Friday, April 18, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 3



சென்ற இடமெல்லாம்...

தாய்லாந்தின் பூகோள அமைப்பை பூமிப் பந்தின் வரைபடத்தில் பார்க்கும் போது அது தெற்கில் மலேசிய நாட்டை எல்லையாகவும், மேற்கில் மியன்மார் நாட்டை எல்லையாகவும், கிழக்கே கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளை எல்லையாகவும் கொண்டிருக்கும் ஒரு நாடு என்று அறிந்திருப்போம்.  ஒரு வகையில் கிழக்காசிய நாடுகளின் மையப் புள்ளியாக தாய்லாந்து அமைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடலாம்.

தென்மேற்குப் பகுதியானது அந்தமான் கடலை ஒட்டி அமைந்திருக்கின்றது. பாங்கோக்  அமைந்திருக்கும் பகுதியோ தென் சீனக் கடலில் தாய்லாந்து வளைகுடா பகுதில் என அமைந்திருக்கின்றது. மொத்டம் 513,000sq km  நிலப்பரப்பைக் கொண்ட ஒரு நீண்ட அகன்ற அளவினைக் கொண்ட நாடு இது. ஏறக்குறைய 75மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

தாய்லாந்தில் மக்கள் தொகை மிக அதிகமாக மையம் கொண்டிருக்கும் பகுதி எனச் சொல்வதென்றால் அது பாங்கோக் நகரில் தான். பாங்கோக் நகரை விட்டு மேலே வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல மலைப்பிரதேசங்கள் சூழ்ந்திருப்பதையும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையையும் இங்கு வட பகுதிகளில் உணரலாம்.

என் பயணத்தில் பாங்காக் நகரில் இறங்கிய நாங்கள் அங்கு முன்னரே நான் பதிவு செய்திருந்த ஜெர்மானிய சுற்றுலா குழுவினர்களுடன் இணைந்து 13 நாள் பயணத்தை மேற்கொண்டேன். பாங்காக்  நகரிலிருந்து(A)  சா ஆம்(N)  வரை இக்குழுவினருடன் பயணம் அமைந்திருந்தது. அதன் பின்னர் சொந்தமாக நானே சா ஆம் நகரிலிருந்து பயணித்து கோ சாமூய் சென்று மீண்டும் பாங்காக் நகர் திரும்பினேன். கீழ்க்காணும் பட்டியலில் நான் பயணம் சென்ற ஊர்களின் பெயர்களை வரிசை படுத்தியுள்ளேன்.




இப்பட்டியலின் படி கூகள் வரைபடத்தில் நான் இப்பயணத்தில் முழுதும் சுற்றிப் பார்த்து வந்த பகுதிகளை கீழ்க்காணும் வரைப்படம் காட்டும்.



தலைநகர் பாங்காக்கில் புறப்பட்டு சியாங் ராய் நகர் வரை சென்று மியான்மார் எல்லையை அடைந்தேன். அங்கே புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டேன். எல்லையைத் தாண்டி செல்ல விசா அனுமதி தேவை என்பதால் நான் எல்லைப்பகுதியைத் தாண்டிச் செல்லவில்லை. அதோடு வட கிழக்கில் தங்க முக்கோணம் (Golden Triangle)  பகுதி வந்து போட் எடுத்து பயணித்து அறை நாள் பயணமாக லாவோஸ் நாட்டிற்கும் சென்று ஓரளவு சுற்றி விட்டு திரும்பினேன். கீழே தெற்கில் கோ சாமூய் பகுதி வரை வந்தாலும் கூட மலேசியாவிற்குச் செல்லவில்லை. கோசா மூய் பகுதியிலிருந்து மலேசிய எல்லை மானிலமான பெர்லிஸை 3 மணி நேரங்களில் வாகனத்தில் சென்று அடையலாம். ஆனாலும் நேரம் அமையாததால் மலேசியா செல்வதைத் தவிர்த்து விட்டேன்.

தாய்லாந்து எனும் போது  பலருக்கு மனதில் உடன் எழுவது இங்கு வணிகமயமாக்கப்பட்டிருக்கும் விபச்சாரத் தொழிலும் அது தொடர்பிலான அம்சங்களும் என்பதில் சந்தேகமில்லை. வியட்நாம் போர் காலத்தில் அமெரிக்க வீரர்களின் தாக்கத்தால் மிக அதிகமாக பரவிய செக்ஸ் தொழில் இன்றளவும் எண்ணிக்கையில் வளர்வதாகவே இன்னாட்டில் உள்ளது. நாட்டு மக்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 2 மில்லியன் அல்லது குறைந்த பட்ஷம் 250,000 மக்கள் செக்ஸ் தொழில் செய்பவர்கள் என்று சுற்றுலா பயண வழிகாட்டி நூல் குறிப்பிடுகின்றது. விபச்சாரம் தாய்லாந்தில் சட்டத்திற்கு விரோதமான ஒரு தொழிலாக இல்லாத நிலையிலிருந்து தற்சமயம் சில சமுதாய நலன் கருதிய முன்னேற்ற வழிகள் நடைமுறைபடுத்தப்பட்டு செக்ஸ் தொழிலில் ஈடுபடுவோரை மாற்று வழியில் செலுத்தும் முயற்சிகள் கையாளப்பட்டும் வருகின்றன. விபச்சாரம் எனும் போது வயது வந்த பெண்கள் என்று மட்டுமல்லாது இந்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு செக்ஸ் தொழிலாளர்கள் ஆண்கள் என்பதுவும் உண்மை.

அத்துடன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறுவர் சிறுமியர் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுகின்றனர் அல்லது ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதுவும் இங்கு நடக்கும் ஒரு அவலம். தாய்லாந்தில் விபச்சாரத் தொழிலுக்குப் புகழ் வாய்ந்த நகரங்கள் என்றே சிறப்பு அடையாளம் காட்டப்ப்டும் நகரங்களாக பட்டாயா, ஹட்ஜாய், கோசாமூய், பாங்காக் ஆகிய நகரங்களைச் சொல்லலாம். எயிட்ஸ் நோயினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் செக்ஸ் தொழிலில் ஈடுபடுவதானால் ஏற்படும் ஏனைய பிற உள உடல் சிக்கல்களை மனதில் கொண்டு பெருமளவிலான விபச்சாரத்தை தடுக்கும் பிரச்சாரங்களும் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன.

விபச்சாரத் தொழிலினால் இந்த நாட்டின் புகழுக்கு மாசு ஏற்பட்டிருக்கின்றது என்பது மிக உண்மை. ஏனெனில், தாய்லாந்தின் வரலாற்றுச் சிறப்பு, கலையழகு, மக்கள் பண்பு, எளிமை, இயற்கை வளம், தொழில் துறை முன்னேற்றம், உணவின் சிறப்பு என்பவை இதனால் புறம் தள்ளப்பட்டு தாய்லாந்து என்றாலே விபச்சாரம், தாய் உடல் மஸாஜ் செர்விஸ் என்ற ஒன்று மட்டுமே பலருக்கு தென்படும் நிலைக்கு இது ஆளாக்கி உள்ளது.


அயோத்யா- வாட் சாய்மோன்கோல்


தாய்லாந்தை அறிந்து அதனைச் சொல்லி மகிழ பல விஷயங்கள் இருக்கின்றன. பிரமாண்டமான கோயில்கள், வீரம் மிக்க அரசர்களின் ஆட்சி, லங்காசுக்கா,பட்டானி, அயூத்தியா, சுக்கோத்தை,  கைமர், லானா என பல பலம் பொருந்திய பண்டைய பேரரசுகள் இப்பகுதியை ஆட்சி செய்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக சில நூற்றாண்டுகளுக்கு முன் சக்ரி பரம்பரையினரின் கீழ் வந்த பாங்காக் அதன் பின்னர் இன்றைய தாய்லாந்து என முழுமையாக அரச வம்சத்தினரின் ஆட்சியில் மக்களாட்சியுடன் கூடிய அரசாட்சியை கொண்டிருக்கின்றது.

இந்த பிராந்தியத்தில் ஐரோப்பியரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் வசப்படாத ஒரு நாடு என்ற பெருமையையும் கொண்டிருக்கும் ஒரு நாடு தாய்லாந்து என்ன்பதையும் குறிப்பிட வேண்டும். இன்று அரசியல் நிலைத்தன்மை, நேர்மை  என்பது இங்கு கேள்விக்குறியாக்கப்பட்டு அரசியல் பிரச்சனைகள் எழுந்திருப்பதும் உண்மை.


மன்னர் பூமிபோல் 

தாய்லாந்து மக்களின் மனதில் மிகச் சிறப்பான இடத்தை பெற்றிருப்பவர் இந்த நாட்டின் மாமன்னர் பூமிபோல். 9ம் ராமா என்ற சிறப்பு பெயரையும் கொண்டவர் இவர். 86 வயதை அடைந்து விட்ட இவர் கடந்த ஏறக்குறைய 60 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டை ஆண்டு வரும் மாமன்னர். தாய்லாந்தை பழமைவாத சிந்தனையிலிருந்து மீட்டெடுத்து புதிய பாதையில் இட்டுச் சென்ற முன்னேற்றத் தந்தை இவர் என்பது உண்மை.

இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன தாய்லாந்தைப் பற்றி சொல்லிச் செல்ல.. ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.


1 comment:

Ranjani Narayanan said...

நாட்டைப்பற்றி மட்டும் சொல்லாமல் அதை ஆள்பவரைப்பற்றியும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. ஐரோப்பிய காலனித்துவத்திற்குக் கீழ் வராத நாடு என்பது மிக முக்கியமான குறிப்பாகப் படுகிறது. (காலணித்துவாமா? காலனிதத்துவமா?)

Post a Comment