கிருஷ்ணகிரிக்குச் செல்வது என்று மனதில் திட்டமிட ஆரம்பித்த போதே ஒரு வித கற்பனை செய்து வைத்திருந்தேன். கற்பாறைகள், பசுமை குறைந்த மலைகள், இப்படி சற்றேரக் குறைய பாலைவனம் போன்ற ஒரு ஊர்தான் என் கற்பனையில் இருந்தது.
என்ன ஆச்சரியம்? என் எதிர்பார்ப்பை ஏமாற்றி அசர வைத்து விட்டது கிருஷ்ணகிரியின் அழகு. பார்க்கும் இடமெல்லாம் வயல் வெளி.. அங்கே இளம் பச்சை நிறத்தில் சிறு நெல் செடிகள்... தென்னை மரங்கள்.. பனை மரங்கள்..
பாரதி ராஜா தமிழ் படத்தில் வருவது போன்று அங்கே இங்கே என்று ஒரு சில ஆண்களும் பெண்களும் வயலில் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அவர்களோடு எருதுகளோ.. காளையோ வயலில் நிற்பதையும் காண முடிந்த்து.
இந்த இயற்கை அழகைக் கூட்டும் வகையில் கொக்குகள் பல பறந்து வந்து வயலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்டன.
நான் மட்டுமல்ல.. என்னுடன் வந்த நா. கண்ணனுக்கும் கிருஷ்ணகிரி பிடித்துப் போய்விட்டது. இதுதான் அவருக்கும் முதல் முறை பயணம் என்பது அவரது ஆச்சரியத்திலேயே தெரிந்தது.
எதிர்பார்க்காமல் கிடைக்கும் சந்தோஷம் மிக சுவாரசியமானது இல்லையா. அதனை கிருஷ்ணகிரியில் முதல் நாளே அனுபவித்தேன்.
எம் மனம் கவர்ந்த தமிழ் நாட்டு ஊர்களின் பட்டியலில் கிருஷ்ணகிரி இப்போது இடம் பெற்று விட்டது. அடுத்த முறை செல்ல வாய்ப்பு அமைந்தால் பனங்காய்கள் காய்த்து தயாராக இருக்கும் நேரத்தில் சென்று நொங்கு சாப்பிட்டு மகிழ வேண்டும். இம்முறை இந்த வாய்ப்பு அமையவில்லை என்பது மட்டுமே ஒரு பெரும் குறையாக மனதில் இருக்கின்றது.
சுபா
1 comment:
படங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது.மகிழும் வாய்ப்பு நிச்சயம் அடுத்தமுறை கிட்டும்.
Post a Comment