Saturday, September 22, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 4


அவ்வப்போது சத்தமாகப் பேசுவதும் அதனை பஸ் கண்டெக்டர் வந்து கண்டிப்பதும் என்ற வகையில் போய் கொண்டிருந்தது.  நாங்கள் பின் இருக்கையில் மூன்று பேர் மட்டுமே. குடிகாரரின் மனைவி என்னிடம் பேச ஆரம்பித்தார். ஒரு உறவினர் வீட்டுச் சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு வருவதாகவும் அவரோடு  இவர்களது பெண் குழந்தைகள் இருவருமாக, ஆக நான்கு பேரும் இப்போது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உறவினர் இல்லத்தில் நண்பர்கள் உறவினர்கள் கூடிவிட்டதால் அளவுக்கு மீறி குடித்து விட்டாராம். அதனால் அவரை பஸ்ஸிற்குள் கொண்டு வந்து ஏற்றி உட்கார வைத்ததே பெரிய பாடாகி விட்டது என்று விபரம் தெரிவித்தார். அவரது 2 பெண் குழந்தைகளும் சில இருக்கைகளுக்கு முன்னால் அமர்ந்திருப்பதாகவும் இந்த 3 பெண்களும் சேர்ந்து தான் இந்த மனிதரை பஸ்ஸில் ஏற்றியதாகவும் சொன்னார். பஸ்ஸிலிருந்து இந்த மனிதர் எழுந்து ஓடிவிடக்கூடாதே என்பதற்காக அவரை இருக்கையின் மூலைக்குத் தள்ளிவிட்டு இந்தப் பெண்மணி உட்கார்ந்து கொண்டார் என்பதை அவர் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிந்தது. இந்த மனிதரால் மனைவிக்கு மட்டுமல்ல மகள்களுக்கும் அவமானம்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த போது அந்த மனிதரை அவர் மனைவி எழுப்பிப் பார்த்தார். அவர் நகர்வதாகத் தெரியவில்லை. கண்டக்டர் வந்து விட்டார். அவர் அவருக்கே உரிய சத்தமான தொணியில் அவரை விரட்ட மனிதர் ஒரு வகையாக தனக்குத்தான் இந்த  அழைப்பு என்பதைப் புரிந்து கொண்டு எழுந்தார். எழும்போது அவர் கட்டியிருந்த வேஷ்டி கழன்று விழப் போக அவர் மனைவி உடனே அதனை சிரமப்பட்டு சரி செய்து வைத்தார். என் அருகில் இருந்த இளைஞர் உடனே எழுந்து அவரை திட்டிக்கொண்டே  உடையை சரி செய்து படிகளில் கைத்தாங்கலாக அக்குடிகாரரின் மனைவிக்கு உதவியாக அம்மனிதரை கீழே இறக்கி விட்டார். இரண்டு பெண்களும் முன் பகுதியிலிருந்தவர்கள் இவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது தான் பார்த்தேன் 14 அல்லது 15 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தைகள். தலையைக் குனிந்து கொண்டே அந்தப் பெண்கள் கீழே இறங்கிய தங்கள் தந்தையை கைகளைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றனர். அந்த அம்மாள் ஏதோ பேசிக் கொண்டே செல்வது பஸ் புறப்படும் வரை கேட்டது.

இப்போது நானும் அந்த இளைஞரும் மட்டுமே அந்தக் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தோம். அவர் இந்த மனிதரைப் பற்றி சொல்லி என்னுடன் பேச ஆரம்பித்தார். அப்படியே எங்கள் பேச்சு குடிகாரர் கதையிலிருந்து மாறி எங்களைப் பற்றியதாக அமைந்தது. நான் த.ம.அ பற்றியும் மின் தமிழ் பற்றியும் எனது தமிழக வருகைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொன்னேன். அந்த இளைஞர் ஆர்வத்துடன் வலைப்பக்க முகவரிகளைக் குறித்துக் கொண்டார். தான் ஒரு அச்சகம் வைத்திருப்பதாகவும் அதன் தொடர்பாக திருச்சி சொல்வதாகவும் தெரிவித்து விட்டு, அச்சகத் தொழில் பற்றி சில விபரங்களையும் சொல்லிக் கொண்டே வந்தார். அவரும் திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. பஸ்ஸோ குலுங்கி குலுங்கி ஆடிக் கொண்டே போய்கொண்டிருந்தது. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. பஸ்ஸிலிருந்து கேட்பதற்கு பலத்த சத்தமாக அது இருந்தது. ஆனாலும் பயணம் அலுப்புத்தருவதாக இல்லை.

திருச்சி வரும் வரை சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த இளைஞர் எனது தமிழ் கொங்கு நாட்டுத் தமிழ் போல இருப்பதாகச் சொல்லியது எனக்கு ஆச்சரியம் தந்தது. எல்லாம் ஆரூரனின் இண்டென்ஸிவ் ட்ரெய்னிங் பண்ணிய வேலைதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.  “ங்க” , என்று போட்டு வார்த்தைகளை முடிக்கும் பழக்கம் கொஞ்சம் தொற்றிக் கொண்டு விட்டது எனக்கு. ஆரூரன் பேசப் பேச கேட்டு கொஞ்சம் பேசியும் பயிற்சி செய்திருந்தேன்.  கொங்கு நாட்டுத் தமிழ் இனிமையானது. கேட்டுக் கொண்டேயிருக்கலாம். கொங்குத்தமிழை ஒலிப்பதிவு செய்து பதிய வேண்டும் என்று நினைத்து சென்ற என் முயற்சி இந்த ஈரோடு பயணத்தில் பலனளிக்கவில்லை. ஆனாலும் அடுத்த முறை நிச்சயம் சில முயற்சிகளைச் செய்வோம் என்று பவளாவிடம்  சொல்லியிருக்கின்றேன். அடுத்த பயணத்தில் இது சாத்தியமாகலாம். ஆரூரன், கதிர் போன்றவர்கள் இந்தத் திட்டத்திற்கு உதவினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் என நினைக்கின்றேன்.

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment