Wednesday, July 8, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -22

சாதியை வைத்து தீண்டாமை என்னும் கருத்தை வளர்ப்பது ஒரு சமூகக் கேடு. நம் தமிழ்ச் சமூகத்தில் இன்றும் அந்த அவல நிலையை நாம் தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் ஊடகங்களின் வழியாகவோ அல்லது சுற்று வட்டாரத்திலேயும் கூட கேட்டும் பார்த்தும் அறிந்து வரும் நிலையிலிருந்து விடுபடவில்லை. எல்லா மனிதருக்கும் DNA அறிவியல் கூற்றுப்படி, உடலில் இருக்கும் வித்தியாசங்கள் என்பது மிக மிக மிக சிறியது. விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் போதோ, அல்லது உடலில் ஏதாகினும் ஒரு பாகம் சீர் கெட்டு அதனை மாற்ற வேண்டும் என்ற நிலை தோன்றினாலோ அங்கும் கூட சாதி வித்தியாசத்தைப் பார்த்து தனக்கு தன் உயிர் வேண்டாம் என ஒதுக்கி விடவா போகின்றார்கள் சாதிப் பற்றாளர்கள்? சாதிக்கொள்கை.....அதனை கடைபிடிப்போருக்கு சாதியால் தேவைப்பாடும் தீண்டாமை என்னும் கொள்கை ஆகியவை மிகக் கொடுமையானவை. நம் சமூகத்தில் நடைபெறும் அவலங்களுக்கு முக்கிய காரணமாக அமைவதும் சாதி என்னும் இந்தப் பிற்போக்குச் சிந்தனை மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதே. இந்த சாதிக் கொடுமையைப் போல ஆப்பிரிக்க கருப்பின மக்கள் அனுபவித்த அப்பார்தேட் (Apartheid) பிரிவினைவாதம் என்பதும் ஒரு சமூகக் கேடே!


ஆப்பிரிக்க தேசத்தில் ஆப்பிரிக்க தேசத்து கருப்பின மக்களுக்கு வெள்ளையர்கள் நிறப்பிரிவினையைக் கற்பித்து பல கொடுமைகளைத் தங்களது காலணித்துவ ஆட்சியின் போது இழைத்தனர் என்பது வரலாறு. இதனை எதிர்த்து அம்மக்களுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க மக்களின் மனதில் மட்டுமல்லாது உலகில் எல்லோரும் ஒரு குலமே என நினைக்கும் அனைத்து மக்கள் மனதிலும் குடியிருப்பவர் என்பதை நன்கு அறிவோம்.



தென்னாப்பிரிக்க கருப்பின மக்கள்  அப்பார்தேட் கொடுமைகளால் பட்ட அவலங்களை வெளிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகமே க்வாமூல அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகமே எனது பட்டியலில் அடுத்து சென்று காண வேண்டிய ஒன்றாக இருந்தது.

நாங்கள் உம்கேனி சிவாலயத்திலிருந்து புறப்பட்டு டர்பன் மைய நகருக்குள் நுழைந்தோம். மைய நகரின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் பெரிய உயர்ந்த கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், வரிசை வரிசையான கடைகள் என இப்பகுதி அந்தநேரத்தில் மிக பிசியாகவே இருந்தது.


குவாமூல அருங்காட்சியகம் அமைந்திருக்கும் இக்கட்டிடம் முன்னர் அப்பார்தேட் கொடுமைகளை இழைத்த பல வெள்ளையர்களால்  வெறுக்கத்தக்க ஒரு அலுவலக கட்டிடமாக இருந்தது. இதற்குக் காரணம் இந்தக் கட்டிடமே  முன்னர் தென்னாப்பிரிக்க கருப்பின மக்களின் சமூக நல மையமாக (Department of Native Affairs)  அமைந்திருந்தது. ஆனால் இன்றோ அக்காலத்தில் நிகழ்ந்த பல மனித உரிமை மீறல் விசயங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களைப் பாதுகாக்கும் முக்கிய கட்டிடமாகத் திகழ்கின்றது. இதுதான் காலத்தின் கோலம்!



இது ஒரு இரண்டு மாடிக் கட்டிடம்.  உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் அலுவலகம் அமைந்திருப்பதைக் காணலாம். இடது பக்கம் நுழைந்தால் அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்களைக் காணலாம். அக்கால நிகழ்வுகளை உருவகப் படுத்திக் காட்டும் காட்சிகள் இங்கு மூலைகளில் வடிவமைக்கப்பட்டும் வைக்கபப்ட்டுள்ளன. சுவர்களில் சில முக்கிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் பழைய புகைப்படங்களும் மாட்டப்பட்டிருக்கின்றன. மேல் மாடியிலும் தொடர்ச்சியாக பலபுகைப்படங்கள், ஆவணங்கள் காட்சிப் பொருட்கள் ஆகியன வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தின் பெயர் இதன் முதல் மேலாளரான திரு JS Marwick என்பவரின் பெயரைக் கொண்டிருக்கின்றது. இவர் தான் 7000 சூலு (தென்னாப்பிரிக்க கருப்பர் சமூகத்தில் ஒரு சமூகத்தினர்) அடிமைகளை கெத்தோக்களிலிருந்து தென்னாப்பிரிக்க போரின் போது வெளியேற்றி காப்பாற்றியவர். 1927ம் ஆண்டில் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.


ஆய்வு மாணவர்களுக்கு மட்டுமன்றி அப்பார்தேட் கொடுமைகளைப் பற்றி அறிந்து கொள்ள விழைபவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் மிக முக்கிமான ஒரு இடம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அங்கு ஏறக்குறைய 1 மணி நேரம் இருந்து பல தகவல்களை வாசித்தும் பார்த்தும் புரிந்து கொண்டும்,  புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். எங்கள் வாகனம் அடுத்து டர்பன் நகரிலேயே இருக்கும் மற்றுமொரு இடத்திற்குப் பயணமானது.

தொடரும்

சுபா

No comments:

Post a Comment