Monday, November 17, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 6

கதை என்றால் தாம் நாம் எல்லோருக்கும் பிடிக்குமே.. :-)
தோமஸ் பெக்கட் கதையை மீண்டும் தொடர்கின்றேன். தொடரின் முந்தைய பகுதிகளை வாசிக்க விரும்புவோர் ​http://subastravel.blogspot.com வலைப்பூ சென்று வாசிக்கலாம்.

தனது நண்பரான தோமஸ் பெக்கட் ஆர்ச்பிஷப்பாக இருந்தால் தமக்கு மத சம்பந்தப்பட்ட காரியங்களில் ஏதுவாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் மன்னர் ஹென்றிக்கு மனதில் அடிப்படையில் இருந்தமையால்தான் அடிப்படை தகுதிகள் முழுதும் பெறாத தோமஸ் பெக்கட்டை இப்பதவிக்குப் பரிந்துரைத்து போப்பின் சம்மதத்தையும் பெற்று பதவியில் அமர்த்தினார். ஆனால் அதன் பின்னர் நடந்தவை வேறாக அமைந்துவிட்டன.

பல மாற்றங்களை வழிபாட்டு அமைப்பின் மேலாண்மையில் அறிமுகப்படுத்தி மன்னரை விட அதிகாரம் பெறும் வகையில் தனது நிலையை வளர்த்துக் கொண்டு உயர ஆரம்பித்தார் பெக்கட். நிதி விவகாரங்களும் தலைதூக்க ஆரம்பித்தது. மன்னரின் செலவுகளையும் கேள்வி கேட்க ஆரம்பித்தார் பெக்கட். அச்சமயத்தில் பெக்கட்டை அரச ஆணைக்கு உட்படுத்தி விசாரிக்க வேண்டும் என மன்னர் ஹென்றி உத்தரவு பிறப்பிக்க, அதனைப் பார்த்த தோமஸ் பெக்கட் அன்று இரவே காண்டபெரியை விட்டு இங்கிலாந்திலிருந்து பெயர்ந்து ஃப்ரான்சிற்குச் சென்று விட்டார்.

இந்த மனக்கசப்பு தொடரக்கூடாது என நினைத்த மன்னர் ஹென்றி அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய, 1170ம் ஆண்டில் நோர்மண்டியில் மன்னர் ஹென்றியும் தோமஸ் பெக்கட்டும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் விளைவாக நவம்பர் 30ம் தேதி தோமஸ் மீண்டும் காண்டபெரிக்குத் திரும்பி தனது பதவியை ஏற்றுக் கொண்டு ஆர்ச் பிஷப்பாகத் தொடர்ந்தார்.

தோமஸ் பெக்கட் காண்டபெரிக்குத் திரும்பி விட்டாலும் மன்னர் ஃப்ரான்ஸிலேயே அடுத்து சில நாட்கள்  தங்கிவிட்டார். தனது நெருக்கமான வீரர்கள் நால்வரிடம் பேசும் போது தோமஸ் பெக்கட் ஒழிந்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருப்பார் போலும்.... மன்னரின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொண்டு 4 வீரர்களும் தோமஸ் பெக்கட்டை கொலை செய்யும் நோக்கத்துடன் இங்கிலாந்தின் காண்டபெரி நகரை நோக்கி குதிரையில் அன்று இரவே விரைந்தனர்.


ஆர்ச் பிஷப் மாளிகை.. இன்று சற்றே மேம்படுத்தப்பட்ட நிலையில்


ஆர்ச்பிஷப் தோமஸ் பெக்கட்டை பார்த்து மன்னரின் வருத்தத்தைத் தெரிவிப்பதோடு அவரை கொல்லவும் இந்த நான்கு வீரர்களும் தயாராக இருந்தனர். அவர்கள் வந்து சேர்ந்த போது நேரம் இரவாகி விட்டது. நால்வரும் ஆர்ஷ்பிஷப்பின் மாளிகை எதிர்புரத்தில் அமைந்திருக்கும் தங்கும் விடுதியில் தங்க வசதி செய்து கொண்டு அன்று இரவே தோமஸ் பெக்கட்டை கொன்று விடுவது என முடிவு செய்து கொண்டனர்.


மன்னரின் வீரர்கள் தங்கியிருந்த தங்கும் விடுதி .. இன்றும்

நால்வரும் இரவு வேளையில் ஆர்ஷ் பிஷப் மாளிகைக்கு வந்து கதவை தட்டி தாம் தோமஸ்பெக்கட்டை அரச ஆணையின் உத்தரவின் படி காண வேண்டும் என காவல் இருப்போரிடம் கேட்க அவர்கள் நால்வரும் ஏதோ பாதகம் விளைவிக்க வந்திருக்கின்றனர் என அறிந்த ஏனைய பாதிரிமார்கள் இந்த நால்வரையும் உள்ளே விட அனுமதிக்கவில்லை. கதவை பெரிய கம்பு கொண்டு தட்டி தட்டி அதிகமாக ஓசை எழுப்ப இந்தச் சந்தம் கேட்டு வந்த தோமஸ் பெக்கட் இந்த நால்வரையும் உள்ளே அனுமதிக்கக் கேட்டுக் கொண்டார். உள்ளே வந்த நால்வரும் தாம் அரச ஆணைப்படி தோமஸ் பெக்கட்டிடம் தனியாகப் பேச வேண்டும் எனக் கேட்க ஏனையோர் செல்லும்படி உத்தரவிட்டு அவர்களைத் தனிமையில் சந்திக்கின்றார் தோமஸ் பெக்கட்.

தனியாக இருக்கும் தமது உயிருக்கு ஆபத்து என்பதை இவர் அறிந்து கொண்டார். ஆயினும் வேறு வழியில்லை. நால்வரது வாளும் தோமஸ் பெக்கட்டின் உடலை கத்தியால் வெட்ட அவர் தலையைத் துண்டித்து கொன்றனர். இது இந்த காத்திட்ரலின் ஒரு பகுதியிலேயே நடந்தது. இந்தப் பகுதி தற்சமயம் தோமஸ் பெக்கட் நினைவு சொல்லும் இடமாக இதே காத்திட்ரலில் இருக்கின்றது.



தோமஸ் பெக்கட் கொல்லப்பட்ட இடம்

கொல்லப்பட்ட தோமஸ்பெக்கட்டின் இறந்த உடலை எடுத்துச் செல்ல தயாராக அவரது ஆடைகளைக் களைய முயன்ற நான்கு வீரர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி ஸ்தம்பித்து நின்றனர். எதனால் அவரகள் அதிர்ச்சியடைந்து ஸ்தம்பித்து நின்றனர் என்பதை அடுத்த பகுதியில் சொல்கின்றேன்...

தொடரும்

சுபா

No comments:

Post a Comment