Tuesday, November 4, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 12

தாய்லாந்தில் முதல் பாதி நாள் பார்த்த காட்சிகளே மனதில் 'எங்கு காணினும் புத்தர்' என்ற சிந்தனையை எழுப்பியிருந்தது. ப்ரா மங்கோன் போபிட் விகாரையைப் பார்த்து விட்டு கடைகளுக்கு இடையே நடந்து உணவுப் பொருட்களைப் பார்த்துக் கொண்டும் சிலவற்றை வாங்கிக் கொண்டும் வந்து பேருந்தில் சிறிது சாப்பிட்டு விட்டு அமர்ந்து விட்டோம். மதிய உணவுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் எங்கள் பயண வழிகாட்டி ஏற்பாடு செய்த்கிருந்தார். அங்கு செல்ல ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகும் என்றபடியால் பேருந்தில் அமர்ந்த வாறு ஒரு பக்க சாலை காட்சிகளை ஓடும் பேருந்திலிருந்தே கவனித்துக் கொண்டு பயணத்திக் கொண்டிருந்தோம்.

மதிய உணவை அக்குறிப்பிட்ட இடத்தில் சாப்பிட்ட பின்னர் எங்கள் பயணம் சுக்கோத்தை நகரை நோக்கிச் செல்வதாக ஏற்பாடு. அயோத்தையாவிற்கும் சுக்கோத்தை நகருக்கும் ஏறக்குறைய 346 கிமீ தூரம். ஆக அந்த வழியிலேயே இடையில் இருக்கும் ஒரு உணவகத்தில் தான் எங்கள் மதிய உனவு ஏற்பாடாகியிருந்தது.

சாலையில் செல்லும் போதே தாய்லாந்தின் பசுமையான நெல் வயல்களை நான் கவனிக்கத் தவறவில்லை. விவசாயம் இன்னாட்டின் அதி முக்கிய தொழில். அரிசு உணவு என்பதே தாய் மக்களின் பிரதான உணவு. இதன் அடிப்படையில் நல்ல நில வளமும் நீர்வளமும் வே|று நிறைந்திருப்பதால் இங்கு விவசாயம் மிகச் செழிப்பாகவே நடைபெறுகின்றது.

தாய்லாந்து அரிசி வகை பற்றி பலர் அறிந்திருக்கலாம். ஐரோப்பாவில் மிகப் பரவலாகக் கிடைக்கும் அரிசி வகைகளில் தாய்லாந்தின் ஜாஸ்மீன் அரிசி மிகப் பிரபலம். ஜெர்மனியில் உள்ள சீன, தாய்லாந்து  வியாட்நாம் உணவகங்களிலும், அவசர உணவகங்களிலும் இந்தத் தாய் வகை ஜாஸ்மீன் அரிசியே மிகப் பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகையாக உள்ளது. இந்த அரிசி வகை பளிச்சென்று வெண்மையாக இருப்பதுடன் சற்றே பிசுபிசுப்புத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். நான் இந்திய வகை சமையலுக்கு இதனைச்  சமைத்து முயற்சித்திருக்கின்றேன். ஆனால் இந்த அரிசி நமது இந்திய குழம்பு வகைகளுக்கு பொருந்துவதாக இல்லை. தாய்லாந்து வகை உணவு அல்லது ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு இவை பொருத்தமாக உள்ளன. சுவையும் சேர்கின்றது.

வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டு வரும் நமக்கு ஆங்காங்கே சாலைகளில் விற்கப்படும் வழிபாட்டு சிலைவடிவங்கள் கண்களுக்குத் தென்படும். சேவல், யானை, காவலாளி, பாம்பு , பொம்மை வடிவங்கள், தெய்வச் சிலை வடிவங்களில் பிரம்மா, விநாயகர், புத்தர் சிலைகள் என பல வடிவங்கள் சாலையோரங்களில் விற்கப்படுவதைக் காணலாம். இதனைப் பார்க்கும் போது திருநெல்வேலியிலிருந்து கயத்தாறு செல்லும் சாலையில் நான் ஒரு முறை பயணித்த போது சாலை ஓரத்தில் விற்கப்படும் மண்பாண்ட வடிவ குதிரை வடிவங்களும் ஏனைய மண்பாண்ட வடிவங்களும் தான் மனதில் நிழலாடின.




ஏறக்குறைய ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் நாங்கள் உணவு உண்ண ஏற்பாடாகியிருந்த உணவகம் வந்து சேர்ந்தோம். வாசலில் பார்த்தால் உணவகம் என்ற அடையாளமே தெரியாமல் ஒரு பூங்காவிற்குள் செல்வது போல தோற்றமளித்தது. பசுமை அழகு கண்களைக் கொள்ளை கொண்டது. இளம் பசுமை அந்த இடத்தின் ரம்மியத்தியத்தை அதிகரித்தது. பூக்கள் அந்த அழகுக்கு அழகு சேர்த்தன. இதற்கிடையே நடுவில் ஒரு தனி இடத்தில் மேசை போடப்பட்டு அங்கே அழகழகாக வரிசையாக உணவுப் பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. சூடான ஜாஸ்மின் அரிசியின் சுவையும் தாய்லாந்து தேங்காய்பால் குழம்பின் மனமும் அந்த நேரத்துப் பசியை அதிகரித்தன.




சாப்பிட்டு விட்டு சற்று அந்தப் பூங்காவை வலம் வந்தேன். உணவகத்தை மிகச் சிரத்தையெடுத்துப் பசுமை நிறைந்த பூங்காவாக்கி இருந்தனர். பூங்காவின் மையத்தில் நம் கண்களுக்கு நன்கு பழகிய ஒரு வடிவம்.. ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் என்னை தூரத்திலிருந்தே கவர்ந்தது.



ஆகா.. என்ன அழகு என வியந்து அருகில் சென்று பார்த்தேன். சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கின்றார் போலும் என பார்ப்பவரை நினைக்க வைக்கும் வகையில் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தார்  தொந்திக் கணபதி.

தொடரும்...

சுபா

2 comments:

Post a Comment