Saturday, February 4, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 3

என் வாழ்க்கைத் தேவைகளில் முக்கிய அங்கம் வகிக்கும் காப்பியைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழகத்துக்கு வந்து இறங்கியவுடன் நான் என மனதை சில விஷயங்களில் மாற்றி அமைத்துக் கொள்வேன். இது சூழலுக்கேற்ற வகையில் என்னை நான் தயார் செய்து கொள்வதற்காக. அதில் காப்பியும் ஒன்ற!

இங்கே கசப்பான காப்பி.. அதிலும் என் வீட்டில் சிறு காப்பி கொட்டை அறைக்கும் மெஷின் ஒன்று வைத்த்திருக்கிறோம். அதில் தேவைக்கேற்ப காபி போடுவதற்கு முன்னர் எத்தனை கப் தேவையோ அத்தனை கப் காப்பிக்கென்று கொட்டைகளை அறைத்துக் கொள்வோம். இங்கே குவாட்டமாலா, ஆப்பிரிக்கா, கொலம்பியா காப்பிக் கொட்டைகள் கொஞ்சம் பிரபலம். இப்படி அறைப்பதை பில்ட்டர் செய்தி அதில் கொஞ்சம் பால் சேர்த்து.. (~3 தேக்கரண்டி அளவு) சீனி சேர்க்காமல் குடிப்பது எனக்கு கடந்த 13 ஆண்டுகளாகப் பழகி விட்டது.

அதிலும் காலையில் இரண்டு பெரிய கப் காப்பியாவது கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக் கொண்டே வேலைகளைச் செய்வது என்பதும் பழகிப் போன விஷயம். அதில் தான் எனக்கு பெரும்பாலும் சிக்கல் வரும் தமிழகத்தில்.

இங்கே சிறிய கப்பில் ..பாலில் காப்பி கலந்து சீனியும் சேர்த்து கறைத்த "காபி ப்ளேவர் பால் கோவா பானம்" அருந்துவது போல பல இடங்களில் எனக்கு நேர்ந்து விடுகின்றது. இந்தத் தமிழ் நாடு ஹோட்டலிலும் அதே நிலை.

முதலில் வாங்கிக் கொண்ட சிறிய காப்பி என்னால் சுவைத்து அருந்தவே முடியவில்லை. இரண்டாவது முறை காப்பி ஆர்டர் செய்யும் போது சர்க்கரை இல்லாமல் சற்று கூடுதல் டிக்காக்‌ஷன் சேர்த்து காப்பி தாருங்கள் எனறு கேட்டுக் கொண்டேன். காப்பி வந்தது. முன்னிருந்த காப்பியிலிருந்து எந்த வித மாறுபாடும் இல்லாத அதே காபி ப்ளேவர் பால் கோவா பானம். வெறுத்துப் போய் விட்டது எனக்கு. சரி வேறு வழியில்லையே..!

மூன்றாவது முறை மாலையில் இரவு உணவுக்குப் பின்னர் காபி கேட்டேன். இப்போது சற்று அழுத்தி சீனி சேர்க்காத சற்று கூடுதல் டிக்காக்‌ஷன் சேர்த்து காப்பி தாருங்கள் என்று கூறி விட்டு .. அப்பாடா.. ஓரளவு குடிக்கக் கூடிய அளவிலான காப்பி வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். காப்பியும் வந்தது! அதே காபி ப்ளேவர் பால் கோவா பானம் . இப்போது காபி பரிமாறியவரை அழைத்துக் கேட்டேன். உங்களிடம் சொல்லித்தானே காப்பி ஆர்டர் செய்தேன். ஏன் சர்க்கரை போட்டு தருகின்றீர்கள் என்று. அவருக்கு இப்போது சற்று புரிந்து விட்டது. இல்லை மேடம். அது காபி மெஷின். அதில் டிக்காக்‌ஷன் அளவை மாற்ற முடியாது. பால் காப்பி எல்லம் சேர்ந்தே வரும் என்றார். சரி சீனியாவது சேர்க்காமல் தரலாம் இல்லையா என்றேன். சாரி மேடம். என்று சொல்லி விட்டு நழுவி விட்டார். ஆனால் மறு நாள் காலை நான் விடவில்லை. சீனி மட்டுமாவது சேர்க்காமல் காப்பி தாருங்கள் என்று சொல்லி ஒரு காப்பி வாங்கிக் கொண்டேன்.

நான் போகும் இடங்களிலெல்லாம்.. சீனி காப்பிக்கு வேண்டாம் என்றால் உடனே .. ஐய்யோ .. பாவம். சர்க்கரை ப்ராப்ளம் இருக்கா.. என்பது சகஜமாக நான் கேட்கும் பதில்கள். எனக்கு சர்க்கரை வியாதி இல்லை.. காப்பியை அதன் கசப்புத் தன்மையோடு குடித்துப் பழகி விட்டது. என்று சொன்னால் சிலருக்கு கொஞ்சம் ஆச்சரியம் ஏற்படுகின்றது. என்ன செய்வது. எல்லாம் பழக்க தோஷம் தானே..!





கிருஷ்ணகிரி தமிழ் நாடு ஹோட்டல்








கண்ணன் ஸ்வர்ணா குழந்தையுடன்







ஸ்வர்ணாவும் சுபாவும்..




ஸ்வர்ணாவின் மாமனார், தினமணி நிருபர் ரவி, ப்ரகாஷ், ஸ்வர்ணா, சுபா.



தொடரும்...!

சுபா

1 comment:

Murugeswari Rajavel said...

கசப்பான காபி உங்களுக்கு.களிப்பான அனுபவப் பகிர்வு எங்களுக்கு.அழகிய புகைப்படங்கள்.ஆனந்தப் பதிவு.

Post a Comment