Friday, June 26, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -20

டர்பன் நகரிலிருந்து வடக்கு நோக்கிய பயணமாக N2 சாலையில் 177 எக்ஸிட் எடுத்து Kwamashu H’way (M25) Inanda R102  சாலையில் வந்து இடது பக்கம் தொடர்ந்து பயணிக்கும் போது சாலையின் இருபக்கமும் மகாத்மா காந்தி நினைவு இல்லம் பற்றிய விளம்பர அட்டைகள் விளக்குக் கம்பங்களில் இணைத்திருப்பதைக் காணலாம். வழிகாட்டிப் பலகையைப் பார்த்தே உள்ளே நுழைந்தால் அங்கே சுலபமாக இந்த இடத்தை நாம் அடைந்து விடலாம். ஃபீனிக்ஸ் மக்கள் குடியிறுப்புப் பகுதி என இப்பகுதி அழைக்கப்படுகின்றது.



காந்தி நினைவு இல்லம் காணச் செல்கின்றோம். இந்திய வம்சாவளியினர் நிறைந்த ஒரு இடமாக இது இருக்கும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் சுற்றிலும் எளிமையான ஒரு ஆப்பிரிக்க இனமக்களின் கிராமம் தான் அது. ஆப்பிரிக்க சூலு இன மக்கள் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் என இருந்தனர்.

​அச்சகம்
உள்ளே செல்லும் போது நம்மை வரவேற்பது மகாத்மா காந்தி ஆரம்பித்த அச்சத்தின் கட்டிடம்.  இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion   என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ம் ஆண்டு இப்பதிரிக்கை முயற்சி நின்று போனது.

காந்தி - கஸ்தூரிபா - பீனிக்ஸ் பகுதியில்


மகாத்மா காந்தி என அறிந்தோரால் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அக்டோபர் மாதம் 2ம் தேதி 1869ம் ஆண்டில் இந்தியாவின் போர்பண்டர் என்ற பகுதியில் பிறந்தார். இளம் பிராயத்தில் உள்ளூரில் கல்வி கற்று திருமணமும் முடித்து பின்னர் 1888ம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்று அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தியவர்கள் தென்னாப்பிரிக்காவின் இந்த டர்பன் புறநகர் பகுதியில் இங்கே வாழ்ந்து வந்தார்.


​​

இங்கு காந்தி வாழ்ந்த இல்லத்திற்கு சர்வோதயா என்ற பெயர் அமைந்திருக்கின்றது. இந்த இல்லம் இருக்கும் இடத்தில் முதலில் காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் அமைக்கப்பட்ட இல்லமானது 1985ம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்த இனாண்டா கலவரத்தில் தீயில் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இடத்தில் அதே வகையில் புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரைப்பகுதிகள் தீயில் சேதமடையாததால் வீட்டின் மேல் பகுதியை மட்டும் புதுப்பித்து நினைவில்லமாக எழுப்பியிருக்கின்றனர். இந்த இல்லத்தின் உள்ளே மிக எளிமையான வகையில் காந்தியை நினைவூட்டும் பல சம்பவங்களின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.



வீட்டின் முன் புறத்தில் சிறிய பூங்காவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவனத்தின் ஒரு பகுதியில் மிக அழகான சிறிய குடில் ஒன்று அமைக்கப்பட்டு அதில் உள்ளே காந்தியின் சிலை ஒன்றும்நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஒரு சமூக மையம் போன்ற ஒரு  கட்டிடம் உள்ளது. இங்கே காந்தியின் பெரிய உருவப் படங்கள் சில உள்ளன.



மீண்டும் முன் பகுதிக்கு வந்தால் அச்சகத்தை வந்தடைவோம். அச்சகத்தின் உள்ளே உள்ள அறையில் காந்தி வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை வரலாற்றை நினைவூட்டும் ஆவணங்கள். இங்கே விரும்புவோர் காந்தி தொடர்பான நினைவுச் சின்னங்களை வாங்கிச் செல்லலாம். வருவோருக்கு இலவசமாக இந்த நினைவு இல்லம் பற்றிய ஒரு சிறு குறிப்பு அட்டையை வழங்குகின்றனர்.




நாங்கள் இந்த நினைவில்லத்திற்குச் சென்ற போது உள்ளே ஒரு அதிகாரி மட்டுமே இருந்தார். அவர் ஆப்பிரிக்க சூலு இனத்தைச் சேர்ந்தவர். எங்களுக்கு இந்த நினைவில்லம், அச்சகம், மற்ற ஏனைய பகுதிகள் அனைத்தையும் சுற்றிக் காட்டி ஆங்கிலத்தில் விளக்கமளித்தார். பொறுமையான குணமும் வருவோரை வரவேற்கும் நல்ல குணமும் கொண்டவராக இந்த அதிகாரி தோன்றினார். அங்கு ஏறக்குறைய 1 மணி நேரம் செலவிட்டு விட்டு அங்கிருந்து நாங்கள் என் பட்டியலில் இருந்த அடுத்த இடத்திற்குப் பயணமானோம்.

சூலு இன குழந்தைகளுடன்


எங்கல் வாகன்மோட்டியாக இருந்து உதவியவருடன்


என்னுடன் இணைந்து கொண்ட நண்பர்களுடன்

கஸ்தூரிபா- காந்தி


நினைவு இல்லத்தின் உள்ளே

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment