Monday, September 14, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 30

ஆரம்பம் என்று ஒன்றிருந்தால் அதற்கு முடிவு என்ற ஒன்று தவிர்க்க முடியாதது. அதே போலத்தான் பயணமும். சுற்றுப் பயணம் செய்து விட்டு அங்கேயே இருந்து விட முடியுமா? ஊர் திரும்பி சகஜமான பணிகளில் மீண்டும் மூழ்கத்தானே வேண்டும்?


எனது தென்னாப்பிரிக்கப் பயணமும் இறுதி நாளை எட்டியது. ஏப்ரல் 9ம் தேதி காலை 8 மணிக்கு டர்பனிலிருந்து ஜொஹான்னஸ்பெர்க் பயணம் செய்து அங்கு 2 மணி நேரம் காத்திருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் எடுத்து எத்தியோப்பிய தலை நகரான அடிஸ் அபாபா வந்தடைந்தேன். ஏறக்குறைய 3 மணி நேரங்கள் அங்கு காத்திருந்து அடுத்த விமானத்தில் ஃப்ராங்பர்ட் வந்தடைந்தது நான் பயணித்த விமானம்.



நான் கொண்டு வந்திருந்த "பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்" என்ற நூலை வாசித்துக் கொண்டே வந்ததில் பயணக் களைப்புத் தெரியவில்லை. ஜொஹான்னஸ்பெர்க் விமான நிலையத்தில் ரெஸ்டாரண்டில் களைப்பு தீர நல்ல காபியிம் பெரிய மஃப்பினும் வாங்கிச் சாப்பிட்டதும் உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாக இருந்தது.


​​

தென்னாப்பிரிக்கா மட்டுமன்றி முழுமையான ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இந்திய நாட்டிற்கும்  அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு  இருக்கின்றது. ஆயினும் இன்று உலக மக்களால் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் என்று குறிப்பிடப்படுவோர் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது கரும்புத்தோட்டங்களில் பணிபுரிய வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாரிசுகளே. 1860 முதல் ஆரம்பித்த இந்த நிகழ்வு படிப்படியாக தென்னிந்திய மக்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள் ஆப்பிரிக்கா புலம்பெயர காரணமாகியது. அதிலும் குறிப்பிடத்தக்க முக்கிய வரலாற்று விஷயமாக நாம் கருத வேண்டிய ஒன்றாக அமைவது,  ஒப்பந்தத் தொழிலாளர்களாக முதலில் டர்பன் வந்தடைந்தவர்கள் அப்போதைய மதராஸிலிருந்து வந்த 342 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தாம்.

இன்றைய நிலையில் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிலையான ஓரிடத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர்.  அரசுப் பணிகளிலும் நாடாளுமன்றத்திலும் இடம் வகிக்கும் நிலையையும் சிலர் பெற்றவர்களாக இருக்கின்றனர். இது தென்னப்பிரிக்கத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த மண்ணில் காலூன்றி விட்டமையைக் காட்டும் அடையாளங்களாக இருக்கின்றன.

ஆங்காங்கே இருக்கும் இந்து சமய ஆலயங்கள் இத்தமிழ் மக்கள் தங்கள் சமய வழிபாட்டு சடங்குகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் மறவாமல் வழி வழியாக தமது இளம் தலைமுறையினருக்கும் வழங்குவதில் காட்டும் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆயினும் மனதை உறுத்தும்  ஒரு விசயம் இல்லாமலில்லை.

தென்னாப்பிரிக்கத் தமிழர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே தமிழ் மொழியை ஓரளவேனும் சரளமாகப் பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனையோர் ஒரு சில வார்த்தை பேசுபவர்களாகவும் பெரும்பாலோர் தமிழ் மொழியின் தொடர்பு அற்ற  வகையிலும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கின்றது.

தமிழ் மொழியில் பயிற்சி பெற வேண்டும், பாண்டித்தியம் பெற வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் இவர்கள் மனதில் ஆழ வேறூன்றி இருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆயினும் எவ்வகையான முயற்சிகள் இவர்களுக்குப் பலனளிக்கும் என்பது தான் மிக முக்கிய விடயமாக இருக்கின்றது. அர்த்தம் புரியாமலேயே தமிழ்ப்பாடல்களைப் பிழையின்றி பாடக்க்கூடியவர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமா பாடல்கள் தமிழை இவர்கள் மத்தியில் வழக்கில் தக்க வைக்க  உதவுகின்றன என்பதனை மறுப்பதற்கில்லை.

எளிமையான முறையில் தமிழ் மொழி சொல்லித்தரக்கூடிய வழிமுறைகளை கையாளவேண்டியது அவசியமாகின்றது. இன்னிலையில், பேச்சுத்திறனை வளர்க்கும் வகையிலான தமிழ் மொழி பாடத்தினை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியது தான்  அதி முக்கிய, அதி அவசர தேவை என நான் கருதுகின்றேன்.

தென்னாப்பிரிக்காவில் தமிழ் மரபு அறக்கட்டளையின்  கிளை அமைக்கும் செயல்பாட்டினை வித்திட்டு வந்திருக்கின்றேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் இம்முயற்சி வளர்ந்து வேறூன்றி தென்னப்பிரிக்க தமிழ் மக்களின் வரலாற்றை பதிந்து வைக்கும் முயற்சிகள் செழித்து வளர வேண்டும் என்பதே என் கனவு. அது நடைபெறும்; நம்பிக்கை  உள்ளது!



முற்றும் !!

No comments:

Post a Comment