Saturday, September 15, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 2


காரைக்குடி செல்வதாக ஏற்பாடாகியிருந்த நாள் காலை திருச்செங்கோடு சென்று முருகன் ஆலயம் தரிசித்து விட்டு பவளா வீட்டில் வயிறு நிறைய நிறைய வெஜிடபள் பிரியாணி சாப்பிட்டு விட்டு மீண்டும் ஆரூரனின் காரில் புறப்பட்டு கொடுமுடி வந்து அங்கிருந்து எங்களைக் காரைக்குடிக்கு அனுப்பி வைப்பதாக திட்டமாகியிருந்தது. கொடுமுடி வந்து சேர்ந்து அங்கே சுவாமி தரிசனம் முடித்து விட்டு புறப்படும் சமயம் சற்றே தாமதமாகிவிட்டதால் கரூர் சென்று அங்கிருந்து எங்களைத் திருச்சிக்கு பஸ்ஸில் ஏற்றிவிடுவதாக ஆரூரன் திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே முனைவர்.காளைராசன் திருச்சியில் இருக்கும் அவரது மாணவர் ஒருவருக்கு சொல்லியிருந்தமையால் அவர் திருச்சி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து என்னையும் கண்ணனையும் காரைக்குடிக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்ல வருவதாக இருந்தது. மறுநாள் காலை காரைக்குடியில் நிகழ்ச்சிகள் காலை 6 மணியிலிருந்து என்று ஏற்கனவே  முனைவர்.காளைராசன்  வேறு குறிப்பிட்டிருந்தார். ஆக  மனதில் எப்படியும் பஸ்ஸை விடாமல் சரியான நேரத்தில் எடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

கரூரை அடைந்து பஸ் நிலையம் சென்று காரைக்குடி செல்லும் பஸ் எப்போது புறப்படும் என்று ஆரூரனும் கண்ணனும் தேடிக் கொண்டு சென்றனர். ஒரு பஸ் அப்போதுதான் கிளம்பியிருப்பதாகவும் அந்த பஸ்ஸை 10 நிமிஷத்தில் காரில் விரட்டிக் கொண்டு போனால் நிச்சயமாகப் பிடித்து விடலாம் என்று பஸ் நிலையத்தில் யாரோ சொல்ல அதை நம்பிக் கொண்டு ஆரூரனும் கண்ணனும் காருக்கு ஓடி வந்தனர்.

அந்த நேரத்தில் பவளாவிற்கு எங்களுக்கு கையோடு உணவு கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற கொள்ளை ஆசை. எனக்கோ மதியம் சாப்பிட்டதே வயிறு முழுக்க நிறந்திருந்தது. சொல்லக்கூடாது. பவளாவின் வீட்டு வெஜிடபள் பிரியாணி அபாரமான சுவை. சமையல் மன்னி என்று பட்டம் கொடுத்து விடலாம் பவளாவிற்கு.

கொங்கு நாட்டு பெண்களே சமையல் கலையில் தேர்ந்தவர்களாகத்தான் நிச்சயம் இருக்க வேண்டும்.

கரூர் பஸ் நிலையத்திலிருந்து ஆரூரனின் வாகனம் திருச்சி செல்லும் பஸ்ஸைத் தேடிக் கொண்டு வேகமாக பயணித்தது. நாங்களும் பஸ் கண்ணில் தென்படுமா என முன்னால் செல்லும் ஏதாவது ஒரு பஸ்ஸை நோக்கி எங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தோம். சில இடங்களில் ஆரூரனின் வாகனம் முன்னே செல்லும் வாகனங்களை எல்லாம் முந்திக் கொண்டு சென்று கொண்டேயிருந்தது. 15 நிமிடங்கள் பயணித்தும் அந்தத் திருச்சி சென்று கொண்டிருந்த பஸ்ஸைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.


ஆரூரன்


இப்படியே தேடிக்கொண்டே போனால் திருச்சிக்கே போய் சேர்ந்துவிடுவோம் என்பது வாகனத்தில் இருந்த எங்கள் நால்வருக்குமே தெரிந்தது. சரி. மீண்டும் கரூர் பஸ் நிலையத்துக்கே திரும்பி அங்கிருந்து திருச்சி செல்லும் அடுத்த பஸ்ஸை பிடித்துச் செல்வோம் என்று சொல்லிக் கொண்டு திரும்பினோம். வந்து சேர்ந்த நேரம் சரியாக ஒரு பஸ்ஸும் கிளம்பிக் கொண்டிருக்கவே அதில் அவசர அவசரமாக எங்கள் பொருட்களை ஏற்றி வைத்துக் கொண்டு பவளாவிடமும் ஆரூரனிடமும் விடை பெற மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறினோம்.

மிகச் சாதாரண பஸ் அது. அதில் பலர் அமர்ந்திருந்தனர். கண்ணன் ஆக முன் வரிசையில் ஒரு இடம் இருக்க அங்கே சென்று விட்டார். அவரிடம் மிகச் சிறிய ஒரு பெட்டி மாத்திரம் இருந்தது. என்னிடம் எனது பெரிய பயண ட்ரோலியோடு கணினி கேமரா மற்ற ஏனைய பொருட்கள் வைத்திருந்த பேக் பேக் ஒன்றும் கையில். இவை இரண்டையும் வைத்துக் கொண்டு கடைசி இருக்கையிலேயே இருந்து விட்டேன். என் அருகில் ஒரு இளைஞர், ஒரு பெண்மணியும் ஒரு நபரும், மேலும் ஒரு பெண்மனி அவர் கணவர் ஆகிய ஐவர் அமர்ந்திருந்தனர். திருச்சி சென்று செல்லும் வரையில் நல்லதொரு நாடகம் பார்த்த அனுபவத்தை இவர்களுடன் நான்  சேர்ந்திருந்த  அந்த சில மணி நேரங்களில் அனுபவித்தேன். அந்தக் கதையை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment