Saturday, July 25, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -23

குவாமூல அருங்காட்சியகத்தில் நாங்கள் கண்டும் வாசித்தும் தெரிந்து கொண்ட விசயங்கள் மனதில் ஒரு வித தாக்கத்தை தராமல் இல்லை. கருப்பர் இன மக்களின் அடிப்படை மனித  உரிமை என்னும் ஒரு விசயம் இங்கிலாந்தின் காலணித்துவ ஆட்சியின் போது ஒரு பொருட்டாகக் கருதப்படாது அவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாகவே கருதியமையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது என்பதே உண்மை.


குவாமூல அருங்காட்சியகத்திலிருந்து புறப்பட்டு டர்பன் நகரிலேயே இருக்கும் Old Court House  அருங்காட்சியகத்திற்குப் புறப்பட்டோம். அது தான் எனது பட்டியலில் இருந்த அடுத்து பார்க்க வேண்டிய இடமாகவும் இருந்தது. இதற்கு இடையே மதிய உணவை முடித்துக் கொள்ளலாமா என்றும் நண்பர்களுடன் கலந்து பேசியதில் அனைவரும் அடுத்த அருங்காட்சியகத்தைப் பார்துது விட்டு சேர்ந்தே சாப்பிடுவோம் என சம்மதம் தெரிவித்து விட்டனர்.


குழுவாகப் பயணம் செய்யும் போது திட்டமிடுதலில் அவ்வப்போது சில  பிரச்சனைகள் எழலாம். ஒருவருக்கு பிடித்த விஷயம் இன்னொருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஒருவர் நீண்ட நேரம் பார்க்க விரும்பும் ஒரு விசயத்தை மர்றொருவர் சிறிது நேரம் மட்டுமே பார்த்து விட்டு செல்ல வேண்டும் என அவசரப் படுத்தலாம். ஒரு சிலர் குறைசொல்லிக் கொண்டே கூட வருவார்கள். இப்படி பல சங்கடங்கள் குழுவாக இணைந்து செல்லும் போது ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தப் பயணத்தில் அனைவருமே ஒருமித்த கருத்தோடு எல்லா இடங்களையும் பார்த்து வந்தோம் என்பது மகிழ்ச்சியுடன் குறிப்பிட வேண்டிய விசயம். இந்த பயணத்தில் என்னுடன் இணைந்து கொண்ட எட்டு பேருக்குமே எனது பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் தேர்வுகளும் பிடித்திருந்தது. நான் ஒவ்வொரு இடத்திற்கும் திட்டமிட்ட கால அவகாசமும் அவர்களுக்குப் பிடித்திருந்தது. இது எனக்கு மட்டுமல்லாது வாகனமோட்டிகளுக்கும் உதவுவதாக அமைந்தது.


ஆக, நினைத்தது போலவே மதிய உணவை சற்று தாமதமாகச் சாப்பிடலாம் என முடிவெடுத்துப் புறப்பட்டோம்.



டர்பன்  நகர சாலையில் இருக்கும் கட்டிடங்களில் சில இங்கிலாந்தின் லண்டன் நகர கட்டிடங்களின் கட்டுமான அமைப்பை ஒத்ததாகவே அமைந்திருக்கின்றன.சாலைகள் விரிவாக தூய்மையாக மிகத் தரமாக அமைந்துள்ளன. ஒரு சாதாரண வார நாளை பிரதிபலிக்கும் வகையில் சாலைகளில் வாகனங்களும் நிறைந்திருந்தன.
ஏறக்குறைய ஏழு நிமிட நேரத்திற்குள் அடுத்த அருங்காட்சியகத்திற்கு  வந்து சேர்ந்தோம். Old Court House - இது தென்னாப்பிரிக்க சூலு கருப்பின மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த அவலங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அடங்கிய  மேலும் ஒரு அருங்காட்சியகம். இங்கு நான் வாசித்து அறிந்து கொண்ட விசயங்கள் அக்கால சூழலில் சூலு கருப்பின மக்கள், ஆங்கிலேயர்,  இந்தியர் ஆகிய மூன்று இனங்களும் வாழ்ந்த சூழலைக் காட்டுவதாக அமைந்தது.

உதாரணமாக,
சூலு கருப்பின மக்கள் ஆங்கிலேயர்களை திருமணம் செய்து கொள்வதும் நிகழ்ந்திருக்கின்றது.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை திருமணம் செய்து கொள்வதும் நிகழ்ந்திருக்கின்றது.
ஆனால் மிக மிக அரிதாகவே சூலு கருப்பின மக்கள் இந்தியர்கள் திருமண உறவு நிகழ்ந்தது என்பதை உணர முடிந்தது.

இது யோசிக்க வேண்டிய ஒரு விசயம் தான் அல்லவா?


தொடரும்
சுபா

No comments:

Post a Comment