Tuesday, January 21, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 1

19.1.2020

நீங்கள் உங்கள் நகரைத் துறக்கத் தயாரானால் ஆயிரக்கணக்கான நகரங்கள் உங்களை வரவேற்க முன்வரும். நீங்கள் உங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள். ஆயிரக்கணக்கான கிராமங்கள் உங்களை வரவேற்கத் தயாராக இருக்கும். ஒருசில நண்பர் சுற்றத்தாருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான நண்பர்களும் சுற்றத்தாரும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
-`ஊர்சுற்றிப் புராணம்`, ராகுல் சாங்கிருத்யாயன்

தமிழகத்தில் கடற்கரை பகுதி நகரம் என்பதோடு அதிகம் பேசப்படாத மீனவர்கள் வாழ்கின்ற சதுரங்கப்பட்டினம் நகரிலுள்ள டச்சுக் கோட்டை இன்று இந்திய தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் தொல் சின்னங்களுள் ஒன்றாக உள்ளது. டச்சுக்காரர்கள் தமிழகத்தில் தங்கள் வணிகத்தையும் சமய முயற்சிகளையும் நிலைநாட்ட முயற்சித்த கி.பி. 17, 18 ஆகிய காலகட்டங்களில் இப்பகுதி டச்சுக்காரர்கள் நிறைந்த ஒரு பகுதியாக அமைந்திருந்தது. இப்பகுதியைக் கண்டுவரும் நோக்கில் நேற்று ஒரு நாள் பயணம் சென்றிருந்தேன்.

எப்போதும்போல வாகனத்தில் செல்வதைவிட பொதுவாகனத்தில் பயணம் சென்று இப்பகுதியை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதனால் ரயில், ஷேர் ஆட்டோ, பேருந்து என பயணம் செய்து மக்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்ளும் வகையில் பயணத்தை அமைக்கலாம் என்று தோன்றியது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில் பயணம் முதலில். அதில் பெண்களுக்கான பகுதியில் ஏறிக்கொண்டேன். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்தப் பகுதியில் இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பலர் நின்றுகொண்டிருந்தார்கள்; சிலர் ரயில் பெட்டியில் தரையிலேயே அமர்ந்திருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் நின்றுகொண்டே பயணிக்கும் சூழல். ஆயினும் கையில் ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய ஊர் சுற்றிப் பயணம் நூல் இருந்ததால் வாசிக்கத் தொடங்கினேன். பயனம் சுவாரசியமாகத் தொடங்கியது.

அவ்வப்போது ரயில் நிற்கும் ஸ்டேஷனில் சிலர் ஏறுவதும் இறங்குவதும் இயல்பான நடவடிக்கை. கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. மல்லிகைப் பூவின் மணமும், கலவையான பல உணவு பொட்டலங்கள் திறந்து சாப்பிடுவதின் அடையாளமாக உணவின் மனமும் கலந்து ரயில் பெட்டியை நிறைத்தது. ரயில் பெட்டியில் பயணக்கும் போது சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் தமிழகத்தில் இயல்பாகவே பயணத்தில் பசிக்கு உணவு சாப்பிடுவது அத்தியாவசியம் என்பது ஒருபுறமிருக்க, உணவு சாப்பிடுவதும் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை இருக்கின்றது என்பதை நான் உணர்கிறேன்.

ரயிலில் இருந்த ஒரு பெண்ணின் கையிலும் நூல் ஏதும் இல்லை. இது ஐரோப்பாவில் நாம் ரயில் பயணம் செல்லும் போது காணும் காட்சியிலிருந்து மாறுபாடான ஒரு காட்சி. ஏனெனில் ரயில் பயணங்களில் ஐரோப்பிய மக்களில் பெரும்பாலானோர் கைகளில் ஏதாவது ஒரு நூலோ அல்லது பத்திரிக்கையோ இருப்பது மிக இயல்பு. ஆனால் இங்கோ ஒருவரது கைகளிலும் ஒரு பத்திரிக்கை கூட காணவில்லை. தமிழகப் பெண்களின் வாசிப்பு நிலை குறித்த சிந்தனை என் மனதில் கேள்விக்குறியாக நிற்கின்றது.

நான் பயணித்த ரயில் பகுதியில் பெரும்பாலான பெண்களின் கைகளில் செல் போன் இருந்தது. அதில் காமெடி நடிகர்களின் வீடியோக்கள், பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. சிலர் சாட் செய்து கொண்டும் குருஞ்செய்தி பரிமாறிக் கொண்டுமிருந்தனர்.

ரயிலில் பயணத்தின் ஊடே வணிகமும் நடைபெறுகிறது. ஒரு குறவர் பெண் ஒரு ஸ்டேஷனில் ஏறிக்கொண்டார். உரத்த குரலில் பாசி மணிகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் கைகளில் ஏந்திக் கொண்டு உரத்த குரலில் கூவிக் கொண்டு வந்தார். சில பெண்கள் அவரிடம் பொருட்கள் வாங்கிக் கொண்டார்கள். சற்று நேரத்தில் பதினெட்டு வயது மதிக்கத்தக்க கந்தலான ஒரு சுடிதார் உடை அணிந்த இளம்பெண் சமோசா கூடையைத் தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தார். `ஐந்து சமோசா பத்து ரூபாய்` என்று உரத்த குரலில் கூவி வியாபாரம் செய்து கொண்டு வந்தார். சில பெண்கள் அவரிடம் வாங்கினார்கள். ஒரு பெண்மணி அவரிடம் இன்னொரு ஸ்டேஷனில் 7 சமோசா பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது என்று பேரம் பேசினார். `ஐயாயிரம் ரூபாய்க்கு கவலைப்படாமல் பட்டுச்சேலை வாங்கும் பெண்கள் பத்து ரூபாய்க்கு 5 சமோசா வாங்குவதில் கூட பேரம் பேசுகிறார்களே`, என்ற எண்ணம் என் மனதில் தோன்றாமல் இல்லை.

இடையில் ஒரு மூன்றாம் பாலினப் பெண் ஒருவர் ஏறிக்கொண்டார். அவரும் உரத்த குரலில் ஏதோ கூற, ஒரு சில பெண்கள் கையில் இருந்த காசுகளை அவரது கையில் வைக்க, இவர் காசு கொடுத்த பெண்ணின் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் கொடுப்பது என்ற ஒரு சடங்கு நடந்தது. அவர் மிகுந்த உரிமையோடு காசு கேட்பது போல அந்தச் சூழல் எனக்குத் தோன்றியது. அடுத்து, கண்பார்வையற்ற ஒரு இளைஞர் ஒரு இளம் பெண்ணையும் அவள் கையில் குழந்தையுடன் என அழைத்துக் கொண்டு ஒரு ஸ்டேஷனில் ஏறிக்கொண்டார். அவர் தன் பார்வை குறைவைக் காரணம் சொல்லி தனக்குக் காசு கொடுக்க உரத்த குரலில் கேட்டுக்கொண்டார். சில பெண்கள் காசு கொடுத்தனர்.

இப்படி பலதரப்பட்ட நிகழ்வுகள் அந்த மகளிர் ரயில் பகுதிக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நூல் வாசிப்பிற்கு இடையே இந்த நிகழ்வுகளையும் நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

பல வண்ணக் கலவையாக கண்களை நிறைந்திருந்த ரயில் பெட்டியில் இருந்து செங்கல்பட்டு ஸ்டேஷனில் நான் இறங்கிக் கொண்டேன். என்னுடன் சதுரங்கப்பட்டினம் செல்ல வந்திருந்த தோழர் ரேஷல் என்னை செங்கல்பட்டில் சந்திக்க வந்திருந்தார்.





தொடரும்
-சுபா

No comments:

Post a Comment