Tuesday, February 19, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 9


கோட்டைக்கு நடைப்பயணம்

நடந்து சற்று நேரத்தில் முதல் கோட்டையான ஏரன்பெர்க் கோட்டையை வந்தடைந்தோம். இந்தக் கோட்டையின் கிழ்ப்பகுதி 12ம் நூற்றாண்டு முதல் உப்பு விநியோகத்திற்கு மிக முக்கிய இடமாக அமைந்திருந்தமையும் தெரிந்து கொண்டேன்.  இந்த உப்புக்கிடங்கு அறை பல நூற்றாண்டுகள் ஆகியும் கூட இன்னமும் நல்ல  நிலையிலேயே இருப்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.



முதல் கோட்டையான இந்த ஏரன்பெர்க் கோட்டையின் காலம் 13ம் நூற்றாண்டு. இந்த ஏரன்பெர்க் கோட்டை ஏனைய எல்லா அரண்மனைகளைப் போன்றும் சில போர் கால நிகழ்ச்சிகளுக்கும் மாறுதல்களுக்கும் உட்பட்டிருக்கின்றது.  1546ம் ஆண்டில் ஒரு முறையும் 1703ம் ஆண்டில் ஒரு முறையும் நிகழ்ந்த போரில் இந்தக் கோட்டை ஓரளவுக்கு சேதம் அடைந்தது.  இந்த முதல் கோட்டைக்குச் செல்லும் வழிப் பாதையிலே ஆங்காங்கே சில குகைகளைக் காண முடிகின்றது. சில சிறியன. பொந்து போன்ற வடிவிலானவை. சில ஒரு மனிதர் நுழைந்து பதுங்கிக் கொள்ளும் அளவு, சில பெரிய குகைப்பாதைகள்..  என வித்தியாசங்களில்!





அதில் ஒரு குகைக்குப் பெயர் The Golden hole. இந்த சிறு பொந்திற்குள் பொக்கிஷம் குவிந்து கிடப்பதாகவும் நல்ல நேர்மையான மனம் உள்ளவர்கள் கையை உள்ளே விட்டு பார்த்தால் அந்தப் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்றும் இங்கே வழக்கில் ஒரு கதையும் இருக்கின்றது. தீய குணம் கொண்டவர்களாக இருந்தால் கையை உள்ளே விடும் போது பொக்கிஷம் கிடைக்காதாம். அதற்குப் பதிலாக பாம்பு வந்து கையைக் கடித்து விடுமாம். இங்கேயும் இப்படி வழக்கில் சில நம்பிக்கைகள்!



ஊருக்கு ஊர் இப்படி நாட்டுப்புற கதைகள்.. அவை ஆசிய நாடுகளாக இருந்தாலும் சரி ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி.. மனிதர்கள் இவ்வகையான கதைகளில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்பதைத் தான் இவ்வகை பயண அனுபவங்கள் வழி தெரிந்து கொள்கின்றோம்.



பொந்துக்குள் கையை விட்டு ஏன் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். இந்தக் கோட்டை சிதலமடைந்த நிலைதான் என்றாலும் பேரழகு. மலை உச்சியிலிருந்து கீழே பார்க்கும் போது ரோய்ட்ட நகர், அதனை ஒட்டி அமைந்த சிறு கிராமங்கள் அனைத்தும் பனி போர்த்திய பாற்கடலில் முளைத்த வீடுகள் போல காட்சியளித்துக் கொண்டிருந்தன.




முதல் கோட்டையைப் சென்றடைந்து அதனைச் சுற்றிப்பார்த்து அதன் பின்னர் அடுத்த கோட்டையையும் சென்று பார்க்க ஆவல் ஏற்பட்டதால் அடுத்த கோட்டையையும் பார்க்க நடந்தோம். மலை மேல் இருக்கும் இந்தக் கோட்டை அதிக தூரம் என்பதால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிச்சயமாகத் தேவைப்படும் என்பதை அறிந்திருந்தோம். ஆனாலும் இந்த மலையின் உயரத்தில் இருக்கும் கோட்டையயும் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால் கொட்டிக்கிடந்த பணியையும் பொருட்படுத்தாது நடந்தோம்.


இந்த இரண்டாம் கோட்டையின் பெயர் ஷ்லோஷ்கோப்ஃ கோட்டை (Schlosskopf). இந்தக் கோட்டைக்கு பிரத்தியேகமான ஒரு சிறப்பு உண்டு. அதாவது. ஆஸ்திரியாவின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு கோட்டையென்றால் அது இதுதான்.  இந்தக் கோட்டை 1704ம் ஆண்டில் தான் முதலில் கட்டப்பட்டது. 18ம் நூற்றாண்டின் ஆஸ்திரிய வரலாற்றில் பல அரசியல் நிகழ்வுகளைச் சந்தித்த கோட்டை இது எனக் குறிப்பிடப்படுகின்றது.



1740ம் ஆண்டில் அரசி மரியா தெரேசா தனது 23ம் வயதில்  தனது தந்தையான பேரரசர் ஆறாம் கார்லிடமிருந்து ஆட்சிப் பொருப்பை எடுத்துக் கொண்டு பேரரசியாக முடி சூடி இந்தக் கோட்டையில் வசித்து ஆட்சி செய்திருக்கின்றார். இவரது ஆட்சி 40 ஆண்டு காலங்கள் நீடித்திருக்கின்றது.  இந்தப் பேரரசியார் தனது ஆட்சி காலத்தில் தான் அப்போதைய ஆஸ்திர ராஜியத்தில் 6லிருந்து 8வயது தொடங்கும்  ஆண் பெண் குழந்தைகள் எல்லோருக்கும் கட்டாயக் கல்வி தேவை என சட்டமாக்கி அமுலுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். இவர் 29.நவம்பர் 1780 ஆண்டில் தமது 63ம் வயதில் தான் ஆட்சியில் இருக்கும் போதே இறந்தார்.

இரண்டு கோட்டைகளையும் பார்த்துப் பரவசம் அடைந்து மீண்டும் நடந்து கீழே வந்தடைவதற்கு மாலை ஐந்து மணியாகி விட்டது. அன்றைய நாளில் கோட்டையின் வாசலில் ஆரம்பித்து மீண்டும் கீழே வாகனம் இருக்கும் இடம் வரும் வரை ஏறக்குறை 17 கிமீ தூர நடை.

முதல் நாள் மேற்கொண்ட  க்ரோஸ் கண்ட்ரீ ஸ்கீயிங் பயணத்தில் உடல் அலுத்துப் போய் இன்று நடக்கவே முடியாதோ என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இது மகா ஆச்சரியம் தான். நமது உடலில் நமக்குத் தெரியாமலேயே எவ்வளவு அளப்பறிய சக்தி இருக்கின்றது என்று அச்சமயம் உணர்ந்தேன்.

சுபா


1 comment:

Unknown said...

வணக்கம்,

தற்போது கட்டபொம்மனை பற்றிய தேடலில் தங்களது
http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19
கட்டுரை படிக்க வாய்ப்பமைந்தது மிக்க மகிழ்ச்சி எம் மண்ணை பற்றி எனக்கே தெரியததை தங்கள் முலம் அறிந்து கொண்டேன்.

வாழ்த்துக்கள் தங்கள் எழுத்து மென்மேலும் தொடர....

இரா.நந்தகுமார்.

https://www.facebook.com/iamnandhaa

Post a Comment