Wednesday, February 6, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 8

கோட்டைக்குச் செல்வோமா?

29.12.2012

முதல் இரண்டு நாட்களும் க்ரோஸ் கண்ட்ரீ ஸ்கீயிங் சென்றிந்தமையால் உடலில் அசதி நன்கு தெரிந்தது. அதனால் இடையில் ஒரிரு நாள் ஓய்வெடுக்கலாம் என்று முடிவு செய்து அருகாமையில் பார்க்க என்ன இருக்கின்றது என்று தேடினோம். ரோய்ட்ட நகரின் Ehrenburg பகுதியில் பழமையான அரச கோட்டைகள் இருக்கின்றன. மலைமேல் இருக்கும் இந்தக் கோட்டைகளைச் சென்று இந்த நாளில் அவற்றை பார்த்து வரலாமே என முடிவெடுத்துக் கொண்டோம்.



அதற்கு முன்னர் எங்கள் தங்கும் விடிதியினர் எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த குதிரை வண்டி பிராயணம் காலையில் இருந்தது. 10 பேர்களை ஏற்றிக் கொண்டு இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டி ஜல் ஜல் என்று மணிச்சத்தம் ஒலிக்க எங்களை அந்தப் பனி அடர்ந்த பகுதியில் உலா அழைத்துச் சென்றது. அந்தக்காலத்தில் ராஜ குடும்பத்தினர் எப்படிச் செல்வார்களோ அப்படி ஒரு அமைப்பு அந்த வண்டிக்குச் செய்திருந்தனர். நல்ல திடகாத்திரமான இரண்டு கருப்பு நிறக் குதிரைகள். அவை இரண்டும் நடக்கும் போதே உடலின் சூடு தரும் ஆவி பறக்க குதிரைகள் செல்வதை அந்த ஒரு மணி நேரத்து குதிரை வண்டி பிரயாணத்தில் அனுபவித்து மகிழ்ந்தேன். பனி படர்ந்த மலையடிவாரத்திலேயே பயணித்து ரோய்ட்ட நகரின் எல்லை வரை சென்று பின்னர் மீண்டும் தங்கும் விடுதி இருக்கும் இடம் வரை வந்து சேர்ந்ததும் எங்களை இறக்கி விட்டார் குதிரை வண்டிக்காரர்.



தங்கும் விடுதி வந்து உடைகளை மாற்றிக் கொண்டு கோட்டையைப் பார்க்க புறப்பட்டோம். நாங்கள் இருந்த தங்கும் விடுதியிலிருந்து Ehrenburg மலையின் அடிவாரப்பகுதி ஏறக்குறைய 7 கிமீ தூரம் தான்.  வாகனத்தில் பயணித்து சில நிமிடங்களில் கோட்டை வாயில் பகுதியை அடைந்து விட்டோம்.

இந்தக் கோட்டையின் அடிப்பகுதியில் ஒரு அருங்காட்சியகம், உணவகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. கோட்டையின் அடிவாசல் பகுதியில் நுழைவாயில் மட்டுமே உள்ளது. கோட்டைக்கு சென்று பார்க்க விரும்புவோர் கால்நடையாக மலையில் நடந்து மட்டுமே செல்ல முடியும்.

நாங்கள் நினைத்து வந்ததோ வாசல் பகுதியிலேயே கோட்டை இருக்கும் அல்லது கோட்டை வரை வாகனத்திலேயே சென்று விடலாம் என்று. ஆனால் அதற்கு வழியில்லை என்பது தெரிந்து விட்டது. நடந்து தான் செல்ல வேண்டும். ஆக அடுத்து நாங்கள் எதிர்பார்க்காமலேயே, திட்டமிடாமலேயே ஒரு நடை பயணம் என்று முடிவானது.

இரண்டு வெவ்வேறு மலைகளின் மேல் இரண்டு கோட்டைகள் என்ற வகையில் அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட பேரரசர் கட்டியிருக்கின்றார். ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமானது. முதல் கோட்டையைச் சென்று பார்த்து விட்டு உடம்பில் மேலும் வலுவிருந்தால் அடுத்த கோட்ட்டைக்குச் செல்லலாம் என முடிவெடுத்துக் கொண்டோம்.

முதல் கோட்டையை விட அடுத்த கோட்டை மிக உயரத்தில் இருந்தது. அதனால் முதலில் எளிதான கோட்டையைச் சென்று பார்ப்போம் என நடக்க ஆரம்பித்தோம்.



மலைப்பாதை.. இலைகள் கொட்டிக் கிடந்தாலும் பாதை முழுக்க பணி நிறைந்து கிடந்தது.

சாதாரணமாக மலையின் செங்குத்தான நடைப்பாதையில் நடப்பதையும் விட இது சற்று சிரமமாகத்தான் அமைந்திருந்தது. 30 நிமிடத்தில் கோட்டையை அடைந்து விட முடியும் என்று கீழே தகவல் போடப்போட்டிருந்ததை நம்பி நடந்த நாங்கள் ஏறக்குறைய 45 நிமிடங்கள் கழித்தே கோட்டையை அடைந்தோம்.


அவ்வப்போது சறுக்கி சறுக்கி விடும் பாதையைக் கவனமாகப் பார்த்துக் கொண்டே சென்றாலும் இருபக்கமும் நிறைந்திருந்த ஊசி இலை மரங்களின் அழகு அப்பாதையில் செல்வோரை கணகளையும் கருத்தையும் கவர்ந்து இழுத்து விடும் தன்மை உடையதாக இருந்தது.  குளிரின் பனியைத்தாங்கிக் கொண்டு அதன் நீரைத் தேக்கி அந்த நீரை சிறு துளிகளாக்கி சொறிந்து கொண்டிருந்தன அந்த ஊசி இலை மரங்கள். மெல்லிதான சூரிய ஒளிக் கீற்றில், அப்போது  தூறிக் கொண்டிருந்த சாரலும் சொட்டு சொட்டாக விழும் இந்த பனித்துளிகளும் தரையை மட்டும் நனைக்க வில்லை. அக்காட்சி என் மனதையும் நனைக்க அதன் ரம்மியமான அழகில் நான் மனம் கரைந்து கொண்டிருந்தேன்.



தொடரும்..

சுபா

No comments:

Post a Comment