Thursday, March 17, 2016

அயர்லாந்தின் அழகில்..! ட்ரினிட்டி கல்லூரி- 6


(2011 பயணத்தின் கட்டுரை)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Trinity College நிறுத்ததில் இறங்கிக் கொண்டோம். 1579ல் கட்டப்பட்டதாக குறிப்பிடப்படும் இந்த ட்ரினிட்டி கோலேஜ் மிகப் பழமை வாய்ந்ததும் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பல்கலைக்கழகமுமாகும்.


உள்ளே நுழைந்தபோது வாசலில் இங்கே 10யூரோவுக்கு ட்ரினிட்டி கோலேஜ் பற்றிய வழிகாட்டலும் விளக்கமும் வழங்கப்படும் என்ற ஒரு பலகையை வைத்துக் கொண்டு ஒரு மாணவி நின்று கொண்டிருந்தார். அவரிடம் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு சில நிமிடங்கள் காத்திருந்தேன். டிக்கெட் பெற்றுக் கொண்ட எங்கள் அனைவரையும் வரவேற்று தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த மாணவி எங்களுக்கு ட்ரினிடி கோலேஜ் பற்றி விளக்கம் கொடுக்கலானார். இப்படி பணியாற்றும் வாய்ப்பு இங்கு வரலாற்றுத் துறையில் இறுதி ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த மாணவி ஜெர்மானிய வரலாறு, பொது வரலாறு ஆகிய துறைகளில் படித்துக் கொண்டிருப்பவர்.


அயர்லாந்தின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்ற சிறப்புப் பெற்றது மட்டுமல்லாமல் அயர்லாந்தின் அரசியல் மாற்றங்களிலும் பங்கு வகித்த பெருமை இந்தப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. 16ம் நூற்றாண்டில், டப்ளினில் வாழ்ந்த மக்கள் எலிஸபெத் மகாராணியிடம் அனுமதி பெற்று தங்களுக்கு டப்ளின் நகரில் பல்கலைக்கழகத்தை 1592ம் ஆண்டில் உருவாக்கினர். 18ம் நூற்றாண்டு வாக்கில் இது ப்ரோட்டெஸ்டண்ட் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது. இக்கால கட்டத்தில் நாட்டில் சற்று அமைதியும் நிலவி வந்ததால் அயர்லாந்தின் அரசியல் பிரமுககர்கள் பலரது குழந்தைகள் தங்கள் கல்வியை இங்கு மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் முதல் பெண் மாணவி 1904ம் ஆண்டில் இணைக்கப்பட்டிருக்கின்றார். அடுத்த பத்து ஆண்டுகளில் பெண் மாணவியர்களின் எண்ணிக்கை 16% க்கு உயர்ந்திருக்கின்றது. முதலில் பெண்கள் இப்பல்கலைக்கழக்த்தில் கல்வி பயில பெறும் எதிர்ப்பு இருந்திருக்கின்றது. இதனை மாற்றி தற்சமயம் பல பெண்கள் இங்கே கல்வி பயில்கின்றார்கள் என்று சிரித்துக் கொண்டே எங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டு சென்ற மாணவி குறிப்பிட்டார்.
ட்ரினிடி காலேஜ் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகம். இங்கே மருத்துவம், வரலாறு, உளவியல், தியோலொஜி. சட்டம் ஆகியவை முக்கிய துறைகளாக விளங்குகின்றன. மாணவர்களின் தங்கும் விடுதி. உணவு விடுதி, கடைகள் ஆகியவையும் வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளன.
இப்போது இருக்கும் இந்தக் கல்லூரியின் நூலகம் 1712ம் ஆண்டு கட்டப்பட்டது. 200,000 பழம் நூல்கள் இந்தநூலகத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. நூல்களில் இத்தனை விதமா என வியக்க வைக்கும் அளவு மிகப்பெரிய நூல்களின் வகைகள், நடுத்தர அளவிலானவை சிறியவை, மிகச் சிறியன என பல்வேறு வகையில் நூல்கள் பகுதி பகுதியாகத் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலகத்தின் நடுவே மருத்துவ ஆய்வுகளை வெளிப்படுத்தும் ஆய்வுக் குறிப்புக்கள், கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் விளக்கங்களுடன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


நூலகத்தின் உள்ளே செல்லும் போது வலது புறம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்றால் அங்கே புக் ஆஃப் கெல்ஸ் வைக்கப்பட்டிருக்கும் பகுதியைப் பார்த்து, அதன் விளக்கங்களையும் வாசித்து பின்னர் நூலையும் பார்க்கலாம். அதே கட்டிடத்தின் வழியாகவே நூலகத்தின் Long Room (நீண்ட அறை) சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த பிரமிப்பூட்டும் அனுபவத்தைப் பெறலாம். இந்த 200,000 நூல்கள் உள்ள அறையின் உள்ளே செல்வதே பிரமிப்பாக இருந்த்து.


அந்த வேளை அந்த அறைக்குள் நுழையும் அனைவருக்குமே ஒரு வித வித்தியாசமான, ஏதோ ஒரு வகையில் நிறைவளிக்கும் ஒரு நிலை தோன்றும் என்றே எனக்கு அப்போது மனதில் தோன்றியதை எனது குறிப்பில் குறித்து வைத்திருக்கிறேன். அங்கிருந்தவர்களின் முகத்திலும் நான் அனுபவித்த அந்த பிரமிப்பு தெரிந்தது. ஒரு வேளை என் மனம் அப்படி நினைத்திருக்கலாம். ஆனாலும் அது ஒரு வித்தியாசமான ஒரு அனுபவம் என்பதில் மறுப்பில்லை.
213 அடி நீளமும் 42 அடி உயரமும் உள்ள இந்தக் கட்டிடத்தில் 200,000 நூல்கள் உள்ளன. ட்ரினிடி பல்கலைக்கழகத்தில் மொத்தம் மூன்று மில்லியன் நூல்கள் உள்ளன. அதில் இந்த நீளமான அறையில் மட்டுமே 200,000 நூல்கள் அடங்கியிருக்கின்றன.
இங்கே http://www.panoramicireland.com/arch/trinity.html சென்றால் இணையத்திலேயே 3டி பனோராமா காட்சியாக இந்த நீண்ட அறையை கண்டு ரசிக்கலாம். பார்க்க மறக்க வேண்டாம்.
தொடரும்....!

Wednesday, March 16, 2016

அயர்லாந்தின் அழகில்..! டப்ளினில் முதல் நாள் - 5


பயணத்தொடர்..(2011)

ப்ராங்க்பெர்ட் விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய 2 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் டப்ளினை வந்தடைந்தேன். ஏர் லிங்குஸ் அயர்லாந்தின் விமான நிறுவனம். நான் பயணித்த விமானத்தில் பணி நிமித்தம் பயணிப்பவர்களும் குடும்பத்தினரைக் காணச் செல்பவர்களும் என ஏறக்குறைய விமானம் நிரம்பி இருந்தது.

டப்ளினை வந்திறங்கியவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயண வழிகாட்டி நிச்சயமாகக் காத்திருப்பார் என்ற எண்ணம் மனதில் இருந்தது. பணம் மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்று உறுதியானவுடன் அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தேன். நான் பதிவு செய்திருந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயர் பலகையை கையில் ஏந்திக் கொண்டு ஜொஅன்னா நின்று கொண்டிருந்தார். எனக்கு முன்னரே பயணித்து வந்திருந்த எட்டு பேர் அவர்கள் பயணப் பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தனர். . எங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் பெயரைக் கேட்டு பதிவு அட்டையை சரிபார்த்துக் கொண்டு எங்களை அழைத்துக் கொண்டு பேருந்து இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் ஜொஅன்னா.

பேருந்தில் எங்களை ஏற்றி விட்டு வாகனமோட்டியிடம் நாங்கள் செல்ல வேண்டிய தங்கும் விடுதி இருக்கும் இடம் பற்றிய விளக்கம் சொல்லி விட்டு நாங்கள் இன்று நாள் முழுதும் எங்களுக்குப் பிடித்த வகையில் பொழுதை போக்கலாம் என்று சுதந்திரத்தையும் வழங்கி விட்டு விடைபெற்றுக் கொண்டார். முப்பது நிமிட நேர பயணத்தில் டப்ளின் நகரின் தொழிற்சாலை பகுதி நிறைந்த இடங்களில் பயணிப்பது ஒரு வித அலுப்பாக இருந்தது.

எங்களுக்கு 2 நாட்கள் டப்ளின் நகரில் தங்க வழக்கப்பட்டிருந்த தங்கும் விடுதி அமைந்திருந்தது ஒரு தொழிற்பேட்டை அமைந்த பகுதி. சற்று ஏமாற்றமாகிப் போனது எனக்கு. சுற்று முற்றும் கட்டிடங்களும் நிறுவனங்களும். சரி. அதிகம் வறுத்தப்பட வேண்டாம் என சமாதானம் செய்து கொண்டு தங்கும் விடுதிக்குள் சென்று பெயர் பதிவுகளைச் சரியாக செய்து அறைக்கான சாவியை எல்லோரும் பெற்றுக் கொண்டோம். என்னுடன் சேர்ந்து வந்திருந்த ஏனையோருக்கும் எனக்கும் தங்கும் விடுதியினர் வரவேற்கும் முகமாக ஐரீஷ் காப்பி வழங்கினர். இது வரை இதனை அருந்த வாய்ப்பமைந்ததில்லை. நானும் தேடிப்போய் வாங்கி அருந்தியதில்லை. சுவை கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு கலவையாக இருந்தது. சுவை பிடிக்காததால் அதனை வைத்து விட்டு அறைக்குச் சென்று தயார்படுத்திக் கொண்டு ஏற்கனவே கொண்டு வந்திருந்த அயர்லாந்து சுற்றுப்பயண வழிகாட்டி புத்தகத்தில் டப்ளின் சென்று என்னென்ன பார்த்து வரலாம் என்று தேடி போடிருந்த சிறு பட்டியலை சரிபார்த்துக் கொண்டேன்.

ஜொஅன்னா எங்களிடம் தந்திருந்த தகவலின் படி 79a பேருந்தில் ஏறி ட்ரினிடி காலோஜ் நிறுத்ததில் இறங்கிக் கொண்டால் எல்லா முக்கிய இடங்களையும் கட்டிடங்களையும் பார்த்து வரலாம். ஆக, உடனே தயாராகி தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்டு 79a பேருந்து எடுத்து டப்ளின் நகருக்குப் பயணித்தேன். என்னுடன் முதலில் விமான நிலையத்தில் சந்தித்த மற்றொரு ஜோடியும் இணைந்து கொண்டனர். இரண்டு அடுக்கு பஸ். மேலே ஏறி அமர்ந்து கொண்டதால் சாலைகளையும் வீடுகளையும் வீடுகளின் தோற்றத்தையும் பார்த்துக் கொண்டு செல்ல முடிந்தது. மேலும் பழைய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களை ஆங்காங்கே காண முடிந்தது. நகருக்கு சற்று அருகாமையில் செல்லும் வழியிலேயே கண்ணில் ஒபிலிஸ்க் ஒன்றும் தென்பட்டது


அதிபர் மாளிகை தோட்டத்தில் இருக்கும் ஒபிலிஸ்க்




டப்ளினில் எங்கள் தங்கும் விடுதி



டப்ளின் வரைபடம் - அருங்காட்சிகம், அரண்மனை ஆகிய பகுதிகளைச் சுட்டுகின்றது.










Tuesday, March 15, 2016

அயர்லாந்தின் அழகில்..! - செம்மறி ஆடுகள் - 4

முதல் நாள் மட்டுமல்ல.. முழுமையாக இந்தப் பயணத்தில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் எங்கள் பயணத்தின் போது எல்லா இடங்களிலும் கணக்கற்ற செம்மறி ஆடுகளைப் பார்த்து அதிசயித்த நான் எங்கள் பயண வழிகாட்டியான ஜொஅன்னாவிடம் இங்கு மக்கள் தொகையை விட செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே என்று சொன்ன போது அவர் அதை ஆமோதித்து தெற்கு பகுதி நாடான அயர்லாந்து குடியரசில் 5.0 மில்லியனுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உள்ளன எனத் தெரியப்படுத்தினார்.

மக்கள் தொகையை விட செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை இங்கு அதிகம் என்பது ஆச்சரியம் தரும் விஷயமல்லவா?

அயர்லாந்தின் தலைநகரம் டப்ளின். 2000ம் ஆண்டுகளின் வாக்கில் மிகத் துரிதமாக கணினி தொழில்நுட்பம் வளர்ச்சி கண்ட சமையத்தில் ஐரோப்பாவிலேயே மிக அதிகமாக கால் செண்டர்கள் உருவாகிய இடம் டப்ளின் தான். உலகின் பல முக்கிய வர்த்தக நிறுவனங்கள், குறிப்பாக கணினி தொழில்நுட்ப வர்த்தக நிறுவனங்கள் டப்ளின் நகரில் தங்கள் கால் செண்டர், கஸ்டமர் செர்வீஸ் செண்டர் ஆகியவற்றை இங்கு தொடங்கின. மிகப் பிரபலமாக 2000ஆம் ஆண்டு முதல் 2006 ம் ஆண்டு வரை இங்கே கால்செண்டர்களின் ஆதிக்கம் மிகவும் வலுவாக இருந்தது என்று சொல்லலாம். டப்ளின் நகரின் வளர்ச்சியிலேயே கடந்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றம் நடந்துள்ளது என்பதையும் எங்கள் சுற்றுலா வழிகாட்டியின் விளக்கங்கள் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.

அயர்லாந்தின் மக்கள் தொகையில் 87%க்கு மேற்பட்டோர் கத்தோலிக்க கிற்ஸ்துவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏறக்குறைய 3% ப்ராடஸ்டண்ட் கிறிஸ்துவர்களும் சிறிய எண்ணிக்கியிலான முஸ்லீம்களும் ஏனைய மத்த்தினரும் இங்கு உள்ளனர். இதில் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பின்பற்றும் கிறிஸ்துவம் பண்டைய கெல்ட்டிக் பண்பாட்டை உள்வாங்கிய ஒரு தனித்துவம் கொண்ட கத்தோலிக்க சமயம் என்பதை அங்கு நேரில் சென்ற இடங்களிலெல்லாம் அறிந்து கொள்ள முடிந்தது.

முதல் நாள் விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் உடனே ஒரு சந்தேகம் வந்தது எனக்கு. இங்கு எந்த வகை பணம் புழக்கத்தில் உள்ளது? உடனேயே பணம் மாற்றிக் கொள்ள வேண்டுமா ? என்று. விமான நிலையத்தில் பணம் மாற்றிக் கொள்ளும் இடத்தில் வந்து விசாரித்ததில் அயர்லாந்தில் யூரோ பணமே புழக்கத்தில் உள்ளது என்றும் வடக்கு அயர்லாந்து செல்ல வேண்டுமென்றால் மட்டுமே அதற்கு பணம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிந்து கொண்டேன். இந்தப் பயணம் முழுதுமே வடக்குப் பகுதி தவிர்த்த அயர்லாந்து நாட்டில் மட்டுமே என்பதால் பணம் மாற்ற வேண்டுமே என்ற அந்தக் கவலையை விட்டு சற்று சூழலை ரசிக்க ஆரம்பித்தேன்.

தொடரும்..!



























Tuesday, March 8, 2016

அயர்லாந்தின் அழகில்..! இன்றைய அயர்லாந்து - ஓர் அறிமுகம் - 3

அயர்லாந்து எனக் குறிப்பிடும் போது வடக்குப் பகுதியான வட அயர்லாந்து நீங்கிய பகுதியே அயர்லாந்து என்று அழைக்கப்படுவது. இத்தீவில் வட கிழக்குப் பகுதி யுனைட்டட் கிங்டம் (ஐக்கிய ராஜ்ஜியம்) ஆட்சிக்குட்படுத்தப்பட்ட பகுதி. இது நீங்கலாக உள்ள ஏனைய பகுதிகளே அயர்லாந்து என்பதாகும்.


அயர்லாந்து கொடியின் வர்ணம் மூன்று நேர் கோடுகளாக அமைந்தது. முதல் பகுதி பச்சை நிறத்திலும், நடுப்பகுதி வெள்ளை நிறத்திலும் கடைசிப்பகுதி ஆரஞ்சு நிறத்திலும் என அமைந்திருக்கும். அயர்லாந்து அரசின் விளக்கப்படி இந்தக் கொடியில் முதலில் உள்ள பச்சை நிறம் கேலிக் பாரம்பரியத்தை விளக்குவதாகவும், வெள்ளை நிறம் அமைதியை உணர்த்துவதாகவும், இதன் ஆரஞ்சு நிறம் வில்லியம் ஆஃப் ஓரஞ் (William of Orange) அரசரைப் பின் தொடர்பவர்களைக் குறிப்பதாகவும் உள்ளது.

வில்லியம் III & II (1650 - 1702) ஓரஞ் நாசவ் (House of Orange-Nassau) பாரம்பரியத்தின் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். 1689ம் ஆண்டு முதல் இவர் வில்லியம் III என்ற பெயருடன் இங்கிலாந்து அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளையும் ஆட்சி செய்தவர். ஸ்கோட்லாந்தின் அரசராக இவரது பெயர் வில்லியம் II என வழங்கபடுவதால் இவருக்கு வில்லியம் III & II என்ற இரண்டு பெயர் குறிப்புக்களுமே உள்ளன. வட அயர்லாந்திலும் ஸ்கோட்லண்ட் நாட்டிலும் இவர் பில்லி அரசர் (King Billy) என அழைக்கப்பட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 5.11.1688ல் வில்லியம் இங்கிலாந்தை முற்றுகையிட்டு ஜேம்ஸ் அரசர் II & VII இடம் இருந்து நாட்டைக் கைப்பற்றி இங்கிலாந்து, ஸ்கோட்லாந்து அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் ஆட்சி செய்தார். இவர் மனைவி மேரி II (Mary II) இவருடன் இணைந்து தான் இறக்கும் வரை ஆட்சி நடத்தினார். இவர்கள் இணைந்து நடத்திய ஆட்சி பொதுவாக வில்லியம் மேரி (William and Mary) ஆட்சி என குறிப்பிடப்படுகின்றது.




அயர்லாந்து ஒரு தீவு. ஐரோப்பாவிலேயே மூன்றாவது பெரிய தீவு என்பதும் உலகிலேயே இருபதாவது பெரிய தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் ரீதியாக இத்தீவு இரண்டு மாபெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப் பகுதி (Northern Ireland) யுனைட்டட் கிங்டம் ஒரு பகுதியாகவும் தெற்கும் ஏனைய பகுதியும் அயர்லாந்து குடியரசு (Republic of Ireland) எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 6.4 மில்லியன் ஆகும். இதில் ஏறக்குறைய 4.6 மில்லியன் மக்கள் தெற்குப் பகுதி அயர்லாந்தின் குடியரசிலும் மீதம் 1.8 மில்லியன் மக்கள் வடக்கு அயர்லாந்திலும் வசிக்கின்றனர்.

தொடரும்..


Saturday, March 5, 2016

அயர்லாந்தின் அழகில்... ! பயண ஏற்பாடு -2

ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் கோடை காலத்தின் உச்ச சமயம். எனது தோட்டத்துச் செடிகளைப் பற்றிய கவலையே அதிகமாக இருந்தது. அண்டை வீட்டு நண்பர் தோட்டத்துச் செடிகளுக்கு நீர் விடுவதற்கு சம்மதம் தெரிவித்தாலும் மனம் அவ்வளவாக எனக்கு திருப்தியில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி நிறைய நீரைக் கொட்டி வைத்து சில செடிகளை முன்னர் இழந்திருக்கிறேன். அல்லது வெயிலில் காய்ந்து செத்துப் போனால் என்ன செய்வது? சரி. உதவி செய்வதற்காவது யாராவது இருக்கின்றார்களே. அதிகம் மனச் சஞ்சலம் வேண்டாம் என நானே என்னை சமாதனப் படுத்திக் கொண்டு பயணத்தின் தயாரிப்பு வேலைகளில் எனது மனதை செலுத்தினேன்.

இது பத்து நாட்கள் Package Deal. அதாவது விமான டிக்கெட், தங்கும் இடம் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பார்த்து வரும் பேருந்து ஏற்பாடு, காலை மாலை உணவு என அனைத்தும் இந்த ஏற்பாட்டில் அடங்கும். அதிலும் இது ஜெர்மானிய சுற்றுலா குழுவினரால் நடத்தப்படுவதால் நிச்சயம் என்னுடன் குறைந்தது 15 ஜெர்மானியர்களாவது இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். புதிய நண்பர்களையும் அறிந்து கொள்ளலாம். புதிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்பதும் கூட கூடுதல் குதூகலமாக அமைந்தது.

அயர்லாந்து இங்கிலாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தீவு. இது ஒரு ஆங்கிலேய நாடு என யாரும் நினைத்தால் அது முற்றிலும் தவறு. 19ம் நூற்றாண்டில் ஆங்கில மொழி இந்நாட்டின் ஆதிக்கம் மிக்க முதல் மொழியாக முக்கியத்துவத்தை அடைந்தாலும் கூட இந்த நாட்டின் முக்கிய மொழி ஐரிஷ் மொழி தான். ஐரிஷ் மொழி இம்மக்களின் தாய் மொழி. அயர்லாந்தின் சாசனத்தின் படி ஆங்கிலமும் ஐரீஷ் மொழியும் அதிகாரப் பூர்வமான மொழிகள் என அமைக்கப்பட்டிருந்தாலும் ஐரீஷ் மொழியே நாட்டின் முதன் மொழி என்ற அந்தஸ்தையும் பெறுகின்றது.

பண்டைய காலத்தில் செல்ட்டிக் தாக்கத்தால் ஐரிஷ் மொழி அயர்லாந்தில் ஆதிக்கம் பெற்றது. இம்மொழி 10ம் நூற்றாண்டு வாக்கில் அயர்லாந்து, ஸ்கோட்லண்ட் (Scotland), ஐல் ஆஃப் மேன்(Isle of Man) ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய மொழி இது. தற்சமயம் இம்மொழி ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி என்பதோடு ரிப்பப்ளிக் ஆஃப் அயர்லான் (Republic of Ireland), வட அயர்லாந்து (Northern Ireland) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளது. இம்மொழியின் பெயர் கேலிக் (Gaelic) என்பதாகும்.

சாலைகளின் பெயர்கள், கட்டிடங்கள் அனைத்திலும் கேலிக் மொழியில் குறியீடுகள் அமைந்திருக்கின்றன. வழக்கத்தில் இன்று இம்மொழி குறைந்து வருகின்றது என்பது எனது நேரடியான அனுபவத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

என் பயணம் ப்ராங்பெர்ட் விமான நிலையத்திலிருந்து அயர்லாந்தின் தலைநகரமான டப்ளின் சென்று பின்னர் அங்கிருந்து பட்டியலிடப்பட்டிருந்த இடங்களுக்குச் செல்வது என அமைக்கப்பட்டிருந்தது.


அதாவது டப்ளினில் (Dublin) முதலில் இரண்டு நாட்கள் இருந்து பின்னர் மூன்றாம் நாள் கால்வே(Galway Region) சென்று பின்னர் கோன்னிமாரா (Connemara) பகுதிக்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கி பின்னர் அங்கிருந்து லிமெரிக் (Limerick) பகுதிக்கு வந்து அங்கு ஒரு நள் இருந்து பின்னர் கேரி (Kerry) பகுதிக்குச் சென்று ரிங் ஆஃப் கேரியில் (Ringof Kerry)இரண்டு நாட்கள் தங்கி அப்பகுதியின் எழிலை ரசித்து பின்னர் அங்கிருந்து காஷல் (Cashel) பகுதிக்குச் சென்று ஒரு நாள் தங்கி பின்னர் அங்கிருந்து விக்லோவ் (Wicklow) பகுதிக்குச் சென்று அன்றே டப்ளின் (Dublin) வந்து இறுதி நாள் டப்ளினில் இருந்து மாலை நேரத்து சிறப்புக்களை ரசித்து பின்னர் 10ம் நாள் இல்லம் திரும்புவது என அமைக்கப்பட்டிருந்தது.


இந்தப் பயணத்தில் எங்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக அமைந்தவர் ஜொஅன்னா (Joanna). இவர் ஜெர்மானியப் பெண். அயர்லாந்துக் காரரை மணந்து கொண்டு கடந்த ஐந்தாண்டுகளாக விக்லோவ் பகுதியில் வசிப்பவர். இவர் எங்கள் பயணத்தின் போது பல வரலாற்றுத் தகவல்களை சலிக்காமல் வழங்கினார். இவருடன் எங்களின் பஸ்ஸை ஓட்டி வந்த டேரன் பழக இனிமையானவராக இருந்தார். பொதுவாக பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும் அவ்வப்போது எங்கள் உரையாடலில் கலந்து கொண்டார். இந்த இனிய பயணத்தில் என்னுடன் 19 பேர் இணைந்து கொண்டனர். மொத்தம் இருபது பேர்கள். என்னைத் தவிர ஏனைய அனைவரும் ஜெர்மானியர்கள். ஜெர்மனியின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள். புதிய நண்பர்கள் என்பதால் ஆரம்பத்தில் சற்று விலகியே இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் நன்றாக உரையாடிக் கொண்டு மிக சுவாரசியமாக எங்கள் பயணம் அமைந்தது.

அடுத்தடுத்த பகுதிகளில் நான் சென்று பார்த்த இடங்கள் நான் அறிந்து கொண்ட அயர்லாந்தின் வரலாற்றுத் தகவல்கள், எங்கள் பயண அனுபவம் ஆகியவற்றை நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து வழங்குகிறேன். இப்பயணத்தில் எனது டிஜிட்டல் கேமராவில் ஏறக்குறைய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்தேன். அதில் சரி பார்த்து தேவையற்றவைகளை நீக்கி சிறப்பாக வந்த ஏறக்குறைய நானூறு படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். அதில் ஒரு சில காட்சிகளை உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்.


சரி..இப்போது ப்ராங்பர்ட் விமான நிலையத்தில் புறப்படக் காத்திருக்கும் ஆர் லிங்குஸ் (Air Lingus) க்கு செல்வோமா..?
தொடரும்...
சுபா

Friday, March 4, 2016

அயர்லாந்தின் அழகில்... ! - 1

என்றாவது ஒரு நாள் சுற்றிப் பார்க்கச் செல்ல வேண்டும் என நான் மனதில் வைத்திருக்கும் பட்டியலில் உண்மையிலேயே அயர்லாந்து இடம்பெறவில்லை. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் எனக்கு இங்கு ஜெர்மனியில் அறிமுகமான பெண்மனி ஒருவர் அவ்வப்போது தனது முந்தைய அயர்லாந்து பயணத்தைப் பற்றியும் இரண்டு வாரங்கள் தாம் சைக்கிளில் பயணம் செய்து மக்களையும் ஊர்களையும் சுற்றிப் பார்த்து வந்ததையும் கூறிக் கொண்டிருந்தது மனதில் சிறிய அளவில் ஒரு ஆசையை உருவாக்கி விட்டது என்று தான் சொல்வேன். அவர் சொன்ன விசயங்களிலிருந்து குறிப்பாக ரிங் ஆஃப் கேரி பகுதிக்குச் சென்று பார்த்து வர வேண்டும் என எனக்கு ஆசை எழுந்தது.


ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்னர் அப்பெண்மனி சுற்றிப்பார்த்த போது இருந்த அனுபவத்தை விட நிச்சயம் இப்போது சற்று மாறுபட்டதாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இருந்தாலும் "ஏன்.. ஒரு முறை விடுமுறையை அயர்லாந்தில் கழித்தால் என்ன" என்ற எண்ணம் 2011ம் ஆண்டு ஆரம்பத்தில் மனதில் வலுவாக பதிந்து விட்டது. அப்புறம் என்ன..? பயணத்திற்கான தேதியை உறுதி செய்து பயண டிக்கெட்களையும் வருட ஆரம்பத்திலேயே முன்பதிவு செய்து வாங்கி வைத்து விட்டேன். எப்போதுமே பயணங்களை முன்னராகவே திட்டமிடுதலில் சில நண்மைகள் உண்டு. அலுவலகத்தில் விடுமுறை எடுப்பது, தேவையான தகவல்களைத் திரட்டுவது என்பதற்கு முன்னேற்பாடுகள் மிக அவசியம்.

கோடை காலத்தில் செல்வது உகந்ததாக இருக்கும். ஜெர்மனிக்கும் மேலே அமைந்திருப்பதால் நிச்சயமாக குளிர் நிறைந்த நாடாகத் தான் இருக்கும் என்பது என் எண்ணம். அதனால் கணமான பெரிய ஜாக்கெட்டுகளைப் போட்டுக் கொண்டு செல்வதை விட கோடை காலம் சுற்றுப் பயணத்தை எளிமையாக்கும், எளிதான ஆடைகளை அணிந்து அதிகம் பயணிக்கலாம் என்ற எண்ணம் மனதில் எனக்கு இருந்தது.

எனது நீண்ட நாள் அலுவலக நண்பரும் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ஆண்ட்ரியாஸ் அயர்லாந்தின் பிரியர். ஜெர்மானியரான இந்த நண்பர் 2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஓராண்டு அயர்லாந்தின் ஷானென் (Shannon) நகரில் தனியாக ஒரு கம்பெனி நடத்திய அனுபவம் உள்ளவர். அவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இன்னமும் ஷேனென் நகரிலேயே இருக்கின்றார். வருடத்திற்கு இரண்டு முறையாவது ரைன் ஏர் (Ryan Air) விமானச் சேவையில் ஷானென் சென்று வருவது ஆண்டிரியாஸின் வழக்கம். திரும்பி வந்து என்னிடம் தனது படத்தொகுப்புக்களைக் காட்ட அவர் மறப்பதில்லை. அப்போதெல்லாம் கூட என்னை அயர்லாந்து ஈர்க்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் மிகக் குளிரான நாடாக இருக்குமோ என்ற ஒரு வித உண்மையற்ற அச்சம் தான்.

பல வேளைகளில் உண்மை நிலைய அறியாமலேயே கற்பனையிலேயே நாம் ஏதேதோ நினைத்து அச்சப்பட்டுக் கொண்டும் தயக்கப்பட்டுக் கொண்டுமிருப்போம். ஆனால் உண்மை நிலையை அறிய நாம் நேராகச் சென்று பார்ப்பது மிக உதவும். இதனால் அய்யங்களைத் தெளிவு செய்து கொள்ள முடிகிறது. அதிலும் ஏதோ ஒரு அனுமானத்திலேயே வாழ்ந்து விடுகின்ற போக்கினால் பல வேளைகளில் நாம் இழப்பது அதிகம் என்பதை அனுபத்தின் மூலம் நான் அறிவேன். ஆக அயர்லாந்துக்கானப் பயணம் ஒரு வழியாக ஏற்பாடாகியது. 


இந்த 2011 ஆண்டு அயர்லாந்து பயணத்திற்குப் பின்னர் தொழில் நிமித்தம் டப்லினுக்கு மட்டும் இரண்டு முறை சென்று வந்தேன். ஆயினும் முதல் முறை சென்ற போது அடைந்த அனுபவம் மனதை விட்டு நீங்காதது. அதனை இந்தத் தொடரில் பகிர்ந்து கொள்கிறேன். அயர்லாந்து பார்க்க வருபவர்கள் என் தொடரில் என்னுடன் இணைந்து பயணிக்கலாம். smile emoticon
தொடரும்
சுபா

Thursday, February 4, 2016

பயணங்கள் தரும் அனுபவங்கள் - பதிந்து வைப்போமே!

அண்மைய எனது தமிழகப் பயனத்தின் போது அவ்வப்போது ரயில் பயணம் மேற்கொள்வது தேவையாகிப் போனது. முந்தைய எனது பயணங்களிலும் இரவுப் பயணம் செய்த அனுபவம் இருந்தாலும் இம்முறை அடிக்கடி இது நிகழ்ந்ததில் சற்று அனுபவம் அதிகமானது என்று தான் சொல்வேன்.

இரவு பயணத்தில் படுத்துச் செல்லும் 3 அடுக்கு படுக்கை கொண்ட சீட்களில் நான் சென்ற போதெல்லாம் கீழ் பகுதிக்கென்றே முன்கூட்டியே புக் செய்து வாங்கிக் கொண்டேன். 

ஒரே ஒரு பயனத்தைத் தவிர ஏனைய அனைத்து பயணத்திலும் யாராவது ஒருவர் அந்த கீழ் சீட்டை கேட்காமல் இருப்பதில்லை. நீங்கள் மேலே என் சீட்டில் படுத்துக் கொள்ளுங்கள். நான் கீழே படுத்துக் கொள்கின்றேன். உங்கள் சீட்டைவிட்டுத் தரமுடியுமா என கேட்பது ஒவ்வொரு முறையும் நடந்தது அந்த ஒருமுறையைத் தவிர. 

அப்படி சொல்லி கீழ் சீட்டைக் கேட்பவர்கள் பெரும்பாலும் பெண்கள். 
  • உடம்பு நிலை சரியில்லை. 
  • மேலே ஏறி படுக்க முடியாது. 
  • இப்போ தான் ஆப்பரேஷன் செய்தேன்.
..இவை காரணங்களாக அமைகின்றவை. 

ஒரு முறை நான் என் இருக்கையில் படுத்துவிட்டேன். எனக்கு அருகாமையில் இருந்த இரு ஆடவர்களை இதே போல ஒரு நடுத்தர வயது பெண்மணி கேட்க அதற்கு அவர் நானும் இப்போதுதான் ஆப்பரேஷன் செய்து கொண்டிருக்கின்றேன். மேலே ஏற முடியாது எனச் சொல்லி விட்டார். இன்னொருவர் எனக்கு சர்க்கரை நோய் இருக்கின்றது. அதனால் தான் கீழே படுக்கை புக் செய்து வாங்கி இருக்கின்றேன். தர முடியாது எனச் சொல்லி விட்டார். 

ஆக தமிழக ரயில் பயணத்தில் நாம் புக் செய்து கீழ் படுக்கை இருக்கை வாங்கினாலும் யாராவது ஒரு பெண்மனி தனக்கு உடம்பு சரியில்லை எனச் சொல்லிக் கொண்டு இப்படி நம் இருக்கையை மாற்றி விட முயற்சிப்பார் என்பதை நன்கு தெரிந்து கொண்டேன். 

பயணங்கள் காட்டும் அனுபவங்கள் பல. அதில் இதுவும் ஒன்று.

சுபா