப் பகுதியும் ஆஸ்திரியாவும் பலருக்கு அறிமுகமானதில்லை. ஆனாலும் ஆஸ்திரியாவில் பிறந்தோ அல்லது இங்கே வாழ்ந்து புகழ்பெற்ற சிலரை நிச்சயமாக பலர் அறிந்திருக்கலாம். அப்படிப் பட்ட சிலரைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்ளலாமே என நினைக்கின்றேன்.

இசைப்ரியர்களுக்கு பரிட்சயமான பெயர்களில் யோகன் ஸ்ட்ரவுஸ்  (Johann Strauß), மோஸார்ட் (Wolfganf Amadeus Mozart), ப்ரான்ஸ் ஷூபெர்ட், அண்டொன் ஃபோன் வேபர்ன் போன்ற இசை மேதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மோஸார்ட் (1756 - 1791) 

Inline image 6

ஆஸ்திரியாவைப் பிரபலப்படுத்தும் சாக்லெட்கள், நினைவுச் சின்னங்களில் மோஸார்ட்டின் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த இசை மேதை உலகப்புகழ்பெற்று விளங்கினார் என்பதை அறிந்த பலர் இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர் என்ற தகவலை அறியாதிருப்பர். ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர் இவர். ஒரு வயலின் ஆசிரியரும் இசையமைப்பாளருமாகிய தனது தந்தையைப் போலவே இசையில் தீவிர ஆர்வம் கொண்டவர். இளமை காலத்திலேயே இவரது இசைப் புலமை வியக்கும் தன்மை பெற்றிருந்தது. 50க்கும் மேற்பட்ட சிம்பொனிக்களையும்  24 ஓப்பரா இசைப்படைப்புக்களையும் உருவாக்கியவர். இவரது Don Giovanni  ஒப்பரா இன்றும் ஐரோப்பா மட்டுமின்றி உலகப்புகழ்பெற்ற ஓப்பரா படைப்புக்களில் ஒன்றாகத் திகழ்வது. மோஸார்ட்டின் இன்னொரு புகழ்மிக்க ஓப்பரா The Magic Flute. யூடியூபில் இந்த ஓப்பரா முழுமையாக ஒன்றை இங்கே கண்டு களிக்கலாம். http://www.youtube.com/watch?v=b11ElH3qm2M

Inline image 5
யோகன் ஸ்ட்ரவுஸ் (1825 - 1899) 
யோகன் ஸ்ட்ரவுஸ் பொதுமக்கள் விரும்பி மகிழும் நாட்டிய மெல்லிசை (dance music and light music) க்குப் புகழ்பெற்று விளங்கியவர். 
Inline image 7

500க்கும் மேற்பட்ட படைப்புக்களை உருவாக்கியவர். ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னாவில் பிறந்து வளர்ந்தவர் இவர். தனது தந்தையின் விருப்பத்திற்கும் மாறாக இசையில் நாட்டத்தை வளர்த்து வந்தவர் தன்னை இசையமைப்பாளராக வளர்த்துக் கொண்டு மிகத் திறமையாக பல்வேறு தரப்பினரின் தேவைக்கேற்ற வகையில் தனது இசையைப் பிரபலப்படுத்தினார். உள்ளூரில் மட்டுமல்லாது ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ச்பெர்க், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து பெரிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றார். மெல்லிசை மட்டுமன்றி ஓப்பரா படைப்புக்களிலும் தனது நாட்டத்தை செலுத்தியவர் இவர். இவரது "A Night in Venice",  "The Gypsy Baron" ஆகியவை இன்றும் பலரால் பேசப்பட்டும் பயண்படுத்தப்படும் ஓப்பரா படைப்புக்கள்.


இசைத்துறைக்குச் சிறப்பு சேர்த்தோரைப் போல பல ஓவியக் கலைஞர்களும் ஆஸ்திரியாவில் பிறந்து உலகப் புகழ் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.  உதாரணமாக குஸ்தாவ் க்லிம்ட், அங்கெலிக்கா காவ்மான்  ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

Inline image 4
Klimt, Gustav (1862 - 1918)

குஸ்தாவ் க்லிம்டின் ஓவியங்களைப் பரவலாக ஐரோப்பாவின் பல நிதி நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் நான் பார்த்திருக்கின்றேன். இவர் ஆஸ்திரியாவின் வியன்ன்னா அருகில் உள்ள பாவ்ம்கார்ட்டன் பகுதியில் பிறந்தவர். 


Inline image 3

இவரது படைப்புக்கள் வர்ணக் கலவையாக பரிமளிக்கும். மொஸைக் வடிவில் புள்ளி புள்ளியாக வர்ணங்கள் உருவங்களை உருவாக்கி நிற்கும். பாத்திரப்படைப்புக்கள் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையினதாகவும் அமைந்திருக்கும். இணையத்தில் தேடினால் இங்கே அவரது படைப்புக்களாக உருவாகிய பல படங்களைக் காணலாம்.

Saturday, April 20, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 10


30.12.2012

நகருக்கு நடைப்பயணம்

ரோய்ட்ட நகருக்கு அருகாமையில் உள்ள சிற்றூரில் எங்கள் தங்கும் விடுதி இருந்தமையால்  ரோய்ட்ட நகருக்குள் சென்று அந்த நகரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. ஒவ்வொரு நாளும் பனிப் பாதை பயணம், அடுத்து ஏரன்பெர்க் மலைப் பயணம் என்று அமைந்து ரோய்ட்ட நகரின் அருகாமையிலுள்ள இடங்களுக்குச் செல்வதாகவே அமைந்திருந்தது எங்கள் பயணத்தின் முதல் சில நாட்கள். இதனால் இந்த நாளில் ரோய்ட்ட நகருக்குச் சென்று வருவோமே என முடிவு செய்து கொண்டோம். 

எங்கள் தங்கும் விடுதியிலிருந்து நகருக்குச் செல்ல  ஏறக்குறைய 5 கிலோ மீட்டர் தூரம் இருந்தது. ஆக இதனையும் ஒரு நாள் நடைப்பயணமாக வைத்துக் கொள்வோம் என முடிவாகியது.

அன்று பனித்தூரல் இல்லை. ஆனால் முதல் நாள் கொட்டிய புதிய பனி ஏற்கனவே இருந்த பனியின் மேல் கொட்டியிருந்ததில் அப்பகுதியே புதுப் பொலிவுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அன்று காலை வேளையில் சூரியனை மறைத்துக் கொண்டு மேக மூட்டமாக  இருந்தமையால் நகருக்கு நடந்து செல்லும் பாதையில் மக்கள் நடமாட்டமும் குறைவாகத் தான்  இருந்தது. கிராமத்திலிருந்து வெளியே வரும் போது பல பழம் வீடுகள். வீடுகள் ஒவ்வொன்றிலும் அதன் வெளிப்புற வெண்மையான சுவற்றில்  வெவ்வேரு வகையில் சில சித்திரங்களைத் தீட்டி வைத்திருக்கின்றனர். 


அவை கிராம மக்களின் தொழிலை விளக்கும் வகையிலும் அவர்களின் பழமையான உடைகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களாகவும் அமைந்து சாலையில் செல்வோருக்கு இவற்றைப் பார்த்துக் கொண்டே செல்ல ஆர்வத்தை அளிப்பவையாக அமைந்திருக்கின்றன. அழகுணர்ச்சியை எத்தனையோ வகைகளில் மக்கள் கலைவடிவங்களில் தங்களுக்கேற்ற வகையில் வெளிப்படுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கின்றனர் என்று யோசிக்க வைத்தது இக்காட்சிகள்.



ரோய்ட்ட நகர் மிகப் பழமை வாய்ந்த நகரம் என முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். இங்கே இன்னகரின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் சில கட்டிடங்கள் இன்னமும் அதன் பழமை சிறப்பு மாறாமல் பாதுகாக்கப்படுவது பற்றி சுற்றுலா கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தமையால் அதில் உள்ள விஷயங்களை வரிசையாகப் பார்த்து வருவோம் என் முடிவெடுத்துக் கொண்டோம். முதலில் 5 கிமீதூரம் நடந்து வந்த களைப்பு தீர ஒரு ரெஸ்டாரண்டில்  காபி வாங்கி அருந்தினோம். அந்தக் குளிருக்கு சூடான காப்பி இதமாக இருந்தது.

பயணக் கையேட்டில் குறிப்பிட்டிருந்த வகையிலேயே கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டு நடந்தோம். Untermarkt  பகுதியில் தொடங்கும்  போது ஒரு கிணறு முதலில் தென்படுகின்றது. 1901ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கிணறு. இன்னமும் இது குடிநீருக்காகப் பயன்படுத்தப்படும் கிணறாக உள்ளது. 

அடுத்து உடனே வருவது ஹோட்டல் மோரென். இது 1765ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடம். முதலில் கட்டியவரின் பெயரிலே இந்த ஹோட்டலின் பெயர் இது வரை அமைந்திருந்தாலும் இதன் உரிமையாளர்கள் மாறிவிட்டனர் என்ற குறிப்பை வாசித்துக் கொண்டேன்.



இதற்கு பக்கத்திலேயே டவ்கர் ஹ்வுஸ் Tauscher Haus  எனும் கட்டிடம் வருகின்றது.  18ம் நூற்றாண்டு பழமை கொண்ட இது அதில் உள்ள சுவர் சித்திரத்திற்காக புகழ் பெற்று விளங்குகின்றது. 

அன்னை மேரியின் இந்தச் சித்திரத்தை ரோய்ட்ட நகரின் அக்காலத்து புகழ் பெற்ற பாரோக் சித்திரக் கலைஞர் யோகன் ஜேக்கப் செய்லர் வரைந்திருக்கின்றார். 350 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தச் சித்திரம் இன்னமும் மிகத் தெளிவாக உள்ளது. 



இதைத் தொடர்ந்து சென்றால் 18ம் நூற்றாண்டு வரை உப்புக் கிடங்கு வைக்கப்பட்டிருந்த  ஒரு கட்டிடத்தை வந்தடைவோம். இது கிடங்கு என்ற நிலை மாறி தற்சமயம் பல கடைகள் இங்கே உள்ளே அமைந்திருக்கின்றன. 


இங்கு பார்க்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு கதை இருக்கின்றது. ஒவ்வொன்றுமே அதன் வடிவத்திலும் சரி அதன் சுவற்றில் தீட்டப்பட்டுள்ள சித்திரங்களிலும் சரி அது கொண்டுள்ள வரலாற்றுச் செய்தியிலும் சரி தனித்துவம் பெற்றே அமைந்திருக்கின்றன.

அடுத்து நேராக Grüner Haus என்ற பழமையானதொரு வீட்டினைக் கண்டோம். இது 16ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த வீடு.  இதில் தற்சமயம் ஒரு அருங்காட்சியகமும் அமைந்திருந்தது. நாங்கள்  திரும்பி வரும் வழியில் மீண்டும் இங்கு வந்து ஒரு காப்பியும் கேக்கும் சாப்பிட்டுத் திரும்பினோம். அருமையான Renaissance  சித்திரங்கள் இந்தக் கட்டிடத்தை முழுதுமாக அலங்கரிக்கின்றன.



இந்த நகருக்குள்ளேயே மூன்று சாலைகளில் நடப்பதற்குள்  5 தேவாலையங்களைப் பார்த்து விட்டோம்.  சிறிதும் பெரிதும் என பெரும்பாலும் 17ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவையாக உள்ளவை இவை. 

இப்படி ஒவ்வொரு கட்டிடமாகப் பார்த்துக் கொண்டே சுற்றுலா கையேட்டில் வழங்கப்பட்டிருந்த விளக்கங்களை வாசித்துக் கொண்டே பார்த்து வந்தோம். மெதுவாக மேகக் கூட்டம் கலைந்து சூரிய வெளிச்சம் வர பயணம் மேலும் சுவாரசியமாக இருந்தது. அன்றைய மதியப் பொழுதை ரோய்ட்ட நகரிலேயே கழித்த  பின்னர் மீண்டும் தங்கும் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

அன்று முழுமையாக ஏறக்குறைய 12 கி.மீ  தூர நடைப்பயணமாக அமைந்தது.  ரோய்ட்ட நகரின் கட்டிடக் கலையை ரசித்து வந்த்தில் அலுப்பு தெரியவில்லை. 












ரோய்ட்ட நகரச் சின்னம்







தொடரும்...

அன்புடன்
சுபா