Saturday, October 6, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 7

அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை விட்டு புறப்பட்டு பிள்ளையார்பட்டிக்குப் பயணிக்கும் போதே அன்றைய நாளின் திட்டங்களை நானும் காளைராசனும் பட்டியலிட்டுக் கொண்டோம். பிள்ளையார்பட்டிக்குச் சென்று பின்னர் அருகில் உள்ள குன்றக்குடி மடம் சென்று விட்டு பின்னர் ஆத்தங்குடி வந்து அங்குள்ள செட்டி நாட்டு கலைச்சின்னமாக விளங்கும் ஒரு இல்லத்தைப் பார்த்து விட்டு பின்னர் திருப்பத்தூர் அல்லது திருமயம் சென்று வரலாம் என்பது திட்டமானது. 

இதுவே ஒரு நாள் முழுமைக்கும் போதுமானதாக இருக்கும் என்று மனதில் தோன்றியது. இடையில் வாய்ப்பமைந்தால் செட்டி நாட்டு சேலைக்கடைக்குச் சென்று எனக்கும் நண்பர்களுக்கும் சில சேலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. காளைராசனிடமும் டாக்டர்.வள்ளியிடமும் தெரிவித்திருந்தேன். இடையில் நேரம் அமைவதைப் பொறுத்து சேலைக் கடைக்கும் சென்று வரலாம் என்று திட்டமானது.


Inline image 2
பிள்ளையார்பட்டிக் கோயில்

பிள்ளையார்பட்டிக் கோவிலைப் பற்றி மலேசியாவில் இருந்த காலங்களிலேயே நான் கேள்விப்பட்டதுண்டு. மனதில் இக்கோயிலைப் பற்றி இவ்வளவு ப்ரமாண்டமாக இருக்கும் என்று நான் யோசித்துப் பார்த்ததில்லை. கோயிலைப் பார்த்து பின்னர் வழிபாடுகளை முடித்து விட்டு பின்னர் அருகில் இருந்த பிள்ளையார்பட்டி விடுதிக்குச் சென்று அங்கு காலை உணவு அருந்தி மகிழ்ந்து அங்குள்ளோரிடம் பேசிக் கொண்டிருந்தோம். இவற்றை நான் இவ்வருட ஆரம்பத்திலேயே மண்ணின் குரலில் பதிவுகளாக வெளியிட்டிருந்தேன். இதுவரை பார்த்திராதவர்கள் அவற்றைப் பார்த்தும் கேட்டும் மகிழலாம்.

1. https://groups.google.com/forum/?fromgroups=#!topic/mintamil/Vspj54APc4w - மண்ணின் குரல்: ஜனவரி 2012 - பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில்.

2.பிள்ளையார்பட்டி விடுதி - இங்கே எங்கள் காலை உணவை அருந்தினோம். பதிவைக் காண இங்கே செல்க.

Inline image 1

விடுதியின் வாசலில்: டாக்டர் நா.கண்ணன், டாக்டர் வள்ளி, சுபா

பிள்ளையார்பட்டிக்குச் செல்லும் வழியிலேயே டாக்டர்.வள்ளியை நகரத்தார்கள் பற்றியும் அவர்கள் வரலாறு பற்றியும், அவர்கள் கடல் கடந்து சென்று மலேசியா சிங்கை பர்மா என பல நாடுகளில் கால்பதித்து அங்கே நிறைந்த மதிப்புடனும் செல்வ வளத்துடனும் வாழ்ந்து வரும் செய்திகள் பற்றியும் கேள்விகள் கேட்டு அவரது பதில்களை ஒலிப்பதிவாகாப் பதிந்து கொண்டேன். வாகனத்தில் போகும் போது இறைச்சல் இருந்தாலும் பேசுவதற்கு மேலும் நேரம் கிடைக்குமோ என்ற சந்தேகம் வேறு எனக்கு மனதில் இருந்ததால் இப்படி பயணத்திலேயே பதிவு செய்வது என்று முடிவெடுத்துக் கொண்டேன்.  இடையிடையே வரும் தொலைபேசி அழைப்புக்களும், சாலையின் சத்தங்களும் இந்த முயற்சிக்கு தொல்லையாகத்தான் இருந்தன ஆனாலும் ஒரு வகையில் சில விஷயங்களைப் பதிவு செய்தோமே என்ற மன திருப்தி இருந்தது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலய தரிசனம் நிறைந்த மன நிறைவை எனக்கு அளித்தது. அக்கோயிலில் அமைந்துள்ள கற்பக விநாயகரின் புடைப்புச் சிற்பம் மனதை கொள்ளைக் கொள்ளும் ஒரு சிறந்த வடிவம். தெய்வ தரிசனம் முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் குன்றக்குடி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தோம்.

சில படங்கள் உங்களுக்காக..!

Inline image 3
கோயிலின் முன் புறத்தில் அமைந்துள்ள கடைகளில் கற்பக விநாயகர் படங்களும் சிலைகளும்


Inline image 4
பூக்கள் மாலைகளாகத் தயாராகின்றன


Inline image 5
காளைராசன் 

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment