Monday, July 6, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -21

காந்தி நினைவு இல்லத்திலிருந்து புறப்படும் போது எனக்கு மட்டுமல்ல. என்னுடன் வந்திருந்த ஏனைய 8 பேரும் கூட காந்தி தொடர்பான சிந்தனைகளிலேயே மூழ்கியிருந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். காந்தி டர்பனில் வாழ்ந்த காலங்களில் அவர் தனது வாழ்க்கைப் பாதையை புதிதாக வடித்துக் கொண்டார். ஆப்பிரிக்காவில் இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட நடைமுறை பாரபட்ஷமானது  கொடியது. அதே வேளை இந்தியாவில் மக்கள் தன் சொந்த நாட்டிலேயே கூட அன்னியரின் ஆளுமைக்கு உட்பட்டு தனது சுயமரியாதையை இழந்து அடிமையாக இருக்கும் நிலை அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்தது. ஒரு வக்கீலாக தொழில் புரிய சென்ற காந்தி இந்திய தேசத்து மக்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றி மக்கள் வாழ்க்கை நலம்பெற உதவவேண்டும் என்ற சிந்தனை பெற்றவராய் 20 வருடங்கள் கடந்து புதிய மனிதராய் தான் இந்தியா திரும்பினார்.

பல வேளைகளில் நமது சொந்த இடத்திலிருந்து பெயர்ந்து புதிய இடத்தில் வாழும் போது நமக்கு நம்மைப் பற்றி கிடைக்கும் தரிசனம் மிக உன்னதமானதாகவே அமைந்து விடுகின்றது. இதனை உணர்வோர் தமக்கும் தன் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்மிக்க செயல்களைச் செய்து வாழ்க்கைக்கு ஒரு அர்த்ததை உருவாக்குகின்றனர். இதனை அறியாத சிலரோ வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும்  பொருளற்றதாக்கி வீணாக்கி விடுகின்றனர்.

எங்கள் பயணம் அங்கிருந்து டர்பனின் மையப்பகுதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அடுத்து என் பட்டியலில் இருந்தது டர்பன் நகரில் இருக்கும் ஒரு அழகிய சிவாலயம்.



(Umgeni Siva Temple) உம்கெனி சிவாலயம் டர்பன் நகரில் இருக்கும் பழமையான ஆலயங்களில் ஒன்று.  இது 1910ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் முகவரி 535 Umgeni Rd, Durban, 4001, South Africa.



தமிழகத்தின் புதுக்கோட்டையிலிருந்து டர்பனுக்கு வந்த ராமசாமி கொத்தனார் பிள்ளை என்பவர் கட்டிய ஆலயம் இது.  1885ம் ஆண்டில் இவர் ஒரு வழிப்போக்கராக டர்பன் நகருக்கு கப்பலில் வந்து சேர்ந்தார்.  டர்பன் நகரத்தில் கட்டிட நிர்மாணிப்பாளராக பணி புரிந்து கொண்டிருந்த இவர் ஆலயங்களை வடிவமைக்கும் முயற்சியிலும் இறங்கினார். கட்டிடக் கலை என்று மட்டுமல்லாமல் கலை ஆர்வமும் இலக்கியம் படைப்பதில் ஆர்வமும் கொண்டிவராக இவர் இருந்தார். டர்பன் நகரில் இவர் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியிருக்கின்றார். 1863ல் தமிழகத்தில் பிறந்து பின்னர் 1885ம் ஆண்டில் டர்பன் வந்த பிறகு  1927 வரை இங்கேயே இருந்து மேலும் சில இந்து ஆலயங்களையும் வடிவமைத்து கட்டியிருக்கின்றார். 1927ம் ஆண்டில் மீண்டும் தமிழகம் திரும்பிய இவர் 1938ம் ஆண்டில் மறைந்தார்.

இவர் தென்னாப்பிரிக்காவில் கட்டிய ஏனைய இந்து ஆலயங்களின் பட்டியல் கீழ் வருமாறு.

1. பால சுப்ரமண்ய ஆலம் - 1910  Dundee
2.கே.ஆர்.பிள்ளை தனியார் ஆலயம் - 1924 Redhill, Durban
3.ரயில்வே  பாரெக்ஸ் ஸ்ரீ எம்பெருமான் ஆலயம் - 1924 Durban
4.சிவ சுப்ரமண்ய ஆலயம் - 1912 Mount Edgecombe
5.சிவ சுப்ரமண்ய ஆலயம்  - 1915 Pietermaritzburg
6.சிவ சுப்ரமண்ய ஆலயம் - 1893 Port Elizabeth
7.உம்பிலோ ஸ்ரீ அம்பலவாணர் ஆலயம் - சுப்ரமணியர் ஆலயம் - 1905 Durban

உம்கெனி ஆலயத்தின் வாசலில் நுழையும் போது நெடிய சிவபெருமான் உருவச் சிலை வாசலிலேயே இருப்பதைக் காணலாம்.  உள்ளே இடது புறத்தில் சிறிய பூங்காவும் வலது புறத்தில் தென்னந்தோப்பும் அமைந்திருப்பது இந்த கோயில் வளாகத்தை மிக ரம்மியமாக காட்சியளிக்கச் செய்கின்றது.



ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. எனவே வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே என்னால் புகைப்படம் பதிய முடிந்தது.

ஆலயம் மூன்று பகுதிகளாக அமைந்திருக்கின்றது. அலுவலக கட்டிடம் ஒன்றும் இடது புறத்தில் அமைந்திருக்கின்றது. நாங்கள் சென்றிருந்த சமயத்தில் ஆலய குருக்களும் உள்ளே இருந்தார். ஆகையால் சில நிமிடங்கள் அவருடன் பேசியதில் அவர் இலங்கைத் தமிழர் என்பதை அறிந்து கொண்டோம். வாசலில் இரண்டு மயில்கள் அங்கும் இங்கும் நடை பழகிக் கொண்டிருந்தன. இந்த ரம்மியமான காட்சியை பார்த்து சுவாமி வழிபாடும் செய்து  விட்டு அங்கிருந்து எனது பட்டியலில் இருந்த அடுத்த இடத்திற்குப் பயணமானோம்.


தொடரும்..
சுபா

No comments:

Post a Comment