Sunday, September 30, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 6


காரைக்குடியில் நான் 3 நாட்கள் இருப்பதாக திட்டமிட்டிருந்தேன். முதல் நாள் பிள்ளையார்பட்டி கோயிலுக்குச் சென்று அதன் பின்னர் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் வரலாறு பற்றி டாக்டர் வள்ளியுடன் பேசி அதனை ஒலிப்பதிவு ஆக்குதல்,  அதன் பிறகு குன்றக்குடி மடம் சென்று குன்றக்குடி அடிகளாரின் பேட்டியை தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீட்டிற்காகப் பதிவு செய்தல் என்பன அன்றைய திட்டங்களில் அடங்கியிருந்தன.

மறுநாள் தமிழ் மரபு அறக்கட்டளையும் அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி இருந்தது. மூன்றாம் நாள் அருகாமையில் உள்ள சில சிற்றூர்களில் இருக்கின்ற குடவரைக் கோயில்களைச் சென்று காண்பது என்று காரைக்குடி வருவதற்கு முன்னரே நானும் காளைராசனும் இந்த மூன்று நாள் பயணத்திற்கு சில விஷயங்களைத் திட்டமிட்டிருந்தோம்.

பல்கலைக்கழக விருந்தினர் தங்கும் விடுதியில் எங்களுக்குக் காலையிலே காபிக்கு ஏற்பாடாகியிருந்தது. அந்த விருந்தினர் மாளிகையைப் பார்த்துக் கொள்ளும் ஊழியர் மிக நல்ல மனம் படைத்தவர். காலையில் கதவைத் தட்டி காபி கொடுத்து விட்டு குளிக்க சுடுநீர் சரியாக அமைந்ததா.. என எல்லாம் சௌகரியமாக எனக்கு அமைந்ததா என கேட்டு சரி செய்து கொண்டார். நான் இருந்த மூன்று நாட்களுமே என்னைப் பார்க்கும் போதெல்லாம் இவற்றை விசாரித்து எந்த அசௌகரியமும் ஏற்படாமல் இருக்கும் வகையில்  பார்த்துக் கொண்டார்.

விருந்தினர் மாளிகையின் வாசலில் அமைந்துள்ள வேப்பமரமும் அந்த இளம் காலை வெயிலும் சற்றே வெயிலின் சூடு கலந்த அந்த காற்றையும் அனுபவிப்பதில் ஆர்வம் இருந்ததால் காபி சாப்பிட்டு நான் தயாரானவுடன் விரைந்து கீழே வந்து விட்டேன். சற்று நேரத்தில் பாலு தயாராகி வர அவரைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காளைராசனும் டாக்டர் வள்ளியும் வந்து சேர்ந்தனர். டாக்டர் வள்ளியும் நானும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். முகம் நிறைந்த புன்னகை கொண்டவர். தொல்லியல் அகழ்வாய்வில் மிகுந்த ஆர்வமும் களப்பணிகள் பலவும் மேற்கொண்ட அனுபவம் வாய்ந்த தமிழ் பேராசிரியர் இவர். அந்த மூன்று நாட்களும் டாக்டர் வள்ளியுடன் பல மணி நேரங்கள் பேசியிருப்பேன். எங்கள் இருவருக்குமே அவை மிக மகிழ்ச்சியான தருணங்கள்.



பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணனும் தயாராகி வர அனைவரும் டாக்டர் வள்ளியின் வாகனத்திலேயே பிள்ளையார் பட்டிக்குப் புறப்பட்டோம்.

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment