Wednesday, November 19, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 7

தோமஸ் பெக்கட் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிரிச்சியடைந்து ஏனைய பாதிரிமார்கள் அவர் கொல்லப்பட்ட இடத்திற்கு விரைந்தனர். இறந்த தோமஸ் பெக்கட்டின் உடலை தூக்கிச் செல்ல எத்தணித்த நான்கு வீரர்களும் அவரது உடலின் மேல் போர்த்தியிருந்த பெரிய அங்கியை நீக்கினர். 




தோமஸ் பெக்கட்டின் முதுகுப்புறத்தின் மேலாடையைத் தாண்டி உடலின் மேலே புழுக்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. அவரது முதுகுப் புறமெல்லாம் புண் ரணமாகி சீழ் பிடித்து, மிகக் கோரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அவர் உடலை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து அரசர் ஹென்றியைப் பார்த்து இவ்விஷயத்தைச் சொல்ல தங்கள் குதிரைகளில் இங்கிலாந்திலிருந்து ஃப்ரான்சிற்கு அன்று இரவே அந்நால்வரும் விரைந்தனர்.

கிறிஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர், ஏசு கிறிஸ்து ஏனைய மக்களின் துயரைத் தாமே தாங்கி துயரப்பட்ட நிலையை நினைத்து தனக்குத் தாமே தண்டனை வழங்கிக் கொள்ளுதல் என்ற வகையில் உடலை வருத்தும் சில தண்டனைகளைத் தமக்குத் தாமே வழங்கிக் கொள்வது என்பது உண்டு. இதனை ஆங்கிலத்தில்  mortification of the  flesh என்று கூறுவர். தனது உடலை சாட்டையால் அடித்து புண்ணாக்குதல், சாக்கைக் கட்டிக் கொண்டு அதனையே உடையாக அணிந்து கொண்டு வாழ்தல், அடித்து தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளுதல், அடித்து தனது உடலை புண்ணாக்கி கிருமிகளும் புழுக்களும் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட அனுமதித்தல் என்ற வகையில் இந்த தனக்குத்தானே தண்டனை வழங்குதல் என்ற ஒரு சடங்கு மிகச் சிறு பாண்மை குழுவினரால மேற்கொள்ளப்படுவது.


காண்டபரி கத்தீட்ரல்

டான் ப்ரவுனின் டா வின்சி கோட் நூலை வாசித்தோரும் திரைப்படத்தைப் பார்த்தோரும் நிச்சயம் அக்கதையில் வருகின்ற ஒரு நிகழ்வை ஞாபகம் வைத்திருப்பீர்கள். அதில் வில்லனாக வரும் ஒரு இளைஞர் இப்படி தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஒவ்வொரு நாளும் சாட்டையால் தனது முதுகுப்புறத்தைத் தாக்கி தனக்குத் தானே துன்பம் கொடுத்துக் கொண்டு ஒரு நோக்கத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வருவார். அதுபோலத்தான் இந்த விஷயத்திலும்.

ஆனால் தோமஸ் பெக்கட் வெளியே மிக சாதுரியமான ஒரு ஆர்ச் பிஷப் என்ற பெயரில் உலா வந்தாலும் தனது சுய வாழ்க்கையில்  ஏசு பிரான் மீது அதீத பக்தி கொண்டு தனது உடலை தானே தண்டித்து ,ஏசு உலக மக்களுக்காக ஏற்றுக் கொண்ட வலியை தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தனது உடலை துன்பபபடுத்தி தினம் தினம் இறைவழிபாட்டில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். இது வெளியில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரது இறப்புக்குப் பின்னர் இச்செய்தி காட்டுத்தீ போல மிக விரைவாகப் பரவியது.


காண்டபரி கத்தீட்ரல் உள்ளே

மன்னர் ஹென்றி இச்செய்தி அறிந்து உடன் காண்டெபெரி திரும்பினார்.  தோமஸ் பெக்கட்டின் பூத உடலைக் காண மக்கள் கூட்டம் பெருகியது. இறைவனின் துன்பத்தைத் தானும் ஏற்றுக் கொண்டவர்.. மக்களுக்காக வாழ்ந்தவர் என்ற வகையில் தோமஸ் பெக்க்ட்டின் புகழ் விரிவாகப் பேசப்பட ஆரம்பித்து.

தோமஸ் பெக்கட்டின் இறுதிச் சடங்குகள் மன்னரால் சிறப்பாக செய்து முடிக்கப்ட்டன. அது முதல் காண்டபரி கத்தீட்ரல் புனித யாத்திரிகர்கள் வந்து செல்லும் தலமாக உருமாற்றம் கொண்டது. ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்து மக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க காண்டபெரி நகரின் புகழ் ஐரோப்பா முழுதும் பரவியது.


மன்னர் 4ம் ஹென்றி, மனைவி ஜோஅன்னா

தோமஸ் பெக்கட்டின் பெயரால், தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் பெருக ஆரம்பித்தன. இந்த வகையில் தோமஸ் பெக்கட் காண்டபெரி நகருக்கு தனிச்சிறப்பினை வழங்கிய உத்தமராக மக்களால் இன்றும் கருதப்படுகின்றார்.

சரி.. தோமஸ் பெக்கட் கதையைப் பார்த்து விட்டோம். இந்த ஊரில் இருக்கும் ஏனைய விஷயங்களைப் பற்றி அடுத்து சஸ்பென்ஸ் ஏதும் இல்லாமல் சாவகாசமாகப் பார்ப்போமே..

தொடரும்


சுபா

No comments:

Post a Comment