Thursday, July 19, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 28


கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 27


அங்கோரில் சில நாட்கள் - 27

22.மே.2018 - இறுதிப் பகுதி



குறுகிய கால பயணம் தான் என்றாலும் முன் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தமையாலும், அங்கோர் வரலாற்று விசயங்கள் பற்றிய தகவல்களை ஓரளவு நான் வாசித்து விட்டு தயார் நிலையில் சென்றதாலும், கம்போடியாவின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களை அதன் சிறப்பினை அறிந்து, நேரில் கண்டு வியக்க முடிந்தது.



கம்போடிய வரலாற்றை விளக்கும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் பல அங்கோரின் க்மெர் பேரரசின் வரலாற்றைப் பற்றியனவாக இருக்கின்றன. அதற்கடுத்தாற்போல அண்மைய காலங்களில் குறிப்பாக கடந்த நூற்றாண்டில் கம்போடியாவின் அரசியல் குறித்தும், கடுமையான போர்க்கால நிலவரங்கள் குறித்தும் தகவல்களை வழங்குவனவாக இருக்கின்றன. இவற்றை வாங்கி வாசிப்பதன் மூலம் ஆசியாவின் வரலாற்றுப் புகழ்மிக்க கலைச்சின்னத்தைக் கொண்டிருக்கும் கம்போடியாவைப் பற்றி நாம் மேலும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.



கம்போடியாவின் பல விவசாய நிலங்களில் போர்க்காலத்தில் வைக்கப்பட்ட கன்னிவெடிகளினால் தொடரும் துன்பங்களைப் பற்றி சில குறும்படங்கள் அண்மையில் வெளிவந்துள்ளன. கடுமையான உள்நாட்டுப் போர் நிகழ்ந்த போது பொது மக்கள் தங்கள் நிலங்களை விட்டு வெளியேறினர். போருக்குப் பின் அமைதி நிலவத்தொடங்கிய பின்னர் திரும்பிய மக்களுக்கு தங்கள் விளை நிலங்களை மீட்டெடுப்பதே இன்று பெரும் சவாலாக இருக்கின்றது. கன்னி வெடிகளை அகற்றி விளை நிலங்களை மீட்கும் சில அமைப்புக்களும் இப்போது செயல்படுகின்றன.

எனது பதிவின் பல பகுதிகளில் கம்போடியாவின் அரச குடும்பத்தினரைப் பற்றியும் மன்னர்களைப் பற்றியும் நான் தெரிவித்திருந்தேன். க்மெர் பேரரசின் ஆட்சி காலம் தொடங்குவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே கம்போடியாவில் ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றிய செய்திகள், இன்று கிடைக்கின்ற கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று நாம் அறியக்கூடிய தகவலின் அடிப்படையில் கம்போடியாவில் கி.மு 68 முதல் கி.பி 1ம் நூற்றாண்டு வரை ஃபூனான் பேரரசின் முதலாம் கவுண்டின்யர் கம்போடியாவை ஆட்சி செய்தார் என்பதை அறிகின்றோம். அதன் பின்னர் கி.பி.1ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவரது மனைவி அரசியார் சோமா கம்போடியாவின் தலைமைப்பொறுப்பேற்று அரசியாக முடிசூடிக்கொண்டு ஆட்சி செய்தார். ஃபூனான் பேரரசின் அடுத்தடுத்த மன்னர்களின் பெயர்களை அறிய இயலாவிட்டாலும் கி.பி 434ம் ஆண்டு வாக்கில் 2ம் கவுண்டிண்யன் ஆட்சி செய்தார் என அறிகின்றோம். அவருக்குப் பின் ஸ்ரீந்தரவர்மன், ஜெயவர்மன் கவுண்டிண்யா, ருத்ரவர்மன் போன்றவர்கள் ஃபூனான் பேரரசின் ஆட்சியைத் தொடர்ந்தனர்.



அதன் பின்னர் ஃபூனான் பேரரசின் ஆட்சி மறைகின்றது. கி.பி 550 முதல் சென்லா பேரரசு கம்போடியாவின் ஆட்சியைக் கைப்பற்றி மன்னன் முதலாம் பிராக்வர்மனின் ஆட்சி கி.பி 600 வரையும் அதன் பின்னர் கி.பி 600 முதல் கிபி 615 வரை முதலாம் மகேந்திரவர்மனும் என சென்லா அரசின் ஆட்சி தொடர்கின்றது. இதே காலகட்டத்தில் தமிழகத்தில் பல்லவ பேரரசை ஆட்சி செய்து வருபவன் மாமன்னன் மகேந்திரவர்மப்பல்லவன் என்பதைக் காணும் போது இந்தப் பெயர் ஒற்றுமையும், இந்த ஒற்றுமைக்குக்கான பின்புலத்தையும் தக்க வரலாற்றுச் சான்றுகளுடன் நாம் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைகின்றது.



சென்லா மன்னர்களின் ஆளுமை 8ம் நூற்றாண்டின் மத்தியில் குறையவே, க்மெர் பேரரசு பிறக்கின்றது. மாமன்னன் 2ம் ஜெயவர்மனின் ஆட்சி காலமே க்மெர் பேரரசின் தொடக்கக் காலம். க்மெர் பேரரசின் ஆளுமை கி.பி 14ம் நூற்றாண்டு வரை தொடர்கின்றது. பின்னர் சயாமிய (தாய்லாந்து) ஊடுறுவல் க்மெர் பேரரசின் அழிவிற்குக் காரணமாகின்றது.



அதன் பின்னர் தொடர்ச்சியான பல போர்களினால் கம்போடியாவும், குறிப்பாக அங்கோர் பகுதி தமது வளத்தையும் பலத்தையும் இழந்து போன வரலாற்றை இன்று காண்கின்றோம்.



இன்று கம்போடியா வளர்ந்து வரும் ஒரு ஏழை நாடு. குறைந்த மக்கள் தொகை. வளமான விளை நிலம். தொழில் தொடங்கவும் நாட்டின் வளத்தை மேம்படுத்தவும் கம்போடிய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.



கம்போடியாவில் தமிழ் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆயினும் இன்று தொழில் செய்வதற்க்காகவும், வியாபாரத்திற்காகவும் அங்கு தமிழர் குடியேற்றம் மிகச் சிறிய அளவில் தொடங்கியுள்ளது.



கம்போடியாவின் வரலாற்றைக் காணும் போது தமிழர்களுடனான கம்போடிய மக்களின் உறவு நீண்ட கால தொடர்பு என்பதை உணர முடிகின்றது. ஆயின் கம்போடிய மன்னர்கள் தமிழ் மன்னர்களே எனச் சொல்வது தவறான கூற்றாகவே அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்களின் கம்போடியத் தொடர்பைப் பற்றிய முக்கியத் தகவல்களை ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, ஆ.கி.பரந்தாமனார் ஆகியோரது நூல்களின் வழி அறிய முடிகின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டும் கல்வெட்டு, செப்புப்பட்டயம், இலக்கிய ஆதாரங்களைக் கொண்டும் மேலதிக ஆய்வுகள் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாகின்றது.



பல்லவ மன்னர்கள் மட்டுமன்றி சோழ மன்னர்களின் காலத்திலும் கம்போடிய க்மெர் பேரரசிற்கும் சோழப் பேரரசிற்கும் இருந்த தொடர்புகள் நமக்குக் கிடைக்கின்றன. கம்போடிய இளவரசி சோழ நாட்டிற்குச் சென்று சோழ மன்னரை மணந்த செய்தியையும் அறிகின்றோம். அங்கோரிலிருந்து பரிசுப் பொருட்களும் தேரும் முதலாம் சூரியவர்மன் கம்போடியாவை ஆண்டு கொண்டிருந்தபோது சோழ நாட்டிற்குச் சென்றதாகவும் அறிகின்றோம். ஆக, தமிழக மன்னர்களுக்கும் கம்போடிய மன்னர்களுக்குமான் நட்பு ரீதியான, உறவு முறை ரீதியான தொடர்பு நீடித்திருந்தது என்பதில் ஐயமில்லை. ஆயினும் பல தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கிடைக்கின்றமையினால் முழுமையான வரலாற்றுச் சான்றுகளின் ஆதாரங்களோடு இத்தொடர்பினை விவரிக்க இயலாத சூழலே நிலவுகின்றது.



ஆகவே, கம்போடியாவிலும், தமிழகத்தின் பெரும்பகுதியிலும் கல்வெட்டு வாசிப்புக்கள் பெருமளவில் நிகழ்த்தப்பட்டு அவற்றின் வழி கிடைக்கக்கூடிய செய்திகள் பதிப்பிக்கப்படும் போது மேலும் தெளிவான வெளிச்சம் இதற்குக் கிடைக்க வாய்ப்புண்டு.



கம்போடியர்களும் சரி தமிழக மக்களும் சரி, கடல்வழி பயணித்து இரு நாடுகளுக்குமான உறவினையும் வணிக நட்பினையும் வளர்த்திருக்கின்றனர். அவற்றைப் பற்றிய தரவுகளும் சான்றுகளும் சேகரிக்கப்பட வேண்டியது ஆய்வுலகில் முன் நிற்கும் மிகப்பெரிய ஒரு பணியாகும்.



தமிழக தொல்லியல் துறையும், தமிழக பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள், செம்மொழி ஆய்வு நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை தமிழ்ச்சங்கம் போன்ற அரசு சார்ந்த அமைப்புக்களும் தமிழகத்திற்கும் கம்போடியாவிற்குமான வரலாற்றுத் தொடர்புகளை முன் வைத்து ஆய்வுத் திட்டங்களை உருவாக்கிச் செயபடுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் அவசியமும் கூட.

முற்றும்!

சுபா
குறிப்புக்கள்https://en.wikipedia.org/wiki/Monarchy_of_Cambodia


Tuesday, July 17, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26

அங்கோரில் சில நாட்கள் - 26
21.மே.2018
ஹாலிவூட் புகழ் நடிகை ஏஞ்சலீனா ஜோலி, லாராக்ராஃப்ட் பாத்திரப்படைப்பாக டோம் ரெய்டர் திரைப்படத்தில் தனது துப்பறியும் வீர சாகசங்களைச் செய்யும் ஒரு இடமாக கம்போடியாவின் அங்கோர் நகரும் காட்டப்படும். அப்படத்தில் வருகின்ற ”தா ப்ரோம்” கோயில் தான் எனது இந்தக் கம்போடிய பயணத்தில் நான் இறுதியாகக் கண்டு மகிழ்ந்த க்மெர் பேரரசின் பழங்கோயில்.
தா ப்ரோம் கோயில் அங்கோர் தோம் வளாகத்திலிருந்து ஏறக்குறைய 1 கிமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. பாயோன் கோயிலின் கட்டுமான அமைப்பினை ஒத்த கட்டுமான அமைப்பு கொண்ட கோயில் இது. இது கட்டப்பட்டபோது இக்கோயில் “ராஜவிகாரா’ என அழைக்கப்பட்டது. கி.பி 12ம், 13ம் நூற்றாண்டினைச் சார்ந்த இக்கோயிலும் பாயோன் கோயிலைக் கட்டிய மாமன்னன் 7ம் ஜெயவர்மனின் ஒரு கலைப்படைப்பே.
இது உருவாக்கப்பட்டபோது இந்த ராஜவிகாரை மகாயாண பௌத்த மடாலயமாகச் செயல்பட்டு வந்தது. இங்கு ஒரு பல்கலைக்கழகமும் செயல்பட்டு வந்தது. இதன் தலைமைப் பேராசிரியராக இருந்தவர் மன்னன் 7ம் ஜெயவர்மனின் மனைவி இந்திராதேவி.
இக்கோயில் 1992ம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் ஒரு வரலாற்றுச் சின்னமாக பட்டியலில் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. இக்கோயிலில் இந்திய தொல்லியல் துறை (ASI) ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.
கி.பி15ம் நூற்றாண்டில் க்மெர் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் அங்கோர் நகரில் இருந்த கோயில்கள் பராமரிப்பின்றி சிதலமடையத்தொடங்கின. 21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தொடங்கப்பட்ட École française d'Extrême-Orient என்ற பிரஞ்சு ஆய்வு அமைப்பு இப்பகுதி கோயில்களைப் புணரமைப்பது, தொல்லியல் அகழ்வாய்வுகளில் ஈடுபடுவது எனச் செயல்படத்தொடங்கியது. இதன் விளைவாக அங்கோர் கோயில்கள் காடுகளிலிருந்து மீட்கப்படும் பணிகள் தொடங்கின. ஆயினும் தா ப்ரோம் கோயிலில் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தோற்றம் பிரம்மாண்டமான காட்சியாக இயற்கையாகவே அமைந்திருப்பதால் அதனை அப்படியே விட்டுவைத்து பாதுகாப்பது என்ற முடிவெடுக்கப்பட்டு இக்கோயில் இன்று மரங்கள் சூழக் காட்சியளிக்கின்றது. இந்திய தொல்லியல் துறை (ASI) இக்கோயிலின் புணரமைப்புப் பணியில் பெரும்பங்காற்றி, 2013ம் ஆண்டு வாக்கில் பெரும்பாலான கோயிலின் சிதலமைடைந்த பகுதிகளை மீட்டதாகவும் அறியமுடிகின்றது.

தா ப்ரோம் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள அடர்ந்த காடுகளில் ராட்சத வகை மரங்கள் சூழ்ந்திருக்கின்றன. இந்த பௌத்த மடாலாயத்தின் பல பகுதிகளை ராட்சத மரங்களின் வேர்கள் சுற்றி வளைத்துப் பின்னியிருக்கின்றன. இவ்வளவு பெரிய வேர்களா என திகைக்க வைக்கின்றது இங்கு நாம் காணும் காட்சி.

ஒருபகுதியில் மரத்தின் வேர்களே அருவியிலிருந்து விழும் நீர் போல, நீர்வீழ்ச்சிக்காட்சியாக அமைந்திருக்கின்றது. ஓரிடத்தில் அப்சரசுகளைத் தங்கள் ராட்சதக் கைகளுக்குள் வைத்திருப்பது போல மாபெரும் வேர்கள் சிற்பங்கள் நிறைந்த பாறைகளில் படர்ந்து விரிந்திருக்கின்றன. தா ப்ரோம் மடாலயத்தின் ஒரு பகுதியின் மீது படர்ந்திருக்கும் ராட்சத வேர்கள் ஒரு முதலை தவழ்ந்து கூறையின் மீதேருவது போலக் காட்சியளிக்கின்றது. இப்படி ஒவ்வொரு மரமும் இக்கோயிலைத் தமக்குப் பிடித்த வகையில் ஆக்கிரமித்து தனதாக்கிக் கொண்டிருக்கும் காட்சியை இங்கே முழுதும் காண முடிகின்றது.

தா ப்ரோம் இயற்கையோடு இணைந்து நமக்களிக்கும் காட்சி சொல்லில் வடிக்க இயலாததோர் அழகு. சில உணர்வுகளை விளக்க சொற்களால் இயலாது. அதே போல சில காட்சிகளை ரசிக்கத்தான் முடியும். அந்த ரசனையின் ஆழத்தை விவரிக்க மொழியால் இயலாது என்பதை தா ப்ரோம் ராஜவிகாரைக்கு வருவோர் நிச்சயம் உணர்வார்கள்.




நம்மை வியப்பில் ஆழ்த்தியது போலவே டோம் ரெய்டர் புகழ் ஏஞ்சலினா ஜோலியும் இந்த பிரம்மாண்டத்தில் தன் மனதை நிச்சயம் இழந்திருப்பார் படப்பிடிப்பின் போது. 









குறிப்புக்கள்: 
The Civilization of Angkor by Charles Higham

தொடரும்..
சுபா

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 25

21.மே.2018
இப்படி ஒரு கோயிலா என யாரும் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத கட்டுமான அமைப்பு.

இன்று இதே போல ஒரு கோயிலை உருவாக்க முடியுமா என்பதும் ஒரு கேள்வி.

நம்மை வியப்பில் ஆழ்த்தும் கோயில் கட்டுமானக் கலையுடன் திகழ்வது கம்போடியாவின் அங்கோர் நகரில் வீற்றிருக்கும் பாயோன் கோயில். மன்னன் 7ம் ஜெயவர்மனின் சிந்தனையில் உதித்த ஒரு கலைப்பொக்கிஷம் இக்கோயில்.

பாயோன் கோயில் வளாகத்தை நெருங்கும் போது நமக்கு உடைந்த இக்கோயிலின் கற்களும் புத்தர் சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். தூரத்திலிருந்து பார்க்கும் போதே நீள் செங்குத்து வடிவில் அமைந்த முகங்கள் அமைக்கப்பெற்ற போபுரங்களை முதலில் காண்போம். பாயோன் கோயிலில் இத்தகைய 54 கோபுரங்கள் இருக்கின்றன. இவற்றில் ஏறக்குறைய 200 முகங்கள், அனைத்தும் அவலோகிதராக தன்னைப் பாவித்து மாமன்னன் 7ம் ஜெயவர்மன் உருவாக்கியவை.

இக்கோயிலின் சுவர்களில், தூண்களில், சன்னிதிகளில், அடித்தளத்தில், மேற்தளத்தில், படிகளில் என எல்லா இடங்களிலும் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அப்சரசுகள் என அழைக்கப்படும் தேவமங்கையரின் அழகிய பாவனைகளை வெளிப்படுத்தும் சிற்பங்களும், கம்போடியாவின் கி.பி.12ம் நூற்றாண்டு சமூக நிலையை வெளிப்படுத்தும் இயல்பான காட்சிகளும், போர் காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பாக 7ம் ஜெயவர்மனின் போர் வெற்றிகளைப் பறைசாற்றும் புடைப்புச் சிற்பங்கள் மிகப்பிரமாண்டமானவை. போர் வீரர்கள் வரிசை வரிசையாக நடப்பது போன்றும், பரிவாரங்கள் சூழ தளபதிகள் செல்வது போன்றும், மாமன்னன் வீரபவனி வருவது போன்றும், போரில் ஈடுபட்டிருப்பது போன்றும், என, போர் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்தார்போல் காட்டும் சான்றுகளாகத் திகழ்கின்றன இப்புடைப்புச் சிற்பங்கள்.

மாமன்னன் 7ம் ஜெயவர்மனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவன் 2ம் இந்திரவர்மன். அவன் ஆட்சியில் அங்கோர் தோம் நகர் வளமுடன் அவன் தந்தையார் விட்டுச் சென்ற புகழ் குறையாமல் ஆட்சி தொடர்ந்தது. பௌத்தம் தொடர்ந்து கம்போடிய அரசின் அதிகாரப்பூர்வ மதமாகத் தொடர்ந்தது. ஆயின், அவனுக்குப் பின்னர் 8ம் ஜெயவர்மனின் ஆட்சியில் அங்கோர் தோம் குறிப்பிடத்தக்கச் சீரழிவை எதிர்நோக்கத்தொடங்கியது என்பதை நமக்குக் கிடைக்கின்ற குறிப்புக்களின் வழி அறிகின்றோம்.

8ம் ஜெயவர்மன் காலத்தில் சிவ வழிபாடு மேலோங்கத் தொடங்கியது. இதுவரை பௌத்த ஆலயங்களாக இருந்த சில கோயில்கள் சிதைக்கப்பட்டன. பாயோன் கோயிலின் கோபுரங்களில் மாற்றங்களை உட்புகுத்தி அவலோகிதரின் முகத்தை பிரம்மாவின் முகமாக மாற்றிய நிகழ்வுகளும் நடந்தன. பாயோன் கோயிலின் மைய தெய்வமாக இருந்த புத்தரின் சிலை பாயோன் கோயிலிலிருந்து நீக்கப்பட்டு அங்கோர் தோம் நகரின் ஒரு மூலைப்பகுதியில் போடப்பட்டது.

ஆயினும் அண்மைய காலத்தில் இந்தப் பிரம்மாண்டமான சிலை மீட்டெடுக்கப்பட்டு, பாயோன் கோயிலின் மேற்குப்புரத்தில் புதிதாக ஒரு கோயில் அமைக்கப்பட்டு அங்கு வைத்து வழிபடப்படுகின்றது.
8ம் ஜெயவர்மன் பிராமண குருக்கள்மாரைக் கோயில்களில் நியமித்து சிவ வழிபாட்டை தொடக்கினான்.புத்தர் சிலைகள் மூலைகளில் ஒதுக்கப்பட்டன. கம்போடிய க்மெர் ஆட்சி தொடர்ந்தது. ஆயினும் படிப்படியாக பல உள்நாட்டுக் குழப்பங்கள் முளைக்கத் தொடங்கின. அவ்வேளையில் கலகம் வெடிக்கவே அதில் 8ம் ஜெயவர்மன் கொல்லப்பட்டான். அரியணையில் ஆட்சியில் அமர்ந்தான் அவனது மருமகன். 3ம் இந்திரவர்மன் என தன் அரச பெயரை அவன் சூட்டிக் கொண்டான்.

அடுத்தடுத்து ஆட்சியில் இருந்து கம்போடிய மன்னர்களின் செயல்பாடுகள் குறித்து கல்வெட்டுக்கள் இதுவரை கிட்டவில்லை. ஆயினும் அங்கோர் தோம் பகுதியிலிருந்த பல பௌத்த சிற்பங்களையும், சிலைகளையும் பர்மிய மற்றும் தாய்லாந்தின் அயோத்தையா பகுதியில் ஆட்சி செய்தவர்கள் எடுத்துச் சென்றதாகவும் அறிய முடிகின்றது. அதன் பின்னர் 18ம் நூற்றாண்டு தொடங்கி அங்கோர் தோம் பகுதியைக் காடுகளே முழுமையாக தனதாக்கிக் கொண்டன.

அங்கோர் தோம் நகரின் பல கோயில்களைச் சுற்றி அடர்ந்த காடுகள் வளர்ந்து விட்டன.அவ்வப்போது இப்பகுதிக்கு வந்து சென்ற ஐரோப்பிய மத போதகர்களின் குறிப்புக்களிலிருந்து அக் காடுகளைப் பற்றிய செய்திக் குறிப்புக்களைக்காண முடிகின்றது.

இப்படிக் காடுகள் தனதாக்கிக் கொண்ட கோயில்கள் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
குறிப்புக்கள்:
The Civilization of Angkor by Charles Higham

தொடரும்..
சுபா








Sunday, July 15, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24

21.மே.2018
கம்போடியாவின் கோயிற்கலைகளை வியந்து பேசும் பலர் அங்கோர் வாட் கோயிலை மட்டுமே பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஆனால், அங்கோர் பகுதியில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு கொண்டவை. எனது பயணத்தில் அங்கோர் வாட் முடித்து அடுத்து எங்கள் பயணம் அங்கோர் தோம் நோக்கி இருந்தது.

அங்கோர் தோம் நகர் கி.பி.12ம் நூற்றாண்டில் மாமன்னன் 7ம் ஜெயவர்மனால் உருவாக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் விரிந்த க்மெர் பேரரசின் மாபெரும் நகரமாக அங்கோர் தோம் நகரம் திகழ்ந்தது. மதில் சுவரால் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்ட ஒரு நகரமாக இது அமைக்கப்பட்டது. 8 மீட்டர் உயரமும் 12 கிமீட்டர் நீளமும் கொண்ட சுவரால் சூழப்பட்ட நகராக இது அமைக்கப்பட்டது. அந்த மதில் சுவறுகளின் சில பகுதிகளை இன்றும் நாம் காண முடிகின்றது. கற்களால் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான நுழைவாயில்களைக் கடந்து தான் இந்த நகருக்குள் செல்ல முடியும். இன்றும் பசுமை குறையாத காட்சி இங்கு நாம் நடந்து செல்லும் போதே நமக்கு பண்டைய வரலாற்றுச் செய்திகளை மணக்கண்ணில் கொண்டுவருவதாக அமைகின்றது.

ஐந்து வாயில்களுடன் அங்கோர் தோம் நகரின் மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதில் தெற்கு வாயில் பகுதி மட்டுமே இன்றும் அதன் கட்டுமானம் சிதையாமல் காட்சி தருகின்றது. இந்தத் தெற்கு நுழைவாயிலைக் கடந்து செல்லும் போது வரிசை வரிசையாக சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே சொல்லலாம். இறைவடிவங்களாக 154 கற்சிலைகள் இங்கே செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தெய்வங்களின் சிற்பங்களோடு அசுரர்களின் பெரிய சிற்பங்களும் ஏழுதலைகள் கொண்ட நாக வடிவங்களும் இந்த மதில் சுவற்றைச் சேர்ந்தும் அதன் அருகாமைப் பகுதிகளிலும் காணக்கிடைக்கின்றன.

அங்கோர் தோம் வளாகத்தில் பல கோயில்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுமே பிரம்மாண்டமான கட்டுமான அமைப்புடன் கூடியவை. நாங்கள் குழுவாக இந்தக் கோயில்வளாகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தோம். பாயோன் கோயிலைப் பார்த்து விட்டு அங்கிருந்து சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே மற்றொரு வழியாக வெளியே வந்து பின்னர் உள்ளே செல்வதற்கு வழி தெரியாமல் அங்கோர் தோம் வளாகத்தின் வேறொரு பகுதிக்கு வந்துவிட்டோம். என்னுடன் சுவிஸர்லாந்திலிருந்து வந்திருந்த திருமகளும் என்னுடன் ஓட்டமும் நடையுமாக ஓடிவர எதிர்பாராத விதமாக நாங்கள் வந்தடைந்த கோயில் பிமீயானாக்காஸ் அரச மாளிகை வளாகம் (Phimeanakas).

பிமீயானாக்காஸ் அரச மாளிகை வளாகம் கி.பி10ம் நூற்றாண்டில் க்மெர் மாமன்னன் 2ம் ராஜேந்திரவர்மனால் கட்டப்பட்டது. இதனை மேலும் விரிவாக்கினான் பின்னர் அங்கோர் தோம் நகரை உருவாக்கிய 7ம் ஜெயவர்மன். இந்த வளாகத்தில் நாகர் வழிபாட்டின் குறியீடுகள் நிறைந்திருக்கின்றன. விண்வெளி, அண்டம் என விரிவான பூளோகவியலை மையப்படுத்திய கோயில் அமைப்பினை இங்கே அமைத்திருந்தான் மாமன்னன் 2ம் ராஜேந்திரவர்மன். இந்த மாளிகைப்பகுதியில் தங்கக்கோபுரம் ஒன்று இருந்ததாகவும் இங்கு வழக்கில் உள்ள கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. அந்த தங்கக் கோபுரம் அமைந்த மாளிகையில் ஒரு ஒன்பது தலை நாகம் வாழ்ந்ததாகவும், அது மன்னனின் கண்களுக்கு அழகிய ஒரு பெண்ணாகக் காட்சியளித்ததாகவும், மன்னன் வேறு ராணிகளுடன் பழகச் செல்வதற்கு முன் இந்த மாயப்பென்ணுடன் உறவு கொண்டபின்னரே செல்ல முடியும் என்றும் அதற்கு மாறாக மன்னன் சென்றால் அவன் இறந்து விடுவான் என்றும் இந்தக் கதை சொல்கின்றது.

இதேபோல இந்த வளாகத்தினுள் உள்ள எல்லா கோயில்களையும் பார்த்து வருவதற்கு ஒரு நாள் கட்டாயமாகப் போதாது. ஆய்வுக் கண்கொண்டு ஆராய்வோருக்கு ஒவ்வொரு பகுதிகளையும் ஆராந்து குறிப்பெடுத்து பதிந்து வர தோராயமாக ஒரு மாத காலம் கட்டாயமாகத் தேவை.

மாமன்னன் 7ம் ஜெயவர்மன் அங்கோர் தோம் கோயில் நகரை உருவாக்கிய மாபெரும் சிற்பி என்பதை அறிந்து கொண்டோம். இதே மன்னன் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு வாடினான் என்ற குறிப்புக்களும் நமக்குக் கிடைக்கின்றன. இந்த மன்னனைப் பற்றி அடுத்த பதிவில் மேலும் சில தகவல்கள் தருகிறேன்.
















குறிப்புக்கள்:
Cambodia and Laos, DK- Eyewitness Travel
தொடரும்..
சுபா

Saturday, July 14, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 23

அங்கோரில் சில நாட்கள் - 23

21.மே.2018

மிகப் பெரிய வளாகத்தைக் கொண்ட ஒரு சமயச் சின்னம் என்றும் உலகின் மிகப்பெரிய இந்து மதக் கோயில் என்றும் வர்ணிக்கப்படும் சிறப்பு பெற்றது அங்கோர் வாட். மாமன்னன் 2ம் சூரியவர்மனால் கி.பி.12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயில் விஷ்ணுவுக்காக முதலில் கட்டப்பட்டது என்றாலும் மன்னர்களின் ஆட்சி மாற்றங்களின் காரணத்தினால் பௌத்த மத வழிபாடு இங்கு படிப்படியாக முக்கியத்துவம் பெற்றது.

மையக்கோயிலில் அமைப்பு தாமரைப்பூவின் இதழ்களை ஒத்த ஐந்தடுக்கு கட்டிட அமைப்பு. இது மேரு மலையை பிரதிபலிப்பது.

பெரிய கோயில் வளாகம் அமைக்கப்பட்டு, அதன் மையப்புள்ளியாகக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே நுழைவதற்கு முன்னர் நாம் காண்பது மிகப்பெரிய குளங்கள். இக்குளங்கள் நீர் நிறைந்து காணப்படுகின்றன. இவையே புராணம் கூறும் பாற்கடல் என்றும் வர்ணிக்கப்படுகின்றது. நடுவே பாலம் அமைந்திருக்கின்றது.

அங்கோர் வாட் கோயில் முழுமையும் சிற்பங்கள் பல சுவர்களை அலங்கரிக்கின்றன. அப்சரசுகள் எனப்படும் தேவதைகளின் உருவங்கள் சுவர்களின் மேல் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 600 மீட்டர் நீளம் கொண்ட வெவ்வேறு சுவறுகளில் மகாபாரதக் கதை, ராமாயணக் கதை, கம்போடிய மன்னர்களின் வரலாறு ஆகியவை புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இது கோயில் சிற்பக் கலைக்கு ஒரு சிகரம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மையக் கோபுரத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் செங்குத்தான கோபுரங்கள் புத்தரின் வடிவங்களைத் தாங்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. படிப்படியாகக் க்மெர் அரசு பௌத்தம் தழுவிய அரசியல் சூழலே இந்த அங்கோர் கோயிலில் பௌத்த மதத் தாக்கத்தை உள்வாங்கி வளர்வதற்கு உருவானதற்கு அடிப்படையாக அமைந்தன.

ஏனைய கம்போடிய கோயில்களைப் போலன்றி அங்கோர் வாட் சூரியன் மறையும் திசை நோக்கிய வகையில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு சூரிய அஸ்தமனத்தை நோக்கியவாறு மேற்கு நோக்கி கட்டப்பட்டிருப்பது மரணத்தைக் குறிக்கும் குறியீடு எனக் கூறப்படுகின்றது.

அங்கோர் கோயிலின் கட்டுமான அமைப்பு தமிழகக் கோயிலின் கட்டுமான அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டது. தனித்துவம் கொண்டது. கம்போடிய மன்னன் 2ம் ஜெயவர்மன் காலத்து கட்டிடக் கலையின் விரிவாக்கத்துடன் திகழும் பிரம்மாண்ட அமைப்பு இந்தக் கட்டிடக் கலை எனலாம். அங்கோர் வாட் அமைப்பு க்மெர் கட்டிடக் கலைகள் மிக உயர்ந்த, மிக நுட்பமான, கட்டுமானக் கலைகளுக்கெல்லாம் ஒரு மகுடமாகத் திகழ்கின்றது எனலாம். கோயில் வளாக அமைப்பு, கோபுரங்களின் அமைப்பு, கருவரை அமைப்பு, சுவர் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் அனைத்துமே இக்கோயிலின் பிரமாண்டத்தையே உணர்த்துகின்றன.

இக்கோயிலைக் கட்டிய இரண்டாம் சூரியவர்மனின் புடைப்புச் சிற்பம் இதே கோயிலின் நீண்ட சுவர் ஒன்றில் வரிசையாக அமைக்கப்பட்ட பல நூறு சிற்பங்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது. 2ம் சூரியவர்மன் பல்லக்கில் செல்ல, அவனோடு அவனது அரசியும் ஏராளமான பெண்களும் பல்லக்குகளில் தூக்கிச் செல்லப்படும் வகையில் இப்புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. மற்றுமொரு பகுதியில் 2ம் சூரியவர்மன் யானையின் மீதேரி போரில் ஈடுபட்டிருப்பது போன்றதொரு காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

கோயிலில் கல்வெட்டுக்கள் பல செதுக்கப்பட்டுல்ளன. இவை பல்லவ கிரந்தக் கல்வெட்டுக்கள். ஏனைய கல்வெட்டுக்களும் இருக்கலாம். இக்கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டு ஆராயப்படவேண்டியது அவசியம். இந்தியத் தொல்லியல் துறை ( ASI ) இக்கோயில் புணரமைப்புப் பணியின் ஒரு பகுதியை மேற்கொண்டிருப்பதாகவும் அறிந்தோம். அங்கோர் வாட் மட்டுமன்றி அங்கோர் வளாகத்தில் உள்ள ஏனைய சில கோயில்களின் புணரமைப்புப் பணிகளிலும் ASI தமது பணிகளில் ஈடுபட்டு வருகின்றது என்பது ஒரு செய்தி. இப்பணிகளின் ஒரு பகுதியாக இக்கோயில்களின் கல்வெட்டுக்கள் வாசிக்கப்படுமானால் அவை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு வரலாற்றையும் இந்தியாவுக்கும் கம்போடியாவுக்குமான உறவையும் நாம் அறிந்து கொள்ள நிச்சயம் உதவும்.

இக்கோயிலை முழுதும் சுற்றி வரவும் ஒவ்வொரு சிற்பங்களையும் நுணுக்கமாக ஆராயவும் ஒரு நாள் போதாது. ஒரு வாரம் இக்கோயிலில் அமர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு பகுதி என ஆராய்ந்தால் தான் இதனை முழுமையாக நாம் அறிந்து கொள்ள முடியும் . அதோடு இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய சிற்பிகளின் கலைத்திறனை ரசித்துப் போற்ற முடியும்.

எங்கள் பயணத்தில் குறுகிய நேரமே இருந்தது. ஆயினும் உடன் வந்த நண்பர் திரு.காந்தியின் துணையுடன் இக்கோயிலில் காண வேண்டிய முக்கியப் பகுதிகள் அனைத்தையும் விரைவாகப் பார்த்து அறிந்து, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.










Video :  https://www.facebook.com/subashini.thf/videos/2202733269970058/


தொடரும்..
சுபா

#கம்போடியா
#உலகத்_தமிழர்_மாநாடு_2018

Friday, July 13, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 22

21.மே.2018

எனது கம்போடிய பயணத்தின் முக்கிய நோக்கம், எல்லோரும் காண விரும்பும் உலக பிரம்மாண்ட கட்டிடக் கலைப்படைப்பான அங்கோர் வாட் கோயிலை நேரில் காண்பதும் அதன் கலை வடிவத்தை நுணுக்கமாக ரசிப்பதும் ஆகும். பயணத்தின் முதல் சில நாட்கள் புனோம் குலேன், அருங்காட்சியகம் மற்றும் உலகத் தமிழர் மாநாடு என அமைந்து விட்டது. மாநாடு முடிந்த மறு நாள் அங்கோர் வாட் கோயிலுக்குச் செல்வது என் திட்டத்தில் இருந்தது.

அங்கோர் எனும் பெயர் கம்போடிய க்மெர் மொழிச் சொல் என்பதையும் அது நமக்கு பரிச்சயமான சமஸ்கிருதச் சொல்லான நகரம் என்பதிலிருந்து உருவான சொல் என்பதனையும் முதல் பகுதிகளில் குறிப்பிட்டிருந்தேன். அதோடு நாகர் வழிபாட்டிலிருந்து இச்சொல் உருவாகியிருக்கலாம் என என் அனுமானத்தையும் பகிர்ந்திருந்தேன்.

கி.பி.9ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மன்னன் முதலாம் யசோவர்மன் தனது தலைநகரை இன்றைய சியாம் ரீப் பகுதிக்கு அருகில் அமைத்தான். இதே பகுதியில் க்மெர் அரசின் தலைநகரம் ஏறக்குறைய 500 ஆண்டுகள் அப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களால தலநகராகப் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கு ஆட்சி தொடர்ந்தது. மன்னன் முதலாம் யசோவர்மன் தான் அமைத்த நகருக்கு யசோதபுரம் என தனது பெயரையே சூட்டினான். எப்படி கிரேக்கத்திற்குப் புகழ்சேர்த்த மாமன்னன் அலெக்ஸாண்டர் தான் கைப்பற்றிய நகரங்களில் குறிப்பிடத்தக்கனவற்றிற்கு அலெக்ஸாண்ட்ரியா எனப் பெயர் சூட்டினானோ அதே போல. முதலாம் யசோவர்வனுக்குப் பின் வந்த க்மெர் மன்னர்கள் இப்பகுதியில் மேலும் பல கோயில்களைக் கட்டினர், தங்கள் புகழ்பாடவும், தாங்கள் கடைபிடித்த மதக் கொள்கைகளை க்மெர் ஆட்சியில் விரிவாக்கவும். இக்காலகட்டத்தில் சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் க்மெர் அரசில் முக்கியத்துவம் பெற்றிருந்ததைக் காண்கின்றோம்.

கி.பி.11ம் நூற்றாண்டில் முதலாம் சூரியவர்மன் தமிழகத்தை ஆண்ட ராஜேந்திர சோழனின் உதவியை நாடினான் என்பதையும், அவனது நட்புடனும் துணையுடனும் பலம் பொருந்திய ஸ்ரீவிஜய பேரரசை அடக்கினான் என்பதனையும் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கடாரத்தைச் சோழர் வசமாக்கியதில் கம்போடிய க்மெர் அரசின் தூண்டுதலும் இருந்திருப்பதை வரலாற்றுக் குறிப்புக்களின் வழி அறிய முடிகின்றது. இது மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டியதொரு களமாகும்.

கி.பி.1130க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் மாமன்னன் இரண்டாம் சூரியவர்மனின் ஆட்சியில் தான் இன்று நாம் பிரமிப்புடன் காணும் அங்கோர் வாட் எழுப்பப்பட்டது. வாட் என்பது கோயில் எனப் பொருள்படும். அங்கோர் வாட் ஒரு கோயில் என்பதுடன் இரண்டாம் சூரியவர்மனின் சமாதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மைய தெய்வம் மகாவிஷ்ணு. அங்கோர் வாட்டின் பல பகுதிகளில், நின்ற நெடிய வடிவில், புத்தரைப் போல சாய்ந்த நிலையில், அமர்ந்த நிலையில் என வெவ்வேறு வடிவங்களில் விஷ்ணுவின் சிலைகளை இன்றும் காண்கிறோம்.

கிபி.12ம் நூற்றாண்டு வாக்கில் க்மெர் பேரரசு மேலும் தனது ஆட்சியின் எல்லையை விரிவாக்கி இன்றைய தாய்லாந்தின் வடக்குப் பகுதி மற்றும் லாவோஸின் வடக்குப் பகுதி வரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. க்மெர் பேரரசு சீனாவுடன் வர்த்தகத்தை விரிவாகியிருந்தது. ஆனால் கம்போடிய அரசு பணப்புழக்கத்தை பயன்படுத்தாமல் பண்டமாற்று முறையிலேயே வணிகத்தை நிகழ்த்தி வந்ததை அறிகின்றோம்.

இரண்டாம் சூரியவர்மனுக்குப் பின்னர் வந்த மன்னர்களில், குறிப்பாக வரலாற்றில் முக்கியமாக மேலும் குறிப்பிடப்படும் ஒரு மன்னனாகத் திகழ்ந்தவன் 7ம் ஜெயவர்மன். இவன் காலத்தில் க்மெர் பேரரசு முழுமையாக பௌத்தம் தழுவியது. பௌத்த தெய்வ வடிவங்கள் அங்கோர் வாட் கோயிலை அலங்கரிக்கத் தொடங்கிய காலம் இது. இவனே யசோதரபுரத்திற்குள் அதாவது அங்கோர் நகருக்குள் ”அங்கோர் தோம்” என்ற பிரம்மாண்டமானதொரு பௌத்த கோயிலைக் கட்டினான். இது மட்டுமன்றி ”பாயோன்” என அழைக்கப்படும் பௌத்தக் கோயிலையும் இவனே எடுப்பித்தான். இதுவே பல கோணங்களில் புத்தரின் முகங்களுடன் எழுந்த கோபுரங்களாகக் காட்சி தரும் கோயிலாகும்.

கிபி.13ம் நூற்றாண்டு வாக்கில் சைவ, வைணவ தாக்கங்கள் குறையத்தொடங்கின. க்மெர் அரசு முற்றும் முழுதுமாக பௌத்தத்தை ஏற்றது. தேரவாத பௌத்தம் இங்கு நிலைபெற்று வளர்ச்சி கண்டது.







தொடரும்..

சுபா

குறிப்புக்கள்:
The civilization of Angkor by Charles Higham
Cambodia and Laos, Eyewitness Travel

Wednesday, July 4, 2018

USA - Washington DC

4.7.1776..... இதே நாள் அமெரிக்கா சுதந்திரம் அடைந்த நாள். இன்று வாஷிங்டன் டிசி, அமெரிக்க தலைநகரில் எனக்கு மிகப் பிடித்த அருங்காட்சியக சுற்றுலா மேற்கொண்டுள்ளேன். -சுபா


Tuesday, July 3, 2018

USA - Washington DC

வாஷிங்டன் வந்து சேர்ந்து விட்டேன். 
விமான நிலையத்தில் எங்கள் பைகள் வெளிவர ஏறக்குறைய ஒன்றேகால் மணி நேரமாகிவிட்டது. 
நண்பர் சிவக்குமார், ராமசாமி அண்ணா, நண்பர் அருணகிரி ஆகியோர் வந்திருந்து வரவேற்றனர். 
வாஷிங்டனில் வந்து தோசை சாப்பிட்ட அனுபவம் இனிமை. சுவையான சாம்பார், தேங்காய் சட்னி என அசத்திவிட்டார் விஞ்ஞானி முனைவர் சாந்தினி.











USA - Washington DC

வாஷிங்டன் டிசி வந்திறங்கியபோது..
சில காட்சிகள். இங்குள்ள பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து (2ம் படம்)பார்க்க வித்தியாசமாக அழகாக உள்ளது.










USA - Washington DC

டல்லாஸிலிருந்து வாஷிங்டன் டிசி புறப்படுகிறேன். உள்நாட்டு விமான நிலையத்தில் கீழ்த்தளத்திலேயே சுலபமாக பேகேஜ் செக்-இன் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். காரிலிருந்து இறங்கி உடனே பயணப் பைகளை அனுப்பிவிட முடிகிறது.
அடுத்த சில நாட்கள் வாஷிங்டன் டிசியில்..








Monday, July 2, 2018

USA - Dallas - FETNA 2018

*பேரவையின் 31வது விழா இறுதி நிகழ்வு.
தமிழறிஞர்கள், அமைப்புகள் கருத்துக்களம்.
விழா நேற்று மதியம் நிறைவடைந்தது!










Sunday, July 1, 2018

USA - Dallas - FETNA 2018

கவிஞர் அறிவுமதியுடன்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது காலங்காலமாய் காதல் கவிதைகள் பேசுமே...
எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ... யாரோ... அறிவார்'
பிரிவொன்றைச் சந்தித்தேன் முதல் முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புவது காற்று!


USA - Dallas - FETNA 2018

நாட்டிய தேவதை நர்த்தகி நடராஜ் மற்றும் அவர் தோழியுடன் காலை தஞ்சாவூர் வகை பரதக்கலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தனது நாட்டியப்பயணத்தில் தான் சந்தித்து இன்று வரை கடந்து வந்த பாதைகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவருமே கலைக்கு தம் வாழ்வை ஒப்படைத்தவர்கள். வாழ்த்துவோம். வளர்க!



USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
அமெரிக்க பெரியார்-அம்பேத்கர் வட்டத்தை உருவாக்கி முனைப்புடன் செயல்படும் Kanimozhi MV , அவரது இணையர் மற்றும் அவர்களது இரு குழந்தைகளையும் நேற்று சந்தித்து உரையாடினேன். முதல் நாள் கனிமொழியின் எழுச்சிமுகு கவிதைகளும் கவிதை அரங்கிற்குப் பெருமை சேர்த்தன.
மூன்றாம் தலமுறை பெரியார் சிந்தனைகளை ஏந்தி வளரும் குடும்பம் என்று கேட்ட போது மனம் மகிழ்ந்தேன்.
இனிய வாழ்த்துக்கள்... இந்த அமைப்பின் எல்லா செயல்பாடுகளுக்கும்.


USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
தொல்லியல், வரலாற்று ஆவணங்கள் பாதுகாப்பு தொடர்பான தமிழ் மரபு அறக்கட்டளை கலந்துரையாடல் இன்று காலை 11-12:30 வரை நடைபெற்றது. வரலாற்றின் மீது பற்று கொண்ட ஆர்வலர்கள் வந்து கலந்து கொண்டனர்.