Friday, November 28, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 13

மதிய உணவு முடித்து வெளியே வரும் போது மதியம் மூன்று மணி ஆகிவிட்டது. அங்கிருந்து எங்கள் பயணம் அடுத்து சுக்கோத்தை நகரை நோக்கிச் செல்வதாக பயணத்திட்டம். சுக்கோத்தை நகரில் ஒரு நாள் இருக்க வேண்டுமென்றால் அங்கே சுக்கோத்தை நகரிலேயே இரவில் தங்கி விடுவதுதான் சிறப்பாக இருக்கும் என்று பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.


​சுக்கோத்தையில் தங்கும் விடுதி

பயண ஏற்பாடு ஒவ்வொன்றும் மிகக் கவனமாக நேர விரயம் ஏற்படா வகையில் திட்டத்தில் பட்டியலிடப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்து வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கவனத்தில் கொண்டு பஸ் ஓட்டுனர், உதவியாளர், எங்கள் பயண வழிகாட்டி ஆகிய அனைவருமே செயல்பட்டனர்.


வாசல் பகுதியில்


ஏறக்குறைய இரண்டரை மணி நேரங்களுக்குப் பிறகு நாங்கள் சுக்கோத்தை நகரை வந்தடைந்தோம். அங்குள்ள  ஹோலிடே இன் ஹோட்டலில் எங்களுக்கான தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுக்கோத்தை மைய நகருக்கு சற்று தள்ளியே இப்பகுதி. ஆகையால் மாலை ஹோட்டலிலேயே இருந்து ஓய்வெடுக்கும்படி எங்கள் பயண வழிகாட்டி தெரிவித்திருந்தார். அங்கே ஜிம், நீச்சல் குளம் ஆகியனவும் இருந்தன. மாலை உணவை சாப்பிட வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற வகையில் ஹோட்டலிலேயே சிறப்பான ரெஸ்டாண்டும் இருந்தது.



கொய் தியாவ் அரிசி மாவினால் செய்யப்பட்ட நூடல் வகை.. மற்றும் காய்கள்

அந்த ஹோட்டல் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல். கலை நயத்துடன் உருவாக்கப்பட்டது. நானும் 1 மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டு சற்று ஓய்வெடுத்த பின்னர் அங்கேயே  மாலை உணவுக்கு சென்றே. என்னுடன் வந்திருந்த மேலும் சிலரும் அங்கிருக்க ஒரு சிலர் என்னுடன் இணைந்து கொண்டனர்.  கொய்தியாவ் வகை நூடல் மெனுவில் இருக்க அதனை நான் ஆர்டர் செய்திருந்தேன். மிக அழகாக வாழை இலையில் சுற்றி வைக்கப்பட்டு பரிமாறப்பட்டது. ரசித்து ருசித்து சாப்பிட்டேன். ஆசிய வகை உணவுகளுக்கு ஈடு சொல்ல உலகில் வேறு உணவே இல்லை என தாராளமாகச் சொல்வேன். தாய்லாந்து உணவின் சுவை தனித்துவம் மிக்கது என்பதில் சந்தேகமில்லை.


காலை உணவு

காலை உணவு பஃபெட் முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கேயே உணவு உண்டு பிறகு சுக்கோத்தை நகருக்குச் செல்ல வேண்டும்.

ஒரு நாள் தான் இந்தஹோட்டலில் எங்கள் வாசம். நாடோடிகள் போல கொண்டு வந்த பைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் எங்கள் பயண பேருந்தின் முன் வந்து நின்று கொண்டோம்.
சரியாக குறிப்பிட்ட நேரத்தில் எங்கள் பேருந்து சுக்கோத்தை நகர மையத்தை நோக்கிப் புறப்பட்டது.

சுக்கோத்தை.. ஒரு சுவர்க்கபுரி. என் வாழ்நாளில் நான் பார்த்து மகிழ்ந்து அங்கேயே இருக்கச் சொன்னால் இருந்து விடக்கூடிய ஒரு நகரம்.. அங்கே கால் பதிந்த நொடிமுதல் நான் 16ம் நூற்றாண்டுக்கே சென்று விட்டேன்.

அனந்தசயனத்தில், தியான வடிவத்தில் . யோக முத்திரையுடன், நின்ற வடிவத்தில், போதனை வழங்கும் வடிவத்தில் புத்தரை நான் பார்த்திருக்கின்றேன். இங்கே.. சுக்கோத்தையில் தான்  நடக்கும் நிலையில் புத்தரின் சிலை இருக்கின்றது. இந்த அற்புத சிலை இருக்கும் சுக்கோத்தை வரலாற்று பூங்காவைக் காண அடுத்த பதிவில் உங்களை அழைத்துச் செல்கின்றேன். இப்போது அந்தச் சிலையை மட்டும் பார்ப்போமே..!


சுக்கோத்தை புத்தரின் அழகிய காட்சி


தொடரும்...
சுபா

1 comment:

விச்சு said...

5 ஸ்டார் ஓட்டலில் உணவு.. நடக்கும் புத்தர்.. சந்தோசமா என்ஜாய் பண்ணுங்க..

Post a Comment